உள்ளடக்கத்துக்குச் செல்

இம்மானுவேல் சேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்மானுவேல் சேகரன்
2010 ஆம் ஆண்டு வெளியான, இம்மானுவேல்சேகரனார் அஞ்சல் தலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-10-09)9 அக்டோபர் 1924
செல்லூர்,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு
இறப்பு11 செப்டம்பர் 1957(1957-09-11) (அகவை 32)
முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாநிலம்
(தற்போது தமிழ்நாடு), இந்தியா
குடியுரிமைஇந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு └─ தமிழ்நாடு இளைஞர் காங்கிரசு
துணைவர்
இ. அமிர்தம் கிரேஸ் (தி. 1946)
பிள்ளைகள்
  • இ. மேரிவசந்த ராணி
  • இ. பாப்பின் விஜய ராணி
  • இ. சூரிய சுந்தரி பிரபா ராணி
  • இ. மாணிக்கவள்ளி ஜான்சி ராணி
பெற்றோர்வேதநாயகம்
ஞானசுந்தரி
இராணுவ சேவை
பற்றிணைப்பு பிரித்தானியப் பேரரசு
├─ பிரித்தானியா இந்தியா
(1945-47)
└─ இந்திய மேலாட்சி அரசு (1947-50)
கிளை/சேவை பிரிட்டிஷ் இந்திய இராணுவம் (1945-47)
இந்தியத் தரைப்படை (1947-50)
தரம் படைத்துறை மேலாள்

இம்மானுவேல் சேகரன் (Immanuel Sekaran, 9 அக்டோபர் 1924 – 11 செப்டம்பர் 1957)[1] ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய, ஒரு தமிழக அரசியல் தலைவரும், இராணுவ வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவரும் ஆவார்.[2] தமிழ்நாட்டின், தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.[2] மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.[3]

வாழ்க்கைச் சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில், 1924 அக்டோபர் 9 ஆம் நாள் திரு.வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்), திருமதி. ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இவரின் தந்தை ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில், சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் இருந்தார்.[4] இம்மானுவேல் சேகரன் இளம் வயதிலேயே, இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர், அதற்கு ஒரு சான்றாக அவருடைய 18-ஆவது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.[3] தனது 19 வயதில் இரட்டை குவளை முறைக்கு எதிரான மாநாட்டையும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டு மாநாடு நடத்தியவர்.[3]

இராணுவத்தில் பணி

1945 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார்.[5] மேலும் இவர் சமூகச் சேவை செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.

குடும்ப வாழ்க்கை

1946 மே 17 ஆம் நாள் இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். அம்மையாரின் தகப்பனார் திரு.கருப்பன் குடும்பன், தாயார் திருமதி மரியம்மாள். அமிர்தம் கிரேஸ் அவர்களின் தம்பி தங்கப்பன். இம்மானுவேலுக்கும், அமிர்தம் கிரேஸ் அம்மையாருக்கும் மேரி வசந்தராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.

ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம்

  • 1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர், தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.[2]
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
  • இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு நடத்தினார்.
  • தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தினார்.

காங்கிரசில் இணைவு

காமராசர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார், அதனை ஏற்ற இம்மானுவேல் சேகரனார் காங்கிரசில் இணைந்தார்.

கொலை செய்யப்படுதல்

1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி, இடைத்தேர்தலுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படக் கூடிய ஒரு சூழல் உருவானது. காங்கிரஸ்-பார்வர்டு பிளாக் கட்சிகளிடையேயான அரசியல் மோதல் சாதிக் கலவரமாக மாறும் சூழல் ஏற்பட்டது. அதுபோன்ற கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இம்மானுவேல் சேகரனார் ஒருவர். அந்தக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் தலைவர் முத்துராமலிங்கத் தேவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ணத் தேவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும், தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் நடந்த மறுநாள் இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் மீது, இம்மானுவேல் சேகரன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.  [6] பின்னர் அவர் அந்தக் குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

முதுகுளத்தூர் கலவரம்

இச்சம்பவத்தால் இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சமுதாயத்திற்கும் தேவர் (மறவர்) சமுதாயத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.[7] இம்மானுவேல் சேகரனாரின் படுகொலையின் விளைவாகவே, 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரங்கள் நிகழ்ந்தன. இக்கலவரங்களில் 42 தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் கொல்லப்பட்டனர்.[8]

நினைவு

இம்மானுவேல் சேகரனார் அஞ்சல் தலை

இம்மானுவேல் சேகரனார் நினைவாக இந்திய அஞ்சல் துறை 2010 அக்டோபர் 9 அன்று அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. இந்திய அஞ்சல்துறை
  2. 1 2 3 4 http://tamil.oneindia.com/news/2011/09/12/who-is-immanuel-sekharan-aid0175.html
  3. 1 2 3 https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-immanuvel-sekaran-261504.html
  4. "இமானுவேல் சேகரன்: சம உரிமைக்கான தனித்த ஆளுமை; யார் இந்த இம்மானுவேல் சேகரன்?". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/Sep/11/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3232168.html.
  5. "தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு ரஷ்யன் மொழி உட்பட ஏழு மொழிகளைத் தெரியும்". தி இந்து. Retrieved 1 செப்டெம்பர் 2011.
  6. Bose, K.; Forward Bloc. Madras: 1988, Tamil Nadu Academy of Political Science. p. 88–110, 240
  7. "1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரம்". மாலை மலர். ஏப்ரல் 16, 2011. Archived from the original on ஏப்ரல் 21, 2011. Retrieved ஏப்ரல் 6, 2014.

உசாத்துணைகள்

  • சமூக உரிமைப்போராளி இம்மானுவேல் தேவேந்திரர், தமிழவேள்
  • இம்மானுவேல் சேகரன், வடிவேல் இராவணன்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_சேகரன்&oldid=4596776" இலிருந்து மீள்விக்கப்பட்டது