வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர்

ஆள்கூறுகள்: 13°16′46″N 80°15′23″E / 13.2794°N 80.2563°E / 13.2794; 80.2563
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர்
வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர் is located in தமிழ் நாடு
வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர்
வரதராஜப் பெருமாள் கோவில், மீஞ்சூர்
வரதராஜப் பெருமாள் கோயில், மீஞ்சூர், திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°16′46″N 80°15′23″E / 13.2794°N 80.2563°E / 13.2794; 80.2563
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:மீஞ்சூர்
சட்டமன்றத் தொகுதி:பொன்னேரி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜப் பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
குளம்:ஆனந்த புஷ்கரணி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம்,
வைகுண்ட ஏகாதசி,
கருட சேவை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
கல்வெட்டுகள்:உள்ளன

வரதராஜ பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், மீஞ்சூர் நகரத்தின் மையமான இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். வடகாஞ்சி என்று அழைக்கப்படும் இக்கோயில் அபிமான தலம் ஆகும். [1] விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது.[2] இக்கோவிலின் கருட சேவை நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் தேவதானத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகர் திருவள்ளூரிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 601 203 ஆகும். இவ்வூரின் புவியமைவிடம் 13.27°N அட்சரேகை 80.27°E தீர்க்க ரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கோவில் அமைப்பு[தொகு]

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் ஐந்து நிலை இராஜகோபுரம் தொன்மைமிக்கதாகும். இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் கொடிமரத்தைக் காணலாம். தல மரம் மகிழமரம் ஆகும். இக்கோவிலின் மூலவர் வரதராஜ பெருமாள் ஆவார். [1][3] மூலவர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் ஏழரை அடி உயரத்தில், சிறீ தேவி, பூதேவி புடை சூழ சங்கு சக்கரம் ஏந்தி, நின்ற நிலையில் வரதராஜ பெருமாள் காட்சி தருகிறார். பெருந்தேவி தாயார் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. [3] கருடன், யோக நரசிம்மர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். கோவிலை அடுத்து ஆனந்தபுஷ்கரணி எனும் தெப்பக்குளம் உள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம்[தொகு]

இக்கோவில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை; மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்

பிரமோற்சவம்[தொகு]

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலைப் போலவே இக்கோவிலிலும் பிரம்ம உற்சவம் வைகாசி மாதம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. [3] உற்சவத்தின் 7 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. [3] கருடசேவை நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை பூசை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோவிலில் சில சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. [4] மதுராந்தக உத்தம சோழனின் (கி.பி. 973-985) மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (ARE 134 of 1916), சோழ-குல-சுந்தர-விண்ணகர் என்று அழைக்கப்படும் இந்த விட்ணு கோவில், கேசவன் கருகைக்கோன் என்பவனால் அலிவலகேசவ பெருமாளுக்கு, கி.பி 973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செய்தியைப் பதிவு செய்துள்ளது. [4]

முதலாம் இராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ARE 133 of 1916), இக்கோவில் திருவிழாக்களுக்காக நிலக்கொடைவழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது. இங்கிருந்த கல்லாடேசுவரம் உடையார் கோவில் பற்றியும் இது குறிப்பிட்டுள்ளது.விஜயநகர மன்னர் அச்சு தேவராயர் திருப்பணி செய்ததாக சில கல்வெட்டுக்கள் உள்ளன .[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 A Temple similar to that in Kanchipuram Chithra Madhavan. The New Indian Express June 19, 2018
  2. மீஞ்சூர் பெருமாள் கோயில் குளம் சீரமைக்கப்படுமா? தினமணி டிசம்பர் 10, 2011
  3. 3.0 3.1 3.2 3.3 மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா!தினமலர் மே 19, 2014
  4. 4.0 4.1 4.2 Temples in Minjur. In Early Chola Art – Part I, Balasubrahmanyam, S. R.. Asia Publishing House, Bombay, 1966

வெளி இணைப்புகள்[தொகு]