பெரியசாமி சந்திரசேகரன்
பெ. சந்திரசேகரன் நா.உ. மா.ச.உ | |
---|---|
![]() | |
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–2010 | |
பின்வந்தவர் | சந்தானம் அருள்சாமி |
மத்திய மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 1993–1994 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 17, 1957 தலவாக்கலை, இலங்கை |
இறப்பு | 1 சனவரி 2010 கொழும்பு, இலங்கை | (அகவை 52)
தேசியம் | மலையகத் தமிழர் |
அரசியல் கட்சி | மலையக மக்கள் முன்னணி |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பணி | தொழிற்சங்கத் தலைவர் |
சமயம் | இந்து |
பெரியசாமி சந்திரசேகரன் (ஏப்ரல் 16, 1957 - சனவரி 1, 2010) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்கவாதியுமாவார். இவர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சமூக வளர்ச்சி மற்றும் சமத்துவ அமைச்சராகவும் இருந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
சந்திரசேகரன் இலங்கையின் மெறயா பேடப் தோட்டத்தில் ஒரு வர்த்தக குடும்பத்தில் பிறந்தார். பெரிய சாமிக்கும் பரப்பாத்தி அம்மானுக்கும் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் நான்கு தங்கைகளும் உள்ளனர். தலவாக்கலை தமிழ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த அவர் பின்னர் தலவாக்கலை புனித பெட்ரிக் பாடசாலையிலும் க.பொ.த உயர்தரத்தை அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் தொடர்ந்தார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
எழுத்தாற்றல் கொண்ட சந்திரசேகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்த தமிழ் அரசியல் கட்டுரைகளைக் கவனித்த செளமியமூர்த்தி தொண்டமான் இவரை அழைத்து இ.தொ.கா.வில் சேரும்படி விடுத்த அழைப்பையடுத்து 1977ம் ஆண்டு இ.தொ.கா.வில் இணைந்தார். தலவாக்கல நகரசபை உறுப்பினராகத் தெரிவான இவர் இ.தொ.கா.வின் தலவாக்கலை-அக்கரபத்தனை பகுதிக்கான அரசியல் பிரிவு உறுப்பினராகக் கடமையாற்றி வந்தார். பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு நுவரெலிய மாவட்ட சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இ.தொ.கா.வுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து அதில் இருந்து விலகி 1989ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியை அமைத்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிளவர் வீதி கூட்டுப்படை நடவடிக்கைகள் தலைமையகத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து சந்தேக நபர் வரதனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான இவர், 94ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே மண் வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றார். இவரது ஆதரவையடுத்தே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அரசு அமைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலின் பிறகு வழக்கு விசாரணையில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்.
வர்த்தக வாணிப பிரதியமைச்சராகவும் தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சராகவும் பதவி வகித்த இவர், தனது பதவிக் காலத்தில் ஐம்பதாயிரம் பெருந்தோட்ட வீடுகளை அமைத்துக்கொடுத்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் இவர் காலத்திலேயே முதல் தடவையாக அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தற்போதைய மகிந்த ராஜபக்சவின் அரசில் இணைந்து அமைச்சரானார்.
இவர் பொதுவாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் உடையவராவார். நல்ல பேச்சாளரான இவர் தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பாக வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து வந்ததோடு மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும் விளங்கினார். மலையக மக்கள் முன்னணியை படித்த தமிழ்த் தோட்ட இளைஞர்களின் பாசறையாக ஆரம்ப காலத்தில் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பு[தொகு]
குறுகிய காலமாக நோய்வாய்ப்பட்டதன் பிறகு 2010 சனவரி முதலாம் நாள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "UPF leader P. Chandrasekeran dies following a brief illness" (in ஆங்கிலம்). Dailymirror (Wijeya Newspapers Ltd.). January 01, 2010. Archived from the original on 2010-01-04. https://web.archive.org/web/20100104121104/http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72364. பார்த்த நாள்: 2010-01-01.
வெளி இணைப்புகள்[தொகு]
- அமைச்சர் சந்திரசேகரன் காலமானார் பரணிடப்பட்டது 2010-01-06 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஜனவரி 2, 2010