அவுரி (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தொகுதி: பூக்கும் தாவரம்
வகுப்பு: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Indigofera
இனம்: tinctoria
இருசொற் பெயரீடு
Indigofera tinctoria
L.
வேறு பெயர்கள் [1]
  • Anila tinctoria var. normalis Kuntze
  • Indigofera anil var. orthocarpa DC.
  • Indigofera bergii Vatke
  • Indigofera cinerascens DC.
  • Indigofera houer Forssk.
  • Indigofera indica Lam.
  • Indigofera oligophylla Baker
  • Indigofera orthocarpa (DC.) O.Berg & C.F.Schmidt
  • Indigofera sumatrana Gaertn.
  • Indigofera tinctoria Blanco
  • Indigofera tulearensis Drake

அவுரி (ஒலிப்பு) அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி. இதன் பொது ஆங்கிலப் பெயர் ட்ரூ இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல நிறம் (ஊதாநிறம்) கொண்ட சாயம் எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இது வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா நிறச் சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர். இன்று செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி நீல நிறச் சாயம் பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும் நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.

இச்செடி (புதர் வகையான செடி) ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது. இச்செடியின் இலைகள் சற்றே வெளிறிய பச்சை நிறத்துடன் கூட்டிலையாக உள்ளன. இதன் பூக்கள் நீலம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இணராக உள்ளன. இச் செடியின் இலைகளை நீரில் ஊற வைத்து புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி புளிக்க வைப்பதால் அதில் உள்ள கிளைக்கோசைடு இண்டிக்கான் (glycoside indican) என்னும் பொருளை ஊதாச் சாயமாக மாறுகின்றது. இந்தச் சாயத்தின் பெயர் இண்டிகோட்டின் (indigotin) என்னும் ஊதாச்சாயம் ஆகும்.

அவுரி (Indigofera tinctoria) ஒரு மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அவுரி விவசாயம்[தொகு]

  • ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சாதாரண விவசாயிகள் உணவு வகைகளை பயிரிட அனுமதி மறுத்து, தங்கள் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி பயிரிடச் செய்த பொருள் வகைகளில் அவுரியும் ஒன்று.[2]
  • வங்காளத்தில், சிரோமணிபூர், பரமானந்தபூர் என்ற இரண்டு ஊர்களில், ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் மூலம் அவுரி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகள் அனைவரையும் வற்புறுத்தினார்கள். வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமல் போன விவசாயிகள், அனைத்திற்கும் ஆங்கிலேயரையும் ஜமீன்தாரையும் சார்ந்து, அவர்களின் அராஜகங்களையும் சகித்து வறுமையில் வாடவேண்டிய நிலை இருந்தது.இவர்களுக்கு, தமது புதிய வீட்டை ஜெயராம்பாடியில் கட்டியபோது அந்த வேலைகளைத் தந்து அன்னை சாரதாதேவி உதவியது வரலாற்றில் பதிந்த ஒன்று.[3]
  • ஆரம்பகால கிறித்துவப் பிரச்சாரகரான டாக்டர் லாங் சாயத்திற்கான செடிகளை(Indigo) வளர்க்கும் பண்ணை முதலாளிகள் இந்தியாவில் செய்த கொடுமைகளை விளக்கும் நாடகத்தை மொழிபெயர்த்தார். அதற்காக ஆங்கிலேயர்கள் அவரைச் சிறையில் அடைத்தனர்.

[4]

  • வங்காளத்தில் பணியாற்றிய இ.டி. லதூர் எனும் ஆங்கிலேய நீதிபதி 1848 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வோர் இண்டிகோ பெட்டியின் மீதும் மனித ரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கூறும் அளவுக்கு கொடுமைகள் நடந்தேறின.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species".
  2. "விவேகானந்தர் கண்ட விவசாயம்; பக்கம் 35, 36". Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
  3. அன்னையின் அன்புமொழிகள்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 291, 292
  4. எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; பக்கம் 298
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுரி_(தாவரம்)&oldid=3541985" இலிருந்து மீள்விக்கப்பட்டது