லிலன் சனேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிலன் சனேசர் ( சிந்தி மொழி: ليلا چنيسر‎ ) 14 ஆம் நூற்றாண்டின் தட்டா, சிந்து மற்றும் பாக்கிஸ்தானின் சூம்ரா ஆட்சியாளர்களில் ஒருவரான ஜாம் சனேசரின் காலத்தின் ஒரு பாரம்பரிய கதையாகும். இது பெரும்பாலும் சிந்தி மற்றும் பாரசீக மொழிகளில் கூறப்பட்டு வந்துள்ளது.

சனேசரின் மனைவியான கேளிக்கை இன்பத்தை விரும்பும் லிலன், மற்றொரு பெண்ணின் 900,000 ரூபாய் மதிப்புள்ள அட்டிகையின் மீது ஆசைகொள்கிறாள். அதன் முன்னாள் உரிமையாளரான பெண்ணை தனது கணவருடன் ஒரு இரவைக் கழிக்க அனுமதிக்கிறாள். தான் விற்கப்பட்டதாக ஆத்திரமடைந்த சனேசர் லிலனை விவாகரத்து செய்கிறார். லிலன் தனது கணவரின் முன்னிலையில் அவரால் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை நீண்ட சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்.

இந்தக் கதை ஷா ஜோ ரிசாலோவில் தோன்றி, பொதுவாக " சிந்துவின் ஏழு ராணிகள் " அல்லது " ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள்" என்று அழைக்கப்பட்டு, சிந்துவிலிருந்து வரும் ஏழு பிரபலமான சோகக் காதல்களின் ஒரு பகுதியாகும். மற்ற ஆறு கதைகள் உமர் மார்வி, சசுய் புன்ஹுன், சோஹ்னி மெஹர், நூரி ஜாம் தமாச்சி, சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ .

கதை[தொகு]

ராஜா சனேசர் சூம்ரா வம்சத்தின் நன்கு அறியப்பட்ட ஆட்சியாளர் ஆவார். அவர் பாகிஸ்தானின் தட்டாவிற்கு அருகிலுள்ள சிந்துவின் பண்டைய நகரமான தேவல் கோட்டை ஆட்சி செய்தார். அவருக்கு வைரம் மற்றும் நகைகள் மீது மிகவும் ஏர்ப்பைக்கொண்ட ஒரு அழகான, லிலன் என்ற பெயருடைய ராணி இருந்தார்.

அவருக்கு சமகாலத்தவர் இந்தியாவில் உள்ள கச்சிலுள்ள லக்பத்தை ஆண்டராவ் கெங்கர் என்பவர் ஆவர். அவருக்கு கவுன்ரு என்ற ஒரே மகள் இருந்தாள். அவள் மிகவும் அழகானவளும் அவளுடைய உறவினரான உத்மதியுடன் திருமண உறுதி செய்யப்பட்டவளும் ஆவாள். ராணா காங்கர் மற்றும் மிர்கியின் ஒரே மகள் என்பதால், அதிகப்படியான காதல் அவளைக் சீரழித்துவிட்டது. அவள் தன் அழகைப் பற்றி பெருமிதம் கொண்டாள். அவளுடைய தோற்றத்தைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டாள்.

ஒரு நாள் அவளது தோழி ஜம்னி (உத்மதியின் சகோதரி), அவள் சனேசரின் ராணியாக இருப்பாள் போல நடந்துகொள்வதாக, கவுன்ருவின் அணுகுமுறையைப் பற்றி கிண்டல் செய்தாள். கவுன்ரு காயம் அடைந்து தன் தாயிடம் சனேசரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினாள். அவளது பெற்றோர்கள் பதற்றமடைந்தனர். ஆனால் சனேசர் திருமணமானவர் என்பதையும் அவருடைய ராணி லீலாவை மிகவும் நேசிப்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.கணவருடன் கலந்தாலோசித்த பிறகு, மிர்கியும் கவுன்ருவும் வியாபாரிகள் போல் மாறுவேடமிட்டு தேவாலுக்குப் புறப்பட்டனர். அங்கு அவர்கள் மன்னரின் மந்திரி ஜாகிரோவிடம் ஆலோசனை நடத்தி தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர். கவுன்ருவை மணந்து கொள்ளுமாறு சனேசரை வற்புறுத்துவதாக மந்திரி உறுதியளித்தார்.


ஜாகிரோ கவுன்ருவைப் பற்றி சனேசரிடம் பேசியபோது, ராஜா பொறுமை இழந்தார். எதிர்காலத்தில் அப்படி பேசக்கூடாது என்றும் கூறினார். லீலனின் இடத்தில் அந்த அரசனால் வேறு எந்தப் பெண்ணையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஜாகிரோ, மிர்கி மற்றும் கவுன்ருவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட்டர். அரசரின் ஒப்புதல் கிடைக்கதென்றும் அவர்கள் முயற்சி செய்வதில் பயனில்லை என்றும் கூறினார்.

கவுன்ருவும் அவள் தாயும் மாறுவேடமிட்டு சாதாரண ஆடைகளை அணிந்து கொண்டு லிலனின் அரண்மனைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் லிலனிடம், வறுமையின் காரணமாகத் தங்கள் நாட்டைக் கைவிட்டதால், அவர்களைத் தன் சேவையில் அமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். லிலன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களை தனிப்பட்ட வேலையாட்களாக அமர்த்தினாள். கவுன்ருவை ஒவ்வொரு நாளும் சனேசரின் படுக்கையை ஏற்பாடு செய்யச் சொன்னாள். வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் காலம் கடந்தது.

ஒரு நாள் கவுன்ரு சனேசருக்கு படுக்கையை தயார் செய்து கொண்டிருந்த போது, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. முன்னறிவிப்பின்றி அறைக்குள் நுழைந்த லிலன், கவுன்ருவின் கண்ணீரைப் பார்க்கிறாள். கண்ணீரின் காரணத்தைக் கேட்டாள். ஒரு காலத்தில் தானும் இளவரசியாக இருந்ததாகவும், அவளைப் போலவே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கவுன்ரு அவளிடம் கூறினாள். விளக்குகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'நௌலகா ஹார்' (900,000 ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ்) மூலம் தனது அரண்மனையை ஒளிரச் செய்ததாக அவள் லிலனிடம் கூறினாள்.

முதலில், லிலன் அவளை நம்பத் தயங்கினாள். ஆனால் விரைவில் அந்த நகையைப் பார்க்க அவள் ஆர்வம் கொண்டாள். கவுன்ரு அவளிடம் தன் அட்டிகையைக் காட்டியபோது, லிலன் அவளிடம் தகுந்த விலைக்கு விற்கத் தயாரா என்று கேட்டாள். கவுன்ரு லிலனிடம் தனது நகையை ஒரு நிபந்தனையுடன் இலவசமாக தருவதாகக் கூறினாள்.லிலன் பொறுமையிழந்து விவரத்தைக் கேட்டாள். ஒரு இரவை சனேசருடன் கழிக்க அனுமதித்தால், அந்த நகை அவளிடமே இருக்கும் என்று கவுன்ரு அவளிடம் கூறினாள்.

லிலன் சனேசரிடம் பேசியபோது அவர் தனது யோசனையை ஏற்கவில்லை. ஒரு நாள் விருந்து முடிந்து வீட்டுக்கு வந்த சனேசர், போதையில் இருந்தார். லிலன் தனக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பாக இதைக் கருதி கவுன்ருவை தன் படுக்கையறைக்குள் அனுமதித்தாள்.

காலையில் சனேசர் எழுந்து பார்த்தபோது, லிலன்படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக கவுன்ரு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் மிகவும் கோபமடைந்து அறையை விட்டு வெளியேறத் தயாராக இருந்தார். மிர்கி (கவுன்ருவின் தாய்) அவரிடம் 'நௌலகா ஹருக்கு' ஈடாக லிலன் அவரை கவுன்ருவுக்கு விற்றதாகக் கூறினார். வெறும் கழுத்தணிக்காக விற்கப்பட்டதை அவமானமாகக் கருதினார் சனேசர்.

பழிவாங்கும் விதமாக, லிலனைக் கைவிடுது, தனக்காக இவ்வளவு தியாகம் செய்த கவுன்ருவை மணந்தார். லிலன் மன்னிப்பு கேட்டு அழுது மன்றாடினாள். ஆனால் சனேசர் அவள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார். அவள் அவரை விட நகைகளை விரும்புவதாகவும், அவர் அவளை இனி காதலிக்கவில்லை என்றும் கூறினார். லிலன் எல்லா நம்பிக்கையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரிடம் சென்றாள். அங்கே அவள் தன் நாட்களை துன்பத்திலும், தனிமையிலும் கழித்தாள்.

சானேசரின் அமைச்சராக இருந்த ஜாகிரோ லிலனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மண உறுதி செய்திருந்தார். ஆனால் லிலனின் நிலையைக் கண்ட பிறகு அவள் கையை அவனிடம் கொடுக்க மறுத்தனர். அமைச்சர் லிலனைஅணுகினார். லலனும் உதவுவதாக ஒப்புக்கொண்டு சனேசரை திருமணத்திற்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

ஜாகிரோவின் திருமணத்தையொட்டி, மணமகன் வீட்டாருடன் சனேசரும் வந்தார். மற்ற பெண்களுடன் லிலன் நடனம் மற்றும் பாடலுடன் விருந்துக்கு வரவேற்பு அளித்தார். ஆனால் அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தது . சனேசர் அவர்களின் நடிப்பில் மகிழ்ச்சியடைந்து முகத்தை மறைத்து நடனமாடும் குரலிலால் ஈர்க்கப்பட்டார். இனியும் அந்தச் சூழலைப் பொறுத்துக் கொள்ள முடியாததால், அந்தப் பெண்ணின் முகத்தை வெளிக்கொணரும்படி சனேசர் கெஞ்சினார். லிலன் முக்காடு திறந்தவுடன், சனேசர் தரையில் விழுந்து இறந்தார். இதைக் கண்ட லிலனும் இறந்து போனாள்.

தழுவல்[தொகு]

லிலன் சனேசரின் கதை, மொஹபத் துஜே அல்விதா என்ற தொலைக்காட்சி தொடராக ஜூன் 2019 இல் ஹம் டிவியில் திரையிடப்பட்டது. இதில் சோனியா ஹுசைன், ஜாஹித் அகமது மற்றும் மன்ஷா பாஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சி பாலிவுட் திரைப்படமான ஜூடாயின் நகல் என்று கூறப்பட்டது. [1] ஆனால் பாஷா மறுத்து, இது லிலன் சனேசரின் நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Internet believes 'Mohabbat Tujhe Alvida' is a copy of Bollywood hit 'Judaai'". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
  2. "Mansha Pasha wishes we knew our folklore better". Samaa TV. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிலன்_சனேசர்&oldid=3681576" இலிருந்து மீள்விக்கப்பட்டது