விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளாண்மைத் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்தியாஇந்தியக் குடியரசு
தலைமையகம்கிருஷி பவன்
இராசேந்திர பிரசாத் சாலை
புது தில்லி
ஆண்டு நிதிரூபாய் 142762 கோடி (2020-21 est.) [1]
பொறுப்பான அமைச்சர்கள்
வலைத்தளம்agriculture.gov.in

விவசாயத் துறை அமைச்சகம் அல்லது வேளாண்மைத் துறை அமைச்சகம் (Ministry of Agriculture,India) இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் நடப்பு மூத்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் இணை அமைச்சர்கள் கே. சோபா மற்றும் கைலாஷ் சௌத்ரி ஆவர்.

இந்தியாவின் விவசாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இன்றியமையாத விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் வடிவமைப்பது இந்த அமைச்சின் பொறுப்பு. இந்த அமைச்சகத்தின் மூன்று முக்கிய நோக்கங்கள் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் பதனம் செய்தல், கூட்டுறவு ஆகியன ஆகும்.

இந்தியாவின் முக்கிய வாழ்வாதரம் விவசாயத்தினை அடிப்படையாக கொண்டுள்ளது. 2009-10ல் இந்தியாவின் 52.1% மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தினையே சார்ந்துள்ளனர். விவசாயமே தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கவும் செய்கின்றது. இந்தியாவில் வேளாண்மை என்பது அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு தகுந்தவாறு உணவு உற்பத்தியை அதிகரித்து விளைபொருள் தட்டுப்பாட்டினைக் கட்டுப்படுத்துவதாகும்.

வரலாறு[தொகு]

1871 சூன்-ல் வருவாய், விவசாயம் மற்றும் வர்த்தக இலாகா உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் விவசாயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டது. அதற்கு முன்னர் விவசாய விவகாரங்கள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்தது.[2]

1881ல் பஞ்சக் கட்டுப்பாடு ஆணயத்தின் (Famine Commission) அறிவுறுத்தலின்படி, வருவாய் மற்றும் விவசாயத்துறை (Department of Revenue and Agriculture) ஏற்படுத்தப்பட்டது, பின்னர் 1923ல் பொருளாதாரம் மற்றும் திறன்மேம்பாட்டின் மேம்படுத்தும் நோக்கத்திற்காக கல்வி, சுகாதாரம், விவசாயம், வருவாய் ஆகியன ஒரே துறையின் (Department of Education, Health and Lands) கீழ் வந்தது.

விடுதலைக்குப் பின்பு 1947 முதல், விவசாய இலாகா விவசாயத் துறை அமைச்சகமாக மாற்றப்பட்டது.[2]

விடுதலைக்குப் பின்னரும் இந்த அமைச்சகம் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு மாறுபாடுகளை சந்த்தித்தவண்ணம் உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை, இராசயனத் துறை அமைச்சகம், சுற்றுச்சுழல் மற்றும் வன அமைச்சகம், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சம் எனப் பல்வேறு அமைச்சகங்கள் விவசாயத் துறையிலிருந்து பிரிக்கப்பட்டது.

புள்ளிவிவரம் & அறிக்கை[தொகு]

விவசாயத் துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் "விவசாயத்துறையின் புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை " என்ற ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கின்றது. இது இந்தியாவின் பகுதிவாரியாகாவும், பயிர்களின்வாரியாகவும் விவசாயம் சம்பந்தப்பட்ட விவரங்களையும், கிராமப்புற பொருளாதாரக் காரணிகளான கடன் போன்றவற்றையும் தெளிவாகக் கூறுகின்றது.[3]

அமைப்பும் துறைகளும்[தொகு]

விவசாயத் துறை அமைச்சகம் மூன்று முக்கிய துறைகளைக் கொண்டுள்ளது.[4]

  • வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை

விவசாயிகளின் கூட்டுறவு திட்டங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.[5] இத்துறையானது விவசாயப் பணி முறை (Agriculture MMP) திட்டம் மூலம் விவசாய இ-ஆளுமை திட்டங்களை மேற்கொள்கிறது.

  • விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை

இது விவசாய அடிப்படை மற்றும் செயல்ஆராய்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாய நிறுவனங்களை இணைக்கிறது. கூடுதலாக இதுவே இந்திய விவசாய ஆராய்ச்சி மன்றத்தை (ICAR) நிர்வகிக்கிறது.[6]

  • கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை

இதன் முக்கிய பொறுப்பு கால்நடைகள், மீன்களின் உற்பத்தியைப் பெருக்குவதாகும்.[7]

மூன்று இலாகாக்களின் செயலகங்களும் விவசாய அமைச்சகத்திலேயே செயல்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]