விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 29, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈப்போ என்பது மலேசிய மாநகரங்களில் ஒரு முக்கியமான நகரம். இது பேராக் மாநிலத்தின் தலைப்பட்டணம். மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்றும் போற்றப்படுகிறது. சீன மொழியில் பாலோ என்று அழைக்கிறார்கள். ஈயத்தைத் தோண்டியெடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். கோடீசுவரர்களின் சொர்க்க பூமி எனும் அடைமொழியும் அதற்கு உண்டு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு. இந்த நகரம் கோலாலம்பூரில் இருந்து 200 கி.மீ தொலைவில் வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடைய முடியும். 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி அதன் மக்கள் தொகை 710,798. 19 ஆம் நூற்றாண்டில் ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது. சீனாவில் இருந்து இலட்சக்கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியா, பர்மா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வணிகம் செய்ய வந்தனர். அதனால் மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தளமாகவும் இருந்தது. மேலும்..


இம்மானுவேல் சேகரன் (1924-1957) தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே இந்திய இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார். 1953 இல் இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தியனார். 1954 இல் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். 1957 இல் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும்..