ப. சிங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. சிங்காரம்
பிறப்புப. சிங்காரம்
(1920-08-12)12 ஆகத்து 1920
சிங்கம்புனரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 30, 1997(1997-12-30) (அகவை 77)
தொழில்எழுத்தாளர், ஆசிரியர், ஆடை தொழிலதிபர்
மொழிதமிழ், மலாய், பஹசா
காலம்1920–1997
வகைபுனைவு
கருப்பொருள்பயணம், போர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்புயலிலே ஒரு தோணி
கடலுக்கு அப்பால்

ப. சிங்காரம் (P. Singaram, ஆகத்து 12, 1920 – திசம்பர் 30, 1997), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கழித்தவர். இவர், இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த புதின எழுத்தாளராக அறியப்படுகிறார். இவரின் "புயலிலே ஒரு தோணி" புதினம் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்பட்ட புதினம் என்று தமிழ் இலக்கிய அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது.

இளமைப்பருவம்[தொகு]

சிங்காரம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புனரியில் கு. பழனிவேல் நாடார் மற்றும் உண்ணாமலை அம்மாளுக்கு, ஆகஸ்டு 12, 1920இல் மூன்றாவது மகனாகப் பிறந்தார். சுப்பிரமணியன் மற்றும் பாஸ்கரன் இவருடைய சகோதரர்கள் ஆவர். இவரது பாட்டனார் குமாரசாமி நாடாருடன் இணைந்து இவரது குடும்பத்தினர் ஆடை வியாபாரம் செய்துள்ளனர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கம்புணரி ஆரம்பப் பள்ளியில் படித்தார். மேற்படிப்பிற்காக, மதுரையிலுள்ள செயிண்ட் மேரிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் தனது 18வது வயதில் எஸ். கே. சின்னமுத்து பிள்ளையுடன் பணி புரிய இந்தோனேசியாவிலுள்ள மேடானுக்குச் சென்றார். அங்கு திருமணம் செய்து கொண்டார். இவரது 25வது வயதில், இவரின் மனைவி மற்றும் குழந்தை பேறுகாலத்தின் போது இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மீண்டும் இந்தியா வந்து மதுரையில் வசித்தார்.

தாக்கங்கள்[தொகு]

ப. சிங்காரம் தனது 18வது வயதில் மேடானுக்குச் சென்றார். அப்போது உலகம் இரண்டாவது உலகப் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அதனால் கடல்வழி போக்குவரத்து சரியாக நடைபெறவில்லை. இதன் விளைவாக கப்பலில் இருந்து பெறக்கூடிய தமிழ் பத்திரிகைகள் சிங்காரத்திற்கு கிடைக்கவில்லை. பினாங்கு நூலகம் அவருக்கு ஆறுதலை அளித்து, ஹெமிங்வே, டால்ஸ்டாய், பால்க்னர், செக்கோவ் மற்றும் தஸ்தயெவ்ஸ்கியை அறிமுகம் செய்தது.

ஹெமிங்வேயின் தாக்கம் அவரது இரு படைப்புகளிலும் வெளிப்பட்டது. அவர் ஹெமிங்வேயின் "எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்" மிகச் சிறந்த படைப்பு என்றும், அன்னா கரேனினா, போரும் அமைதியும் புதினங்களை விட முக்கியமான அமெரிக்க இலக்கியம் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பணிகள்[தொகு]

சிங்காரம் இரண்டு புதினங்கள் மட்டுமே எழுதியுள்ளார், ஏனெனில் இவற்றை வெளியிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவரால் மேலும் எழுத இயலவில்லை. அவர் எழுத விரும்பியபோது அவரை ஊக்கப்படுத்தவில்லை என்றும், அவர் எழுதிய 2 நாவல்களை வெளியிட்ட பிறகு அவர் ஊக்கத்தை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் தாக்கம் அவரது நூலில் வெளிப்படுகிறது. மேலும் ஹெமிங்வே தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என தனது படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்.[1] சிங்காரம், தமிழ் இலக்கியத்தில்புதுமைப்பித்தன் மற்றும் மௌனியின் சிறுகதைகளை இந்தோனேசியா செல்வதற்கு முன்னரே படித்திருந்தார். தற்கால எழுத்தாளர்களைப் பற்றி கேள்வி எழுப்பும்போது, அவர் கருத்துக்களில் ஆழமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கு அப்பால்[தொகு]

சிங்காரம், 1950இல் இந்தியா திரும்பியவுடன் "கடலுக்கு அப்பால்" என்கிற புதினத்தை எழுதினார். இதை வெளியிடுவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. இவருடைய நண்பர் மூலமாக இந்தப் புதினம், கலைமகள் பதிப்பகத்திற்கு போட்டிக்காக அனுப்பப்பட்டது. போட்டியில் இந்தப் புதினம் முதல் பரிசை வென்றது. இறுதியில் கலைமகள் பதிப்பகத்தின் வழியாக 1959இல் "கடலுக்கு அப்பால்" புதினத்தை வெளியிட்டார்.

புயலிலே ஒரு தோணி[தொகு]

புயலிலே ஒரு தோணி புதினத்தை[2] 1962இல் எழுதினார். நண்பரின் கடும் முயற்சியினால் 1972இல் கலைஞன் பதிப்பகம் இதை வெளியிட்டது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இந்தப் புதினத்தை குறிப்பிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், சுமத்திராவில் நடக்கும் கதையை இந்தப் புதினம் எடுத்துரைக்கிறது.

பல திரைப்பட தயாரிப்பாளர்கள் "புயலிலே ஒரு தோணி" கதையை படமாக எடுக்க விரும்பியுள்ளனர். ஆனால் புத்தகத்தில் வருவது போன்று திரையில் காட்டுவது இயலாது என்கிற காரணத்தால் அதை தவிர்ப்பதாக கூறியுள்ளனர்.[3]

இறப்பு[தொகு]

சிங்காரம் 1946இல் இந்தியா திரும்பியவுடன், மீண்டும் இந்தோனேசியா செல்ல திட்டமிட்டார். அது இயலாத காரணத்தால், மதுரையிலுள்ள 'தினத்தந்தி' நாளேடு நிறுவனத்தில் பணி புரிந்து 1987இல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் யாருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. 50 வருடங்களாக மதுரையிலுள்ள ஒய். எம். சி. ஏ. விடுதியில் தனியாக வாழ்ந்தார்.

எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி மற்றும் பலர் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துக்கூறி மீண்டும் அவரை எழுதுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சிங்காரம் அவர்களின் வேண்டுகோளைத் தவிர்த்து தான் எழுதப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

1997இல், தனது வருமானங்களை சமூக நல அறக்கட்டளைக்கு வழங்கினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார். அதே வருடத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திசம்பர் 30, 1997 இல் காலமானார். அவர் இறந்ததைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_29.html
  2. Google Books
  3. "Vetrimaran Interview". Archived from the original on 2013-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சிங்காரம்&oldid=3793973" இலிருந்து மீள்விக்கப்பட்டது