உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னையின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1909 இல் மதராசு

சென்னை (Chennai) என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[1] இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8.9 மில்லியன் மக்கள் தொகை உடையது. இது 400 ஆண்டுகள் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே 31 ஆவது பெரிய பெருநகரப் பகுதி ஆகும்.

தென்னிந்தியாவின் பண்டைய பகுதி

[தொகு]

நெல்லூரிலுள்ள பெண்ணையாறு மற்றும் கடலூர் பெண்ணையாறு நதிகள் இடையே, தொண்டை மண்டலத்தில் சென்னை பகுதி அமைந்திருந்தது. முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் தலைநகராக காஞ்சிபுரம் இருந்தது. பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலம் துவக்க கால சோழர்களால் ஆளப்பட்டது. காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் மலைநகராக இருந்தது. மதராசின் அசல் பெயர் புலியூர் கோட்டம் ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலம் சோழ வம்சத்தின் பிரதிநிதியாக இருந்த தொண்டைமான் இளந்திரையனால் காஞ்சிபுரத்தில் இருந்து ஆட்சி செய்யப்பட்டது. "சென்னை" என்ற நவீன நகரம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானியர் குடியேற்றத்திலிருந்தும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இருந்த ஏராளமான பூர்வீக கிராமங்கள் மற்றும் ஐரோப்பிய குடியிருப்புகள் மதராஸ் நகரத்துடன் இணைத்ததன் மூலமும் உருவானது. அசல் மதராசு நகரத்தின் பெரும்பகுதி ஐரோப்பியர்களால் கட்டப்பட்டு குடியேறப்பட்டது என்றாலும், அதனுடன் பின்னர் இணைக்கப்பட்ட சுற்றியுள்ள பகுதிகளில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் திருவான்மியூர், திருவொற்றியூர் மற்றும் திருமயிலை மூவர்களின் (நாயன்மார்) தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கையில், திருவல்லிக்கேணி ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சோழர் பல்லவர் காலம்

[தொகு]

இளந்திரையனுக்குப் பிறகு, இந்தப் பகுதி சோழ இளவரசர் இளம் கிள்ளியால் ஆளப்பட்டது. தொண்டைமண்டலத்தின் மீதான சோழர்களின் ஆக்கிரமிப்பானது வடக்கில் உள்ள ஆந்திர சாதவாகன மன்னர் இரண்டாம் புலுமாயியின் படையெடுப்புகளால் முடிவுக்கு வந்தது. அவர்கள் காஞ்சிபுரம் பகுதியை ஆள தலைவர்களை நியமித்தனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த ஆட்சியாளராகக் கருதப்படும் பாப்பசாமி, 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதவாகனப் பேரரசின் கீழ் காஞ்சிபுரத்தில் (சுற்றுப்புறப் பகுதியின்) ஒரு ஆட்சியாளராக இருந்தார். அதுவரை வெறும் ஆளுநர்களாக இருந்த பல்லவர்கள், பின்னர் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் சுதந்திர ஆட்சியாளர்களாக மாறினர்.

பல்லவர்கள் 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர். இந்தப் பகுதி களப்பிரர்களின் கீழ் சில தசாப்தங்கள் இருந்ததைத் தவிர. பல்லவர்களே அக்காலகட்டத்தில் ஆண்டுவந்தனர். பல்லவர்கள் சுமார் 879 ஆம் ஆண்டில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டனர். அதன்பிறகு மேலும் இந்தப் பகுதி சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1264 ஆம் ஆண்டில் சோழ மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் இப்பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

சென்னையின் தோற்றம்

[தொகு]

கூவம் ஆறு வங்கக் கடலோடு கலக்குமிடத்தில் இருந்த மதராசபட்டிணம் கிராமத்தை 1639 இல் கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். பிரித்தானியர் குடியேற்றம் காரணமாகவும், அதன் பின்னர் பல கிராமங்களை இணைத்து செய்யப்பட்ட விரிவாக்கம் மற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி குடியேறிய ஐரோப்பியர்களின் காரணமாகவும் நவீன "சென்னை" நகரம் உருவானது. ஐரோப்பியர்களால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதி கட்டப்பட்டிருந்தாலும், இதனைச் சுற்றியுள்ள பகுதியிகளில் பின்னர் செய்யப்பட்ட விரிவாக்கதில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் திருவான்மியூர் திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் கோயில்கள் இணைக்கப்பட்டன.


மதராஸ்-சென்னை

[தொகு]

மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே தற்காலத்தில் சென்னை என்று அழைக்கப்படுகிறது.[2] கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணேஸ்வர மடம் என்னும் ஊரில் பொ.ஊ. 1367 சூலை 21 இல் வெட்டப்பட்ட ஒரு பாறைக் கல்வெட்டில் சென்னையில் கடற்கரையை ஒட்டி இன்றும் அதே பெயரில் உள்ள பல இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன அதில் மாதரசன்பட்டணம் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

சென்னை யாருக்கு

[தொகு]

இந்திய விடுதலைக்குப் பிறகு தெலுங்கர்கள் தங்களுக்குக்கென்று தனி மாநிலம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சவகர்லால் நேரு ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த மாநிலத்துக்கு தலைநகர் எது என்று அறிவிக்கவில்லை. இதை வாய்பாக கொண்ட தெலுங்கர்கள் மதராஸ் மனதே என்று முழங்கினர். இதனையடுத்து, சென்னை இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கவேண்டும், மத்திய அரசின் ஒன்றியப் பிரதேசமாக இருக்கவேண்டும் என்று பலவேறுவிதமான பரிந்துரைகள் வைக்கப்பட்டன. இதற்கு தமிழர் தரப்பில் கடும் எதிர்ப்புகள் உண்டாயின. இதனையடுத்து 1953 இல் சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் சென்னை தமிழகத்துக்கே உரியது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் இராசாசி சென்னையை ஆந்திரத்தின் தற்காலிக தலைநகராக அனுமதித்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். தமிழகத்தின் எதிர்ப்பைக் கண்ட இந்திய அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டது. 1953 அக்டோபர் முதல் நாளன்று உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தலைதகராக கர்னூல் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை தமிழ்நாட்டுக்கு தக்கவைக்கப்பட்டது.[4]

பெயர் மாற்றம்

[தொகு]

மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றவேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்டகாலம் இருந்துவந்தது. இதனையடுத்து 1996 ஆண்டு அப்போதைய முதலமைச்சரான மு. கருணாநிதியால் மெட்ராஸ் என்ற பெயரானது சென்னை என்று மாற்றப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "​இன்று சென்னை நகரின் 376-வது பிறந்த தினம்". News 7 Tamil. 22 ஆகத்து 2015. Retrieved 30 ஏப்ரல் 2016. {{cite web}}: zero width space character in |title= at position 1 (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. முகமது ஹுசைன் (21 சூலை 2018). "தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 27 சூலை 2018.
  3. எஸ. மே. ரமேஷ் (சூலை 26 2018). "பழமையான நகரம் 'மாதரசன்பட்டணம்' என்னும் சென்னை 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்". இந்து தமிழ். 
  4. தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!, செல்வ புவியரசன், இந்து தமிழ், 2019 நவம்பர் 1
  5. நவம்பர் 1 தமிழ்நாடு தினம்: மதராஸ் ராஜதானியில் இருந்து... தமிழ்நாடு வரை- ஒரு காலப் பயணம், இந்து தமிழ், 2019, நவம்பர், 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னையின்_வரலாறு&oldid=4337295" இலிருந்து மீள்விக்கப்பட்டது