பொட்டி சிறீராமுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டி சிறீராமுலு
பிறப்பு(1901-03-16)16 மார்ச்சு 1901
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு15 திசம்பர் 1952(1952-12-15) (அகவை 51)
சென்னை, இந்திய ஒன்றியம்
இறப்பிற்கான
காரணம்
உண்ணாவிரதத்தால் உயிரிழந்தார்
கல்லறைசென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமரஜீவி
சமயம்இந்து
பெற்றோர்குருவையா, மகாலட்சுமி அம்மா

பொட்டி சிறீராமுலு (ஆங்கிலத்தில் Potti Sreeramulu, தெலுங்கில் పొట్టి శ్రీరాములు,1901 மார்ச் 16 - 15 டிசம்பர் 1952) ஒரு இந்திய விடுதலைப்போராட்ட வீரராவார். காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுவதில் செலவிட்டவர். சிறீராமுலு ஆந்திர மாநிலம் உருவாகத் தன்னையே தியாகம் செய்ததால் ஆந்திர மாநிலத்தவர்களால் அமரஜீவி என்று போற்றப்பட்டார். அவர் சென்னை மாகாணத்தில் உள்ள தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்துத் தனிமாநிலமாக்க, துவக்கிய உண்ணாவிரதப் போராட்டத்தால் பிரபலமானார். அவரது மரணம் பெரும் கலவரத்துக்குக் காரணமானது. இதனால் அப்போதைய இந்தியப் பிரதமரான சவகர்லால் நேரு ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

வாழ்க்கை[தொகு]

இவர் குருவைய்யா, இலட்சுமிநம்மா ஆகியோருக்கு 1901ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். இவரது சொந்த ஊரான படமட்டிபள்ளி, பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது. அப்போது பழைய நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வறுமைக் காரணமாக அவர் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.[1] தனது உயர்நிலை பள்ளிப்பள்ளிக் கல்வியை, சென்னையில் முடித்தார். பம்பாயில் உள்ள விக்டோரியா ஜூப்ளி தொழில்நுட்ப நிறுவனத்தில் சுகாதாரப் பொறியியல் படித்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, 1928-இல் பம்பாயில் இந்திய ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் அவரது மனைவியும், புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது வேலையை விட்டு விலகி, காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் மனிதக்குலத்திற்குச் சேவை செய்யவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் சேர்ந்தார்.

சுதந்திர இயக்கம்[தொகு]

சிறீராமுலு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் போராட ஆரம்பித்தார். 1930-இல் உப்புச் சத்தியாகிரகத்திலும், 1941-1942 காலகட்டத்தில் தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு மும்முறை சிறைத்தண்டனைப் பெற்றார்.

தலித் மேம்பாடு[தொகு]

நெல்லூரில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் போன்றவற்றில் தலித் மக்கள் நுழைவதற்காகப் பிரச்சாரம் செய்து உரிமைகளைப் பெற்றுத்தந்தார்.

ஆந்திர தனிமாநிலக்கோரிக்கை[தொகு]

விடுதலைக்குப் பிறகு தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க சென்னையைத் தலைநகராகக் கொண்ட தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு மக்களால் எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பிரதமர் சவகர்லால் நேரு போன்றவர்கள் நிராகரித்தனர். ஆந்திர மாநிலம் உருவாக்கப்படாததால், சிறீராமுலு சென்னையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை 19 அக்டோபர் 1952 அன்று துவக்கினார். புதிய மாநிலம் அமைவதைப் பற்றிய அறிக்கை வெளிவராததால் சிறீராமுலு தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக 15 டிசம்பர் 1952 அன்று இரவில் இறந்தார்.

அவரது சவ ஊர்வலம் சென்னையில் நடந்தபோது, ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து கொண்டு, அவரது தியாகத்தைப் பாராட்டிக் கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் கலவரமாக மாறிப் பொது சொத்துகள் உடைக்கப்பட்டன. கலவரம் விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, பீமவரம், ராஜமுந்திரி, ஏலூரு, குண்டூர், தெனாலி, ஒங்கோல், நெல்லூர் போன்ற இடங்களுக்குப் பரவியது. ஏழு பேர் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். மக்கள் போராட்டத்தால் சென்னை மற்றும் ஆந்திர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலை மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்தது. டிசம்பர் 19 அன்று பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

பின்விளைவு[தொகு]

அக்டோபர் 1, 1953-இல் தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் நிறுவப்பட்டது. கர்னூல் தலைநகரானது.

நினைவு இல்லம்[தொகு]

பொட்டி சிறீராமுலு சென்னையில் மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் 126ஆம் எண் கொண்ட வீட்டில் இறந்தார். இவர் நினைவாக இந்த வீட்டை ஆந்திர மாநில அரசு நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கிறது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டி_சிறீராமுலு&oldid=2764562" இலிருந்து மீள்விக்கப்பட்டது