டி. பிருந்தா
டி. பிருந்தா என அறியப்படும் தஞ்சாவூர் பிருந்தா (1912 - 1996) ஒரு கருநாடக இசைப்பாடகரும் இசை ஆசிரியருமாவார்.
தொடக்ககால இசை அநுபவங்கள்[தொகு]
வீணை தனம்மாளின் பேத்தியான பிருந்தா முதலில் தனது தாயார் காமாட்சியிடம் இசை பயின்றார். இந்தப் பயிற்சி வீணை தனம்மாளின் பாணியில் இருந்தது. வசீகரிக்கும் தன்மை உடைய, ஆறுதலான நடையில், நுணுக்கமான கமகங்களுடன் இராகங்களைக் கையாளுதல் இந்தப் பாணியின் சிறப்பு. வீணை தனம்மாளும் இவருக்கு இசைப் பயிற்சி அளித்தார்.
அதன் பின் சிறிது காலம் காஞ்சீபுரம் நயினார் பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். நயினார் பிள்ளையின் பாணி கம்பீரமான, வேகமான அசைவுகளுடன் கூடிய லயத்தைக் கொண்டதாகும்.
ஆகவே பிருந்தா தனம்மாளின் உன்னதமான, நுணுக்கமான பாணியையும் நயினா பிள்ளையின் ஆண்மை கம்பீரத்துடன் கூடிய பாணியையும் ஒன்றுசேர்த்து இழையோடுமாப் போல பாடினார்.
இசைப் பணி[தொகு]
இசை அறிவு[தொகு]
அவரது அபிமானிகளும் இசை இரசிகர்களும் அவரை ஒரு அசாதாரண இசை அறிவு படைத்தவராக கருதினார்கள்.
அவர் பேகடா, முகாரி, சகானா, சுருட்டி, வராளி, யதுகுலகாம்போதி போன்ற சிக்கலான அமைப்பையும் நுணுக்கமான கமகங்களையும் கொண்ட இராகங்களை இசைப்பதில் வல்லவர். கருநாடக இசை மும்மூர்த்திகள், பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் அரிய கீர்த்தனைகள், க்ஷேத்திரையா பதம் மற்றும் ஜாவளிகளுக்கு அவர் ஒரு களஞ்சியமாக திகழ்ந்தார்.
இசை ஆசிரியர்[தொகு]
இவரின் இசை பாண்டித்தியமும் நிபுணத்துவத்துவமும் பல இசையாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பிருந்தாவிடம் இசைப்பயிற்சி பெற வந்தார்கள். சங்கீத கலாநிதிகள் செம்மங்குடி சீனிவாச ஐயர், எம். எஸ். சுப்புலட்சுமி, ஆர். கே. ஸ்ரீகண்டன் ஆகியோர் அவரிடம் இசை கற்றனர். இசையாளர்கள் இராமநாதன் கிருஷ்ணன், அருணா சாய்ராம், சித்திரவீணை ரவிகிரண், பி. கிருஷ்ணமூர்த்தி, சித்திரவீணை கணேஷ், கே. என். சசிகிரண், கிரணவல்லி வித்யாசங்கர், கீதா ராஜா, பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிருந்தாவின் முழு நேர மாணவர்கள். அவரது பேரனும் சீடருமாகிய திருவாரூர் எஸ். கிரீஷ் ஒரு சாதனை இசைக் கலைஞர் ஆவார்.
அரங்கு இசை[தொகு]
பிருந்தா தொடக்க காலத்தில் பெருமளவு தனது சகோதரியான டி. முக்தாவுடன் இணைந்தும் பிற்காலத்தில் தனது மகள் வேகவாகினி விஜயராகவனுடன் சேர்ந்தும் இசைக் கச்சேரிகள் செய்தார்.
இவர் அமெரிக்கா வாசிங்டன் மாநில சியாட்டில் பல்கலைக் கழகத்திலும் ஒரு வெளிப்பேர் கலைஞராக பணியாற்றினார்.[1]
ஒரு சீடரின் பார்வையில்[தொகு]
இவரின் மாணவர்களில் ஒருவரான கிரணவல்லி வித்தியாசங்கர் பிருந்தாம்மா பற்றிக் கூறுவது:[2]
“ | ஒவ்வொரு சிறு குறிப்பையும் சொற்றொடரையும் மிக்க கவனமெடுத்துப் பாடுவதுதான் அவரது இசையில் ஆன்மாவை கிளர்ந்தெழச் செய்யும் அம்சமாகும். அவர் தனம்மாள் பாணியில் மிக மந்தகதியில் பாடுவதால் கச்சேரியை "இழுத்துக்கொண்டு" போகிறார் என சிலர் தவறாக விமரிசனம் செய்ததுண்டு. ஆனால் 83 வயதில் கூட அவரால் வேகமான சங்கதிகளை இலகுவாகப் பாட முடிந்தது. அவரது கச்சேரிகளின் பதிவுகளைக் கேட்டால் தொடக்க அரை மணி நேரத்தில் அவர் துரித கதியில் அமைந்த கீர்த்தனைகளை சேர்த்துக் கொள்ளத் தவறியதில்லை என்பது தெரியவரும். அடானா இராகத்தில் அமைந்த எப்பபாமு அல்லது மத்தியமாவதியில் அமைந்த எவரிச்சிரிரா போன்ற கீர்த்தனைகளை அவர் மிக்க ஆற்றலுடனும், தெளிவுடனும், பிழைகளின்றியும் பாடுவார். வீணை தனம்மாள் அவரை "போட் மெயில்"[கு 1] என்று செல்லமாக அழைப்பார். | ” |
இறப்பு[தொகு]
சிறிது காலம் நோய்வாய்ப் பட்டிருந்த பின் 1996 ல் காலமானார்.
விருதுகள்[தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 1976, வழங்கியது: சென்னை மியூசிக் அகாதமி
- சங்கீத கலாசிகாமணி விருது, 1973, வழங்கியது தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- சங்கீத நாடக அகாதமி விருது, 1965 [3]
- ஜனாதிபதி விருது
- ஸ்வராலயா புரஸ்கர் விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Article on T. Brinda
- ↑ "A Musician's Musician". 2004-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
வெளியிணைப்புகள்[தொகு]
- பிருந்தா-முக்தா ஒரு சிறப்பிதழ் பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்[தொகு]
- ↑ போட் மெயில் என்பது அந்தக் காலத்தில் சென்னைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஓடிய வேக தொடர்வண்டி