செவ்வியல் தனிமம்

செவ்வியல் தனிமங்கள் (classical elements) என்பது பொதுவாக இயற்கை மற்றும் சிக்கலான பொருண்மையை எளிய பருப்பொருட்களாக விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற கருத்தாக்கங்களைக் குறிப்பதாகும்.[1][2] பாரசீகம், கிரேக்கம், பபிலோனியா, சப்பான், திபெத்து, மற்றும் இந்தியாவின் பண்டைய கலாச்சாரங்களில் இதுபோன்ற ஒத்த பட்டியல்கள் காணப்பட்டன, சிலநேரங்களில், "காற்று" என்பது "வளி" எனவும், ஐந்தாவது மூலகம் "வெற்றிடம்" அல்லது "ஆகாயம்" எனவும் குறிக்கப்படும். சீனர்களின் ஊ சிங் அமைப்பு முறை மரம் (木 mù), நெருப்பு (火 huǒ), நிலம் (土 tǔ), உலோகம் (金 jīn), மற்றும் நீர் (水 shuǐ) ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது, இருப்பினும் சீன முறையில் இவை மூலப்பொருள் வகையாகக் விவரிக்கப்படாமல் ஆற்றல்கள் அல்லது பரிமாற்றங்களாக விவரிக்கப்படுகின்றன.
இந்த மூலகங்களின் பண்புகள் மற்றும் ஊற்றுநோக்கக்கூடிய தோற்றப்பாடுகள் மற்றும் அண்டவியலுடன் இவை எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பன குறித்த விளக்கங்களில் இந்த பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் மட்டுமன்றி வெவ்வேறு மெய்யியலாளர்களும் கூட வேறுபடுகின்றனர். சிலநேரங்களில் இந்தக் கோட்பாடுகள் தொன்மவியலுடன் மேற்பொருந்திக் காணப்படுகின்றன மற்றும் தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்கஙளில் சில அணுக்கோட்பாட்டையும் (பொருண்மையின் மிகச்சிறிய, பிரிக்க இயலாத பகுதி என்ற கருத்தாக்கம்) உள்ளடக்கியவையாக உள்ளன, ஆனால் பிற விளக்கங்கள் மூலகங்களை அவற்றின் இயல்பு மாறாமல் எண்ணற்ற சிறுசிறு துண்டுகளாகப் பகுக்க முடியும் எனக் கருதின.
பண்டைய இந்தியா, பண்டைய எகிப்து, மற்றும் பண்டைய கிரேக்கம் ஆகியவற்றில் பொருள் உலகினை காற்று, நிலம், நெருப்பு மற்றும் நீர் எனப் பிரிக்கும் இந்த வகைப்பாடானது பெரும்பாலும் மெய்யியல் சார்ந்ததாகவே இருந்து வந்தாலும்,.இசுலாமியப் பொற்காலத்தின் போது மத்தியகால நடுக்கடல் பகுதி அறிவியலாளர்கள் பொருட்களை வகைப்படுத்த செய்முறை, ஆய்வு அடிப்படையிலான உற்றுநோக்கல்களைப் பின்பற்றினர்.[3] ஐரோப்பாவில் அரிசுட்டாட்டிலின் பண்டைய கிரேக்க முறைமை மத்தியகாலத்தில் சிறிதளவு வளர்ச்சியுற்று, 1600 களில் அறிவியல் புரட்சியின் போது முதல் முறையாக ஆய்வு அடிப்படையிலான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.
நவீன அறிவியல் பண்டைய மூலகங்களை இயல் உலகின் அடிப்படை பொருளாகக் கருதுவதில்லை. அணுக் கோட்பாடு, அணுவினை ஆக்சிசன், இரும்பு, மற்றும் பாதரசம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனிமங்களாக வகைப்படுத்துகிறது.. இந்தத் தனிமங்கள் வேதிச் சேர்மம் மற்றும் கலவைகளை உருவாக்குகின்றன, மற்றும் வெவ்வேறு வெப்பநிலைகள் மற்றும் அழுத்தங்களில் இந்தப் பருப்பொருட்கள் வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகின்றன. மிகப் பொதுவாக உற்றுநோக்கப்படும் பொருள் நிலைகளான திண்மம் (இயற்பியல்), நீர்மம், வளிமம், மற்றும் அயனிமம் (இயற்பியல்) போன்றவை பண்டைய மூலகங்களான முறையே நிலம், நீர் காற்று, நெருப்பு ஆகியவற்றுடன் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்த நிலைகளுக்கிடையேயான ஒத்த பண்புகளுக்கு காரணம் வெவ்வேறு வகையான அணுக்கள் ஒத்த ஆற்றல் நிலையில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதே தவிர, ஒரு குறிப்பிட்ட வகை அணு அல்லது பருப்பொருளைக் கொண்டிருப்பதால் அல்ல.
தொன்ம வரலாறு
[தொகு]பாரசீக மெய்யியல் அறிஞர் சொராட்டிரர் (600-583 BC) — சரத்துசுதர் எனவும் அறியப்படுகிறார் — நான்கு மூலகங்களான நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியவற்றைப் "புனிதமானவையாகக்" குறிப்பிட்டார், அதாவது "அனைத்து உயிரனங்களும் உயிர் வாழ்வதற்கு அவசியமானதாகக் குறிப்பிட்டார் எனவே அவை மதிக்கப்பட வேண்டும் மற்றும் எந்த வித மாசுக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்”. மேற்கத்திய சிந்தனையில், கிரேக்க மெய்யியலாளரான எம்பிடிகிளசினால் முன்வைக்கப்பட்ட நான்கு மூலகங்களான நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகியன அடிக்கடி இடம்பெற்றுள்ளன; அரிசுட்டாட்டில் ஐந்தாவது மூலகமாக ஈதரைச் சேர்த்தார்; இது இந்தியாவில் ஆகாயம் எனவும், ஐரோப்பாவில் விசும்பு (quintessence) எனவும் அழைக்கப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Boyd, T.J.M.; Sanderson, J.J. (2003). The Physics of Plasmas. Cambridge University Press. p. 1. ISBN 9780521459129. LCCN 2002024654.
- ↑ Ball, P. (2004). The Elements: A Very Short Introduction. Very Short Introductions. OUP Oxford. p. 33. ISBN 9780191578250.
- ↑ Science and Islam, Jim Al-Khalili. பிபிசி, 2009