இசுலாமியச் சட்ட முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:35, 29 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)

இசுலாமிய சட்டமுறை அல்லது சரியா சட்டம்(அரபுமொழி: '‎شريعة Šarīʿa; அனைத்துலக ஒலிப்பு முறை [ʃɑˈriːɑ]) என்பது இசுலாமிய மதத்தைப் பின்பற்றுவோரின் இசுலாமிய வழக்கப்படி அல்லது சட்டப்படியான வாழ்முறை என்பதைக் குறிக்கும். சரியா என்றால் அரபு மொழியில் (‎شريعة) சட்டம் என்று பொருள். இந்தச் சரியா சட்டமுறை திருக்குர்ஆனில் இருந்தும் அல்-ஹதீஸ் (அரபு: الحديث al-ḥadīth, /ħadiːθ/;Hadith) என்னும் முகம்மது நபியின் வாழ்க்கை முறையில் இருந்தும் அடிப்படையாக கொண்டுள்ளது.

முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள், நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமய வேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன[மேற்கோள் தேவை].

கி.பி.570-ல் பிறந்த நபிகள் நாயகம், தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார். தாம் பிறந்த மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு அவர் சென்ற நாள் தான் ஹிஜ்ரி ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இசுலாமிய ஆண்டு, சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை கொண்டு நாட்களாகவும், மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின், கி.பி.632 முதல் 634 வரை அபூபக்கர் (ரலி), கி.பி.635 முதல் 644 வரை உமர் (ரலி), கி.பி.644 முதல் 656 வரை உதுமான் (ரலி), கி.பி.656 முதல் 661 வரை அலீ (ரலி) ஆகியோர் கலீபாக்களாக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு கலீபாக்களை வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முசுலிம்களை அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து என அழைக்கிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால், முதல் கலீபாவாக வரும் தகுதி அலீ (ரலி)க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் சியாமுஸ்லிம்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. அவுரங்கசீப் (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.

இஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா

இந்தியாவில் பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.

(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப் படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டு: ஷா பானு சீவனாம்ச வழக்கு.

பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன.

ஷரீஅத் சட்டம் சில தகவல்கள்

மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகள் முன்னுதாரனமாய் உள்ளன.சான்று தேவை

நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு நபிகள் நாயகம் அவர்கள் விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் நபிகள் நாயகம் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)

இஜ்மா, கியாஸ்

திருக்குர் ஆனையும், நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளையும், வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர்[மேற்கோள் தேவை]. இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள்[மேற்கோள் தேவை]. ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன[மேற்கோள் தேவை].

புதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். சியா பிரிவினரும், ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்[மேற்கோள் தேவை]. குறிப்பாக இமாம் அபூஹனீபா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத விசயங்களில் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரும்

முஸ்லிம்கள் யார்? முஸ்லிமல்லாதோர் யார்? என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்டால்தான் இஸ்லாமிய ரீஅத் சட்டத்தை முறையோடு பயன்படுத்த இயலும்.

இன்று கலப்புத் திருமணம் சமூக முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் காரணமாகிறது எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தைப் பொருத்த வரையில் கலப்புத் திருமணங்கள் மூலமாகச் சிக்கல்களும், குழப்பங்களும் விளைவதே உண்மை.

ஒரு முஸ்லிம் ஆண், ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து அவர்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் முஸ்லிம்களாகி விடுகின்றனர். மாற்று மதங்களை அவர்கள் பின்பற்றாத வரையில் முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிறப்பால் முஸ்லிமாக உள்ள ஒருவரை, சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர் முஸ்லிமாக வாழவில்லை என்பதற்காக 'அவர் முஸ்லிமல்ல' என்று ஒருவர் வழக்காடினால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த வாதியையே சாரும்.

இந்தியாவை பொருத்த வரையில் முஸ்லிம்கள் அனைவரும் 'சுன்னத்து வல்ஜமாஅத்' முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, அந்தச் சட்ட அடிப்படையிலேயே நீதி வழங்கப்படுகிறது. முஸ்லிம்களாக இருந்தால், வழக்கு மன்றத்தில் தம் எண்ணத்தை வெளிப்படுத்தி முறையிட்டுக் கொள்ளலாம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களிடையே ஹனபி, ஷாபி, மாலிகீ, ஹன்பலீ, ஆகிய சட்டப் பிரிவுகள் இருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எவ்விதக் கட்டுப்பாடும், தடையின்றி மாறிக் கொள்ளலாம்.

'அல்லாஹ் ஒருவனே இறைவன் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது திருத்தூதர்' என்னும் கலிமாவை மனத்தூய்மையோடு ஒருவர் கூறி, தன்னை முஸ்லிம் என்று வெளிப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியச் சட்டப்படி அவர் முஸ்லிமாவார். பிற சமயத்தாவர் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம், அந்த நாளிலிருந்தே முஸ்லிம் சட்டம் அவர்களுக்குப் பயன்படுத்தப்படும். ஒருவர் முஸ்லிமா, முஸ்லிமல்லாதவரா என்று சந்தேகம் எழுந்தால், அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறாரா? சமயக் கடமைகளைப் பின்பற்றுகிறாரா? அவருக்கு 'கத்னா என்ற சுன்னத் (CIRCUMCISION) செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கருத்தில் கொண்டு அவர் முஸ்லிமாக என அறியப்படும். சொத்துரிமை இறக்கத்தைப் பொருத்த வரையில், சொத்துக்களை விட்டுச் சென்றவர் மரணிக்கும் போது எந்தச் சமயத்தை சார்ந்திருந்தார் என்று ஆராய்ந்து, அந்த அடிப்படையில் சொத்துகளை வாரிசுகளுக்குப் பங்கிட்டுத்தர வேண்டும்.

இஸ்லாம் அல்லாத மதத்தைச் சார்ந்த ஒருவர், தன் உடன் பிறந்த சகோதரர்களையும், இறந்து போன தன் முஸ்லிம் அல்லாத மனைவிக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெண்ணையும் மணந்து, குழந்தையும் பிறந்து, பின்னர் இறந்து விட்டால் அவருடைய சொத்துக்கள் இரண்டாவது மனைவியான முஸ்லிம் மனைவிக்கும், அவர் குழந்தைகளுக்கும் மட்டுமே கிடைக்கும்[மேற்கோள் தேவை].

வரலாற்றுத் தீர்ப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியச்_சட்ட_முறைமை&oldid=2718626" இலிருந்து மீள்விக்கப்பட்டது