பருவநிலைத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருவநிலைத் திட்டம் (அ) பிராஜக்ட் மௌசம் (Project Mausam) என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை இணைக்கும் நோக்கத்துடன் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்துடன் இந்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம் (ASI) இணைந்து செயல்படுத்தும் ஒரு கலாச்சாரத் திட்டமாகும். "மௌசம்" என்ற சொல்லுக்கு "வானிலை" அல்லது "பருவம்" என்று பொருள்படும், இது அரபு வார்த்தையான மவ்சிம் உட்பட பிராந்திய பேச்சுவழக்குகளில் இருந்து பெறப்பட்டது, இது படகுகள் பாதுகாப்பாக பயணிக்கும் பருவத்தைக் குறிக்கிறது. [1] [2]

இத்திட்டமானது, இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 39 நாடுகளுடன் கடல்சார் கலாச்சாரத் தொடர்புகளை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார, கலாச்சார மற்றும் மதத் தொடர்புகளின் பன்முகத்தன்மையை பதிவு செய்ய வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு இரண்டு தொலைநோக்குகள் உள்ளன: முதலாவது நாடுகளுக்கிடையேயான தேசிய கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வது மற்றும் இரண்டாவது நாடுகளுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மீண்டும் உருவாக்குவது. [3]

இந்தியப் பெருங்கடல், சிஐஏ உலக உண்மைகள் புத்தகத்தில் (1990) சித்தரிக்கப்பட்டுள்ளவாறு

குறிக்கோள்கள்[தொகு]

இந்தத் திட்டம் அதன் தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்வதற்கு நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, நாடுகளுடன் தொலைந்து போன தொடர்புகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சமகால நெறிமுறைகளுக்கு அப்பால், இந்தியப் பெருங்கடல் கோளத்தில் உள்ள நாடுகளின் பொதுவான பொருளாதார உறவுகள் மற்றும் கலாச்சார மதிப்புகளை ஆவணப்படுத்தவும் கொண்டாடவும் இந்தத் திட்டம் முயல்கிறது. மேலும் தேசிய எல்லைகளைத் தாண்டி, இந்தியப் பெருங்கடல் கோளத்தில் உள்ள நாடுகளுக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தவும், எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுதாரணத்தை அமைக்கவும் இத்திட்டம் முயல்கிறது.

இரண்டாவதாக, தற்போதுள்ள உலக பாரம்பரியக் களங்களுக்கு இடையே இணைப்புகள் மற்றும் உறவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் கோளத்தில் உள்ள கலாச்சார மற்றும் இயற்கை உலக பாரம்பரியக் களங்களை தேசிய அளவிலான மற்றும் நாடுகளுக்கிடையேயான கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்துவரன் மூலம் இணைக்க இந்த திட்டம் ஒரு தளத்தை வழங்கும். [4] மூன்றாவதாக, உலக பாரம்பரியக் களங்களுக்கிடையே உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை நிரப்புவதன் மூலம் கலாச்சார நிலப்பரப்புகளை மறுவரையறை செய்ய இந்தத் திட்டம் விரும்புகிறது. இது பல அடுக்குகளிலான கண்ணோட்டையும் மற்றும் முழுமையான கண்ணோட்டத்தையும் வழங்குவதோடு, கடந்த கால மற்றும் சமகால உறவுகளைப் புரிந்துகொள்ள உதவும் புதிய உத்தியை அனுமதிக்கும். [4]

இறுதியாக, இது நாடுகளுக்கிடையேயான-தேசிய உலக பாரம்பரியப் பரிந்துரையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீடித்த சுற்றுலா வாய்ப்பு, பாரம்பரிய மேம்பாடு, ஆராய்ச்சி, தெரிவுநிலை மற்றும் கலாச்சார மரபுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் நாடுகளுக்கிடையேயான-தேசிய அளவிலான முன்மொழிவகளை அடைவதற்கு இந்தியப் பெருங்கடலின் கடல் வழிகளை இந்த திட்டம் பரிந்துரைக்கும்.

தொடக்கத்தில், இத்திட்டத்திற்கான யோசனையை அப்போதைய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த இரவீந்திர சிங் முன்மொழிந்தார். பின்னர், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் களப் பட்டியலில் இந்த திட்டத்தை ஒரு நாடுகடந்த கல்வெட்டாக பரிந்துரைக்க இந்திய அரசாங்கம் தயாராகி வந்தது. எதிர்கால சந்ததியினருக்கான சாத்தியமான நன்மைகளை ஆராய இந்திய அரசாங்கம் நிதி முதலீடுகளை அதிகரித்துள்ளது.

வரலாற்றுப் பின்னணி[தொகு]

புவியியல் ரீதியாக, இந்தியப் பெருங்கடல் தெற்கில் அண்டார்டிக் அல்லது தென்முனைப் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளதோடு வடக்கில் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலுடன் சங்கமமாக அமைகிறது. மேற்கில் ஆப்பிரிக்கா மற்றும் வடகிழக்கில் ஆசியா, இந்தியா மற்றும் இலங்கையைச் சுற்றி கடல் எல்லையாக உள்ளது. இந்தியப் பெருங்கடலில் கடற்படை வணிகம், சிந்து சமவெளியில் வசிப்பவர்கள் மெசபடோமியா, எகிப்து, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் உரோமைப் பேரரசு ஆகியவற்றுடன் கடல் வணிகத்தைத் தொடங்கியபோது, கிமு மூன்றாம் மில்லினியத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த கடல்சார் வர்த்தக வலைப்பின்னல்கள் மூலம், மருந்துகள், நறுமணப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சாயங்கள், மரம், தானியங்கள், இரத்தினங்கள், ஜவுளி, உலோகங்கள், கால்நடைகள் மற்றும் கற்கள் உட்பட பல பொருட்கள் பரிமாறப்பட்டன. அந்த பொருட்கள் பின்னர் இந்தியப் பெருங்கடலின் கரையோரத்தில் விற்கப்பட்டன. இந்த வர்த்தகம் மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் பரிமாற்றத்தை எளிதாக்கியது, பௌத்தம், கிறித்தவம் மற்றும் இந்து மதத்தின் விரிவாக்கத்திற்கு பங்களித்தது.

எகிப்தை ரோமானியர்கள் கைப்பற்றிய பிறகு இந்தியாவிற்கும் உரோமிற்கும் இடையே வணிகம் அதிகரித்தது. கிரேக்க வரலாற்றாசிரியர் இசுட்ராபோவின் கூற்றுப்படி, ஏலியஸ் காலஸ் எகிப்தின் அதிபராக இருந்தபோது, ஆண்டுதோறும் 120 படகுகள் மியோஸ் ஹார்மோஸ் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.[சான்று தேவை] இந்திய அரசுகள் வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கு இல்லாமல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கடலைக் கட்டுப்படுத்தின. இருப்பினும், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, வெளிநாட்டு சக்திகளின் கடல் கட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறியது. உதாரணமாக, இந்தியப் பெருங்கடல் கடல் வழிகளை ஐரோப்பிய சக்திகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு இந்தியப் பொருளாதாரம் வெளிநாட்டு வணிகங்களைச் சார்ந்திருந்தது. முதலாம் உலகப் போர் வரை இக்கடல் பகுதி பிரித்தானியப் பேரரசால் கட்டுப்படுத்தப்பட்டது, இதன் போது ஜெர்மனி கடலைக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் கடல்சார் மேலாதிக்கத்தைப் பெற்றனர். [5] தற்போது, இந்தியப் பெருங்கடல் கொள்கலன் கப்பல்களில் பாதியையும், சரக்குகளில் மூன்றில் ஒரு பகுதியையும், உலகில் உள்ள எண்ணெய் கொள்கலன்களில் மூன்றில் இரண்டு பங்கையும் சுமந்து செல்கிறது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Project Mausam". Ministry of Culture, Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
  2. Daniel, Thomas (2015). "Project Mausam: India's Grand Maritime Strategy (Part I)". Institute of Strategic and International Studies: 1–5. https://www.jstor.org/stable/resrep13523.1. 
  3. Shankar, Kumar. "People-Politics-Policy-Performance-Maritime Diplomacy: Whispers of an Indian Wind". login.ezproxy1.library.usyd.edu.au. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
  4. 4.0 4.1 cholan (25 June 2014). "Project 'Mausam • IAS Preparation Online". IAS Preparation Online (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  5. Pearson, Michael N. "The Indian Ocean". login.ezproxy1.library.usyd.edu.au. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
  6. Mallapur, Chaitanya (28 April 2017). "Mapping India's Lost Roots: Project Mausam and the Spice Route". China India Dialogue. Archived from the original on 28 April 2017. பார்க்கப்பட்ட நாள் 19 May 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவநிலைத்_திட்டம்&oldid=3662554" இலிருந்து மீள்விக்கப்பட்டது