பெட்ரோனாஸ் கோபுரங்கள்
| பெட்ரோனாஸ் கோபுரங்கள் Petronas Towers Menara Petronas 大马国油双峰塔 |
|
|---|---|
| Menara Berkembar Petronas | |
| பொதுவான தகவல்கள் | |
| வகை | வியாபார அலுவலகங்கள் |
| அமைவிடம் | ஜாலான் அம்பாங் கோலாலம்பூர், மலேசியா |
| உரிமையாளர் | கே.எல்.சி.சி நிறுவனம் KLCC Holdings Sdn Bhd |
| கட்டுமானம் | |
| தொடக்கம் | 1 மார்ச் 1993 |
| நிறைவு | 1 ஏப்ரல் 1994 |
| திறப்பு | 1 ஆகஸ்ட் 1999 |
| தள எண்ணிக்கை | 88 |
| தளப்பரப்பு | 3,95,000 மீ2 (42 சதுர அடி) |
| முதன்மை ஒப்பந்தகாரர் | கோபுரம் 1: ஹசாமா கார்ப்பரேசன் Hazama Corporation கோபுரம் 2: சாம்சுங் இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் Samsung Engineering & Construction and Kukdong Engineering & Construction நகர வளாகம்: B.L. Harbert International |
| செலவு | ரிங்கிட் 5.2 பில்லியன் |
| வடிவமைப்புக் குழு | |
| கட்டிடக்கலைஞர் | சீசர் பெலி César Pelli |
| அமைப்புப் பொறியாளர் | தோர்ந்தன் தோமாசெத்தி Thornton Tomasetti |
| References | |
பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் என்பது (மலாய்: Menara Petronas, ஆங்கிலம்: Petronas Towers) மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும்.
2003 அக்டோபர் 17இல் தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது.
சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998இல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துரு பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டிருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
1990களில், மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. சியர்ஸ் கோபுரங்கள் போன்ற உலகின் மற்ற உயரமானக் கட்டிடங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களைப் போல ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பெட்ரோனாஸ் ஏற்பாடுகளைச் செய்தது.
பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் 1992 ஜனவரி 1இல் வரையப்பட்டன. பலமான காற்று வீசும் போது ஏற்படும் விளைவுகள், கட்டமைப்புக் கூறுகள் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. 1993 மார்ச் 1இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டிடங்கள் கட்டப்படும் பகுதிகளில் 30 மீட்டர் {98 அடிகள்) ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டது.
21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர் [தொகு]
தோண்டிய மண்ணை அப்புறப்படுத்துவதற்கு ஒவ்வோர் இரவும் 500 சுமையுந்துகள் பயன்படுத்தப்பட்டன. பகலில் மற்ற வேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டிடத்தின் அடித்தளத்தில், 13,200 கனமீட்டர் (470,000 கன அடி) கல்காரை பைஞ்சுதை (ஆங்கிலம்: concrete) 54 மணி நேரத்திற்கு தடைபடாமல் ஊற்றப்பட்டது. ஆக மொத்தம் 104 பைஞ்சுதை பாளங்கள் உருவாக்கம் பெற்றன.[3]
தொடர்ந்து 21 மீட்டர் உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் சுற்றளவு 1,000 மீட்டர்கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர்.
கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் [தொகு]
1994 ஏப்ரல் 1இல் தலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1996 ஜனவரி 1இல் உட்புற வடிவமைப்புகள், தளவாடப் பொருட்களைப் பொருத்தும் வேலைகள் முடிவடைந்தன. 1996 மார்ச் 1இல் உச்சிக் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. 1997 ஜனவரி 1இல் பெட்ரோனாஸ் ஊழியர்களில் முதல் தொகுதியினர் பணிபுரியத் தொடங்கினர். 1999 ஆகஸ்ட் 1இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[4]
முன்பு கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் இருந்த இடத்தில்தான் இப்போதைய பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன.[5] இருந்தாலும் தொடக்கக் கட்டத்தில் நில ஆய்வுகள் செய்யும் போது அசல் கட்டுமான நிலப்பகுதி ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் அமரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலப்பகுதியின் பாதி அளவில் அழுகிய சுண்ணப்பாறைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கட்டுமானப் பகுதி 61 மீட்டர்கள் (200 அடி) தூரத்திற்கு அப்பால் நகர்த்தி வைக்கப்பட்டது.
114 மீட்டர் கற்காரைக் குத்தூண்கள் [தொகு]
ஒட்டு மொத்தக் கட்டுமானப் பகுதியும் திடமான ஒரு கற்பாறையில் அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.[6] மிக ஆழமான அடித்தளங்களை அமைப்பதற்காக மிக ஆழமான குழிகள் தோண்ட வேண்டி வந்தது. 60 லிருந்து 114 மீட்டர் உயரமுள்ள கற்காரைக் குத்தூண்கள் ஊன்றப்பட்டன. ஏறக்குறைய 104 கற்காரைக் குத்தூண்கள் கட்டுமானப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடித்தளங்களில் பல ஆயிரம் டன்கள் பைஞ்சுதை கல்காரை ஊற்றப்பட்டுள்ளது. இந்த அடித்தளங்களுக்கான வேலைகள் 12 மாதங்களில் முடிவுற்றது. இந்த ஒரு வேலையை மட்டும் பாச்சி சோலேதாஞ்சே (ஆங்கிலம்: Bachy Soletanche)[7] எனும் பிரித்தானிய நிறுவனம் செய்து முடித்தது. [8] இதற்கு டோமோ ஒபியாசே எனும் ஹைத்திய பொறியியலாளர் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார்.
இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் [தொகு]
ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் வலதுபுறமாக இருக்கும் கோபுரம்) ஜப்பானிய கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் (Hazama Corporation) ஏற்றுக் கொண்டது.
கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் இடதுபுறமாக இருக்கும் கோபுரம்) தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான சாம்சுங் இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் (Samsung Engineering & Construction and Kukdong Engineering & Construction) ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் உறுதிக்கலவை வலிமைச் சோதனையில் (routine strength test) ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் தற்காலிக நிறுத்தம் [தொகு]
கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதுவரையில், கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த எல்லாப் பகுதிகளிலும் சோதனைகள் செய்யப்பட்டன. ஒரே ஒரு மாடியில், ஒரே ஒரு பகுதி மட்டும் பலகீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பகுதி தகர்க்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு 700,000 அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது.
அதனால், உறுதிக்கலவைகளைத் தயாரிக்க, அங்கேயே மூன்று தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதில் ஏதாவது ஒரு தொழிற்சாலை தவறான உறுதிக்கலவையைத் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தயார்நிலையில் இருக்கும் மற்ற இரு தொழிற்சாலைகளில் ஒன்று உடனடியாக மாற்றுத் தயாரிப்பில் இறங்கும். இது செலவுகளைக் குறைக்கும் அவசரத் திட்டங்களில் ஒன்றாகும்.
வான்பாலத்தைக் (sky bridge) கட்டுவதற்கான பொறுப்பை குக்டோங் இஞ்ஜினியரிங் நிறுவனம் (Kukdong Engineering & Construction) ஏற்றுக் கொண்டது. கிழக்கு கோபுரம்தான் முதன்முதலில் வானளாவிச் சென்றது. அப்போதைக்கு அதுதான் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்; மிக உயரமான கோபுரமும்கூட.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ பெட்ரோனாஸ் கோபுரங்கள் at SkyscraperPage
- ↑ பெட்ரோனாஸ் கோபுரங்கள் at en:Structurae
- ↑ The single largest and longest concrete pour in Malaysian history. 13,200 cubic metres of concrete was continuously poured, 54 hours for each tower.
- ↑ Sebestyén, Gyula (1998). Construction: Craft to Industry. London: Taylor & Francis. p. 205. ISBN 978-0-419-20920-1.
- ↑ Žaknić, Ivan; Smith, Matthew; Rice, Doleres B. (1998). 100 of the World's Tallest Buildings. Mulgrave, Victoria: Images Publishing. p. 208. ISBN 978-1-875498-32-1.
- ↑ Baker, Clyde N., Jr.; Drumwright, Elliott; Joseph, Leonard; Azam, Tarique (November 1996). "The Taller the Deeper". Civil Engineering (ASCE) 66 (11): 3A-6A.
- ↑ Bachy Soletanche Group was incorporated in Hong Kong in 1973 and became Bachy Soletanche Group Limited (BSGL) in 1999.
- ↑ Each tower used 11,000 tons reinforcement steel, 2,825,120 cubic feet of high-strength concrete, almost 7,500 tons structural steel beams and 830,000 s.ffeet glass windows.