ராஜா கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா கணேசன்
வன்காளத்தின் அரசன்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளப் படைப்பான ராஜா கணேஷ் நூலின் அட்டையில் ராஜா கணேசனின் ஓவியம்
கணேச வம்சம்
ஆட்சிக்காலம்1414–1415
முன்னையவர்முதலாம் அலாவுதீன் பைரோசு ஷா
பின்னையவர்சலாலுதீன் முகமது ஷா
ஆட்சிக்காலம்1417–1419
முன்னையவர்சலாலுதீன் முகமது ஷா
பின்னையவர்சலாலுதீன் முகமது ஷா
துணைவர்புல்ஜானி, கியாசுதீன் ஆசம் ஷாவின் மனைவி[1]
குழந்தைகளின்
பெயர்கள்
சலாலுதீன் முகமது ஷா
மரபுகணேச வம்சம்
மதம்இந்து சமயம்

ராஜா கணேசா ( Raja Ganesha ) வங்காளத்தின் ஒரு இந்து ஜமீந்தார் ஆவார். இவர் முதல் இலியாசு சாகி வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வங்காளத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இடைக்காலத்தின் சமகால வரலாற்றாசிரியர்கள் இவரை ஒரு அபகரிப்பாளராகக் கருதினர். இவரால் நிறுவப்பட்ட கணேச வம்சம் 1415−1435 வரை வங்காளத்தை ஆண்டது. [2] இவரது மகன் சுல்தான் சலாலுதீன் முகமது ஷாவின் நாணயங்களில் இவரது பெயர் கான்ஸ் ஜா அல்லது கன்ஸ் ஷா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோ-பாரசீக வரலாற்றாசிரியர்கள் இவரது பெயரை ராஜா கன்ஸ் அல்லது கான்சி என்று குறிப்பிட்டுள்ளனர். [3] பல நவீன அறிஞர்கள் இவரை தனுஜமர்தனதேவனுடன் அடையாளப்படுத்தினர். ஆனால் இந்த அடையாளம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இரியாசு-உசு-சலாதின் என்ற நூலின்படி (1788 இல் எழுதப்பட்ட ஒரு சரித்திரம்), ராஜா கணேசன் பாதுரியகட்டாவின் நிலப்பிரபுவாக இருந்தார். மேலும் பிரான்சிஸ் புக்கானன் ஹாமில்டனின் கூற்றுப்படி இவர் வடக்கு வங்காளத்தில் உள்ள தினாஜ்பூரின் [5] ஆளுநரும் ஆவார். ஒரு சமகால கடிதத்தில், இவர் 400 ஆண்டுகள் பழமையான நில உரிமையாளர் குடும்பத்தின் உறுப்பினராக விவரிக்கப்பட்டார். [6] பின்னர், இவர் பாண்டுவாவில் இலியாசு சாகி வம்ச ஆட்சியாளர்களின் அதிகாரியானார். [7] கியாஸ்-உத்-தின் ஆசம் ஷாவுக்குப் பிறகு அவரது மகன் சைபுதீன் அம்சா ஷா (ஆட்சி 1410-12) என்பவரும் இவருக்குப் பின்னர் சிகாபுதீன் பயாசித் ஷா (ஆட்சி 1413-14) என்பவரும் ஆட்சிக்கு வந்தனர். [3] சிகாபுதீன் பயாசித் ஷாவின் ஆட்சியின் போது கணேசன் மிகவும் சக்திவாய்ந்தவராக ஆனார் என்று பிரிஷ்டா கூறுகிறார். [6] பிரிஷ்டா மற்றும் நிஜாம்-உத்-தின் போன்ற முந்தைய அறிஞர்கள் சிகாபுதீனின் மரணத்திற்குப் பிறகு கணேசன் அரியணை ஏறினார் என்று கூறினாலும், மீண்டும் இரியாசு-உசு-சலாதின் இவர் சிகாபுதீனைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியதாகக் கூறுகிறது. சிகாபுதீனுக்குப் பிறகு அவரது மகன் அலா-உத்-தின் பெரோசு ஷா (1414-15 ஆட்சி) ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் விரைவில் ராஜா கணேசனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆட்சி[தொகு]

பிரிஷ்டாவின் கூற்றுப்படி, ராஜா கணேசனின் ஆட்சியானது பாண்டுவாவில் உள்ள முஸ்லிம்கள் மீதான இவரது சமரசக் கொள்கைகளால் குறிக்கப்பட்டது. "ராஜா கணேசன் ஒரு முஸ்லிம் இல்லை என்றாலும், இவர் அவர்களுடன் சுதந்திரமாக கலந்து, அவர்கள் மீது மிகுந்த அன்பைக் கொண்டிருந்தார். சில முஸ்லிம்கள், இஸ்லாத்தில் இவரது நம்பிக்கைக்கு சாட்சியாக, இவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய விரும்பினர்" என பிரிஷ்டா கூறுகிறார். [8] ஆனால் ரியாஸின் கூற்றுப்படி, இவர் பாண்டுவாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, வங்காள முஸ்லிம்களை ஒடுக்கி அவர்களில் பலரைக் கொன்றதாகத் தெரிகிறது.[9]

சாலிவாகன ஆண்டு கி.பி.1339 (1417 கி.பி) ஆண்டில் சட்டிகிராமில் (சிட்டகொங்) வெளியிடப்பட்ட தனுஜமர்தனதேவனின் வெள்ளி நாணயம். இடைக்கால பெங்காலி எழுத்துக்களில் உள்ளன;முன்பக்கம்: சிறீ சிறீ தனுஜமர்தன தேவன். தலைகீழ்: சிறீ சண்டி சரண பாராயணம்.

1922 ஆம் ஆண்டில், நவீன அறிஞரான நளினி காந்த பட்டசாலி, வங்காளத்தின் ஆரம்பகால சுதந்திர சுல்தான்களின் நாணயங்கள் மற்றும் காலவரிசை என்ற நூலில். தனுஜமர்தன தேவன், சாலிவாகன சகாப்தத்தில் 1339-40 (1416-18) இல் சுவர்ணகிராமம், பாண்டுநகரம் மற்றும் சட்டிகிராமத்திலிருந்து வெள்ளி நாணயங்களை வெளியிட்டதாக குறிப்பிடுகிறார். நாணயத்தின் முன்புறம் சிறீ சிறீ தனுஜமர்தன தேவன் என்றும் பின்பக்கம் சிறீ சண்டி சரண பாராயணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகேந்திரதேவன் என்பது ராஜா கணேசனின் மகன் இந்து மதத்திற்கு திரும்பிய பிறகும், இரண்டாவது முறையாக இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்பும் பெற்ற பட்டம் என்றும் அவர் கருதினார். வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் இந்தக் கருத்தை நிராகரிக்கிறார், முஸ்லிம் கணக்குகள் ஒரு சார்புடையவை என்று கூறினார்; ராஜா கணேசனை தனுஜமர்தன தேவனுடன் அடையாளப்படுத்துவதை அவர் ஆதரிக்கிறார். ராஜா கணேசனின் மரணத்திற்குப் பிறகு, அரசவையில் இந்துக்கள் அவரது இரண்டாவது மகனை மகேந்திரதேவன் என்ற தலைப்பில் அரியணயில் அமர்த்தியதாக நம்புகிறார், அவர் விரைவில் அவரது மூத்த சகோதரர் சலால்-உத்-தினால் வெளியேற்றப்பட்டார். ஆனால் அகமது அசன் தானி, தனுஜமர்தனதேவன் மற்றும் மகேந்திரதேவன் ஆகியோரை கிழக்கு மற்றும் தெற்கு வங்காளத்தின் உள்ளூர் தலைவர்களாகக் கருதினார். அவர்கள் ராஜா கணேசனால் அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும், இப்ராகிம் ஷா சர்கியின் படையெடுப்புகளாலும் ஏற்பட்ட பிரச்சனைகளின் போது சுதந்திரத்தை உறுதிப்படுத்தினர். [3] பிற்கால வாய்மொழி மற்றும் இலக்கிய ஆதாரங்களின் சாட்சியங்களின் அடிப்படையில், தனுஜமர்தனதேவன் மற்றும் மகேந்திரதேவன் ஆகியோர் சந்திரத்வீபத்தின் (இன்றைய பரிசால் மாவட்டம் ) தேவா வம்ச மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்று அடையாளம் காட்டினார். மற்றொரு நவீன அறிஞரான இரிச்சர்ட் ஈட்டன் அவருடைய கருத்தை ஆதரித்து, தற்போதைய ஹூக்லி மாவட்டத்தில் சோட்டா பாண்டுவாவுடன் தங்க சாலை நகரமான பாண்டுநகரை அடையாளம் காட்டினார். இருப்பினும், வங்காளத்தின் வைணவ பாரம்பரியமும் ராஜா கணேசனை அரியணை ஏறியவுடன் பட்டத்தை எடுத்துக்கொள்கிறது.[10]

தினாஜ்பூர் ராச்சியம்[தொகு]

ஒரு பாரம்பரியத்தின் படி, தினஜ்பூர் அதன் பெயரை ராஜா தினாஜ் அல்லது தினராஜ் என்பவரிடமிருந்து பெற்றது. அவர் தினஜ்பூர் ராச்சியத்தை (தினஜ்பூரின் தோட்டம்) நிறுவினார். ஆனால் மற்றொரு பாரம்பரியத்தின் படி, இதன் உண்மையான நிறுவனர் ராஜா கணேசன் என தெரிகிறது.[11]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jagadish Narayan Sarkar, Hindu-Muslim relations in Bengal: medieval period (1985), p.52
  2. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.827
  3. 3.0 3.1 3.2 Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp.205-8
  4. Mahajan, V.D. (1991). History of Medieval India (Muslim Rule in India), Part I, New Delhi: S. Chand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5, p.275
  5. Buchanan (Hamilton), Francis. (1833). A Geographical, Statistical and Historical Description of the District or Zila of Dinajpur in the Province or Soubah of Bengal. Calcutta: Baptist Mission Press. பக். 23–4. https://books.google.com/books?id=xIUIAAAAQAAJ&pg=PA23. 
  6. 6.0 6.1 Eaton, Richard Maxwell. (1993). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760. Berkeley: California University Press. https://books.google.com/books?id=gKhChF3yAOUC&pg=PA51. 
  7. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.204
  8. Eaton, Richard Maxwell. (1993). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760. Berkeley: California University Press. பக். 55,55ff. https://books.google.com/books?id=gKhChF3yAOUC&pg=PA55. 
  9. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.406
  10. [1][சான்று தேவை]
  11. Rahman, Zakia (29 September 2003). "Dinajpur Rajbari: Discovering the Hidden Glory". The Daily Star (Dhaka). http://mysyed.com/bangladesh/Dinajpur%20Rajbari%20-%20Discovering%20the%20hidden%20glory.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_கணேசன்&oldid=3816891" இலிருந்து மீள்விக்கப்பட்டது