விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 29, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்பரோசா நடவடிக்கை என்பது நாசி ஜெர்மனி சோவியத் நாட்டின் மீது நடத்திய படையெடுப்பிற்கான குறிப்புச் சொல். அது ஜூன் 21, 1941 அன்று தொடங்கியது. 4.5 மில்லியனுக்கு அதிகமான அச்சு அணியினரின் படைகள் சோவியத் ஒன்றியத்தினை 2900 கிமீ அகல வெளியான அணிவகுப்பில் படையெடுத்தனர். பர்பரோசவின் திட்டம் 18, டிசம்பர் 1940ல் தொடங்கி, மறைமுகமான ஏற்பாடுகளும், படைத்தள நடவடிக்கைகளும் 18 மாதங்களாக நடந்திருந்தன. பர்பரோசா நடவடிக்கையின் இலக்கு சோவியத் ஒன்றியத்தின் ஐரோப்பிய பகுதிகளை வேகமாக வென்றெடுத்து, ஆர்க்கன்கெல்சுக்கு மற்றும் ஆசுத்ராக்கன் நகரங்களை இணைக்கும் கோடு வரை, 1941 ஆம் ஆண்டு முடியும் முன்னர் கைப்பற்றுவதாகும். ஆனால் இந்நடவடிக்கையில் நாசி படைகள் பெரும் தோல்வியை சந்தித்தன. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி, இட்லரை இன்னும் பல படை முன்னெடுப்புகளையும், போர்களையும் சோவியத் ஒன்றியத்துக்குள் செய்யத்தூண்டியது.



இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850 களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இலங்கையின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும், தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது. இவை, வடக்கில் காங்கேசன்துறை, தலைமன்னார் ஆகிய இடங்களிலும், கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும், மலையகப் பகுதியில், மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும், தெற்கில் மாத்தறையிலும் மேற்கில் புத்தளத்திலும் முடிவடைகின்றன. இன்னொரு பாதை அவிசாவளை வரை செல்கின்றது.