சல்வடோர் டாலி
சல்வடோர் டாலி (Salvador Dali, மே 11, 1904 - ஜனவரி 23, 1989) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டலன் இனத்தவரான, அடிமன வெளிப்பாட்டிய ஓவியர் ஆவார். இவரது முழுப்பெயர் சல்வடோர் டொமிங்கோ பிலிப்பே ஜசிண்டோ டொமெனிக் என்பதாகும். ஸ்பெயினின் கட்டலோனியாவில் உள்ள பிக்கரெஸ் (Figueres) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஒரு திறமையான படவரைவாளர். இவரது கவர்ச்சியான அடிமன வெளிப்பாட்டிய ஆக்கங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. சல்வடோர் டாலியின் ஓவியத் திறன் மறுமலர்ச்சி ஓவியர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகவும் அறியப்பட்ட இவரது ஓவியமான நீங்கா நினைவு (The Persistence of Memory) 1931 ஆம் ஆண்டில் தீட்டி முடிக்கப்பட்டது. இவருக்குத் திரைப்படம், சிற்பம், நிழற்படக்கலை போன்ற கலைகளிலும் ஈடுபாடு இருந்தது. வால்ட் டிஸ்னியுடன் சேர்ந்து அக்கடமி விருதுக்கு முன்மொழியப்பட்ட டெஸ்டினோ எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
சல்வடோர் டாலியின் சில படைப்புகள் [தொகு]
அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகளைக் கலையாக்கி சல்வடோர் டாலி படைத்தவை சில:
- இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)[1]
- சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்) (Christ of Saint John of the Cross)
- "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" (The Temptation of St. Anthony)
- "மிகுகனசதுர சிலுவையில் இயேசு" (Corpus Hypercubus)[2]
- "லிகாத் துறைநகர அன்னை மரியா" (The Madonna of Port Lligat)[3]
- "அணுநிலைச் சிலுவை"(Nuclear cross)
- "பொதுச் சங்கம்" (The Ecumenical Council)[4]