1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1857 நினைவு அருங்காட்சியகம், லக்னோ இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ளது. இது 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தின்போது அழிந்துபோன, லக்னோவில் இருந்த பிரித்தானிய ஆணையரின் வதிவிடப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் வதிவிடத் தொகுதியின் தலைமைக் கட்டிடத்துடன் சேர்ந்த இன்னொரு கட்டிடத்தில் இயங்குகிறது. 1920 ஆம் ஆண்டில் வதிவிடக் கட்டிடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது இருந்த நிலையிலேயே இன்னும் அது பேணப்பட்டு வருகிறது. இங்கு இடம்பெற்ற சிப்பாய்க் கலகம், இந்திய விடுதலைக்கான முதல் போராட்டம் என்ற முக்கியத்துவம் கருதியே இந்த அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டது.[1]

1857 ஆம் ஆண்டுக் கலகத்தின் விவரங்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், வதிவிடக் கட்டிடத்தின் மாதிரியுரு ஒன்று, பழைய நிழற்படங்கள், ஓவியங்கள், ஆவணங்கள், அக் காலத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள், வாள்கள், கேடயங்கள், பீரங்கிகள், பதக்கங்கள் போன்ற பொருட்கள் என்பன வைக்கப்பட்டுள்ளன.

1857 ஆம் ஆண்டு நிகழ்வுகளைக் கால வரிசைப்படி தரும் வகையில் காட்சிப் பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. எழுச்சியோடு தொடர்புடைய இடங்களின் நிழற்படங்களோடு, முக்கிய நிகழ்வுகளை விளக்கும் ஓவியங்களும், உள்ளூர்த் தலைவர்களின் உருவப்படங்களும் இங்கே உள்ளன. 1857 ஆம் ஆண்டு எழுச்சியின் மையமாக விளங்கிய லக்னோவின் நிலப்படங்களையும் இங்கே காணலாம்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1857 Memorial Museum, Residency, Lucknow