விளாதிமிர் நபோக்கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாதிமிர் நபோக்கோவ்
பிறப்புவிளாதிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ்
22 ஏப்ரல் [யூ.நா. 10 ஏப்ரல்] 1899
செயிண்ட் பீட்டஸ்பர்க், ரஷ்யப் பேரரசு
இறப்பு2 சூலை 1977(1977-07-02) (அகவை 78)
மாண்ட்ரியு, சுவிட்சர்லாந்து
தொழில்புதின எழுத்தாளர், லெபிடோடெரா ஆய்வாளர், பேராசிரியர்
இலக்கிய இயக்கம்நவீனத்துவம், பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்செபாஸ்தியன் நைட்டின் உண்மை வாழ்க்கை (1941)
லொலித்தா (1955)
Pale Fire (1962)
துணைவர்வேரா நபோக்கோவ்
பிள்ளைகள்திமீத்ரி நபோக்கொவ்

விளாதிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ் (Vladimir Vladimirovich Nabokov, ரஷ்ய மொழி: Влади́мир Влади́мирович Набо́ков, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1899 – ஜூலை 2, 1977), ஒரு பன்மொழித் திறமை கொண்ட ரஷ்ய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் ரஷ்ய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் பூச்சியியலிலும் பங்களிப்புச் செய்துள்ளதுடன், சதுரங்கப் புதிர்களிலும் ஆர்வம் காட்டினார். லொலித்தா (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வரலாறு[தொகு]

ரஷ்யாவில் இருந்த காலம்[தொகு]

நபோக்கோவ் 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தனது பெற்றோரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை விளாதிமிர் திமித்ரியேவிச் நபோக்கோவ் ஒரு தாராண்மைவாதச் சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். தாயார் பெயர் எலெனா இவானோவ்னா ரூக்காவிஷ்விகோவா. இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த செல்வச் செழிப்புமிக்க, பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. இவர் தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் நகருக்குத் தெற்கே சிவர்ஸ்காயா என்னும் இடத்திற்கு அருகில் இருந்த வியாரா என்னும் நாட்டுப்புற பண்ணையில் கழித்தார்.

"முழுமையானது" என அவராலேயே விவரிக்கப்பட்ட நபோவோவின் பிள்ளைப் பருவம், பல வழிகளில் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகியவற்றைப் பேசி வந்தனர். இதனால், நபோக்கோவ் சிறுவயது முதலே மும்மொழியாளராக இருந்தார். நபோக்கோவ் ரஷ்ய மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்கும் முன்னரே ஆங்கிலத்தை எழுத வாசிக்கக் கூடியவராக இருந்தார். தன்வரலாற்று நினைவுகளை நூலாக எழுதிய நபோக்கோவ் தனது சலுகைகள் கொண்ட இளமைக்கால விவரங்கள் பலவற்றை விரிவாக விளக்கியுள்ளார். தனது இளமைக் காலத்தை மிகத் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய அவரது திறமை, அவர் நிரந்தரமாக நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் உதவியது. அத்துடன் அவரது முதல் நூலான மேரி இலிருந்து பிற்கால நூல்கள் வரையிலான ஆக்கங்களுக்கான கருப்பொருளை வழங்குவதிலும் அவருக்கு இது உதவியாக அமைந்தது. இவரது குடும்பம் பெயரளவில் மரபுவாதக் குடும்பமானாலும், அவர்களுக்குச் மதத்தில் பெருமளவு ஆர்வம் இருந்ததில்லை. 1916 ஆம் ஆண்டில் இவருடைய உறவினர் மூலமாக இவருக்கு, வியாராவுக்கு அண்மையில் இருந்த ரொஸ்டெஸ்ட்வீனோ எஸ்டேட் என்னும் சொத்து கிடைத்தது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது அதை அவர் இழந்தார். இதுவே அவர் தனது வாழ்நாளில் சொந்தமாக வைத்திருந்த ஒரேயொரு வீடு ஆகும்.

நபோக்கோவ் தனது முதல் 18 ஆண்டுகள் வாழ்ந்த நபோக்கோவ் இல்லம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது.

இடப்பெயர்வு[தொகு]

1917 பெப்ரவரிப் புரட்சியின் பின்னர், விளாதிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் ரஷ்யாவின் இடைக்கால அரசில் ஒரு செயலாளராக இருந்தார். இதனால், 1917 அக்டோபரில் ஏற்பட்ட புரட்சியின் போது நகரை விட்டுக் கிரீமியாவுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. அங்கே அவர்கள் சிலகாலம் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு 1918ல் லிவாடியாவுக்குச் சென்றனர். கிரீமியாவில், அங்கிருந்த இடைக்கால அரசில், விளாதிமிர் டிமிட்ரீவிச் நபோக்கோவ் நீதித்துறைக்கான அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். 1918ல் ஜேர்மன் நாட்டுப் படைகள் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வெண்படைகள் தோல்வியைத் தழுவியதும், நபோக்கோவ் குடும்பத்தினர் நாடுகடந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றனர். 1919 ஏப்ரல் 2 ஆம் தேதி புறப்பட்ட கடைசிக் கப்பலில், நபோக்கோவ் குடும்பத்தினர் செவாஸ்ட்டோப்போலை விட்டுக் கிளம்பினர். அவர்கள் சிலகாலம் இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது, இளைய நபோக்கோவ் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டிக் கல்லூரியில் சேர்ந்து, சிலாவிய மொழிகளையும், ரோமானிய மொழிகளையும் பயின்றார். கேம்பிரிட்ஜில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவர் பிற்காலத்தில் குளோரி என்னும் புதினத்தை எழுதத் துணை புரிந்தன. 1920ல் நபோக்கோவ் குடும்பத்தினர் இங்கிலாந்தை விட்டு பெர்லினுக்குச் சென்றனர். அங்கே நபோக்கோவின் தந்தை ருல் எனப்படும் செய்தி இதழைத் தொடங்கினார். நபோக்கோவ் இரண்டு ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்தில் படிப்பை முடித்துக் கொண்டபின் பெர்லினில் தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.

1916ல் நபோக்கோவுக்கு வாரிசுரிமையாகக் கிடைத்த ரொஸ்டெஸ்ட்வீனோ எஸ்டேட். இது பார்ட்டோலோமியோ ராஸ்ட்ரெலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

1922 மார்ச்சில் நபோக்கோவின் தந்தை பெர்லினில் ரஷ்ய முடியாட்சிவாதிகளால் கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து இயங்கிய அரசியல் சட்ட சனநாயகக் கட்சியின் தலைவரான பாவெல் மில்யூக்கோவ் என்பவர் கொல்லப்படுவதைத் தடுக்க அவர் போராடியபோது இது நிகழ்ந்தது. இந்தத் தவறுதலான, வன்முறை நிகழ்வு நபோக்கோவின் கதைகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இவர் கதைகளில் கதைமாந்தர் தவறுதலாகக் கொல்லப்படும் நிகழ்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெளிறிய தீ (Pale Fire) என்னும் அவரது புதினத்தில் வரும் கதைமாந்தரான கவிஞர் ஷேட் (poet Shade) இன்னொருவருக்கு இலக்கு வைத்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போகிறார்.

தந்தையார் இறந்த சில காலங்களுக்குப் பின் நபோக்கோவின் தாயும், தங்கையும் பிராக்கிற்கு இடம் மாறினர். ஆனால், நபோக்கோவ் பெர்லினிலேயே தங்கிவிட்டார். அங்கே, புலம்பெயர்ந்த சமூகத்தினரிடையே ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் பெயர்பெற்ற இவர், வி. சிரின் என்னும் புனைபெயரில் எழுதிவந்தார். இவர் மொழிகளைக் கற்பித்து வந்ததுடன், டென்னிஸ், மற்போர் ஆகியவற்றிலும் பயிற்சி கொடுத்து வந்தார். 1922ல் நபோக்கோவுக்கு, சுவெட்லானா சீவேர்ட் (Svetlana Siewert) என்பவரை மணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. எனினும் 1923 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், நபோக்கோவுக்கு நிலையான தொழில் எதுவும் இல்லாததைக் காரணம் காட்டி பெண்ணின் குடும்பத்தினர் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டனர். 1923 ஆம் ஆண்டு மே மாதத்தில் வேரா ஈவ்ஸ்யேவ்னா சுலோனிம் (Véra Evseyevna Slonim) என்பவரை ஒரு நிகழ்வில் சந்தித்த நபோக்கோவ் அவரை 1925 ஏப்ரலில் திருமணம் செய்தார். இவர்களது ஒரே மகன் திமீத்ரி 1934 ஆண்டு பிறந்தார்.

1936 ஆம் ஆண்டில், செமிட்டிய எதிப்புச் சூழல் காரணமாக வேரா தொழிலை இழந்தார். அத்துடன், நபோக்கோவின் தந்தையைக் கொலை செய்தவர் புலம்பெயர்ந்த சமூகத்தின் இரண்டாம் தலைமைப் பதவியில் அமர்ந்ததனால், நபோக்கோவ் ஆங்கிலம் பேசும் உலகில் வேலை தேடினார். 1937ல் நபோக்கோவ் ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்குச் சென்றார். அவரது குடும்பத்தினரும் அவரைத் தொடர்ந்து சென்று பாரிசில் வாழ்ந்தனர். 1940 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் நாட்டுப் படைகள் பிரான்சுக்குள் முன்னேறியபோது அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர்.

அமெரிக்காவில்[தொகு]

நபோக்கோ குடும்பத்தினர் அமெரிக்காவில், மான்ஹட்டனில் தங்கினர். நபோக்கோவ் இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகத்தில் பணிக்குச் சேர்ந்தார். எட்மண்ட் வில்சன் என்பவரைச் சந்தித்து அவரது நண்பரானார். இவரே நபோக்கோவின் ஆக்கங்களை அமெரிக்கப் பத்திரிகையாசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

நபோக்கோவ் 1941 ஆம் ஆண்டு, வெலெஸ்லிக் கல்லூரியில் ஒப்பீட்டு இலக்கிய விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவருக்காகவே உருவாக்கப்பட்ட இப்பதவி, தேவையான வருமானத்தை வழங்கியதுடன், எழுதுவதற்குத் தேவையான நேரத்தையும் கொடுத்தது. வெலெஸ்லிக் கல்லூரியில் ரஷ்ய மொழிப் பிரிவை உருவாக்கியவர் இவரே. அங்கே 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய ரஷ்ய எழுத்தாளர்கள் பற்றி இவர் ஆற்றிய விரிவுரைகள் பெரிதும் போற்றப்பட்டவை. 1941-42 காலப்பகுதியில் நபோக்கோவ் குடும்பத்தினர் மசசூசெட்சிலுள்ள வெலெஸ்லியில் வாழ்ந்தனர். பின்னர் 1942 செப்டெம்பரில் மசசூசெட்சின் கேம்பிரிட்ஜுக்கு இடம் மாறிய இவர்கள் 1948 ஜூன் வரை அங்கேயே இருந்தனர். ஐக்கிய அமெரிக்கா முழுவதிலும் ஒரு விரிவுரைப் பயணம் சென்ற நபோக்கோவ், 1944-45 கல்வியாண்டில் ரஷ்ய மொழி விரிவுரையாளராக மீண்டும் வெலெஸ்லிக்கு வந்தார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்துகொண்ட அவர், 1947-48 கல்வியாண்டு வரை அக்கல்லூரியின் ரஷ்ய மொழிப் பிரிவின் ஒரே உறுப்பினராக ரஷ்ய மொழி, ரஷ்ய இலக்கியம் ஆகியவற்றில் பாடநெறிகளை நடத்தி வந்தார். இவரது பாடம் நடத்தும் முறைக்காகவும், போர்க் காலத்தில் ரஷ்யா தொடர்பான எல்லா விடயங்களிலும் பொதுவாக இருந்த ஆர்வம் காரணமாகவும் இவரது விரிவுரைகள் பெரிதும் விரும்பப்பட்டன. அதே வேளை ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின் ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியகத்தில் பூச்சியகத்தின் (lepidoptery) பொறுப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார். மொரிஸ் பிஷப் என்பவர் கொடுத்த ஊக்கம் காரணமாக, நபோக்கோவ் 1948ல் வெலெஸ்லியை விட்டு விலகி ரஷ்ய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக கோர்னல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

ஒவ்வொரு கோடையிலும் பட்டாம்பூச்சி சேகரிப்பை மேற்கொள்ளும் நபோக்கோவ். அவ்வாறான ஒரு பயணத்தில் மேற்கு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோதே தனது லொலித்தா என்னும் புதினத்தை எழுதினார். நபோக்கொவ் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொள்ளவில்லை. அவரது மனைவியான வேராவே அவரது வண்டியை ஓட்டுவது வழக்கம். முற்றுப் பெறாத லொலித்தாவின் பிரதிகளை நபோக்கோவ் எரித்துவிட முற்பட்டபோது அதனைத் தடுத்தவர் வேராவே எனப்படுகின்றது. தனது வாழ்க்கையில் சந்தித்த பெண்களுள் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர் வேரா என நபோக்கோவ் குறிப்பிட்டார். 1953 ஜூனில், நபோக்கோவ் குடும்பத்துடன் ஒரிகனில் உள்ள ஆஷ்லாந்துக்கு வந்தார். அங்கே, தெற்கு ஒரிகன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் டெய்லர் என்பவரின் வீட்டை வாடகைக்குப் பெற்று வாழ்ந்தனர். அங்கிருந்தபடியே நபோக்கோவ் லொலித்தா புதினத்தை எழுதி முடித்து, பெனின் (Pnin) என்னும் அடுத்த புதினத்தையும் எழுதத் தொடங்கினார். பட்டாம்பூச்சிகள் பிடிப்பதற்காக அருகில் இருந்த மலைப்பகுதிகளில் அலைந்து திரிந்த அவர் ஒரிகனில் எழுதிய வரிகள் (Lines Written in Oregon) என்ற கவிதை ஒன்றையும் எழுதினார். 1953 அக்டோபர் முதலாம் தேதி நபோக்கோவும் அவரது குடும்பமும் நியூ யார்க்கிலுள்ள இத்தாக்காவுக்குச் சென்றனர்.

மாண்ட்ரியூவில்[தொகு]

இவரது லொலித்தா புதினம் பொருளாதார வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்குச் சென்று அங்கே எழுதுவதற்காகவே நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு நபோக்கோவுக்குக் கிடைத்தது. 1961 அக்டோபரில், நபோக்கோவும், வேராவும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியுசில் உள்ள மாண்ட்ரியூ பலஸ் விடுதியில் தங்கினர். நபோக்கோவின் இறுதிக்காலம் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அங்கே இவர்களது ஆறாம் மாடி அறையிலிருந்து, தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன், பட்டாம்பூச்சி பிடிப்பதற்காக ஆல்ப்ஸ், கோர்சிக்கா, சிசிலி ஆகிய பகுதிகளுக்கும் பயணித்தார். 1976 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்படாத காய்ச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வெளியேறியவர், பின்னர் மீண்டும் 1977ல் அங்கே சேர்க்கப்பட்டார். அவ்வாண்டு ஜூலை 2ஆம் திகதி நபோக்கோவ் காலமானார். அவருடைய உடல் எரிக்கப்பட்டு, மாண்ட்ரியுவில் உள்ள கிளாரன்ஸ் இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

இவர் இறந்தபோது உண்மையான லோரா (The Original of Laura) என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தார். மனைவி வேராவுக்கும், மகன் திமீத்ரிக்கும் நபோக்கோவின் இலக்கியச் சொத்துரிமை வழங்கப்பட்டிருந்தது. எழுதி முடிக்கப்படாத தனது கடைசிப் புதினத்தின் கையெழுத்துப் பிரதிகளை எரித்து விடுமாறு நபோக்கோவ் கூறியிருந்தும், அவரது கடைசி ஆக்கத்தை எரித்துவிட மனமில்லாமல் சுவிஸ் வங்கியின் காப்பறையில் அதனை வைத்துள்ளனர். இதன் சில பகுதிகள் நபோக்கோவ் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்குக் காட்டப்பட்டுள்ளன. நபோக்கோவின் இந்த இறுதிப் புதினம் வெளியிடப்படும் என திமீத்ரி 2008 ஏப்ரலில் அறிவித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_நபோக்கோவ்&oldid=2987865" இலிருந்து மீள்விக்கப்பட்டது