இலங்கா சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கா சுல்தானகம்
1445–1540
சுமார் கி.பி. 1475 இல் இலங்கா சுல்தானகத்தின் தோராயமான பிரதேசம் [1]
சுமார் கி.பி. 1475 இல் இலங்கா சுல்தானகத்தின் தோராயமான பிரதேசம் [1]
நிலைசுல்தான்
தலைநகரம்முல்தான்
பேசும் மொழிகள்பஞ்சாபி (வம்சம்), பலூச்சி
சமயம்
இசுலாம்
அரசாங்கம்பரம்பரை முடியாட்சி
சுல்தான் 
வரலாற்று சகாப்தம்இடைக்காலத்தின் பிற்பகுதி
• தொடக்கம்
1445
• முடிவு
1540
முந்தையது
பின்னையது
சையது வம்சம்
சூர் பேரரசு
தற்போதைய பகுதிகள்பாக்கித்தான்

முல்தான் சுல்தானகம் ( Sultanate of Multan ) என்றும் அழைக்கப்படும் இலங்கா சுல்தானகம் ( Langah Sultanate ), சுமார் கி.பி.1445 முதல் 1540 வரை தெற்கு பஞ்சாபில் இலங்கா குலத்தால் நிறுவப்பட்டு ஆளப்பட்ட ஒரு இடைக்கால இராச்சியமாகும் [2] [3] முல்தான் இவர்களின் தலைநகரமாக இருந்தது.

வரலாறு[தொகு]

1398 இல் தைமூரின் படையெடுப்பிற்குப் பிறகு, தில்லி சுல்தானகம் பெரிதும் பலவீனமடைந்தது. மேலும், முல்தான் நகரம் தில்லி சுல்தானகத்திலிருந்து சுதந்திரமானது. குடிமக்கள் 1438 இல் புகழ்பெற்ற சூபி பகா-உத்-தின் சகாரியாவின் வழித்தோன்றல் சேக் யூசுப் குரேசியை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஒரு மென்மையான மற்றும் அனுபவம் இல்லாத ஆட்சியாளராக இருந்தார். 1445 ஆம் ஆண்டில், இலங்காவின் தலைவரான ராய் சக்ரா, தனது பழங்குடியினரின் உதவியுடன் நகரத்தைத் தாக்கி, சேக் யூசுப்பைக் கைது செய்து தன்னை சுல்தானாக அறிவித்தார். இதன் மூலம் முல்தான் இலங்கா குலத்திற்கு சென்றது. அவர்கள் இலங்கா சுல்தானகத்தை நிறுவினர். 1469 முதல் 1498 வரை ஆட்சி செய்த சுல்தான் முதலாம் உசைனின் ஆட்சிக்காலம் இலங்கா சுல்தான்களில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் முல்தான் செழிப்பை அனுபவித்தது. மேலும் சா உசைனின் அழைப்பின் பேரில் ஏராளமான பலூச் குடியேறிகள் நகரத்திற்கு வந்தனர். தாதர் கான் மற்றும் உருக்னுதீன் பர்பக் ஷா தலைமையிலான தில்லி சுல்தான்களின் படையெடுப்பு முயற்சியை சா உசைன் வெற்றிகரமாக முறியடித்தார். தில்லி சுல்தான்களிடம் தஞ்சமடைந்த சேக் யூசுப்பை மீண்டும் பதவியில் அமர்த்தும் முயற்சியை அவர் முறியடித்தார். இறுதியில், அவர் சிக்கந்தர் லௌதியுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவரது வாரிசான புதான் கான், சுல்தான் முதலாம் மக்மூத் சா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். சினியோட் மற்றும் சோர்கோட் நகரங்கள் உட்பட அண்டை பகுதிகளை உள்ளடக்கிய சுல்தானகத்தை மரபுரிமையாகப் பெற்றார். இலங்காவின் ஆட்சியின் போது, ஏராளமான பலூச் பழங்குடியினர் இராணுவ சேவைக்காக தேராஜாட் எல்லையில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

கலாச்சாரம்[தொகு]

இசுலாமிய உலகத்துடனான வர்த்தகத்திற்கான பிராந்திய வர்த்தக மையமாக முல்தானின் நிலைப்பாடு சுல்தானிய காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இவர்களின் ஆட்சியின் போது, முல்தான் கந்தகார் மற்றும் தில்லிக்கு இடையேயான வணிகப்பாதையாக மாறியது. முல்தானின் செல்வாக்கின் அளவு அசர்பைஜானின் பக்கூவில் உள்ள முல்தானி கேரவன்செராய் கட்டுமானத்திலும் பிரதிபலிக்கிறது - இது 15 ஆம் நூற்றாண்டில் நகரத்திற்கு வருகை தரும் முல்தானி வணிகர்களை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டது. [4] 1550 களின் பிற்பகுதியில் முல்தானி வணிகர்கள் குடியேறி நிலத்தை வைத்திருந்ததாக உஸ்பெக் நகரமான உசுபெகிசுதான் நாட்டின் புகாராவின் பதிவுகள் குறிப்பிடுகின்றன. [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கா_சுல்தானகம்&oldid=3859267" இலிருந்து மீள்விக்கப்பட்டது