ஆங்கிலேய-பர்மியப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (Anglo-Burmese Wars) தெற்காசியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர், கோன்பவுங் வம்சத்தினர் ஆண்ட பர்மாவை கைப்பற்றும் நோக்கில், பர்மியர்களுக்கு எதிராக மூன்று போர்கள் மேற்கொண்டனர். இறுதியாக 1885ஆம் ஆண்டில் நடந்த மூன்றாம் பர்மியப் போரில், பர்மாவை ஆங்கிலேயர்கள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர் . அவை; [1][2]

போர்களும் பர்மாவின் வீழ்ச்சியும்

முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826)

முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824 - 1826) முடிவில், கிழக்கிந்திய கம்பெனியர் வெற்றி பெற்றதால், யாந்தபு ஒப்பந்தப் படி பர்மா தான் கைப்பற்றிய இந்தியப் பகுதிகளான, அசாம் மற்றும் மணிப்பூர் மற்றும் பர்மாவின் அரக்கான் மலைத்தொடர் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியருக்கு பர்மியர்கள் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. [3]

இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1852 - 1853)

யாந்தோபூ உடன்படிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபு 1852இல் கடற்படை அதிகாரி லம்பார்ட்டை பர்மாவிற்கு அனுப்பினார். [4]

1852-1853இல் நடந்த இரண்டாம் பர்மியப் போரில், ஆங்கிலேயர் கீழ் பர்மாவின் பெகு பிராந்தியத்தை கைப்பற்றினர். இப்போரின் விளைவால் பர்மிய அரச மாளிகையில் கலகம் விளைந்தது. பர்மிய அரசர் பாகன் மிங் (1846–1852) ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது மாற்றாந்தாயின் மகன் மிண்டன் மிங் (1853–1878) பர்மிய அரச பதவியில் அமர்த்தப்பட்டார்

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885 - 1886)

பர்மாவின் கோன்பவுங் வம்சப் பேரரசர் மிண்டன் மிங், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியளர்களிடமிருந்து நாட்டைக் காத்துக் கொள்ளவும், நவீனப்படுத்தவும் முயற்சி செய்தார். தலைநகரை, ரங்கூனிலிருந்து புதிய நகரான மண்டலைக்கு மாற்றி, நாட்டை வலுப்படுத்தினார்.மிண்டன் மிங்கிற்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய திபா மிங் (1878–1885) காலத்தில், பர்மிய எல்லைப்புறங்களில் உண்டான கலவரங்களை அடக்க இயலாது போனது. மிண்டன் மிங் காலத்தில் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தகளை திபா மிங் மீறியதால், பர்மா மீது 1885ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்து முழு பர்மாவையும் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.[5] [6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்