கழுவேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுவேற்றம்
அசிரியாவின் Sennacherib ஆட்சியின்போது நடந்த கழுவேற்றம்

கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.[1] அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.[2]

கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'மூன்றாம் வ்லாட் ட்ராகுலா' என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு 'கழுவேற்றும் வ்லாட்' (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு.

தமிழகத்தில் கழுவேற்றம்[தொகு]

தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது.[3]

காத்தவராயன் கழுவேற்ற விழா[தொகு]

நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது.[4]

ஆவுடையார் கோயில் கழுவேற்றும் ஓவியம்

மகாபாரத்தில் கழுவேற்றம்[தொகு]

ஆணி மாண்டவ்யர் என்ற முனிவரை, ஒரு மன்னர் தவறுதலாகக் திருட்டுக் குற்றம் சுமத்தி கழுவேற்றியதாக மகாபாரதக் காவியத்தில், ஒரு துணைக் கதையாக உள்ளது.[5]

சமணர் கழுவேற்றம்[தொகு]

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. [6][7][8]

புதினத்தில்[தொகு]

கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய "கோபல்ல கிராமம்" என்ற புதினத்தில் கள்வனை "கழுவேற்றுவது" சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. On term, see: "Unexploited vestiges of Jainism"
  2. ச.பிரபு தமிழன் (02 மே 2016). "கொலைக்கருவி". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. திருப்புல்லாணி அருகே ஒரே கோயிலில் ஐந்து கழுமரங்கள்: கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களின் நினைவாக உயிர்ப்புடன் தொடரும் வழிபாடு
  4. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=466552&cat=504 பரணிடப்பட்டது 2021-05-16 at the வந்தவழி இயந்திரம் காத்தவராயன் கழுவேற்ற விழா-தினகரன்- 26-06-2015
  5. ஆணி மாண்டவ்யர் - ஆதிபர்வம் பகுதி 107 & 108
  6. "Tamil Literature - M. S. Pillai - Google Books". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.
  7. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 01 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Dundas (1992) p.127
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுவேற்றம்&oldid=3871385" இலிருந்து மீள்விக்கப்பட்டது