பாசுமதி
பாசுமதி (பாஸ்மதி, Basmati வங்காள: বাসমতী) என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் முதலிய நாடுகளில் விளையும் ஒரு வகை நீண்ட அரிசியாகும். இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்னும் வடமொழிச் சொல்லுக்கு, "நறுமணம் வாய்ந்த" என்றும் "மென்மையான அரிசி" என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வகை அரிசியை இந்தியாவில் தான் மிகக் கூடுதலாக பயிரிடுகிறார்கள். இந்தியர்களே பாசுமதியை மிகக் கூடுதலாக உண்பதுடன் ஏற்றுமதியும் செய்கிறார்கள். பஞ்சாப் பகுதியிலும் வங்காளத்திலும் உள்ள வயல்வெளிகளில் இதைக் கூடுதலாகப் பயிரிடுகிறார்கள்.
பாசுமதி அரிசி மற்ற இரக அரிசிகளை விட நீளமானதாக உள்ளது. ஆனால் மற்ற நீள இரக அரிசிகளைப் போலன்றி வேகவைத்த பாசுமதிச் சோறு ஒட்டிக்கொள்ளாமல் "உதிர்ந்து" காணப்படுகிறது. பாசுமதிச் சோற்றை அதன் நறுமணம் மூலம் எளிதாக அறியலாம். வழமையான வெண்ணிற பாசுமதி தவிர பழுப்பு நிற பாசுமதியும் உண்டு.
இதன் சிறப்பியல்புகளுக்காக மற்ற வகை அரிசிகளை விட பாசுமதியின் விலை கூடுதலாகும். இதனால், பெரும்பாலும் சிறப்பாகச் சமைக்கும் பிரியாணி, புலாவு போன்ற உணவுகளிலும் பாயசம் போன்ற இனிப்புக்களிலும் மட்டுமே பாசுமதியைப் பயன்படுத்துகிறார்கள்.
வெளி இணைப்புகள் [தொகு]
- பாசுமதி அரிசி என்றால் என்ன
- காப்புரிமை சிக்கல் குறித்து
- கண்ணன், சில்பா (பெப்பிரவரி 15, 2008). "India and Pakistan link to protect Basmati". பிபிசி செய்திகள். http://news.bbc.co.uk/2/hi/business/7246900.stm. Retrieved ஏப்ரல் 26, 2010.