விவேகசூடாமணி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகசூடாமணி
நூலாசிரியர்ஆதிசங்கரர் (மூல நூலாசிரியர்)
மொழிபெயர்ப்பாளர்ஸ்ரீ அண்ணா (தமிழாக்கம்)
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைஅத்வைத வேதாந்தம்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
வெளியிடப்பட்ட நாள்
06-01-2011
பக்கங்கள்390
ISBN81-7823-268-5

விவேகசூடாமணி (ஆங்கிலம்: Vivekachudamani) (சமஸ்கிருதம்: विवेकचूडामणि) அத்வைத வேதாந்தத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது. இது அத்வைத வேதாந்த தத்துவத்தை விளக்க வந்த நூலாகும். இந்நூலில் அத்வைத வேதாந்த தத்துவங்களை எளிதாக விளக்குவதால் இதனை பிரகரண கிரந்தம் என்று வடமொழியில் அழைப்பர்.

இந்நூலை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உரைகளும் எழுதப்பட்டுள்ளது. விவேகசூடாமணி நூலை, ஸ்ரீ அண்ணா என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, இராமகிருஷ்ண மடம், சென்னை நிறுவனத்தால் 14-01-1971 அன்று வெளியிடப்பட்டது.[1]

பெயர்க் காரணம்[தொகு]

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருளின் மெய்ப் பொருளை ஆராய்ந்தறியும் அறிவானது விவேகம் எனப்படும். தலையில் அணியும் இரத்தினம் சூடாமணி, இது எல்லா நகைகளிலும் சிறந்தது. அது போல விவேகத்தைப் புகட்டும் நூல்களுல் இந்நூல் தலை சிறந்ததாய் விளங்குவதால் இதற்கு விவேகசூடாமணி எனும் பெயர் பொருந்துவதாயிற்று.

இறை/குரு வணக்கம்[தொகு]

சங்கரர் இந்நூலை, தனது இஷ்ட தெய்வமான கோவிந்தனையும் மேலும் தனது குருவான கோவிந்த பகவத்பாதரையும் வழிபட்டு துவக்குவதாக அமைந்துள்ளது.[2]

உள்ளடக்கம்[தொகு]

விவேகசூடாமணி நூல் 580 சுலோகங்களுடன் கூடியது. இதில் சங்கரர் ஆத்ம தத்துவத்தையும் அதை படிப்படியாக அறிந்துய்வதற்கு வழியினை பல எடுத்துக்காட்டுகளுடன் ஒரு சீடனுக்கும் குருவானவர் போதிக்கும் பாணியில் உரையாடல்களாகவே அமைந்துள்ளது.[3] குருவானவர் ஒரு சீடனை படிப்படியாக பிரம்மத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிமுறைகளை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

விளக்க உரைகள்[தொகு]

விவேகசூடாமணி நூலுக்கு இரண்டு சமசுகிருத மொழி விளக்க உரைகள் அமைந்துள்ளன. முதல் விளக்க உரை, சிருங்கேரி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதியும், மற்றொன்று அவரது சீடரும் சிருங்கேரி சங்கர மடத்தின் பீடாதிபதியுமான ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள் முதல் 515 சுலோகங்களுக்கு விரிவான விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த விளக்க உரை நூல்களுக்கு கூடுதல் விளக்கங்கள் மற்றும் குறிப்புகளுடன் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இரமண மகரிஷி தமிழில் இந்நூலுக்கு விளக்க உரை அருளியுள்ளார். ஆங்கில மொழியில் சுவாமி பிரபவானந்தா, கிறிஸ்டோபர் வுட், சுவாமி மாதவனந்தாவும் மற்றும் சுவாமி சுவாமி சின்மயானந்தாவும் விவேகசூடாமணி நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர்.

மராத்தி மொழியில் சுவாமி ஜோதி சொரூபானந்தர் விவேகசூடாமணி நூலை மொழி பெயர்த்துள்ளார்.[4]

மிகச் சிறப்பான சுலோகம்[தொகு]

  • பிரம்ம சத்யம், ஜெகத் மித்யா, ஜீவனும் பிரம்மமும் ஒன்றே”.

மொழிபெயர்ப்பு: பிரம்மம் ஒன்றே உண்மையானது, என்றும் அழிவற்றது, நித்தியமானது, அறிவு வடிவானது. ஆனால் பிரபஞ்சம் உண்மையன்று; ஆனால் அது தோற்றத்திற்கு மட்டும் உரியது, நிலையற்றது, மாறுதலுக்கு உட்பட்டது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே; இரண்டிற்கும் வேறுபாடு இல்லை என்ற அத்வைத தத்துவம் இந்நூலில் நிலைநாட்டப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகசூடாமணி_(நூல்)&oldid=3747072" இலிருந்து மீள்விக்கப்பட்டது