நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாள வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று அடிக்கோடு (underline, underscore) ஆகும். படிப்பவரின் கவனத்தை ஈர்க்க இக்குறி பயன்படுகிறது.
சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய வாக்கியத்தையோ வாக்கியங்களையோ குறிக்க அடிக்கோடு பயன்படுத்தப்படுகிறது. கையெழுத்தில் அடிக்கோடு இடுதல் வழக்கம். தட்டச்சு செய்வதிலும் கணினி முறையிலும் அவ்வழக்கம் உள்ளது. ஆயினும் அடிக்கோடு இடுவதற்குப் பதிலாக சாய்வெழுத்து அல்லது தடித்த எழுத்து முறை இன்று கணினி உலகிலும் அச்சுத்துறையிலும் பரவலாகக் கையாளப்படுகிறது.[1]
எடுத்துக்காட்டு:
புகைபிடித்தல் உடல்நலக் கேடு விளைவிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புகைபிடித்தலால் ஏற்படுகின்ற மற்றொரு தீய விளைவு பணம் பாழடிக்கப்படுதல் (பணம் பாழடிக்கப்படுதல்) என்பதைப் பலரும் கருத்தில் கொள்வதில்லை.