மார்கரெட் மரி அலக்கோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மார்கரெட் மரியா
புனித மார்கரெட் மரி அலக்கோக்
கன்னியர்
பிறப்பு(1647-07-22)22 சூலை 1647
லாட்டகொர், பர்கன்டி, பிரான்சு
இறப்பு17 அக்டோபர் 1690(1690-10-17) (அகவை 43)
பரே-லீ-மொனியல், பர்கன்டி, பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்ரோமன் கத்தோலிக்க சபை
அருளாளர் பட்டம்18 செப்டம்பர் 1864, ரோம் by திருத்தந்தை 9ம் பயஸ்
புனிதர் பட்டம்13 மே 1920, ரோம் by திருத்தந்தை 15ம் பெனடிக்ட்
திருவிழாOctober 16
பாதுகாவல்போலியோ பாதித்தோர், திருஇதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்

புனித மார்கரெட் மரி அலக்கோக் (Saint Margaret Mary Alacoque) அல்லது புனித மார்கரெட் மரியா (22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690), பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே.

தொடக்க காலம்[தொகு]

மார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.[1]

இயேசுவின் காட்சிகள்[தொகு]

புனித மார்கரெட் மரியாவுக்கு இயேசுவின் திருஇதயக் காட்சி.

1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார்.[1] அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார்.

அந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.

1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.[2][3][4]

மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.[5]

தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.[6]

புனிதர் பட்டம்[தொகு]

புனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. 1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.

மார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.[7]

சிந்தனை[தொகு]

"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்." — புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "St. Margaret Mary Alacoque". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2. Ann Ball, 2003 Encyclopedia of Catholic Devotions and Practices ISBN 0-87973-910-X page 240
  3. The Westminster Dictionary of Christian Spirituality by Gordon S. Wakefield 1983 ISBN 066422170X page 347
  4. Catholic encyclopedia
  5. Oxford Dictionary of the Christian Church (Oxford University Press 2005 ISBN 978-0-19-280290-3): article Margaret Mary Alacoque, St
  6. Catholic Online: St. Margaret Mary Alacoque
  7. Encyclical Miserentissimus Redemptor of Pope Pius XI

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Marguerite Marie Alacoque
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_மரி_அலக்கோக்&oldid=3351174" இலிருந்து மீள்விக்கப்பட்டது