உரோமைப் பேரரசு
உரோமைப் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 27 – பொ.ஊ. 395 (ஒன்றுபட்ட)[2] பொ.ஊ. 395 – பொ.ஊ. 476/480 (மேற்கு) பொ.ஊ. 395 – பொ.ஊ. 1453 (கிழக்கு) | |||||||||||
![]() | |||||||||||
![]() உரோம் நகர அரசின் உருவாக்கம் முதல் மேற்கு உரோமைப் பேரரசின் வீழ்ச்சி வரையிலான உரோமைப் பேரரசு | |||||||||||
நிலை | பேரரசு | ||||||||||
தலைநகரம் | |||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||
சமயம் |
| ||||||||||
மக்கள் | உரோமானியர் | ||||||||||
அரசாங்கம் | உரிமை ரீதியில் குடியரசு, நடைமுறை ரீதியில் பகுதியளவு தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான முடியரசு | ||||||||||
பேரரசர் | |||||||||||
• பொ.ஊ.மு. 27 – பொ.ஊ. 14 | அகத்தசு (முதல்) | ||||||||||
• 98–117 | திராயான் | ||||||||||
• 138–161 | அந்தோனியசு பையசு | ||||||||||
• 270–275 | அரேலியன் | ||||||||||
• 284–305 | தியோக்லெதியன் | ||||||||||
• 306–337 | முதலாம் கான்ஸ்டன்டைன் | ||||||||||
• 379–395 | முதலாம் தியோடோசியஸ்[d] | ||||||||||
• 474–480 | யூலியசு நெபோசு[e] | ||||||||||
• 475–476 | உரோமுலசு அகத்தசு | ||||||||||
• 527–565 | முதலாம் ஜஸ்டினியன் | ||||||||||
• 610–641 | எராக்கிளியசு | ||||||||||
• 780–797 | ஆறாம் கான்சுடான்டைன்[f] | ||||||||||
• 976–1025 | இரண்டாம் பாசில் | ||||||||||
• 1143–1180 | முதலாம் மானுவேல் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் முதல் பிந்தைய நடுக் காலம் | ||||||||||
• அக்தியம் போர் | பொ.ஊ.மு. 32 – பொ.ஊ.மு. 30 | ||||||||||
• பேரரசு நிறுவப்பட்டது | பொ.ஊ.மு. 30 – பொ.ஊ.மு. 2 | ||||||||||
• ஆக்தேவியனுக்கு அகத்தசு என்று பெயரிடப்பட்டது | 16 சனவரி, பொ.ஊ.மு. 27 | ||||||||||
• கான்ஸ்டண்டினோபில் தலைநகரானது | 11 மே 330 | ||||||||||
• இறுதி கிழக்கு-மேற்குப் பிரிவு | 17 சனவரி 395 | ||||||||||
• உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்படுதல் | 4 செப்டம்பர் 476 | ||||||||||
• யூலியசு நெபோசின் கொலை | 9 மே 480 | ||||||||||
• நான்காம் சிலுவைப் போர் | 12 ஏப்ரல் 1204 | ||||||||||
• கான்சுடான்டினோப்பிள் மீண்டும் கைப்பற்றப்படுதல் | 25 சூலை 1261 | ||||||||||
29 மே 1453 | |||||||||||
• திரெபிசோந்தின் வீழ்ச்சி | 15 ஆகத்து 1461 | ||||||||||
பரப்பு | |||||||||||
பொ.ஊ.மு. 25[6] | 2,750,000 km2 (1,060,000 sq mi) | ||||||||||
பொ.ஊ. 117[6][7] | 5,000,000 km2 (1,900,000 sq mi) | ||||||||||
பொ.ஊ. 390[6] | 3,400,000 km2 (1,300,000 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• பொ.ஊ.மு. 25[8] | 5,68,00,000 | ||||||||||
நாணயம் | செசுதேர்தியசு,[g] அரேயசு, சோல்தியசு, நோமிசுமா | ||||||||||
|
உரோமைப் பேரரசு (Roman Empire) என்பது பண்டைய உரோமின் குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலம் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின் நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர். முதலாவது உரோமைப் பேரரசராகச் சீசர் அகத்தசின் பொறுப்பேற்பு முதல், 3ஆம் நூற்றாண்டின் இராணுவ அரசற்ற நிலை வரை இது உரோமை இத்தாலியை இதன் மாகாணங்களின் முதன்மைப் பகுதியாகக் கொண்டிருந்தது. உரோம் நகரம் இதன் ஒரே தலைநகராக இருந்தது. இப்பேரரசானது பிறகு பல பேரரசர்களால் ஆளப்பட்டது. அவர்கள் மேற்கு உரோமைப் பேரரசு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். உரோம் நகரமானது இந்த இரண்டு பேரரசுகளின் பெயரளவிலான தலைநகரமாகத் தொடர்ந்திருந்தது. இந்நிலை பொ.ஊ. 476 வரை நீடித்தது. அந்த ஆண்டு ஏகாதிபத்திய முத்திரையானது மேற்குத் தலைநகரமான இராவென்னாவைச் செருமானியக் காட்டுமிராண்டிகள் கைப்பற்றியதற்குப் பிறகு கான்ஸ்டான்டினோபிலுக்கு அனுப்பப்பட்டது. பொ.ஊ. 380இல் உரோமைப் பேரரசின் அரசு சமயமாக கிறித்தவம் பின்பற்றப்பட்டது மற்றும் செருமானிய மன்னர்களிடம் உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது ஆகியவை பாரம்பரியக் காலத்தின் முடிவையும், நடுக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கின்றன. இந்த நிகழ்வுகள் மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசு படிப்படியாக எலனிய மயமாக்கப்பட்டது ஆகிய காரணங்களால் கிழக்குப் பகுதிகளில் நீடித்திருந்த நடுக் கால உரோமப் பேரரசை பிரித்து அறிவதற்காக வரலாற்றாளர்கள் அப்பேரரசைப் பைசாந்தியப் பேரரசு என்று குறிப்பிடுகின்றனர்.
உரோமைப் பேரரசுக்கு முன்னர் இருந்த அரசான உரோமைக் குடியரசானது உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் சண்டைகளால் கடுமையாக உறுதித் தன்மை குலைந்திருந்தது. பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூலியசு சீசர் நிரந்தரச் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். பிறகு பொ.ஊ.மு. 44இல் அரசியல் கொலை செய்யப்பட்டார். உள்நாட்டுப் போர்களும், நாடு கடத்தல்களும் தொடர்ந்தன. பொ.ஊ.மு. 31ஆம் ஆண்டு அக்தியம் யுத்தத்தில் மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாற்றாவுக்கு எதிராக ஆக்தேவியனின் வெற்றியில் இப்பிரச்சினைகள் இறுதியாக உச்சத்தை அடைந்தன. அதைத் தொடர்ந்த ஆண்டில் ஆக்தேவியன் எகிப்தின் தாலமி இராச்சியத்தை வென்றார். பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்தரின் படையெடுப்புகள் மூலம் தொடங்கிய எலனியக் காலத்தை முடித்து வைத்தார். ஆக்தேவியனின் சக்தியானது அதிகமாகியது. உரோமை செனட் சபையானது ஒட்டு மொத்த சக்தியையும், அகத்தசு என்ற புதிய பட்டத்தையும் அவருக்கு வழங்கியது. அவரை முதல் உரோமைப் பேரரசர் ஆக்கியது. இத்தாலி தவிர்த்த பரந்த உரோமை நிலப்பரப்புகள் செனட் மற்றும் ஏகாதிபத்திய மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. இத்தாலி தொடர்ந்து முதன்மை நிலமாக இருந்தது.
உரோமைப் பேரரசின் முதல் இரண்டு நூற்றாண்டுகளானது அதற்கு முன்னர் கண்டிராத நிலைத் தன்மையையும், செழிப்பையும் உடைய காலத்தைக் கண்டது. இது பாக்ஸ் உரோமானா (பொருள்: உரோமை அமைதி) என்று அறியப்படுகிறது. உரோம் அதன் உச்சபட்ச நிலப்பரப்பு விரிவாக்கத்தை திராயனின் (பொ.ஊ. 98–117) ஆட்சியின் போது அடைந்தது. கமதசுவின் (பொ.ஊ. 177–192) ஆட்சியில் அதிகரித்து வந்த பிரச்சினைகள் மற்றும் வீழ்ச்சிக் காலமானது தொடங்கியது. 3ஆம் நூற்றாண்டில் பேரரசின் நிலையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஒரு பிரச்சனையின் கீழ் இது சென்றது. அது கெளல் மற்றும் பல்மைரேனியப் பேரரசுகள் உரோமைச் செனட் சபையில் இருந்து பிரிந்து சென்றது ஆகும். பெரும்பாலும் உரோமை இலீசியன்களை சேர்ந்த ஒரு தொடர்ச்சியான, குறுகிய காலமே பதவி வகித்த பேரரசர்கள் பேரரசுக்குத் தலைமை தாங்கினர். அரேலியனுக்குக் (பொ.ஊ. 270–275) கீழ் பேரரசு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. இதை நிலைப்படுத்த தியோக்லெதியன் இரண்டு வெவ்வேறு ஏகாதிபத்திய அவைகளை கிரேக்கக் கிழக்கு மற்றும் இலத்தீன் மேற்கில் 286இல் அமைத்தார். 313ஆம் ஆண்டின் மிலன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொ.ஊ. 4ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர். இதற்குப் பிறகு சீக்கிரமே இடம் பெயர்தல் காலத்தில் ஏற்பட்ட செருமானிய மக்கள் மற்றும் அட்டிலாவின் ஊணர்கள் ஆகியோரின் பெரிய படையெடுப்புகள் மேற்கு உரோமைப் பேரரசின் பலவீனத்திற்கு வழி வகுத்தன. செருமானிய எருலியர்களிடம் இராவென்னா வீழ்ந்தது மற்றும் பொ.ஊ. 476இல் ஒதோசரால் உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு உரோமைப் பேரரசு இறுதியாக வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசர் செனோ அதிகாரப் பூர்வமாக பொ.ஊ. 480இல் இதைக் கலைத்தார். கிழக்கு உரோமைப் பேரரசானது மேலும் ஒரு 1,000 ஆண்டுகளுக்கு, 1453இல் இரண்டாம் மெதுமெது தலைமையிலான உதுமானியத் துருக்கியர்களிடம் கான்ஸ்டான்டினோபில் வீழ்ந்தது வரை எஞ்சிப் பிழைத்திருந்தது.[i]
உரோமைப் பேரரசின் பரந்த நிலப்பரப்பு மற்றும் நீண்ட காலம் நீடித்திருந்த தன்மை ஆகியவற்றின் காரணமாக, உரோமின் அமைப்புகளும், பண்பாடும் இது அமைந்திருந்த நிலப்பரப்பில் மொழி, சமயம், கலை, கட்டடக் கலை, இலக்கியம், தத்துவம், நீதி மற்றும் அரசாங்க வகைகளின் வளர்ச்சி மீது ஆழ்ந்த மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உரோமானியர்களின் இலத்தீன் மொழியானது நடுக்கால மற்றும் நவீன உலகின் உரோமானிய மொழிகளாகப் பரிணாமம் அடைந்துள்ளது. அதே நேரத்தில், நடுக் காலக் கிரேக்க மொழியானது கிழக்கு உரோமைப் பேரரசின் மொழியானது. பேரரசு கிறித்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கிய நிகழ்வு நடுக்காலக் கிறித்தவ உலகத்தின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. இத்தாலிய மறுமலர்ச்சி மீது உரோமானிய மற்றும் கிரேக்கக் கலையானது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உரோமனெஸ்க், மறுமலர்ச்சி மற்றும் புதிய பாரம்பரியக் கட்டடக் கலை ஆகியவற்றுக்கு அடிப்படையாக உரோமின் கட்டடப் பாரம்பரியம் திகழ்கிறது. இஸ்லாமியக் கட்டடக் கலை மீதும் இது வலிமையான தாக்கத்தைக் கொண்டுள்ளது. நடுக்கால ஐரோப்பாவில் கிரேக்க மற்றும் உரோமானிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் மறு கண்டுபிடிப்பானது (இது இஸ்லாமிய அறிவியலுக்கும் அடிப்படையாக உள்ளது) அறிவியல் மறுமலர்ச்சி மற்றும் புரட்சிக்கு வழி வகுத்தது. உரோமைச் சட்டத் தொகுப்பானது பிரான்சின் நெப்போலியச் சட்டங்கள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பல நவீன நீதி அமைப்புகளைத் தனது வழித் தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உரோமின் குடியரசு அமைப்புகள் ஒரு நீடித்திருக்கக் கூடிய மரபை விட்டுச் சென்றுள்ளன. அவை நடுக் காலத்தின் இத்தாலிய நகர அரசுக் குடியரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஆரம்ப காலம் மற்றும் பிற நவீன சனநாயகக் குடியரசுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
வரலாறு[தொகு]
குடியரசிலிருந்து பேரரசாதல்[தொகு]

பொ.ஊ.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோமைக் குடியரசு நிறுவப்பட்டதற்குப் பிறகு, சிறிது காலத்தில் உரோமானது விரிவடையத் தொடங்கியது. எனினும், பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு வரை இத்தாலிய மூவலந்தீவைத் தாண்டி இது விரிவடையவில்லை. அந்நேரத்திலேயே, இது பேரரசரைக் கொண்டிருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே "பேரரசாக" (அதாவது, ஒரு பெரிய சக்தி) இருந்தது.[10] தற்கால வரையறையின் படி, குடியரசானது ஒரு தேச அரசு கிடையாது. ஆனால், தங்களைத் தாமே ஆட்சி செய்ய விடப்பட்டிருந்த பட்டணங்கள் (உரோமை செனட் சபையிலிருந்து வேறுபட்ட அளவிலான சுதந்திரத்தை இவை கொண்டிருந்தன) மற்றும் இராணுவத் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட மாகாணங்களின் ஒரு தொடர்ச்சியான அமைப்பு ஆகும். இது பேரரசர்களால் ஆளப்படவில்லை. மாறாக, ஆண்டு தோறும் செனட் சபையுடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளால் (எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் அயல்நாட்டுப் பேராளர்கள் ஆவர்) ஆளப்பட்டது.[11] பல்வேறு காரணங்களுக்காக, பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டானது அரசியல் மற்றும் இராணுவ மாற்றத்தைக் கொண்ட ஒரு காலமாக இருந்தது. இது இறுதியாக பேரரசரால் ஆளப்படும் நிலைக்கு வழி வகுத்தது.[12][13][14] இந்தப் பேராளரின் இராணுவ சக்தியானது இம்பீரியம் என்று அழைக்கப்பட்ட உரோமானிய நீதிக் கோட்பாட்டைச் சார்ந்திருந்தது. இம்பீரியம் என்பதன் பொருள் "தலைமைத்துவம்" (எனினும் பொதுவாக இராணுவ ரீதியில்) என்பதாகும்.[15] அவ்வப்போது வெற்றிகரமான பேராளர்கள் மரியாதைக்குரிய பட்டமான இம்பரேட்டர் (தளபதி) என்ற பட்டத்தைப் பெற்றனர். இச்சொல்லே எம்பரர் (பேரரசர்) மற்றும் எம்பயர் (பேரரசு) ஆகிய சொற்களின் தொடக்கச் சொல்லாகும். ஏனெனில், இந்தப் பட்டமானது (மற்றும் பிற பட்டங்களும்) எப்போதும் தொடக்க கால பேரரசர்களுக்கு அவர்கள் பதவிக்கு வரும் போது மட்டுமே கொடுக்கப்பட்டது.[16]
பொ.ஊ.மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் உரோமானது ஒரு நீண்ட தொடர்ச்சியான உட்புறச் சண்டைகள், கூட்டு சதித் திட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிப்புக்குள்ளானது. அதே நேரத்தில், இத்தாலியைத் தாண்டி இதன் சக்தியைப் பெருமளவுக்கு விரிவாக்கியது. இது உரோமைக் குடியரசின் பிரச்சனைக் காலமாகும். இந்த சகாப்தத்தின் முடிவின் போது பொ.ஊ.மு. 44இல் யூலியசு சீசர் குறுகிய காலத்திற்கு நிரந்தர சர்வாதிகாரியாகத் திகழ்ந்தார். பிறகு அரசியல் கொலை செய்யப்பட்டார். இவரை அரசியல் கொலை செய்தவர்களின் பிரிவானது உரோமில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர். சீசரின் தத்து மகன் ஆக்தேவியன் மற்றும் மார்க் ஆண்டனியால் தலைமை தாங்கப்பட்ட இராணுவத்தால் பொ.ஊ.மு. 42இல் பிலிப் யுத்தத்தின் போது அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆண்டனி மற்றும் ஆக்தேவியன் ஆகியோர் தங்களுக்கிடையே உரோமானிய உலகைப் பிரித்துக் கொண்ட போதும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. பொ.ஊ.மு. 31இல் அக்தியம் போரில் மார்க் ஆண்டனி மற்றும் ஏழாம் கிளியோபாற்றாவை ஆக்தேவியனின் படைகள் தோற்கடித்தன. பொ.ஊ.மு. 27இல் உரோமின் செனட் மற்றும் மக்கள் ஆக்தேவியனை இம்பீரியத்தின் ஆளுநராகத்துடன் பிரின்செப்சு ("முதல் குடிமகன்") ஆக்கினர். இவ்வாறாக பிரின்சிபேத் (உரோமை ஏகாதிபத்திய வரலாற்றின் முதல் காலம் இதுவாகும். இது பொதுவாக பொ.ஊ.மு. 27 முதல் பொ.ஊ. 284 வரை காலமிடப்படுகிறது) காலமானது தொடங்கப்பட்டது. ஆக்தேவியானுக்கு அகத்தசு ("மிக்க மதிப்பு கொண்டவர்") என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பழைய அரசியலமைப்புச் சட்டப் பகுதியானது தொடர்ந்த போதும், அகத்தசு அதன் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். குடியரசானது பெயரளவில் இருந்த போதிலும் அகத்தசின் சமகாலத்தவர்களுக்கு இது வெறும் ஒரு திரை என்று தெரியும். உரோமில் அனைத்து உண்மையான அதிகாரத்தையும் அகத்தசு தான் கொண்டிருந்தார்.[17] இவரது ஆட்சியானது ஒரு நூற்றாண்டு கால உள்நாட்டுப் போர்களை முடித்து வைத்ததாலும், அதற்கு முன்னர் கண்டிராத அமைதி மற்றும் செழிப்பான காலத்தைத் தொடங்கி வைத்ததாலும் உரோமில் இவர் மிகவும் விரும்பப்பட்டார். அது எந்த அளவுக்கு எனில், சட்டப்படியாக இல்லாவிட்டாலும் ஒரு நடைமுறைப்படியான முடியரசராக சக்தியை இவர் கொண்டிருந்தார். இவரது ஆட்சிக் காலங்களின் போது, ஒரு புதிய அரசியலமைப்பு ஒழுங்கமைவானது (இது ஒரு பங்கு இயற்கையாகவும், ஒரு பங்கு வடிவமைப்பாகவும் இருந்தது) உருவாகத் தொடங்கியது. எனவே இவரது இறப்பின் போது, புதிய அரசியலமைப்பானது திபேரியசு புதிய பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, முந்தைய காலத்தைப் போலவே தொடர்ந்து செயல்பட்டது.
பொ.ஊ. 117இல் உரோமைப் பேரரசர் திராயானின் ஆட்சிக்குக் கீழ், இது அதன் அதிகபட்ச பரப்பளவை எட்டியது. நடுநிலக்கடல் வடி நிலத்தின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருந்தது. மூன்று கண்டங்களில் நிலப்பரப்புகளைக் கொண்டிருந்தது.
பாக்ஸ் உரோமனா[தொகு]
(ஆ. 96–98)
(ஆ. 117–138)
(ஆ. 138–161)
அகத்தசின் ஆட்சியில் இருந்து தொடங்கிய 200 ஆண்டு காலமானது வழக்கமாக பாக்ஸ் உரோமானா ("உரோமானிய அமைதி") என்று கருதப்படுகிறது. இக்காலத்தின் போது, உரோம் அதற்கு முன்னர் என்றுமே அடைந்திராத அளவிலான சமூக நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரச் செழிப்பால் பேரரசின் ஒத்திசைவுத் திறனானது அதிகரிக்கப்பட்டது. மாகாணங்களில் கிளர்ச்சிகள் அடிக்கடி ஏற்படவில்லை. ஆனால், எப்போதாவது ஏற்பட்டால் "இரக்கமற்று வேகமாக" ஒடுக்கப்பட்டன.[18] அகத்தசுக்கு வாரிசாகத் தகுதி இருந்த திறமையான ஒரு சிலரை விட அவர் அதிக காலம் உயிர் வாழ்ந்தார். இதனால் அரசமரபின் வழியாகப் பதவிக்கு வருபவர்களுக்கான கொள்கைகளை நிறுவுவதில் இவரால் ஓரளவுக்கே வெற்றி காண முடிந்தது. ஜூலியோ குளாடிய அரசமரபானது மேற்கொண்ட நான்கு பேரரசர்களான திபேரியசு, காலிகுலா, குளோடியசு, மற்றும் நீரோ ஆகியோர் வரையே நீடித்தது. பொ.ஊ. 69இல் இது முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு நான்கு பேரரசர்களின் ஆண்டு என்ற பிரச்சினைக்குரிய காலம் ஏற்பட்டது. இக்காலத்தில் வெசுப்பாசியான் வெற்றியாளராகவும், குறுகிய காலமே ஆட்சி செய்த பிளேவியன் அரசமரபின் நிறுவனராகவும் உருவானார். இதற்குப் பிறகு நெர்வா-அந்தோனின் அரசமரபானது ஆட்சிக்கு வந்தது. அது "ஐந்து நல்ல பேரரசர்களை" உருவாக்கியது. அவர்கள் நெர்வா, திராயான், அத்ரியன், அந்தோனினுசு பையசு மற்றும் தத்துவ நாட்டம் கொண்ட மார்க்கஸ் அரேலியஸ் ஆகியோர் ஆவர்.
மேற்கில் வீழ்ச்சியும், கிழக்கில் நீடிப்பும்[தொகு]

ஒரு சம காலப் பார்வையாளரான கிரேக்க வரலாற்றாளர் தியோ காசியசுவின் பார்வையில், பொ.ஊ. 180இல் பேரரசர் கமாதசு பதவிக்கு வந்தது" ஒரு தங்க இராச்சியத்திலிருந்து துரு மற்றும் இரும்பு இராச்சியமாக மாறி" வீழ்ச்சியடைந்ததைக் குறித்தது.[19] இது ஒரு பிரபலமான விமர்சனமாக இருந்தது. குறிப்பாக எட்வார்ட் கிப்பன் போன்ற சில வரலாற்றாளர்கள் கமாதசுவின் ஆட்சிக் காலத்தை உரோமைப் பேரரசின் இறங்கு முகத்தின் தொடக்கமாகக் கருதுவதற்கு இது வழி வகுத்தது.[20][21]
பொ.ஊ. 212இல் கரகல்லாவின் ஆட்சியின் போது உரோமானிய குடியுரிமையானது பேரரசின் சுதந்திரமாக பிறந்த அனைத்து குடியிருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பொதுவான இத்தகைய சைகை இருந்த போதிலும் செவரன் அரசமரபானது அமளி நிறைந்ததாக இருந்தது. ஒவ்வொரு பேரரசரின் ஆட்சியும் வாடிக்கையாக அவரது கொலை அல்லது அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில் முடிந்தது. இந்த அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு உரோமைப் பேரரசானது 3ஆம் நூற்றாண்டின் பிரச்சனைகள், படையெடுப்புகளின் ஒரு காலம், குடிமக்களின் பிரச்சனை, பொருளாதார ஒழுங்கற்ற தன்மை மற்றும் பிளேக் நோய் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது.[22]
வரலாற்று கால கட்டங்களை வரையறுக்கும் போது, இந்த பிரச்சனையானது சில நேரங்களில் பாரம்பரியக் காலத்தில் இருந்து பிந்தைய பாரம்பரியக் காலத்துக்கான மாற்றத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அரேலியன் (ஆட்சி பொ.ஊ. 270–275) பேரரசை விளம்பில் இருந்து மீட்டு வந்து நிலைப்படுத்தினார். தியோக்லெதியன் பேரரசை முழுவதுமாக சீர்படுத்தும் பணியை முடித்தார். ஆனால், பிரின்செப்சுவின் பங்கானது வீழ்ந்தது. அடிக்கடி டோமின் ("எசமானர்" அல்லது "பிரபு") என்று குறிப்பிடப்பட்ட முதல் பேரரசராக இவர் உருவானர்.[23] தியோக்லெதியனின் ஆட்சியானது அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட கிறித்தவத்திற்கு எதிராக பேரரசின் மிகுந்த ஒத்திசைவான முயற்சியையும் கொண்டு வந்தது. இம்முயற்சி "பெரும் இடர்ப்படுத்துதல்" என்று அழைக்கப்படுகிறது.
தியோக்லெதியன் பேரரசை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். இது ஒவ்வொன்றும் ஒரு தனி பேரரசரால் ஆளப்பட்டது. இது நால்வர் ஆட்சி முறை என்று அழைக்கப்பட்டது.[24] உரோமுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஒழுங்கற்ற நிலைகளைத் தான் சரி செய்து விட்டதாக நம்பிய இவர், தனது துணை பேரரசருடன் முடி துறந்தார். நால்வர் ஆட்சி முறையானது சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது. இறுதியில் நிலைமையானது முதலாம் கான்ஸ்டன்டைனால் இறுதியாக ஒழுங்குபடுத்தப்பட்டது. முதலாம் கான்ஸ்டன்டைன் கிறித்தவ மதத்திற்கு மாறிய முதல் பேரரசர் ஆனார். கிழக்கு உரோமைப் பேரரசின் புதிய தலைநகரமாக கான்ஸ்டான்டினோபிலை இவர் நிறுவினார். கான்ஸ்டன்டைனிய மற்றும் வேலன்டினிய அரசமரபுகளின் தசாப்தங்களின் போது பேரரசானது கிழக்கு-மேற்கு என்ற ரீதியில் பிரிந்திருந்தது. கான்ஸ்டான்டினோபில் மற்றும் உரோம் ஆகிய இரு இடங்களில் சக்தி மையங்கள் இருந்தன. தனது ஆலோசகர் மர்தோனியசுவின் தாக்கத்தின் கீழ் ஜூலியன் தன் ஆட்சியின் போது பாரம்பரிய உரோமானிய மற்றும் எலனிய சமயத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்தார். இக்காலத்தில், குறுகிய இடைவெளியில் கிறித்தவப் பேரரசர்கள் ஆட்சிக்கு வந்தால் இது தடைபட்டது. கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு பகுதிகளின் மீதும் ஆட்சி செலுத்திய கடைசி பேரரசரான முதலாம் தியோடோசியஸ் பொ.ஊ. 395இல் இறந்தார். அவர் இறக்கும் முன் பேரரசின் அதிகாரப்பூர்வ சமயமாக கிறித்தவ மதத்தை ஆக்கினார்.[25]
குடியேறிகளைப் பேரரசில் இணைப்பது மற்றும் படையெடுப்பாளர்களைச் சண்டையிட்டு முறியடிப்பது ஆகியவற்றுக்கான பேரரசின் ஆற்றலானது ஆரம்ப 5ஆம் நூற்றாண்டின் போது, செருமானியப் புலம் பெயர்வு மற்றும் படையெடுப்புகளால் கையாள இயலாத நிலைக்குச் சென்றதால், மேற்கு உரோமைப் பேரரசானது சிதைவுறஆரம்பித்தது. உரோமுக்குப் போலியான விசுவாசமுடைய பல செருமானிய மக்களைப் பேரரசு இணைத்துக் கொண்ட போதும் பேரரசானது சிதைவுற ஆரம்பித்தது.[26] அனைத்து படையெடுப்பாளர்களையும் சண்டையிட்டு முறியடிப்பதில் உரோமானியர்கள் வெற்றி அடைந்திருந்தனர். இதில் மிக குறிப்பிடத்தக்க படையெடுப்பாளர் அட்டிலா ஆவார்.[27] பெரும்பாலான கால வரிசைகள் மேற்கு உரோமைப் பேரரசின் முடிவு என பொ.ஊ. 476ஐக் குறிப்பிடுகின்றன. அந்த ஆண்டு உரோமுலுசு அகத்துலுசு செருமானியப் போர்ப் பிரபு ஒதோசருக்காக தனது பதவியைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[28][29][30]
தனது சொந்த கைப்பாவை பேரரசர் ஒருவரைப் பெயரிடுவதற்குப் பதிலாக ஒதோசர் கிழக்கு பேரரசின் ஆட்சிக்குக் கீழ் தன்னை அமைத்துக் கொண்டார். மேற்கு பேரரசை முடித்து வைத்தார். செனோவை ஒற்றைப் பேரரசராக அறிவித்ததன் மூலம் அவர் இதைச் செய்தார். தன்னை அவருக்குப் பெயரளவில் அடிபணிந்தவராக ஆக்கிக் கொண்டார். உண்மையில், இத்தாலியானது தற்போது ஒதோசரால் மட்டுமே ஆளப்பட்டது.[31][32][33] கிழக்கு உரோமைப் பேரரசானது பிந்தைய வரலாற்றாளர்களால் பைசாந்தியப் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது. இது கான்ஸ்டன்டைன் பதினோராம் பலையலோகோசின் ஆட்சி வரை தொடர்ந்து நீடித்தது. 29 மே 1453 அன்று "படையெடுப்பாளர்" இரண்டாம் மெகமுது மற்றும் அவரது உதுமானியப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் கான்ஸ்டான்டினோபில் முற்றுகையின் இறுதிக் கட்டங்களில் கடைசி உரோமைப் பேரரசர் இறந்தார். இரண்டாம் மெகமுதுவும் தனக்குத் தானே சீசர் அல்லது கெய்சரி ரும் என்ற பட்டத்தைக் கோரினார். உரோமைப் பேரரசுடன் ஒரு தொடர்பைக் கோரும் முயற்சியாக அவர் இதைச் செய்தார்.[34]
புவிவியலும், மக்கள் தொகையியலும்[தொகு]
மனித வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் உரோமைப் பேரரசும் ஒன்றாகும். ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான நிலப்பரப்புகளை இது கொண்டிருந்தது.[35] இலத்தீன் சொற்றொடரான இம்பீரியம் சைன் பைன் ("முடிவற்ற பேரரசு"[36]) என்பது காலமோ அல்லது நிலப்பரப்போ பேரரசுக்குத் தடையாக இல்லை என்ற சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது. வேர்ஜிலின் இதிகாசமான அயேனிடு, உரோமானியர்களுக்கு எல்லையற்ற பேரரசானது அவர்களின் முதன்மை தெய்வம் ஜூப்பிட்டரால் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறது.[37] அனைவருக்கும் பொதுவான மேலாட்சி என்ற வாதமானது, 4ஆம் நூற்றாண்டில் பேரரசானது கிறித்தவ ஆட்சிக்குக் கீழ் வந்த போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நீடிக்கச் செய்யப்பட்டது.[j] பேரரசைக் கட்டமைக்கும் தங்களது நோக்கத்தில் பெரும் பகுதிகளை இணைத்ததோடு, தங்களது சூழ்நிலையை மாற்றிய மிகப் பெரிய சிற்பிகளாகவும் உரோமானியர்கள் திகழ்ந்தனர். தங்களது புவியியலை நேரடியாக மாற்றியமைத்தனர். எடுத்துக்காட்டாக, விரிவடைந்த பேரரசுக்குத் தேவையான மர மூலப் பொருட்களைக் கொடுப்பதற்காக ஒட்டு மொத்த காடுகளும் வெட்டப்பட்டன.[39]

பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டில் தான் வடக்கு ஐரோப்பாவின் பகுதிகள் வெல்லப்பட்ட போதும், உண்மையில் உரோமானிய விரிவாக்கமானது பெரும்பாலும் குடியரசின் கீழ் நடத்தப்பட்டது. பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உரோமானிய கட்டுப்பாடானது வலிமைப்படுத்தப்பட்டது. அகத்தசின் ஆட்சியின் போது, பொது மக்களின் பார்வைக்காக "அறியப்பட்ட உலகத்தின் உலகளாவிய வரைபடமானது" முதன் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பண்டைக் காலத்தைச் சேர்ந்த, தற்போது எஞ்சியிருக்கும், அரசியல் சூழலியல் குறித்த மிகுந்த அகல் விரிவான வேலைப்பாடான, பான்டசு கிரேக்க எழுத்தாளரான இசுட்ராபோவின் புவியியல் எனும் நூலின் உருவாக்கத்துடன் இது ஒத்துப் போகிறது.[41] அகத்தசு இறந்த போது அவரது சாதனைகள் குறித்த நினைவுச் சின்ன (ரெஸ் கெஸ்டே) நூலானது, முக்கியமாக பேரரசுக்குள் இருந்த மக்கள் மற்றும் இடங்களின் புவியியல் தொகுப்பைச் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தது.[42] புவிவியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மிகவும் விழிப்புடன் எழுதப்பட்ட பதிப்புகளைப் பேணுவது ஆகியவை உரோமானிய ஏகாதிபத்திய நிர்வாகத்தின் மையமான கவனங்களாக இருந்தன.[43]

பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை திராயனின் (ஆ. 98–117),[44] கீழ் அடைந்தது. அந்நேரத்தில் 50 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.[6][7] பாரம்பரிய மக்கள் தொகை மதிப்பீடானது 5.50 முதல் 6 கோடி[45] வரையிலான குடி மக்கள் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் இது 6இல் 1 பங்கு முதல் 4இல் 1 பங்கு வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருந்தது என்று மதிப்பிடப்படுகிறது.[46] மேற்குலகில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எந்த ஓர் ஒன்றிணைந்த அரசியல் உருப்படியினதையும் விட மிகப்பெரிய மக்கள் தொகையாக இதன் மக்கள் தொகை இப்பேரரசை ஆக்கியுள்ளது.[47] சமீபத்திய மக்கள் தொகை ஆய்வுகள், 7 முதல் 10 கோடிக்கும் அதிகமான அதிகபட்ச மக்கள் தொகைக்காக வாதிடுகின்றன.[48] உரோம், அலெக்சாந்திரியா மற்றும் அந்தியோக்கியா ஆகிய பேரரசில் இருந்த மூன்று பெரிய நகரங்கள் ஒவ்வொன்றும், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த எந்த ஒரு ஐரோப்பிய நகரத்தின் அளவைப் போலவும் கிட்டத்தட்ட இரு மடங்கு அளவில் இருந்தன.[49]
வரலாற்றாளர் கிறித்தோபர் கெல்லி இதைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
அக்காலத்தில் பேரரசானது தூரல்களால் நனைந்த வடக்கு இங்கிலாந்தின் ஆட்ரியனின் சுவரிலிருந்து, சிரியாவின் புறாத்து ஆற்றின் சூரியனால் மிகை வெப்பத்தில் வாட்டப்பட்ட ஆற்றங்கரைகள் வரையிலும்; ஐரோப்பாவின் வளமான சமவெளி நிலங்களில் பாம்பு போல ஊர்ந்து இருந்த பெரிய ரைன்–தன்யூபு ஆற்று அமைப்பு முதல், கடல் மட்டத்திற்குக் கீழ் இருந்த நாடுகள் முதல் கருங்கடல் வரையிலும், வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையின் செழிப்பான சமவெளிகள் வரையிலும், எகிப்தின் நைல் ஆற்றின் தாவர வளர்ச்சி மிக்க நீண்டு ஆழ்ந்த பகுதி வரையிலும் நீண்டிருந்தது. பேரரசானது நடு நிலக்கடலை முழுவதுமாக சுற்றி இருந்தது ... இதன் துரந்தரர்களால் இது மர் நோஸ்ற்றும் ('நம் கடல்') என்று குறிப்பிடப்பட்டது.[45]
திராயானுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அத்ரியன் பேரரசை விரிவாக்குவதைத் தவிர்த்து அதைப் பேணும் ஒரு கொள்கையைப் பின்பற்றினார். எல்லைகள் (பைன்கள்) குறிக்கப்பட்டன. எல்லைப் பகுதிகள் (லிமித்தேசு) ரோந்துக்கு உள்ளாக்கப்பட்டன.[44] மிக அதிகமான அரண்களைக் கொண்டிருந்த எல்லைகள் மிக அதிக நிலைத்தன்மையற்றதாக இருந்தன.[13] எப்போதுமே அச்சுறுத்தலாக விளங்கியவர்களாகக் கருதப்பட்ட காட்டுமிராண்டிகளிடமிருந்து உரோமானிய உலகை ஆட்ரியனின் சுவரானது பிரித்தது. பேரரசைப் பேணும் இந்த முயற்சியின் முதன்மையான எஞ்சியுள்ள நினைவுச் சின்னமாக இச்சுவர் உள்ளது.[50]
மொழிகள்[தொகு]
உரோமானியர்களின் மொழியானது இலத்தீன் ஆகும். உரோமானிய ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்துக்கு ஓர் ஆதாரமாக வேர்ஜில் இதை அழுத்தமாகக் கூறுகிறார்.[51] அலெக்சாந்தர் செவரசுவின் (ஆ. 222–235) காலம் வரை உரோமானியக் குடிமக்களின் பிறப்புச் சான்றிதழ்களும், உயில்களும் இலத்தீன் மொழியிலேயே எழுதப்பட வேண்டும் என்று இருந்தது.[52] மேற்கில் சட்ட நீதிமன்றங்களின் மொழியாகவும், பேரரசு முழுவதும் இராணுவத்தின் மொழியாகவும்[53] இலத்தீன் திகழ்ந்தது. ஆனால், உரோமனிய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட மக்கள் மீது அலுவல்பூர்வமாக இலத்தீன் திணிக்கப்படவில்லை.[54] இக்கொள்கை பேரரசர் அலெக்சாந்தரின் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது. அலெக்சாந்தர் தனது பேரரசு முழுவதும் கிரேக்கத்தை அலுவல்பூர்வ மொழியாகத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.[55] அலெக்சாந்தரின் வெற்றிகளின் ஒரு விளைவாக கொயினே கிரேக்கமானது கிழக்கு நடுநிலக் கடலைச் சுற்றியும், ஆசியா மைனருக்குள்ளும் இணைப்பு மொழியாக உருவானது.[56] இலத்தீன் மேற்கு மற்றும் கிரேக்க கிழக்கை பிரித்த "மொழிக் கோடானது" பால்கன் மூவலந்தீவு வழியாகச் சென்றது.[57]

ஒரு மேனிலை கல்வியை பெற்ற உரோமானியர்கள் கிரேக்கத்தை ஓர் இலக்கிய மொழியாகப் பயின்றனர். ஆளும் வர்க்கத்தினரில் பெரும்பாலான மனிதர்களால் கிரேக்கத்தைப் பேச முடிந்தது.[59] ஜூலியோ குளாடிய அரசமரபின் பேரரசர்கள் உயர் தரமுடைய சரியான இலத்தீன் (இலத்தீனிதசு) பயன்பாட்டை ஊக்குவித்தனர். இந்த மொழி இயக்கமானது தற்கால வரையறைகளின் படி பாரம்பரிய இலத்தீன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும், அவர்கள் அலுவல்பூர்வ வணிகத்திற்காக இலத்தீன் மொழியைப் பயன்படுத்துவதை விரும்பினர்.[60] கிரேக்கப் பயன்பாட்டை வரையறைக்குள் வைக்க குளோடியசு முயற்சித்தார். இலத்தீன் பேசத் தெரியாதவர்களின் குடியுரிமையை ஒரு சமயம் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தார். ஆனால், கிரேக்க மொழி பேசும் தூதுவர்களுடன் உரையாடுவதற்கு தனது சொந்த இரட்டை மொழியை செனட்டில் கூட இவர் பயன்படுத்தினார்.[60] இவர் "நம் இரண்டு மொழிகள்" என்று குறிப்பிட்டதாக சுவேதோனியசு குறிப்பிட்டுள்ளார்.[61]
கிழக்குப் பேரரசில் சட்டங்கள் மற்றும் அலுவல்பூர்வ ஆவணங்கள் வாடிக்கையாக இலத்தீனிலிருந்து கிரேக்கத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன.[62] இரு மொழிகளும் தினசரி வாழ்வில் இணைந்திருந்ததை இருமொழிக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. இக்கல்வெட்டுகள் சில நேரங்களில் கிரேக்கத்திலிருந்து இலத்தீனுக்கும், இலத்தீனிலிருந்து கிரேக்கத்திற்கும் கூட மாறியிருந்தன.[63] பொ.ஊ. 212இல் பேரரசில் சுதந்திரமாகப் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான வாக்குரிமை அளிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு பெரும் எண்ணிக்கையிலான உரோமானியக் குடிமக்கள் இலத்தீன் தெரியாதவர்களாக இருந்திரு வேண்டும். எனினும், "உரோமானியம்" என்பதற்கான குறியீடாக இலத்தீன் தெரிய வேண்டும் என்பது தொடர்ந்து நீடித்தது.[64]
பிற சீர்திருத்தங்களில் ஒன்றாக பேரரசர் தியோக்லெதியன் (ஆ. 284–305) இலத்தீனின் அதிகாரப்பூர்வ நிலையைப் புதுப்பிக்க விரும்பினார். கிரேக்கச் சொற்றொடரான கே கிராதோசா தயலெக்தோசு என்பது "அதிகார மொழியாக" இலத்தீனின் நிலையை தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறது.[65] 6ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் ஒரு மட்டு மீறிய சித்தாந்த முயற்சியாக சட்டத்தின் மொழியாக இலத்தீனின் நிலையை மீண்டும் நிலை நிறுத்த முயற்சித்தார். இவரின் காலத்தில் இலத்தீன் கிழக்கில் உயிர்ப்புடன் இருந்த ஒரு மொழியாக தன் நிலையை கொண்டிருக்காத நிலையிலும் இவர் இவ்வாறு முயற்சித்தார்.[66]
உள்ளூர் மொழிகளும், மொழியியல் மரபும்[தொகு]
மொழி பெயர்ப்பாளர்கள் குறித்த குறிப்புகள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் தவிர்த்து பிற உள்ளூர் மொழிகளின் பயன்படும் தொடர்ந்தது எனக் காட்டுகின்றன. குறிப்பாக, காப்திய மொழி முதன்மையாக இருந்த எகிப்தைக் குறிப்பிடலாம். ரைன் மற்றும் தன்யூபு ஆற்றங்கரைகளில் இராணுவ மொழிகளாக உள்ளூர் மொழிகள் இருந்தன. பியூனிக், கௌல் மற்றும் அரமேயம் போன்ற உள்ளூர் மொழிகளுக்கு ஆதரவையும் உரோமானிய சட்டவியலாளர்கள் காட்டியுள்ளனர். சரியான புரிதல், மற்றும் சட்டங்கள் மற்றும் உறுதி மொழிகளின் பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்.[67] திபேரியசுவின் (பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டு) காலத்தின் போது கல்வெட்டுகள் மற்றும் நாணயங்களில் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு லிபிகோ-பெர்பெர் மற்றும் பியூனிக் மொழிகள் ஆப்பிரிக்கா மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டன. 2ஆம் நூற்றாண்டுக்குள்ளும், பொதுப்பணி கட்டடங்களில் லிபிகோ-பெர்பெர் மற்றும் பியூனிக் கல்வெட்டுக்கள் தோன்றுகின்றன. அவற்றில் சில இலத்தீனுடன் சேர்ந்து இருமொழியாகத் தோன்றுகின்றன.[68] சிரியாவில் பல்மைராவின் இராணுவ வீரர்கள் கல்வெட்டுகளுக்காகத் தங்களது பேச்சு வழக்கு அரமேய மொழியைக் கூடப் பயன்படுத்தினர். இராணுவத்தின் மொழியாக இலத்தீன் இருக்க வேண்டும் என்ற சட்டத்திலிருந்து ஒரு மிகுந்த மாறுபட்டதாக இது உள்ளது.[69]
பேரரசில் இருந்த பன்மொழிப் புலமைக்கு ஒரு பரிந்துரை எடுத்துக்காட்டாக பாபதா ஆவணக் காப்பகமானது உள்ளது. இந்த பாபிரஸானது அரேபிய மாகாணத்தில் இருந்த ஒரு யூதப் பெண்மணியின் பெயரைக் கொண்டுள்ளது. இது பொ.ஊ. 93–132 வரையிலான காலத்தைச் சேர்ந்தது என தேதியிடப்படுகிறது. உள்ளூர் மொழியான அரமேயத்தைப் பெரும்பாலும் கொண்டிருக்கும் இது கிரேக்க எழுத்துக்களில் செமித்திய மற்றும் லத்தின் தாக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது; எனினும், உரோமானிய ஆளுநருக்கான ஒரு மனுவானது கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.[70]
இலக்கிய மேனிலை மக்கள் மத்தியில் இலத்தீன் ஆதிக்கம் செலுத்தியது பிற பேசப்பட்ட மொழிகளின் தொடர்ச்சியை மறைக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில், பேரரசுக்குள் இருந்த அனைத்துப் பண்பாடுகளும் முதன்மையாக எழுதப்படாத வாய்மொழி மரபுகளாக இருந்தன.[68] மேற்கில் இலத்தீன் அதன் பேச்சு வடிவத்தில் பண்பற்ற இலத்தீன் என்று குறிப்பிடப்படுகிறது. இதனுடன் ஓர் இந்தோ ஐரோப்பியப் பூர்வீகத்தை கொண்டிருந்த செல்திக்கு மற்றும் இத்தாலிய மொழிகளின் இடத்தை இலத்தீனானது படிப்படியாகப் பெற்றது. சொற்றொடர்கள் மற்றும் சொற்களில் இருந்த பொதுவான தன்மையானது இலத்தீன் பின்பற்றப்படுவதை எளிதாக நிகழக்கூடியதாக்கியது.[71][72]
பிந்தைய பண்டைக் காலத்தில் அரசியல் அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்பட்டதற்குப் பிறகு எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம், கத்தலான் மற்றும் உருமேனியம் மற்றும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான சிறு மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் போன்ற உரோமானிய மொழிகளின் பிரிவுகளாக உள்ளூர் அளவில் இலத்தீன் வளர்ந்தது. தற்போது 90 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகம் முழுவதும் இவற்றைத் தாய் மொழிகளாகக் கொண்டுள்ளனர்.[73]
கல்வி மற்றும் இலக்கியத்திற்கான பன்னாட்டு மொழியாக இலத்தீனானது, மறுமலர்ச்சி மனிதவியல் முதல் 17ஆம் நூற்றாண்டு வரை தூதரக மற்றும் சிந்தனை இன்ப நாட்டமுடைய முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு செயல்பாடு நிறைந்த ஊடகமாக தொடர்ந்து நீடித்துள்ளது. சட்டம் மற்றும் உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு தற்போது வரை ஊடகமாக இலத்தீன் நீடித்துள்ளது.[74]
பைசாந்திய பேரரசின் மொழியாகக் கிரேக்கம் தொடர்ந்த போதிலும், கிழக்கின் மொழியியல் பரவலானது மிகுந்த சிக்கலானதாக இருந்தது. ஒரு கிரேக்க மொழி பேசும் பெரும்பான்மையினர் கிரேக்க மூவலந்தீவு மற்றும் தீவுகள், மேற்கு அனத்தோலியா, முக்கியமான நகரங்கள் மற்றும் சில கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்தனர்.[76] கிரேக்கம் மற்றும் இலத்தீன் போலவே, திரேசிய மொழியானது இந்தோ ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டிருந்தது. ஏகாதிபத்திய சகாப்த கல்வெட்டுகளில் எழுதப் பயன்படுத்தப்பட்ட, அனத்தோலியாவின் ஏராளமான தற்போது அற்றுவிட்ட மொழிகளும் இந்தோ ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டிருந்தன.[76][68] அல்பேனியமானது பொதுவாக இல்லிரிய மொழியின் வழித்தோன்றல் என கருதப்படுகிறது.[77] எனினும், இந்த கோட்பாடானது சில மொழியியலாளர்களால் விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. அவர்கள் இம்மொழி தசியம் அல்லது திரேசியத்திலிருந்து பெறப்பட்டது என்பதை குறிப்பிடுகின்றனர். எனினும், இல்லிரியம், தசியம் மற்றும் திரேசியம் ஆகியவை ஒரு துணை குழுவை உருவாக்குகின்றன. அது முதன்மையாக எகிப்தில் காப்தியம், சிரியா மற்றும் மெசபதோமியாவில் அரமேயம் ஆகிய பல்வேறு ஆப்பிரிக்க ஆசிய மொழிகள் என்றுமே கிரேக்கத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை. எனினும், கிரேக்கம் பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட்டது கிறித்தவம் பரவுவதில் ஒரு காரணியாக இருந்தது. புதிய ஏற்பாட்டிலுள்ள புனித பாலின் நூல்களுக்கு கிரேக்கம் பயன்படுத்தப்பட்டது என்பது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.[76]
பிந்தைய பண்டைக் காலத்தில் கௌல் மொழி குறித்த ஏராளமான குறிப்புகள், இது தொடர்ந்து பேசப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் சில நீதி நடத்தை முறைகள்,[78] எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது[79] மற்றும் மருந்தியல்[80] ஆகியவற்றில் இதன் பயன்பாடானது இருந்தது என்பது ஓர் அப்பட்டமான அடையாளப்படுத்துதலாக உள்ளது. உரோமானிய கெளலில் பொ.ஊ. 5ஆம் நூற்றாண்டில் எழுதிய சுல்பிசியசு செவரசு இரு மொழிப் பயன்பாட்டுடன் கௌல் மொழியைத் தனது தாய்மொழியாகக் குறிப்பிடுகிறார்.[79] திரியேருக்கு அருகில் திரவேரி மொழி பேசப்பட்டதைப் போல, அனத்தோலியாவில் கலாத்திய பேச்சு வழக்கு எஞ்சியிருந்தது என்பது ஜெரோமால் (331–420) உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் நேரடியாக இது குறித்த தகவலை அறிந்திருந்தார்.[81]
பெரும்பாலான வரலாற்று மொழியியல் அறிஞர்கள் பிரான்சில் 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையிலான கடைசி காலத்தில் கூட கௌல் மொழியானது இன்னும் தொடர்ந்து பேசப்பட்டது என்று பரிந்துரைக்கின்றனர்.[82] உள்ளூர் பொருளியல் பண்பாடானது, பெருமளவுக்கு உரோமானிய மயமாக்கப்பட்ட போதும் கௌல் மொழியானது, கெளல் மீதான உரோமானிய ஆட்சி நூற்றாண்டுகளின் போது பேசப்பட்ட இலத்தீன் மொழியுடன் இணைந்து நீடித்திருந்தது என்று கருதப்படுகிறது.[82] கலாத்திய மொழி குறித்த கடைசிக் குறிப்பானது சிதோபோலிசின் சிரிலால் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தீய ஆவியானது ஒரு துறவி மீது அணைந்து, அவரை கலாத்திய மொழியில் மட்டுமே பேசுமாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.[k] அதே நேரத்தில், பிரான்சில் கௌல் மொழி குறித்த கடைசிக் குறிப்பானது 560 மற்றும் 575க்கு இடையில் தோர்சின் கிரிகோரியால் கொடுக்கப்பட்டுள்ளது. "கெளல் உச்சரிப்பில் வாசோ கலாதே என்று அழைக்கப்பட்ட" அவர்க்னேவில் உள்ள ஒரு சன்னதியானது அழிக்கப்பட்டு, எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.[84][82] நீண்ட காலத்திற்கு இருமொழிப் பயன்பாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு உள்ளிட்ட கெளல்-உரோமானிய மொழிகளின் வளர்ச்சியானது கெளலால் ஒரு குறிப்பிடத்தக்க வழிகளில் கட்டமைக்கப்பட்டது. பிரெஞ்சு மொழியைப் பொறுத்த வரையில் அதன் கடன் சொற்கள், கடன் மொழி பெயர்ப்புகள் (வி[85] உள்ளிட்ட, "ஆம்" என்பதற்கான சொல்),[86][85] ஒலிப்பு மாற்றங்கள்,[87] இணைப்பு வார்த்தைகளின் மீதான தாக்கங்கள் மற்றும் சொல் வரிசைகள் ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.[86][85][88]
சமூகம்[தொகு]

உரோமைப் பேரரசானது குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீண்ட கால அளவிற்கு இதன் அரசியல் அமைப்பிற்குள் பல்வேறுபட்ட மக்களை ஒன்றிணைத்த அதே நேரத்தில், ஓர் இணைந்த அடையாள உணர்வை உருவாக்குவதற்காக "ஒரு வியப்புக்குரிய ஒத்திசைவான ஆற்றலை" இது கொண்டிருந்தது.[89] மன்றங்கள், வெட்ட வெளி அரங்குகள், பந்தய களங்கள் மற்றும் குளியல் இடங்கள் போன்ற அனைவரும் பயன்படுத்தக் கூடிய பொதுப்பணி நினைவிடங்கள் மற்றும் சமூக இடங்களை உருவாக்குவதில் உரோமானியர்கள் செலுத்திய கவனமானது "உரோமானியம்" என்ற உணர்வு உருவாக உதவியது.[90]
உரோமைச் சமூகமானது பல்வேறு, ஒன்றுடன் ஒன்று பகுதியளவு ஒத்திருந்த சமூகப் படி நிலை அமைப்புகளைக் கொண்டிருந்தது. ஆங்கில மொழியின் "வகுப்பு" போன்ற தற்போதைய கோட்பாடுகளால் இதைத் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது.[91] அகத்தசு ஒரே அதிகாரம் உடையவராக உருவாகிய இரண்டு தசாப்த உள்நாட்டுப் போரானது, உரோமின் பாரம்பரிய சமூகத்தைக் குழப்பம் மற்றும் பொங்கெழுச்சி உடைய ஒரு நிலைக்கு உள்ளாக்கியது.[92] ஆனால், செல்வம் மற்றும் சமூக அதிகாரம் உடனடியாக மீண்டும் பகிர்ந்தளிக்கப்படும் நிலைக்கு இது இட்டுச் செல்லவில்லை. கீழ்த்தட்டு வகுப்பினரின் பார்வையில், சமூக கோபுரத்தின் மேல் மற்றொரு சிகரமானது வெறுமனே சேர்க்கப்பட்டது.[93] குடியரசு காலத்தில் இருந்ததைப் போலவே புரவலத் தன்மை, நட்பு (அமிதியா), குடும்பம் மற்றும் திருமணம் ஆகிய தனி நபர் உறவு முறைகள் அரசியல் மற்றும் அரசாங்கம் செயல்படும் முறையில் தொடர்ந்து தாக்கத்தை உண்டாக்கின.[94] எனினும் நீரோவின் காலத்தின் போது, சுதந்திரம் உடையவராகப் பிறந்த ஒரு குடிமகனை விட செல்வம் அதிகம் உடைய ஒரு முந்தைய அடிமையைக் காண்பதோ அல்லது ஒரு செனட் சபை உறுப்பினரை விட அதிக சக்தி கொண்டிருக்கும் ஒரு குதிரை வீரர் வரிசையைச் சேர்ந்தவரைக் காண்பதோ வழக்கத்திற்கு மாறான ஒன்றானதாக இல்லை.[95]
குடியரசின் மிகுந்த மாறாத தன்மையுடைய படி நிலை அமைப்புகள் தெளிவற்றதானது அல்லது சிதறுண்டு போனது என்ற நிலையானது, பேரரசின் கீழ், சமூக நிலைகளுக்கு இடையில் ஒருவர் மாற இயலும் என்பதற்கான சாத்தியத்தை அதிகமாக்கியது.[96] இம்மாற்றம் மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கும், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கும் என இருவராகவும் நடைபெற்றது. நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து பிற பண்டைக் கால சமூகங்களையும் விட அதிகமான அளவுக்கு இது இருந்தது.[97] பெண்கள், விடுதலை செய்யப்பட்ட மனிதர்கள் மற்றும் அடிமைகள் ஆகியோர், முன்னர் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே கிடைத்த செல்வம் சேர்ப்பதற்கான மற்றும் செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது அதிகமாகக் கொண்டிருந்தனர்.[98] பேரரசில் சமூக வாழ்க்கையானது, குறிப்பாக தனி நபர் மூலப் பொருட்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு, பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் (கொலேஜியம் மற்றும் சோடேல்கள்) ஆகியவற்றின் ஒரு பெருகுதலால் மேலும் அதிகமானது. தொழில்முறைப் பணியாளர் மற்றும் வணிகப் பொது நோக்கக் கழகங்கள், அனுபவசாலிகளின் குழுக்கள், சமய குழுக்கள், உணவகக் குழுக்கள்,[99] கலை நிகழ்ச்சி செய்வோர்[100] மற்றும் இறந்தோரைப் புதைக்கும் அமைப்புகள்[101] ஆகியவை இதில் அடங்கும்.
சட்ட முறைமை நிலை[தொகு]

சட்டவியலாளர் கையசு, "மனிதர்களுக்கான உரோமைச் சட்டங்களின்" முக்கியமான தனிச் சிறப்பானது அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவோ (லிபெரி) அல்லது அடிமைகளாகவோ (செர்வி) இருந்தனர் என்பதாகும் என்று குறிப்பிடுகிறார்.[102] சுதந்திரமான நபர்களின் சட்ட முறைமை நிலையானது அவர்களது குடியுரிமை மூலம் மேலும் வரையறுக்கப்படலாம். பெரும்பாலான குடிமக்கள் வரையறுக்கப்பட்ட உரிமைகளையே (இயுசு இலத்தீனம் போன்ற, "இலத்தீன் உரிமை") கொண்டிருந்தனர். ஆனால், குடியுரிமை இல்லாதவர்களுக்குக் கிடைக்காத சட்ட ரீதியான பாதுகாப்புகள் மற்றும் உரிமைகளைப் பெறும் நிலையில் குடியுரிமையுடையவர்கள் இருந்தனர். சுதந்திரமான மக்கள் குடிமக்களாகக் கருதப்படவில்லை. குடிமக்களாகக் கருதப்படாத சுதந்திரமான மக்கள் உரோமானிய உலகிற்குள் வாழும் பட்சத்தில் பெரெக்ரினி (உரோமானியர் அல்லாதவர்) என்ற நிலையைப் பெற்றிருந்தனர்.[103] பொ.ஊ. 212இல் பேரரசர் கரகல்லாவின் கன்ஸ்டிடீயோ அந்தோனினியானா என்று அறியப்பட்ட கல்வெட்டின் பொருளானது பேரரசின் அனைத்து சுதந்திரமாகப் பிறந்த வசிப்பாளர்களுக்கும் குடியுரிமையை விரிவாக்கியது. சட்ட ரீதியாக அனைவரும் சமம் என்ற இக்கோட்பாடானது குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் குடியுரிமையற்றவர்கள் எனப் பிரித்த ஏற்கனவே இருந்த சட்டங்களை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான தேவையை ஏற்படுத்தியிருக்கும்.[104]
உரோமானியச் சட்டத்தில் பெண்கள்[தொகு]
வலது படம்: ஓர் எலனிய சிலையை அடிப்படையாகக் கொண்ட ஓர் இளம் பெண் வாசிப்பதைக் குறிக்கும் வெண்கல சிறு சிலை (பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டு)
சுதந்திரமாகப் பிறந்த உரோமானியப் பெண்கள் அனைவரும் குடியரசு மற்றும் பேரரசுக் காலம் முழுவதும் குடியுரிமை பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், வாக்களிக்கவோ, அரசியல் அலுவலகத்தில் பதவிகளை வகிக்கவோ அல்லது இராணுவத்தில் சேவையாற்றவோ இல்லை. ஒரு தாயின் குடியுரிமை நிலையானது அவரது குழந்தைகளைப் போலவே இருந்தது. இது எக்சு துவோபுசு சிவிபசு உரோமானிசு நதோசு ("இரு உரோமானியக் குடியுரிமை பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள்") என்னும் சொற்றொடரால் சுட்டிக் காட்டப்படுகிறது.[l] உரோமானியப் பெண் தனது சொந்தக் குடும்பப் பெயரை (நாமென்) வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொண்டார். குழந்தைகள் பெரும்பாலும் தந்தையின் பெயரைப் பயன்படுத்தினர். ஆனால், ஏகாதிபத்தியக் காலத்தில் சில நேரங்களில் தங்களது தாயின் பெயரைத் தங்களது பெயரில் ஒரு பகுதியாகவோ அல்லது தந்தையின் பெயருக்குப் பதிலாகவோ பயன்படுத்தினர்.[107]
தன் கணவனின் அதிகாரத்திற்குப் பெண் கட்டுப்பட்டவள் எனும் மனுசு திருமணத்தின் வழக்கில் இல்லாத வடிவமானது ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் பெரும்பாலும் கைவிடப்பட்டிருந்தது. தனது திருமணத்தின் மூலம் தான் கொண்டு வந்திருந்த எந்த ஓர் உடைமையின் உரிமையையும் ஒரு திருமணம் செய்த பெண் தக்க வைத்துக் கொண்டார். நுட்பமாகக் காண்கையில், அப்பெண் தனது கணவனுடைய வீட்டிற்குள் சென்றாலும் கூட, தனது தந்தையின் சட்ட முறைமையான அதிகாரத்தின் கீழ் தொடர்ந்து இருந்தார். ஆனால் தன் தந்தை இறந்த போது, அப்பெண் சட்ட ரீதியாக சம உரிமை பெற்றவரானார்.[108] பல பிற பண்டைக் காலக் கலாச்சாரங்கள் முதல் நவீன காலம் வரையில் பல சமூகங்களின் பெண்களுடன் ஒப்பிடுகையில் இந்த முன்னேற்பாடானது, உரோமானியப் பெண்கள் பெற்ற சுதந்திரத்தின் அளவு அதிகமாக இருந்ததற்கு ஒரு காரணியாக அமைந்தது:[109] சட்ட ரீதியான விவகாரங்களில் தனது தந்தையிடம் அப்பெண் பதிலளிக்க வேண்டிய தேவை இருந்த போதிலும், தன்னுடைய அன்றாட வாழ்வில் தன் தந்தை நேரடியாக ஆராய்வதில் இருந்து அப்பெண்ணுக்கு விடுதலை அளிக்கப்பட்டிருந்தது.[110] அப்பெண் மீது எந்த ஒரு சட்ட ரீதியான அதிகாரத்தையும் அப்பெண்ணின் கணவர் கொண்டிருக்கவில்லை.[111] "ஓர்-ஆண் பெண்" (யுனிவிரா), அதாவது ஒரே ஒரு முறை மட்டுமே திருமணம் செய்த பெண் என்பது பெருமைக்கான காரணியாக இருந்த போதிலும், விவாகரத்தானது சிறிதளவே அவமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இறப்பு அல்லது விவாகரத்து வழியாக கணவனை இழந்ததற்குப் பிறகு, சீக்கிரமே மறு திருமணம் செய்வதும் இவ்வாறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.[112]
தங்களது தந்தை ஓர் உயிலை விட்டுச் செல்லாமல் இறந்திருந்தால், பையன்களுடன் பெண்களும் சமமான சொத்துரிமையைப் பெற்றிருந்தனர்.[113] ஓர் உரோமானியத் தாய் உடைமையைச் சொந்தமாக வைத்திருப்பதற்கும், தனக்கு விருப்பமான நேரத்தில் அதை விற்பதற்குமான அவரது உரிமையானது தனது மகன்கள் இளைஞர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது ஏராளமான செல்வாக்கைத் தாய்க்குக் கொடுத்தது. அத்தாய் தனது சொந்த உயிலின் நிபந்தனைகளை எழுதுவதற்குமான உரிமையும் பெற்றிருந்ததையும் உள்ளடக்கியிருந்தது.[114]
பாரம்பரிய நன்னடத்தை மற்றும் சமூக ஒழுங்கை மீண்டும் நிறுவும் அகத்தசின் ஒரு செயல் திட்டத்தின் பகுதியாக, "குடும்ப உறவுகளின் மதிப்பை" ஊக்குவிக்கும் விதமாக நன்னடத்தைச் சட்டமானது ஆண்கள் மற்றும் பெண்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த முயற்சித்தது.[115][116] அரசால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஊக்குவிக்கப்பட்டது. மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த ஓர் பெண்ணுக்கு பெயரளவிலான மதிப்புகளும், அதிகப்படியான சட்ட ரீதியிலான சுதந்திரமும் (இயுசு திரியம் லிபரரும்) வழங்கப்பட்டது.
குடியுரிமை பெற்றவர்களாக அவர்களது சட்ட முறைமையிலான நிலை மற்றும் அவர்கள் சம உரிமை பெற்ற அளவு ஆகியவற்றின் காரணமாகப் பெண்களால் உடைமைகளைச் சொந்தமாக வைத்திருக்கவும், ஒப்பந்தங்களைச் செய்யவும், கப்பல் துறை, உற்பத்தி மற்றும் கடன் வழங்குதல் ஆகிய தொழில்களில்[117] ஈடுபடவும் முடிந்தது. பொதுப் பணிகளுக்கு நிதியுதவி அளித்ததில் பெண்களைக் கொடையாளர்களாக மரியாதையுடன் பேரரசு முழுவதும் காணப்படும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பெண்கள் குறிப்பிடத்தக்க அளவிலான உடைமையைப் பெறவோ அல்லது விற்கவோ முடியும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, செர்கீ வளைவிற்கு கல்வெட்டில் மரியாதை செலுத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் சல்வியா போதுமா என்கிற ஒரு பெண் உறுப்பினர் நிதியுதவி அளித்திருந்தார். வீனஸின் ஒரு பெண் பூசாரியான யூமாச்சியா பொம்பெயியிலுள்ள மன்றத்தின் மிகப்பெரிய கட்டடத்திற்கு நிதியுதவி அளித்திருந்தார்.[118]
அடிமைகளும், சட்டமும்[தொகு]
அகத்தசின் காலத்தின் போது, இத்தாலியில் இருந்த மொத்த மக்களில் 35% பேர் வரை அடிமைகளாக இருந்தனர்.[119] இது வரலாற்று ரீதியாக "அடிமைச் சமூகங்களாக" இருந்த ஐந்து சமூகங்களில் ஒரு சமூகமாக உரோமை ஆக்குகிறது. இச்சமூகங்களில் அடிமைகள் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 5இல் 1 பங்காவது இருந்தனர். பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கை வகித்தனர்.[m][119] பாரம்பரிய உரோமானிய சமூக அமைப்புகளுடன், பொருளாதாரப் பயன்பாட்டுக்கும் பங்களித்த ஒரு சிக்கலான அமைப்பாக அடிமை முறை இருந்தது.[120] நகர்ப்புற அமைப்பில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமையல்காரர்கள் மற்றும் கணக்கர்கள் போன்ற தொழில் முறைப் பணியாளர்களாக அடிமைகள் இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது. இதனுடன், வீடுகள் அல்லது பணியிடங்களில் பயிற்சியளிக்கப்பட்ட அல்லது பயிற்சியற்ற பணியாளர்களாகப் பெரும்பான்மையான அடிமைகள் திகழ்ந்தனர். ஆலை மற்றும் சுரங்கத் தொழில் போன்ற தொழில்கள், மற்றும் விவசாயம் ஆகியவை அடிமைகளிலிருந்து மிகு நலம் பெறுவதைச் சார்ந்திருந்தன. இத்தாலிக்கு வெளியே இருந்த மக்கள் தொகையில் 10% முதல் 20% வரையிலானோர் சராசரியாக அடிமைகளாக இருந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உரோமானிய மாகாணமான எகிப்தில் குறைவான அளவிலும், ஆனால் சில கிரேக்கப் பகுதிகளில் மிகுந்த அடர்த்தியான அளவிலும் காணப்பட்டனர். விவசாய நிலம் மற்றும் தொழில் துறை மீது விரிவடைந்து கொண்டிருந்த உரோமானிய உடைமையானது மாகாணங்களில் ஏற்கனவே இருந்த அடிமை முறைப் பழக்க வழக்கங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[121]
3ஆம் மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறை அமைப்பானது குறையத் தொடங்கியது என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், 5ஆம் நூற்றாண்டு வரை உரோமானிய சமூகத்தின் ஓர் உள்ளடங்கிய பாகமாக இது தொடர்ந்தது. மேற்கில் நகர்ப்புற மையங்களின் வீழ்ச்சி மற்றும் அடிமை முறைக்கான தேவையை உருவாக்கிய சிக்கலான ஏகாதிபத்தியப் பொருளாதாரம் சிதைவுற்றது ஆகிய்வற்றுடன் அடிமை முறையானது படிப்படியாக 6ஆம் மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் முடிந்து போனது.[122]

அடிமை முறை குறித்த சட்டங்கள் "மிகுந்த நுணுக்கங்களைக்" கொண்டதாக இருந்தன.[123] உரோமானியச் சட்டத்தின் கீழ் அடிமைகள் உடைமையாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சட்ட ரீதியிலான ஒரு நபராக இருக்க அனுமதி இல்லை. பொதுவாகக் குடிமக்களுக்குக் கொடுக்கப்படாத உடல் சார்ந்த தண்டனைகளின் வடிவங்கள், சித்திரவதை மற்றும் விசாரணையின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுதல் ஆகிய தண்டனைகள் அடிமைகளுக்குக் கொடுக்கப்படலாம்.[124] அடிமைகளுக்குச் சட்ட ரீதியிலான திருமணம் செய்து கொள்ளும் உரிமை கிடையாது. ஆனால், அவர்களது ஒன்றிணைவானது சில நேரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இரு அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டால் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம்.[125]
குடியரசின் செர்வில் போர்களைத் தொடர்ந்து, அகத்தசு மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களின் சட்டங்களானவை பணிக் குழுக்களின் அளவை வரையறுப்பதன் மூலமாகக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், தப்பி ஓடிய அடிமைகளை வேட்டையாடிப் பிடிப்பதற்குமான ஒரு தீவிரமிக்க கவனத்தைக் காட்டின.[126]
நுணுக்கமாகக் காண்கையில், ஓர் அடிமையால் உடைமையைச் சொந்தமாகக் கொண்டிருக்க இயலாது.[127] ஆனால், வர்த்தகம் செய்யும் ஓர் அடிமைக்கு ஒரு தனிக் கணக்கு அல்லது நிதிக்கான (பெக்குலியம்) அனுமதி கொடுக்கப்படலாம். அதைத் தனது சொந்தக் கணக்காக அல்லது நிதியாக அந்த அடிமையால் பயன்படுத்த இயலும். இந்தக் கணக்கின் கட்டுப்பாடுகள் உரிமையாளர் மற்றும் அடிமைக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அளவைப் பொறுத்து மாறுபட்டது. வர்த்தகத்திற்கான இயற்கையான செயல் திறனைக் கொண்ட ஓர் அடிமைக்கு வருவாயைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரம் கொடுக்கப்படலாம். இந்த பெக்குலியத்தைத் தனது இறப்பிற்குப் பின், தான் அடிமையாக இருக்கும் வீட்டில் உள்ள மற்ற அடிமைகளுக்குக் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படலாம்.[128] ஒரு வீடு அல்லது பணியிடத்திற்குள் அடிமைகளின் ஒரு படி நிலை அமைப்பானது காணப்படலாம். காரணம் ஏற்பட்டால் ஓர் அடிமை பிற அடிமைகளுக்கு எசமானராகச் செயல்படலாம்.[129]
காலப்போக்கில் அடிமைகள் அதிகரிக்கப்பட்ட சட்டப் பாதுகாப்பைப் பெற்றனர். இதில் தங்களது எசமானர்களுக்கு எதிராகப் புகார்களைப் பதிவு செய்யும் உரிமையும் அடங்கும்.[130]
உரோமானிய அடிமை முறையானது இனத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை.[131] கெளல், எசுப்பானியா, செருமனி, பிரித்தானியா, பால்கன் பகுதி, கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் நடு நிலக்கடல் பகுதிகள் முழுவதிலுமிருந்து அடிமைகள் பெறப்பட்டனர். பொதுவாக, இத்தாலியில் இருந்த அடிமைகள் இத்தாலியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்[132]. அதில் ஒரு சிறு பான்மையினர் அயல் நாட்டவராக (இதில் அடிமைகள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆகிய இருவருமே அடங்குவர்), இத்தாலிக்கு வெளியே பிறந்தவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் அதிக பட்ச எண்ணிக்கையின் போது தலைநகரத்தில் மொத்தமிருந்த அடிமைகளில் 5%ஆக இருந்திருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. தலை நகரத்தில் தான் இவர்களது எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஐரோப்பாவுக்கு வெளியே இருந்தவர்கள் முதன்மையாகக் கிரேக்க மரபைக் கொண்டிருந்தவர்களாக இருந்தனர். அதே நேரத்தில், யூத அடிமைகள் உரோமானிய சமூகத்துடன் என்றுமே முழுவதுமாக இணையவில்லை. ஓர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினராகத் தொடர்ந்து நீடித்தனர். இந்த அடிமைகள் (குறிப்பாக அயல்நாட்டவர்கள்) உள்ளூர் வாசிகளைக் காட்டிலும் அதிக இறப்பு வீதத்தையும், குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்டிருந்தனர். சில நேரங்களில் இவர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்படுவதற்கும் கூட ஆளாயினர்.[133] உரோம் நகரத்தில் அடிமைகளின் இறப்பின் போது பதிவு செய்யப்பட்ட சராசரி வயதானது அசாதாரணமாகக் குறைவாக இருந்தது: 17.5 ஆண்டுகள் (ஆண்களுக்கு 17.2 ஆண்டுகள்; பெண்களுக்கு 17.9 ஆண்டுகள்).[134]
குடியரசு கால விரிவாக்கத்தின் போது, அடிமை முறையானது வியாபித்தது. போர்க் கைதிகள் அடிமைகளுக்கான ஒரு முக்கிய மூலமாக இருந்தனர். அடிமைகள் மத்தியில் இருந்த இன வேறுபாடானது போரில் உரோம் தோற்கடித்த இராணுவங்களை ஓரளவுக்குப் பிரதிபலித்தது. உரோம் கிரேக்கத்தை வென்ற நிகழ்வானது, ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மிகுந்த திறமைசாலி மற்றும் கல்விகற்ற அடிமைகளை உரோமுக்குள் கொண்டு வந்தது. அடிமைகள் சந்தைகளில் வணிகம் செய்யப்பட்டனர். சில நேரங்களில், கடற்கொள்ளையர்களால் விற்கப்பட்டனர். குழந்தைகள் கைவிடப்படுதல் மற்றும் ஏழைகள் மத்தியில் சுயமாக அடிமையாக மாறும் முறை ஆகியவை அடிமைகளுக்கான பிற மூலங்களாக இருந்தன.[135] வெர்னே ("வீட்டில் பிறந்தவர்") எனப்படுபவர்கள் பெண் அடிமைகளுக்கு நகர்ப்புற வீட்டிற்குள் அல்லது ஒரு நாட்டுப்புறப் பண்ணைக்குள் அல்லது பண்ணைக்குள் பிறந்த அடிமைகள் ஆவர். இவர்களுக்கென்று எந்த ஒரு சிறப்பான சட்ட முறைமை நிலையும் இல்லாதிருந்தாலும், ஒரு வெர்னே அடிமையை துன்புறுத்தியவர் அல்லது கவனித்துக் கொள்வதில் தோல்வியடைந்த ஓர் உரிமையாளர் சமூகத்தில் மதிப்பிழக்கும் நிலையை எதிர் கொண்டார். ஏனெனில், இவர்கள் அந்த உரிமையாளரின் பேமிலியாவின் (குடும்ப வீடு) ஒரு பகுதியாகக் கருதப்பட்டனர். உண்மையில், சில நேரங்களில் இந்த வெர்னே அடிமைகள் குடும்பத்திலுள்ள சுதந்திரமான ஆண்களின் குழந்தைகளாக இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது.[136]
வர்த்தகத்தில் இயல்பான செயல் திறம் பெற்ற திறமைசாலி அடிமைகள் தங்களது விடுதலையை நியாயப்படுத்துவதற்குப் போதுமான ஒரு பெருமளவு பெக்குலியத்தைத் திரட்டலாம் அல்லது தாங்கள் ஆற்றிய சேவையிலிருந்து விடுதலை செய்யப்படலாம். விடுதலையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகிப் போனது. இதன் காரணமாக, பொ.ஊ.மு. 2ஆம் ஆண்டில் ஒரு சட்டம் (லெக்சு புபியா கனினியா) தனது உயிலில் ஓர் உரிமையாளர் விடுதலைக்கு அனுமதி அளிக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை வரையறுத்தது.[137]
விடுதலை செய்யப்பட்ட அடிமைகள்[தொகு]
விடுதலை செய்யப்பட்ட அடிமைகளைக் குடியுரிமை பெற்றவர்களாக அனுமதிப்பதில் கிரேக்க நகர அரசுகளில் இருந்து உரோம் வேறுபட்டிருந்தது. விடுதலை செய்யப்பட்டதற்குப் பிறகு ஓர் உரோமானிய குடிமகனிடம் இருந்த ஓர் அடிமை உரிமைக்குரியவனாக இருப்பதில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட செயல்பாட்டு நிலையிலுள்ள அரசியல் சுதந்திரத்தையும் (லிபர்தசு) பெற்றிருந்தான்.[138] லிபர்தசுவைப் பெற்ற ஓர் அடிமை தன் முன்னாள் எசமானனுடன் ஒப்பிடுகையில் ஒரு லிபர்துசு ("விடுதலை செய்யப்பட்ட நபர்", பெண்ணுக்குரிய பெயர் லிபர்தா) என்று அழைக்கப்பட்டான். எசமானன் அந்த அடிமையின் புரவலராக (பத்ரோனசு) உருவாகிறான்: இந்த இருவரும் தொடர்ந்து சம்பிரதாய மற்றும் சட்ட ரீதியிலான கடமைகளை ஒருவருக்கொருவர் கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு சமூக வகுப்பாக விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் லிபர்தினி என்று அழைக்கப்பட்டனர். எனினும், பிந்தைய எழுத்தாளர்கள் லிபர்துசு மற்றும் லிபர்தினுசு ஆகிய சொற்களை இடம் மாற்றிப் பயன்படுத்தினர்.[139][140]
ஒரு லிபர்தினுசுவுக்குப் பொதுப் பதவி அல்லது அரசின் உயர்ந்த சமயத் தலைவர் பதவியை வகிக்கும் உரிமை கிடையாது. ஆனால், பேரரசர் வழிபாட்டு முறையில் ஒரு சமயப் பங்கை அவரால் வகிக்க இயலும். ஒரு செனட் சபை தரத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை அவரால் திருமணம் செய்ய இயலாது. தானும் முறைமையான செனட் தகுதியை அடைய இயலாது. ஆனால், பேரரசின் ஆரம்ப காலத்தின் போது விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகித்தனர். அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அத்ரியன் அவர்களின் பங்களிப்பைச் சட்டத்தின் மூலம் வரையறுத்தார்.[140] ஒரு விடுதலை செய்யப்பட்ட அடிமையின் எந்த ஓர் எதிர் காலக் குழந்தைகளும் சுதந்திரத்துடன் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்குக் குடிமகனுக்குரிய முழு உரிமைகளும் வழங்கப்படும்.
வெற்றிகரமான விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் வளர்ச்சியானது தொடக்க கால ஏகாதிபத்திய சமூகத்தின் ஒரு தன்மையாக இருந்தது. இந்த வளர்ச்சி ஏகாதிபத்திய சேவையில் அரசியல் தாக்கம் மூலமாகவோ அல்லது செல்வம் மூலமாக நடைபெற்றது. பேரரசு முழுவதும் காணப்படும் கல்வெட்டுகள் பெரும் சாதனைகளைச் செய்த விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் ஒரு குழுவின் செல்வச் செழிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. வெட்டீ வீடு போன்ற பெருமளவில் செலவழித்த வீடுகளில் சிலவற்றை பொம்பெயில் அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்தது இதை உறுதிப்படுத்துகிறது. நீரோவின் காலத்தில் எழுதிய பெட்ரோனியசின் சாத்திரிகோன் என்று புதினத்திலுள்ள திரிமால்ச்சியோ என்ற கதாபாத்திரத்தால், விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் புதிய பணத்தைச் சேர்த்ததன் மூலம் செய்யும் செயல்கள் நையாண்டிப் படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய நபர்கள் தனித்துவமிக்கவர்களாக இருந்த அதே நேரத்தில், கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு செல்லும் சமூக நகர்வானது பேரரசில் சாத்தியமானது என்பதைத் தெரிவிப்பதாக இது இருந்தது.
மக்கள் படி நிலை[தொகு]
ஓர்தோ (பன்மை ஓர்தின்கள்) என்ற இலத்தீன் சொல்லானது ஒரு சமூகத் தனி நிலையைக் குறிக்கிறது. இது ஆங்கிலத்தில் "வகுப்பு, வரிசை, தரம்," என்று பலவராக மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும், எந்த ஓர் ஆங்கிலச் சொல்லும் சரியான பொருளைக் குறிப்பதில்லை. உரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு நோக்கமானது ஒரு நபர் எந்த ஓர்தோவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிவதாகும். உரோமில் இருந்த இரண்டு உச்சபட்ச ஓர்தின்கள் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் குதிரை வீரர் வகுப்பினர் ஆகியோர் ஆவர். உரோமுக்கு வெளியே தெகுரியர்கள் ஒரு தனி நகரத்தின் உச்சபட்ச நிர்வகிக்கும் ஓர்தோவாகத் திகழ்ந்தனர்.
பண்டைக் கால உரோமில் "செனட் சபை உறுப்பினர்" என்பவர் ஒரு தேர்வு செய்யப்பட்ட பதவி கிடையாது. ஒரு செயல் பேராளராகக் குறைந்தது ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுச் சேவையாற்றியதற்குப் பிறகு, அந்த நபர் செனட்டுக்குள்ளான சேர்க்கையைப் பெற்றார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் கண்டறியப்பட்ட, குறைந்த பட்ச உடைமையாக 10 இலட்சம் செசதெர்தீயைக் (உரோமானிய நாணயம்) கொண்டிருக்கும் தகுதியையும் ஒரு செனட் சபை உறுப்பினர் பெற்றிருக்க வேண்டும்.[141] இந்தத் தகுதியை அடைவதற்கு இயலாத அளவிற்கு ஏழ்மையை அடைந்த பழைய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செனட் சபை உறுப்பினர்களுக்குப் பெருமளவு பணத்தை இத்தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக அன்பளிப்பாக நீரோ கொடுத்தார். ஓர்தோ செனத்தோரியசு என்ற தகுதியை அடைந்த அனைத்து மனிதர்களும் ஒரு செனட் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. செனட் இருக்கையைப் பெறுவதற்கு உரோமில் சட்ட ரீதியான வாசிப்பாளராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த 600 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் பேரரசர்கள் பெரும்பாலும் வெற்றிடங்களை நியமிப்புகள் மூலம் நிரப்பினர்.[142] ஒரு செனட்டரின் மகன் ஓர்தோ செனத்தோரியசு நிலையில் இருந்தாலும், செனட்டில் அவரைச் சேர்த்துக் கொள்ள, மேற்கொண்ட தகுதிகளைத் தனி ஒருவராக அம்மகன் கொண்டிருக்க வேண்டும். நன்னடத்தைத் தர நிலைகளை மீறினால், ஒரு செனட் சபை உறுப்பினர் நீக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணை மணந்து கொள்வதற்கோ அல்லது வெட்ட வெளி வட்டரங்கில் சண்டையிடுவதற்கோ அவருக்குத் தடை இருந்தது.[143]
நீரோவின் காலத்தில் செனட் சபை உறுப்பினர்கள் தொடர்ந்து உரோம் மற்றும் இத்தாலியின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் ஐபீரிய மூவலந்தீவு மற்றும் தெற்கு பிரான்சைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வெசுப்பாசியனுக்குக் கீழ் கிழக்கே இருந்த கிரேக்க மொழி பேசும் மாகாணங்களைச் சேர்ந்த ஆண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.[144] கிழக்குக் கோடி மாகாணமான கப்பதோசியாவைச் சேர்ந்த முதல் செனட் சபை உறுப்பினர் மார்க்கஸ் அரேலியஸின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[n] செவரன் அரசமரபின் (193-235) காலத்தில் செனட்டில் இத்தாலியர்கள் பாதிக்கும் குறைவாக இருந்தனர்[146]. 3ஆம் நூற்றாண்டின் போது செனட் சபை உறுப்பினர்கள் உரோமைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது. அரசியலில் செயல்பாட்டுடன் இருந்த மற்றும் தங்களது தாயகத்தில் (பத்ரியா) ஈகைக் குணத்துடன் இருந்த செனட் சபை உறுப்பினர்கள் குறித்து கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.[143]
செனட் சபை உறுப்பினர்கள் ஒரு மதிப்புணர்வால் சூழப்பட்டிருந்தனர். அவர்கள் பாரம்பரிய நிர்வாக வகுப்பினராக இருந்தனர். கர்சசு ஆனோரம் எனும் அரசியல் வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியடைந்திருந்தனர். ஆனால், பேரரசின் குதிரை வீரர் வகுப்பினர் பெரும்பாலும் செனட் சபை உறுப்பினர்களை விடப் பெரும் செல்வத்தையும், அரசியல் சக்தியையும் கொண்டிருந்தனர். குதிரை வீரர் வகுப்பினரின் உறுப்பினராவது உடைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உரோமின் ஆரம்ப நாட்களில், ஈக்குதேசு அல்லது நைட் வீரர்கள் குதிரையேற்ற வீரர்களாகச் ("பொதுக் குதிரை" எனப்பட்டனர்) சேவையாற்றும் தங்களது திறமையால் தனித்துவம் பெற்றிருந்தனர். ஆனால், பேரரசின் இராணுவத்தில் குதிரைப்படைப் பிரிவு என்பது ஒரு தனியான அமைப்பாக இருந்தது.[o] மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மூலம் மதிப்பிடப்பட்ட 4 இலட்சம் உரோமானிய நாணயங்களை உடைமையாகக் கொண்டிருந்தவர் மற்றும் மூன்று தலைமுறைகளாக சுதந்திரத்துடன் பிறந்தவரே ஒரு குதிரை வீரர் வகுப்பின் உறுப்பினராகும் தகுதியைப் பெற்றிருந்தார்.[148] பொ.ஊ.மு. 28ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது இத்தகுதியை அடைந்த பெரும் எண்ணிக்கையிலான ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பொ.ஊ. 14இல் காதிசு மற்றும் பதுவா ஆகிய இடங்களில் மட்டும் 1,000 குதிரை வீரர் வகுப்பினர் பதிவு செய்தனர்.[p][150] குதிரை வீரர் வகுப்பினர் திரேசு மிலிதியா எனும் ஓர் இராணுவ வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியடைந்திருந்தனர். ஏகாதிபத்திய நிர்வாகத்திற்குள் உயர்ந்த பதவியை அடைந்த மூத்த பேராளர் அல்லது ஆளுநர் மற்றும் கருவூல அதிகாரிகளாகத் திகழ்ந்தனர்.[151]
மாகாண ஆண்கள் செனட் அல்லது குதிரை வீரர் வகுப்பின் உறுப்பினர்களாக வளர்ச்சியடைவது என்பது பேரரசின் முதல் மூன்று நூற்றாண்டுகளின் சமூக நகர்வு நிலையின் ஓர் அம்சமாக இருந்தது. உரோமானிய உயர்குடியானது போட்டியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. பிந்தைய ஐரோப்பிய உயர்குடியினரைப் போல் இல்லாமல், ஓர் உரோமானிய குடும்பமானது தனது நிலையை மரபு வழி வாரிசுகள் வழியாகவோ அல்லது நில உரிமையைக் கொண்டோ தொடர்ந்து கொண்டிருக்க இயலாது.[152] உயர்ந்த ஓர்தினேசுக்குள் ஒருவர் சேர்வது என்பது தனித்துவத்தையும், மதிப்பையும் கொடுத்தது. ஆனால், ஒரு சில பொறுப்புகளையும் கொடுத்தது. பண்டைக் காலத்தில் ஒரு நகரமானது அதன் முக்கியப் பொதுப் பணி வேலைகள், நிகழ்வுகள் மற்றும் சேவைகள் (முனேரா) ஆகியவற்றுக்கு நிதியளிக்கத் தனது முக்கியக் குடிமக்களைச் சார்ந்திருந்தது. வரி வருவாயைச் சார்ந்திருக்கவில்லை. வரி வருவாயானது முதன்மையாக இராணுவத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. ஒருவர் தன் தர நிலையைப் பேணுவதற்குப் பெருமளவு தனி நபர் செலவீனத்தைச் செய்ய வேண்டிய தேவை இருந்தது.[153] பேரரசின் பிந்தைய காலத்தைப் போலவே, நகரங்கள் செயல்படுவதற்குத் தெகுரியர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாக இருந்தனர். பட்டண மன்றங்களில் இருந்த தர நிலைகளுக்கான உறுப்பினர்கள் குறைந்த போது, செனட் சபை உறுப்பினர்களாகப் பதவி உயர்ந்தவர்கள் மைய அரசாங்கத்தால் தங்களது பதவிகளைக் கைவிட்டு விட்டுத் தங்களது சொந்த பட்டணங்களுக்குத் திரும்புமாறு ஊக்குவிக்கப்பட்டனர். இது அன்றாடப் பொதுப்பணி வாழ்க்கையை நீடித்திருக்கச் செய்யும் ஒரு முயற்சியாக நடைபெற்றது.[154]
பேரரசின் பிந்தைய காலத்தில் திகினிதாசு ("பயனுடைய, நன் மதிப்புடைய") செனட் அல்லது குதிரை வீரர்கள் வரிசை நிலையை அடைந்தால் அவர்களுக்கு மேற்கொண்ட பட்டங்களான விர் இல்லசுதிரிசு ("புகழ்பெற்ற மற்றும் வெற்றி ஆக்கமுள்ள மனிதன்") போன்றவை கொடுக்கப்பட்டன[155]. கிலாரிசுமசு என்ற பட்டமானது சில செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் உள்ளிட்ட உடனடிக் குடும்பத்தினரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.[156] குதிரை வீரர் வரிசை உறுப்பினர்களின் சம்பள அளவானது பெருகியது. ஏகாதிபத்திய சேவையாற்றியவர்களின் தரமானது அவர்களின் சம்பளத்தால் தர நிலைப்படுத்தப்பட்டது. எக்சாசெனரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 60,000 உரோமானிய நாணயங்களையும், சென்டனேரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 1 இலட்சம் உரோமானிய நாணயங்களையும், துசெனாரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 2 இலட்சம் நாணயங்களையும் சம்பளமாகப் பெற்றனர். எமினெந்திசிமசு (“மிகுந்த புகழ் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த”) என்ற பட்டமானது பேரரசரின் பிரித்தோரியப் பாதுகாவலர்களாக இருந்த குதிரை வீரர் வரிசையிரின் உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குதிரை வீரர் வகுப்பு உயர் அதிகாரிகள் பொதுவாக பெர்பெக்திசிமி (“மிகுந்த மேன்மை வாய்ந்த”) மற்றும் கீழ் நிலையில் இருந்தவர்கள் வெறுமனே எக்ரெகீ (“உயர்ந்த”) என்ற பட்டத்தையும் கொண்டிருந்தனர்.[157]
சமமற்ற நீதி[தொகு]
குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமென்ற குடியரசுக் கொள்கையானது மங்கத் தொடங்கிய போது, மேல் வகுப்பினரின் பெயரளவு மற்றும் சமூகத் தனி உரிமையானது உரோமானியச் சமூகத்தில் பெரும் மதிப்பை (ஆனசுதியோரேசு) பெற்றவர்கள் மற்றும் எளிமையான மக்கள் (உமிலியோரேசு) என்று முறை சாராப் பிரிவுகளுக்கு வழி வகுத்தது. பொதுவாக, ஆனசுதியோரேசு என்பவர்கள் மூன்று உயர்ந்த "வகுப்பினரின்" உறுப்பினர்களாக, ஒரு சில இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து திகழ்ந்தனர்.[158] பொ.ஊ. 212இல் அனைவருக்கும் குடியுரிமை வழங்கிய நிகழ்வானது, புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மேல் தமது உயர் நிலையை நிலை நாட்ட வேண்டும் என மேல்தட்டு வகுப்பினர் மத்தியில் ஒரு போட்டி வேட்கையை அதிகப்படுத்தியது. குறிப்பாக நீதி அமைப்பில் இத்தகைய உயர் நிலையைப் பெற வேண்டும் என அவர்களுக்கு வேட்கை ஏற்பட்டது.[159] பொறுப்பேற்ற அதிகாரியின் தீர்ப்பைப் போலவே, தண்டனை வழங்குவது என்பது பிரதிவாதியின் ஒப்பீட்டளவிலான மதிப்பையும் (திகினிதாசு) பொறுத்து அமைந்தது. குற்றம் நிரூபிக்கப்படும் போது ஓர் ஆனசுதியோர் அபராதம் செலுத்தும் நிலையும், அதே குற்றத்திற்காக ஓர் உமிலியோர் கசையடியைப் பெறும் நிலை இருந்தது.[160]
குடியரசின் கீழ் மரண தண்டனைக்குரிய குற்றங்களில் கூட சுதந்திரமான ஆண்களுக்குச் சட்ட ரீதியாகக் கொடுக்கப்படும் தண்டனையாக மரண தண்டனையானது அவ்வப்போது மட்டுமே கொடுக்கப்பட்டது.[161] "மிகுந்த மரியாதைக்குரியவர்களாகக்" கருதப்பட்ட ஏகாதிபத்தியக் குடிமக்களுக்கு ஒப்பீட்டளவில் வேகமானதாகவும், வலியற்றதாகவும் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் முன்னர் அடிமைகளுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த சித்ரவதை முறைகள் மற்றும் நீண்ட நேரம் நிகழ்கிற இறப்பு ஆகியவற்றை அடையும் நிலையைச் சந்தித்தனர். இதில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுதல் மற்றும் வட்டரங்கில் வேடிக்கையாகப் பிறர் கண்டு களிக்கும் போது விலங்குகளுக்கு இரையாக விடப்படுவதும் ஆகியவையும் அடங்கும்.[162] தொடக்க காலப் பேரரசில் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் தங்களது ஆனசுதியோரேசு எனும் மதிப்பை இழக்கலாம். குறிப்பாக, தங்களது குடிமகனுக்குரிய பொறுப்புகளின் சமயம் சார்ந்த அம்சங்களை அவர்கள் பூர்த்தி செய்ய மறுத்தால் இவ்வாறு நிகழலாம். இவ்வாறாக, அவர்கள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அத்தண்டனைகள் அவர்கள் தியாகிகள் ஆவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின.[163]
அரசாங்கமும், இராணுவமும்[தொகு]
ஏகாதிபத்திய உரோமானிய அரசின் மூன்று முதன்மையான அம்சங்களானவை மைய அரசாங்கம், இராணுவம் மற்றும் மாகாண அரசாங்கம் ஆகியவையாகும்.[164] ஒரு நிலப்பரப்பு மீதான கட்டுப்பாட்டை இராணுவமானது போர் மூலம் நிலை நாட்டியது. ஆனால், ஒரு நகரமோ அல்லது மக்களோ ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, இராணுவத்தின் பணியானது ஒழுங்கமைப்பதாக மாறியது. உரோமானியக் குடிமக்கள் (பொ.ஊ. 212க்குப் பிறகு பேரரசின் அனைத்து சுதந்திரமாகப் பிறந்த குடிமக்கள்), அவர்களுக்கு உணவளித்த விவசாய நிலங்கள், மற்றும் சமயம் சார்ந்த இடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஆகியவை இதில் அடங்கும்.[165] ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு அல்லது ஒட்டு மொத்த அழிவை ஏற்படுத்தும் எந்த வித நவீன செயற்கருவிகளும் இல்லாமல் இராணுவ வலிமையின் மூலமாக மட்டுமே தங்களது ஆட்சியைத் திணிப்பதற்கு, உரோமானியர்கள் போதிய மனித வளத்தையோ அல்லது வளத்தையோ கொண்டிருக்கவில்லை. சட்டம் ஒழுங்கைப் பேணுவது, தகவல்களைச் சேமிப்பது மற்றும் வருவாயைப் பெறுவது ஆகியவற்றுக்கு சக்தி வாய்ந்த உள்ளூர் மேனிலை மக்களுடனான ஒத்துழைப்பானது தேவையானதாக இருந்தது. ஒரு பிரிவுக்கு எதிராக மற்றொரு பிரிவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உள்ளூர் அரசியல் பிரிவினையை உரோமானியர்கள் அடிக்கடித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். புளூட்டாக் இதைக் குறிப்பிட்டு, "நகரங்களுக்குள் இருந்த பிரிவுகளுக்கு இடையிலான சண்டையே சுயாட்சியை இழப்பதற்கு இட்டுச் சென்றது" என்று கூறியுள்ளார்.[166]
தங்களது விசுவாசத்தை உரோமுக்குக் காட்டிய சமூகங்கள் தங்களது சொந்த சட்டங்களைத் தக்க வைத்துக் கொண்டன. அவைகளால் தங்கள் சொந்த வரிகளை உள்ளூர் அளவில் வசூலிக்க முடியும். சில அரிதான நிகழ்வுகளில் உரோமானிய வரி விதிப்பில் இருந்து அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. சட்டரீதியிலான பெருமைகள் மற்றும் ஒப்பீட்டளவிலான சுதந்திரம் ஆகியவை உரோமுடன் நல்லுறவைத் தொடர்ந்து பேணுவதற்கு ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.[167] இவ்வாறாக, உரோமை அரசாங்கமானது வரம்புக்குட்பட்டதாக இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தியது.[168]
மைய அரசாங்கம்[தொகு]
பண்டைக் கால உரோமின் ஏகாதிபத்திய வழிபாட்டு முறையானது பேரரசர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சில உறுப்பினர்களை உரோமானிய அரசின் தெய்வீகமாக வழங்கப்பட்ட அதிகாரத்துடன் (அக்தோரிதசு) அடையாளப்படுத்தினர். அப்போதியோசிசு சடங்கானது இறந்த பேரரசரைத் தெய்வமாக்கும் முயற்சியை முக்கியத்துவப்படுத்தியது. மக்களின் தந்தையாக அவரது பங்கை ஒப்புக்கொண்து. பாதர் பேமிலியாசு ஆன்மா கொள்கை அல்லது மானேசு என்ற அவரது மகன்களால் மரியாதை செலுத்தப்பட்டதை இது ஒத்திருந்தது.[170]
பேரரசரின் ஆதிக்கமானது பல்வேறு குடியரசு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட சில சக்திகளை ஒன்றிணைத்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதில் மக்களின் தீர்ப்பாயங்களின் மீற இயலாத தன்மை மற்றும் உரோமானிய சமூகத்தின் படி நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய தணிக்கையாளர்களின் அதிகாரம் ஆகியவையும் அடங்கும்.[171] பாந்திபக்சு மேக்சிமசு என்ற மைய சமய அதிகாரம் பெற்றவராகப் பேரரசர் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டார். போரைப் பிரகடனப்படுத்தும் உரிமை, ஒப்பந்தங்களில் கையொப்பமிடுதல் மற்றும் அயல் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஆகியவற்றைப் பேரரசர் மையப்படுத்தினார்.[172] இந்தச் செயல்கள் பிரின்சிபேத்து காலத்தின் போது தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்த போதும், பேரரசரின் சக்திகளானவை காலப் போக்கில் அரசியலமைப்புத் தன்மை குறைந்து, முடியரசுத் தன்மை அதிகமாக உருவாயின. இறுதியாக ஆதிக்கவாதியாக அவரை ஆக்கின.[173]

பேரரசர் கொள்கை வகுப்பதிலும், முடிவு எடுப்பதிலுமான இறுதியான அதிகாரமுடையவராக இருந்தார். ஆனால், தொடக்க கால பிரின்சிபேத்துவில் தினசரி வாழ்க்கை சார்ந்த அனைத்து நபர்களாலும் எளிதாகத் தொடர்பு கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார். அலுவல் பூர்வ வர்த்தகம் மற்றும் மனுக்களைத் தானே சொந்தமாகக் கையாள வேண்டும் என அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு விதிமுறைக் குவிமைய ஆட்சியானது அவரைச் சுற்றிப் படிப்படியாகவே உருவானது[174]. ஜூலியோ-கிளாடிய அரசமரபின் பேரரசர்கள் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது நம்பிக்கைக்குரிய அடிமைகள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் ஒரு முறைசாரா ஆலோசகர்களின் அமைப்பைச் சார்ந்திருந்தனர்.[175] நீரோவுக்குப் பிறகு இந்த முறைசாரா அமைப்பின் தாக்கமானது சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்பட்டது. பெருமளவுக்கு ஒளிவுமறைவற்ற தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பேரரசரின் மன்றமானது (கன்சிலியம்) அலுவல் பூர்வ நியமிப்பால் உருவாக்கப்பட்டது.[176] அந்தோனின் அரசமரபின் முடிவு வரை, கொள்கை விவாதங்களில் செனட் சபையானது முடிவெடுப்பதில் முன்னிலை வகித்த போதும், கன்சிலியத்தில் அதிகரித்து வந்த முக்கியமான பங்கை குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்கள் வழங்கினர்.[177] பேரரசரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரது முடிவுகளில் பல நேரங்களில் நேரடியாகத் தலையிட்டனர். பிளொதினா தனது கணவர் திராயான் மற்றும் அவருக்குப் பின் வந்த அத்திரியன் ஆகிய இருவரின் முடிவுகள் மீதும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். அலுவலக விவகாரங்கள் சம்பந்தமான பதிப்பிக்கப்பட்ட அவரது கடிதங்கள் அவரது தாக்கத்தை வெளிக்காட்டுவதாக இருந்தன. பேரரசர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது ஏற்பிசைவுக்கு உரியவராகவும், தனது மக்களின் கருத்துக்களைக் கேட்பவராகவும் இருந்தார் என்பதன் அறிகுறி இதுவாகும்.[178]
மற்றவர்கள் பேரரசரைச் சந்திக்க வேண்டுமெனில், தினசரி வரவேற்புக் கூடத்தில் (சல்யூதசியோ) அனுமதி பெறலாம். தனது புரவலருக்கு, உதவி பெற்ற ஒருவர் பாரம்பரியமாக மரியாதை செலுத்தும் முறையிலிருந்து இம்முறை உருவானது. அரண்மனையில் பொது விருந்துகளும், சமய விழாக்களும் நடத்தப்பட்டன. இவ்வாறான வாய்ப்பைப் பெறாத பொதுமக்கள் தங்களது பொதுவான ஆமோதிப்பு அல்லது மகிழ்ச்சியின்மையை ஒரு குழுவாக பெரிய வட்ட அரங்குகளில் நடைபெற்ற விளையாட்டுகளில் காட்டலாம்.[179] 4ஆம் நூற்றாண்டில் நகர்ப்புற மையங்கள் சிதைவுறத் தொடங்கிய போது, கிறித்தவப் பேரரசர்கள் தொலை தூரத்தில் இருந்த பெயரளவுத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் பொதுச் சட்டங்களை வெளியிட்டனர். தனி மனுக்களுக்குப் பதிலளிக்கும் நடைமுறையைக் கைவிட்டனர்.[180]
பேரரசரின் எண்ணத்தை மீறுவதற்காக கிட்டத்தட்ட அரசியல் கொலைக்குச் சமமான ஒன்றையோ அல்லது வெளிப்படையான கிளர்ச்சியையோ செனட் சபையால் செய்ய முடியும் என்றாலும், அகத்தசின் மீட்டாக்கம் மற்றும் கொந்தளிப்பான நான்கு பேரரசர்களின் ஆண்டு ஆகியவற்றில் தப்பிப் பிழைத்து, அதன் பெயரளவு அரசியல் மைய நிலையை பிரின்சிபேத்து காலத்தின் போது செனட் சபையானது தக்க வைத்துக் கொண்டது.[181] பேரரசரின் ஆட்சியைச் செனட் சபையானது முறைமை உடையதாக்கியது. தளபதிகள், தூதுவர்கள் மற்றூம் நிர்வாகிகளாகச் சேவையாற்ற, செனட் சபை உறுப்பினர்களின் அனுபவமானது சட்டவியலாளர்களாகப் (லீகதி) பேரரசருக்குத் தேவைப்பட்டது.[182] நிர்வாகியாக ஒரு திறமை மற்றும் பேரரசரின் அலலது காலப் போக்கில் பல பேரரசர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருப்பது ஆகியவை ஒரு வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்குத் தேவையானதாக இருந்தன.[183]
பேரரசரின் சக்தி மற்றும் அதிகாரத்திற்கு நடைமுறை ரீதியிலான ஆதாரமாகத் திகழ்ந்தது இராணுவம் ஆகும். இலீஜியன் பிரிவுகளுக்கு ஏகாதிபத்தியக் கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது. அவர்கள் ஆண்டு தோறும் பேரரசருக்கு விசுவாசமாக இருப்பதான இராணுவ உறுதி மொழிகளை (சாக்ரமென்டம்) எடுத்துக் கொண்டனர்.[184] பேரரசரின் இறப்பானது நிலைத்தன்மையற்ற மற்றும் பிரச்சனைகள் நிறைந்த ஒரு முக்கியமான கால கட்டத்திற்கு இட்டுச் சென்றது. பெரும்பாலான பேரரசர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வாரிசுகளை அடையாளம் காட்டினர். இந்த வாரிசுகள் பெரும்பாலும் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது தத்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தனர். அரசியல் நிலப்பரப்பை நிலைப்படுத்துவதற்காகப் புதிய பேரரசர் தன்னுடைய நிலை மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாட்டை சீக்கிரமே காட்ட வேண்டும். பிரிடோரியக் காவலர்கள் மற்றும் இலீஜியன் பிரிவுகளின் கூட்டணி மற்றும் விசுவாசம் இல்லாமல் எந்த ஒரு பேரரசரும் எஞ்சி இருப்பதற்கான நம்பிக்கையைக் கொள்ளக் கூடாது என்ற நிலை இருந்தது. அதற்கு அடுத்து தான் அவரது ஆட்சி எஞ்சியிருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பல பேரரசர்கள் இராணுவத்திற்கு தொனேதிவம் எனும் ஒரு பணத் தொகைகளை வழங்கினர். கோட்பாட்டளவில் செனட் சபையானது புதிய பேரரசரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் போதும் பிரிடோரியர்களின் அல்லது இராணுவத்தின் அங்கீகாரத்தையும் கருத்தில் கொள்வார்கள்.[185]
இராணுவம்[தொகு]

பியூனிக் போர்களுக்குப் பிறகு ஏகாதிபத்திய உரோமனிய இராணுவமானது 20 ஆண்டுகளுக்கு இராணுவப் பணிக்கும், 5 ஆண்டுகளுக்குச் சேமப் படையினராகவும் சேவையாற்றத் தன்னார்வம் கொண்ட தொழில் முறை இராணுவ வீரர்களை உள்ளடக்கியதாக இருந்தது. குடியரசின் பிந்தைய காலத்தின் போது ஒரு தொழில் முறை இராணுவத்திற்கான மாற்றமானது தொடங்கியது. குடியரசுக் கொள்கையிலிருந்து விலகிய முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது. குடியரசின் கீழ் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கொண்ட ஓர் இராணுவமானது ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு படையெடுப்பில் தங்களது தாயகத்தைத் தற்காப்பதில் குடிமக்களாகத் தங்களது பொறுப்புகளைச் செயல்படுத்தியது. ஏகாதிபத்திய உரோமைப் பொறுத்த வரை இராணுவம் என்பது ஒரு முழு நேரப் பணியாக இருந்தது.[186] "தங்களது இராணுவத்திற்கு ஒரு பெருமளவிலான மனித வளத்தை உருவாக்கிக் கொடுத்த ஓர் அமைப்பாக இத்தாலியில் தாங்கள் வென்ற சமூகங்களை அமைத்ததன் மூலம் உரோமானியர்கள் தங்களது போர் எந்திரத்தை உருவாக்கினார்... தங்களால் தோற்கடிக்கப்பட்ட அனைத்து எதிரிகளிடமும் இவர்கள் வைத்த முதன்மையான கோரிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் உரோமானிய இராணுவத்திற்கு வீரர்களைக் கொடுக்க வேண்டும் என்பதாகும்."[187]
தொடக்க காலப் பேரரசில் உரோமானிய இராணுவத்தின் முதன்மையான பணியானது பாக்ஸ் உரோமனாவை அழியாமல் பாதுகாத்து வைப்பதாக இருந்தது.[188] இராணுவத்தின் மூன்று முதன்மையான பிரிவுகளானவை:
- உரோமில் இருந்த கோட்டைக் காவல் படையினர், இதில் பிரடோரியன் காவலர்கள், கோகோர்த்தேசு அர்பனே மற்றும் விசிலேசு ஆகியோர் அடங்குவர். இதில் விசிலேசு காவலர்களாகவும், தீயணைப்பு வீரர்களாகவும் பணியாற்றினர்;
- மாகாண இராணுவம், மாகாணங்களால் (ஆக்சிலியா) கொடுக்கப்பட்ட உரோமானிய இலீஜியன்கள் மற்றும் துணைப் படைகளை இது உள்ளடக்கியிருந்தது;
- கடற்படை.
பேரரசு முழுவதும் பரவியிருந்த இராணுவக் கோட்டைக் காவல் படையினரின் பரவலானது "உரோமானிய மயமாக்கம்" என்று அறியப்பட்ட கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் ஒன்றிணைவு செயல் மீது ஒரு முக்கியத் தாக்கமாக இருந்தது. குறிப்பாக, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் இது முக்கியத் தாக்கமாய் இருந்தது.[189] உரோமானிய இராணுவம் குறித்த தகவல்களானவை ஒரு பல்வேறுபட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கின்றன. அவற்றில் கிரேக்க மற்றும் உரோமானிய இலக்கிய நூல்கள், இராணுவக் கருத்துருக்களைக் கொண்ட நாணயங்கள், இராணுவ ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ள பாபிரஸ் காகிதங்கள், திராயானின் தூண் மற்றும் வெற்றி வளைவுகள் போன்ற நினைவுச்சின்னங்கள்; வெற்றி வளைவுகளானவை போரிடும் வீரர்கள் மற்றும் இராணுவ எந்திரங்கள் ஆகிய இரு வகையான கலைச் சித்தரிப்புளையும் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தன; இராணுவ புதைக்கும் இடங்கள், யுத்த களங்கள் மற்றும் முகாம்கள் ஆகியவற்றின் தொல்லியல் ஆய்வு; இராணுவச் சான்றிதழ்கள், கல்லறை வாசகங்கள், அர்ப்பணிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து இத்தகவல்கள் பெறப்படுகின்றன.[190]
தனது இராணுவச் சீர்திருத்தங்கள் மூலமாக அகத்தசு இலீஜியனை மாற்றி ஒழுங்குபடுத்தினார். இந்தச் சீர்திருத்தங்களில் கேள்விக்குரிய விசுவாசத்தைக் கொண்டிருந்த இராணுவப் பிரிவுகளை நிலை நிறுத்துவது அல்லது கலைப்பது ஆகியவையும் அடங்கும். இராணுவ மிதியடிகளில் அடிப்பகுதியில் உள்ள ஆணிகளின் அமைப்பை மாற்றுவது வரை இந்தச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. 10 பேர் ஓர் இசுகுவாடு (காந்துபெர்னியா) என்று அழைக்கப்பட்டனர். 10 இசுகுவாடுகள் ஒரு செஞ்சுரி என்று அழைக்கப்பட்டன. ஆறு செஞ்சுரிகள் ஒரு கோகோர்த்து என்று அழைக்கப்பட்டன. பத்து கோகோர்த்துகள் ஓர் இலீஜியன் என்று அழைக்கப்பட்டன. ஏகாதிபத்திய இலீஜியனின் சரியான அளவானது பெரும்பாலும் போர் ஏற்பாடுகள் குறித்த தகவல்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஓர் இலீஜியனில் 4,800 முதல் 5,280 பேர் வரை இருந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[191]

பொ.ஊ. 9இல் தியூத்தோபர்க் யுத்தத்தில் செருமானியப் பழங்குடியினங்கள் 3 முழு இலீஜியன்களையும் அழித்தனர். இந்த அழிவை ஏற்படுத்திய நிகழ்வானது இலீஜியன்களின் எண்ணிக்கையை 25 ஆகக் குறைத்தது. பின்னர் இலீஜியன்களின் எண்ணிக்கையானது மீண்டும் அதிகப்படுத்தப்பட்டது. அடுத்த 300 ஆண்டுகளுக்கு எப்போதுமே 30க்கு சற்றே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இந்த எண்ணிக்கை இருந்தது.[192] 1ஆம் நூற்றாண்டில் இராணுவமானது சுமார் 3 இலட்சம் வீரர்களைக் கொண்டிருந்தது. 2ஆம் நூற்றாண்டில் 4 இலட்சத்துக்கும் குறைவானவர்களைக் கொண்டிருந்தது. பேரரசு தான் வென்ற நிலப்பரப்புகளில் இருந்த ஆயுதமேந்திய படைகளை விட இது "குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்". பேரரசில் வாழ்ந்த 2%க்கும் குறைவான ஆண்களே ஏகாதிபத்திய இராணுவத்தில் சேவையாற்றினர்.[193]
அகத்தசு பிரடோரியக் காவலர்களையும் உருவாக்கினார். இதில் ஒன்பது கோகோர்த்துகள் அடங்கியிருந்தன. பொது அமைதியைப் பேணுவதற்காக இது உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இவை இத்தாலியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன. இலீஜியன் வீரர்களை விட இதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. பிரடோரியர்கள் வெறும் 16 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்றினர்.[194]
ஆக்சிலியா எனும் துணை இராணுவத்திற்குக் குடியுரிமை இல்லாதவர்களில் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தோராயமாக கோகோர்த்து எண்ணிக்கையில் இருந்த சிறு பிரிவுகளாக இவை அமைக்கப்பட்டன. பிரிரடோரிய வீரர்களை விட இவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுக்கப்பட்டது. 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்குப் பிறகு இவர்களுக்கு உரோமானியக் குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்களது மகன்களுக்கும் இக்குடியுரிமை நீட்டிப்பு செய்யப்பட்டது. தசிதசுவின் கூற்றுப் படி,[195] தோராயமாக இலீஜியன்களின் எண்ணிக்கைக்குச் சமமான அளவில் ஆக்சிலியர்கள் இருந்தனர். இவ்வாறாக ஆக்சிலியாவானது சுமார் 1,25,000 வீரர்களைக் கொண்டிருந்தது என்று மதிப்பிடப்படுகிறது. இதனடிப்படையில் சுமார் 250 ஆக்சிலியப் பிரிவுகள் இருந்தன என்பதை நாம் அறியலாம்.[196] பேரரசின் தொடக்க காலத்தில் உரோமானியக் குதிரைப் படையானது முதன்மையாகச் செல்திக்கு, எசுப்பானிய மற்றும் செருமானியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டிருந்தது. நான்கு கொம்பு சேணம் போன்றவை செல்திக்கு மக்களிடம் இருந்து பெறப்பட்டு இருந்தது. இதை அர்ரியன் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் ஆய்வும் இதனை நமக்குக் காட்டுகிறது. இது போன்ற பல்வேறு பயிற்சி மற்றும் உபகரணங்களின் அம்சங்கள் செல்திக்கு மக்களிடம் இருந்து பெறப்பட்டன.[197]
உரோமானியக் கடற்படையானது (இலத்தீன்: கிளாசிசு, "படகுகளின் தொகுதி") இலீஜியன்களுக்குப் பொருட்கள் வழங்குவது மற்றும் அவற்றின் போக்குவரத்துக்கு மட்டும் உதவாமல் ரைன் மற்றும் தன்யூபு ஆறுகளை ஒட்டியிருந்த எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும் உதவி புரிந்தன. கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக முக்கியமான கடல் வணிக வழிகளைப் பாதுகாப்பதும் இதன் மற்றொரு பணியாகும். நடு நிலக் கடலின் முழுப்பகுதி, வட அத்திலாந்திக்குக் கடற்கரையின் பகுதிகள் மற்றும் கருங்கடல் ஆகியவற்றில் இவை ரோந்து சென்றன. இருப்பினும், தரைப்படையே முதிர்ச்சி அடைந்ததாகவும், மிகுந்த மதிப்புக்குரிய பிரிவாகவும் கருதப்பட்டது.[198]
மாகாண அரசாங்கம்[தொகு]
ஓர் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலப்பரப்பானது உரோமானிய மாகாணமாக மூன்று படி செயல் முறையில் மாறியது: நகரங்களைப் பதிவிடுதல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் நிலங்களை அளவிடுதல்.[199] மேற்கொண்ட அரசாங்கப் பதிவுகளானவை பிறப்பு மற்றும் இறப்புகள், நிலம் சார்ந்த பணப் பரிமாற்றங்கள், வரிகள் மற்றும் சட்ட வழக்குகளையும் உள்ளடக்கியிருந்தது.[200] 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலிக்கு வெளியே ஆள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 160 அதிகாரிகளை மைய அரசாங்கமானது அனுப்பியது.[11] இந்த அதிகாரிகளில் உரோமானிய ஆளுநர்களும் அடங்குவர்: உரோமில் தேர்வு செய்யப்பட்ட பேராளர்கள் உரோமானிய மக்களின் பெயரில் செனட் மாகாணங்களை ஆண்டனர்; அல்லது பொதுவாகக் குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்களாக இருந்த ஆளுநர்கள். ஏகாதிபத்திய மாகாணங்களில் பேரரசர்களின் சார்பாகத் தங்களது இம்பீரியத்தை இவர்கள் கொண்டிருந்தனர். இதற்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, எகிப்து ஆகும்.[201] தன் ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவராக ஓர் ஆளுநர் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது. ஆனால், பல்வேறு பணிகளை மற்றவர்களுக்கு அதிகாரத்தை அளிப்பதன் மூலம் இவர் செய்து முடிக்கலாம்.[202] எனினும், இவருக்கென்ற பணியாளர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாக இருந்தது: செயலாளர்கள், அறிவிப்பாளர்கள், செய்தி கொண்டு செல்பவர்கள், எழுத்தர்கள், பாதுகாவலர்கள் ஆகிய இவரது அலுவலக பணியாளர்கள் (அப்பரித்தோரோசு); இவர்களுக்குக் குடிசார் மற்றும் இராணும் ஆகிய இரு பணிகளையும் புரிந்த பணியாளர்கள், இவர்கள் பொதுவாகக் குதிரை வீரர் வரிசை உறுப்பினர் அளவுக்குச் சமமானவர்களாக இருந்தனர்; மற்றும் நண்பர்கள், நண்பர்களின் வயது மற்றும் அனுபவமானது வேறுபட்டிருந்தது. அவர்கள் ஆளுநருடன் அலுவல் சாரா வகையில் உடனிருந்தனர்.[202]
மற்ற அதிகாரிகள் அரசாங்க நிதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.[11] நீதித்துறை மற்றும் நிர்வாகத்திலிருந்து நிதிப் பொறுப்பைப் பிரித்தது என்பது ஓர் ஏகாதிபத்தியச் சகாப்தச் சீர்திருத்தம் ஆகும். குடியரசின் கீழ் மாகாண ஆளுநர்களும், வரி வசூலிப்பாளர்களும் உள்ளூர் மக்களிடமிருந்து தங்களது சொந்த அனுகூலத்திற்குப் பணத்தை அதிக சுதந்திரத்துடன் சுரண்டலாம் என்ற நிலை இருந்தது.[203] குதிரை வீரர் வரிசை சார்ந்த கருவூல அதிகாரிகளின் அதிகாரமானது உண்மையில் "நீதித்துறை தாண்டியதாகவும், அரசியலமைப்பைத் தாண்டியதாகவும்" இருந்தது. அவர்கள் அரசின் சொந்த உடமை மற்றும் பேரரசரின் பரந்த தனி நபர் உடைமைகளைப் (ரெசு பிரைவேத்தா) பேணினர்.[202] உரோமானிய அரசாங்க அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஒரு சட்ட பிரச்சனை அல்லது குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உதவி தேவைப்படும் ஒரு மாகாண அதிகாரி ஓரளவுக்கு அலுவல் அதிகாரம் உடையவராகத் தோன்றிய எந்த ஓர் உரோமானியரின் உதவியையும் கேட்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த உரோமானியர்கள் கருவூல அதிகாரிகள் அல்லது இராணுவ அதிகாரிகள் போன்றவர்களாக இருக்கலாம். இராணுவ அதிகாரிகளில் செஞ்சூரியன்களில் இருந்து கீழ் நிலையில் இருந்த இசுதேசனரீ அல்லது இராணுவக் காவலர் ஆகியோரின் உதவியையும் கேட்கும் நிலை இருந்தது.[204]
உரோமானியச் சட்டம்[தொகு]
பேரரசு முழுவதும் இருந்த உரோமானியக் குடியுரிமை உடையவர்களுடன் தொடர்புடைய வழக்குகள் மீது உரோமானிய நீதிமன்றங்கள் உண்மையான நீதி செயலாட்சியைக் கொண்டிருந்தன. ஆனால், மாகாணங்களில் உரோமானியச் சட்டத்தை சீராகச் செயல்படுத்த வெகு சில சட்டச் செயலாளர்களே இருந்தனர். கிழக்குப் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே நல்ல முறையில் நிறுவப்பட்ட சட்ட விதிகளையும், நீதி செயல் முறைகளையும் கொண்டிருந்தன.[92] மோசு ரெஜியோனிசுவுக்கு ("மாகாணப் பாரம்பரியம்" அல்லது உ"ள்ளூர் சட்டம்") மதிப்பளிப்பதும், சட்ட முன்னுதாரணங்கள் மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு ஓர் ஆதாரமாக உள்ளூர் சட்டங்களை மதிப்பதும் பொதுவாக உரோமானியக் கொள்கையாக இருந்தது.[92][205] உரோமானிய மற்றும் உள்ளூர் சட்டமானது ஒன்றாக அமைந்தது என்பது அடிப்படையாக இருந்த இயுசு ஜென்டியம் ("தேசங்களின் சட்டம்" அல்லது பன்னாட்டு சட்டம்) என்பதனைப் பிரதிபலிப்பதாகக் கருதப்பட்டது.[206] மாகாணச் சட்டத்தின் விதிகள் உரோமானியச் சட்டம் அல்லது பாரம்பரியத்துடன் முரண்பட்டால் உரோமானிய நீதிமன்றங்கள் முறையீடுகளைக் விசாரித்தன. முடிவெடுக்கும் கடைசி அதிகாரத்தைப் பேரரசர் பெற்றிருந்தார்.[92][205][q]
மேற்கு உரோமைப் பேரரசில் சட்டமானது உள்ளூர்மயமாக்கப்பட்ட அல்லது பழங்குடியினத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையில் நிர்வகிக்கப்பட்டது. உரோமானியச் சகாப்தத்தின், குறிப்பாக செல்திக்கு மக்கள் மத்தியில் தனி நபர் உடைமை உரிமையானது ஒரு புதுமையானதாக இருந்திருக்கலாம். குடிமக்களாகத் தங்களது புதிய தனிச் சலுகைகளைக் கண்ட உரோமானியச் சார்பு உயர்குடியினர் செல்வத்தை விலைக்கு வாங்குவதை உரோமானியச் சட்டமானது எளிதாக்கியது.[92] பொ.ஊ. 212இல் பேரரசின் அனைத்து சுதந்திரமான வாசிப்பாளர்களுக்கும் பொதுவான குடியுரிமை விரிவாக்கப்பட்டது என்பது உரோமானியச் சட்டம் சீராகச் செயல்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. உரோமானியச் சட்டமானது குடியுரிமை அல்லாதவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் சட்ட விதிகளை இடமாற்றம் செய்தது. 3ஆம் நூற்றாண்டின் பிரச்சனைக்குப் பிறகு, பேரரசை நிலை நிறுத்த தியோக்லெதியனின் முயற்சியாக நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு முக்கிய சட்ட தொகுப்புகளும் அடங்கும். அந்த இரண்டு சட்ட தொகுப்புகள் கோடெக்சு கிரிகோரியேனுசு மற்றும் கோடெக்சு எர்மோஜெனியானுசு ஆகியவை ஆகும். இந்த இரு சட்டங்களும் நிலை பேறுடைய சட்டங்களை அமைக்க மாகாண நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவதற்காக தொகுக்கப்பட்டன.[207]
மேற்கு ஐரோப்பா முழுவதும் உரோமானியச் சட்டமானது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, மேற்கத்திய சட்டப் பாரம்பரியத்தின் மீது உரோமானியச் சட்டத்தின் மிகுந்த அளவிலான தாக்கத்திற்கு வழி வகுத்தது. நவீன சட்டங்களில் இலத்தீன் சட்டச் சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்தன் மூலம் இது பிரதிபலிக்கப்படுகிறது.
வரி விதிப்பு[தொகு]
பேரரசின் கீழ் வரி விதிப்பானது பேரரசின் மொத்த உற்பத்தியில் சுமார் 5%மாக இருந்தது.[208] தனி நபர்கள் செலுத்திய வரி வீதம் பொதுவாக 2% முதல் 5%ஆக இருந்தது. [209]நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் கொண்ட பேரரசின் சிக்கலான அமைப்பால் வரிச் சட்டங்கள் "குழப்பமடையச்" செய்வதாக இருந்தன. வரிகள் பணமாகவோ அல்லது பண்டமாற்று முறையிலோ செலுத்தப்பட்டன. ஒரு மாகாணத்திற்கு என்று குறிப்பிட்ட வரிகள் இருக்கலாம், அல்லது மீன்பிடி தொழில் மற்றும் உப்புத் தொழில் போன்ற உடமைகளுக்குப் பொருந்தும் குறிப்பான வரியானது விதிக்கப்படலாம். இவை ஒரு வரம்பிடப்பட்ட காலத்திற்கு செயல்பட்டதாக இருந்திருக்கலாம்.[210] இராணுவத்தைப் பேணுவது தேவை என்பதன் அடிப்படையில் வரி வசூலிப்பானது நியாயப்படுத்தப்பட்டது.[211] இராணுவம் போரில் வெல்லப்பட்ட பொருட்கள் மிகுதியாக இருந்தால் வரி செலுத்தியவர்கள் சில நேரங்களில் தங்கள் வரியை மீண்டும் பெற்றனர்.[212] பணம் குறைவாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளில் பண்டமாற்று வரியானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, இராணுவ முகாம்களுக்கு தானியங்கள் அல்லது பொருட்களை வழங்குபவர்கள் பண்டமாற்று முறையில் வரி செலுத்தினர்.[213]
நேரடி வரி வருவாய்க்கான முதன்மையான ஆதாரமாக இருந்தது தனி நபர்களாவர். அவர்கள் தேர்தல் வரி மற்றும் தங்களது நிலங்களின் மீதான வரி ஆகியவற்றைச் செலுத்தினர். நிலம் மீதான வரியானது அதன் உற்பத்தி அல்லது உற்பத்தி ஆற்றல் மீது விதிக்கப்பட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.[209] சில குறிப்பிட்ட வரி விலக்குகளுக்குத் தகுதியானவர்கள் இணைப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்யலாம். எடுத்துக்காட்டாக, எகிப்திய விவசாயிகள் தங்களது வயல்களைப் பயிர் செய்யாது விடப்பட்டதாகப் பதிவு செய்யலாம். நைல் ஆற்றின் வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டு வரி விலக்குப் பெறலாம்.[214] வரி பொறுப்புகளானவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் நிர்ணயிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மேற்பார்வை அதிகாரிக்கு முன்னாள் ஒவ்வொரு குடும்பத் தலைவர் தோன்றுவதையும், அவரது குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கைக் கொடுக்கவும் வேண்டிய தேவை இருந்தது. மேலும், குடும்பத்தலைவர் சொந்தமாக வைத்திருந்த உடைமையானது விவசாயத்திற்கு அல்லது வசிப்பிடத்திற்குத் தகுந்ததா என்று குறிப்பிட வேண்டிய தேவை இருந்தது.[214]
மறைமுக வரி வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்தது போர்ட்டோரியா எனப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சாலை மற்றும் சுங்க வரிகள் ஆகும். மாகாணங்களுக்கு இடையிலும் இவ்வரிகள் விதிக்கப்பட்டன. [209]அடிமை வணிகம் மீது சிறப்பு வரிகள் விதிக்கப்பட்டன. அகத்தசின் ஆட்சியின் முடிவின் போது, அடிமைகளை விற்பதன் மீது 4% வரி விதிப்பை அகத்தசு கொண்டு வந்தார்.[215] இந்த வரியை அடிமைகளை வாங்குபவர்களிடம் இருந்து விற்பவர்களுக்கு நீரோ மாற்றினார். இதற்கு எதிர் வினையாக அடிமைகளை விற்றவர்கள் அடிமைகளின் விலையை அதிகரித்தனர்.[216] ஓர் அடிமையை விடுதலை செய்யும் உரிமையாளர் "விடுதலை வரி" செலுத்தினார். இது அடிமையின் பண மதிப்பில் 5%ஆகக் கணக்கிடப்பட்டது.[r]
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலான மதிப்புடைய உடைமைகளை மற்றவர்கள் தவிர்த்து தங்களது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கு விட்டு விட்டுச் சென்ற உரோமானியக் குடிமக்களுக்கு 5% மரபு வழி உடைமை வரியானது விதிக்கப்பட்டது. பண்ணை வரி மற்றும் ஏலங்கள் மீதான 1% விற்பனை வரி ஆகியவற்றின் வருவாயானது முதிர்ந்த வீரர்களின் ஓய்வூதிய நிதிக்குக் (அயேரரியம் மிலித்தரே) கொடுக்கப்பட்டது.[209]
குறைவான வரிகள் உரோமானிய உயர்குடியினர் தங்களது செல்வத்தைப் பெருக்குவதற்கு உதவின. அவர்களது செல்வமானது மைய அரசாங்கத்தின் வருவாய்க்குச் சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ இருந்தது. ஒரு பேரரசர் சில நேரங்களில் தனது கருவூலத்தை நிரப்புவதற்காக "மிகவும் பணக்காரர்களின்" பண்ணைகளைப் பறிமுதல் செய்தார். ஆனால், பிந்தைய காலத்தில் வரி செலுத்துவதற்குச் செல்வந்தர்கள் தெரிவித்த எதிர்ப்பானது பேரரசு வீழ்ச்சியடைந்ததுக்குப் பங்காற்றிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது.[46]
பொருளாதாரம்[தொகு]

அறிஞர் மோசசு பின்லே என்பவரே உரோமானியப் பொருளாதாரமானது "வளர்ச்சி குன்றியதாகவும், அதன் இலக்குகளை முழுவதுமாக அடையாததாகவும்" இருந்தது என்ற எளிமையான பார்வையை முன் மொழிந்த முதன்மையானவர் ஆவார். உரோமானியப் பொருளாதாரமானது வாழ்தகு வேளாண்மையை சிறப்பியல்பாகக் கொண்டிருந்தது; நகர மையங்கள் வணிகம் மற்றும் தொழில் துறை மூலமாக உற்பத்தி செய்ததை விட அதிகமாகப் பயன்படுத்தின; தாழ்ந்த நிலை கைவினைஞர்கள்; மெதுவாக வளர்ச்சியடைந்த தொழிநுட்பம்; மற்றும் "பொருளாதார பகுத்தறிவுற்ற தன்மை".[218] உரோமானிய பொருளாதாரம் பற்றிய தற்போதைய பார்வைகள் மிகுந்த சிக்கலானவையாக உள்ளன. நிலப் பரப்புகளை வெற்றி கொண்டது பெருமளவில் நிலப் பயன்பாட்டை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு அனுமதி அளித்தது. இது விவசாய உற்பத்தி மற்றும் தனித்துவத்திற்கு வழி வகுத்தது. குறிப்பாக, வட ஆப்பிரிக்காவில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்து.[219] சில நகரங்கள் குறிப்பிட்ட தொழில் துறைகள் அல்லது வணிகச் செயல்பாடுகளுக்காக அறியப்பட்டன. நகர் பகுதிகளில் கட்டடங்கள் கட்டமைக்கப்பட்ட அளவானது ஒரு முக்கியமான கட்டமைப்புத் தொழில் துறையானது இருந்ததைக் காட்டுகிறது.[219] பாபிரசு காகிதங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள சிக்கலான பற்று வரவுக் கணக்கு முறைகள் உரோமானியப் பொருளாதாரமானது பகுத்தறிவின் காரணிகளைக் கொண்டு இருந்ததாகப் பரிந்துரைக்கின்றன.[219] பேரரசு பணத்தைப் பெருமளவில் பயன்படுத்தியது.[220] பண்டைக் காலத்தில் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கான வழி முறைகள் வரம்பிடப்பட்டதாக இருந்த போதிலும், 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் போக்குவரத்தானது பெருமளவுக்கு விரிவடைந்தது. மாகாணப் பொருளாதாரங்களை வணிக வழிகள் இணைத்தன.[221] பேரரசின் ஒவ்வொரு பகுதியிலும் வியாபித்திருந்த இராணுவத்தின் பொருள் வழங்கும் ஒப்பந்தங்கள், தங்களது இராணுவத் தளத்திற்கு (கேசுத்ரம்) அருகிலிருந்த, மாகாணம் முழுவதிலுமிருந்த மற்றும் மாகாண எல்லைகளைத் தாண்டி இருந்த உள்ளூர் பொருள் வழங்குனர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றன.[222] மாகாணப் பொருளாதாரங்களின் ஒரு வலைப்பின்னல் எனும் கருத்தின் சிறந்த உதாரணமாகப் பேரரசு திகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பேரரசின் பொருளாதாரமானது "அரசியல் முதலாளித்துவம்" என்பதன் ஒரு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதன் சொந்த வருவாய்களை உறுதி செய்து கொள்வதற்காக அரசானது வணிகத்தைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தியது.[223] பேரரசின் பொருளாதார வளர்ச்சியானது, நவீனப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடக் கூடிய அளவில் இல்லாவிட்டாலும், தொழிற்புரட்சிக்கு முந்தைய பெரும்பாலான பிற சமூகங்களை விட அதிகமாக இருந்தது.[224]
சமூக ரீதியில் பொருளாதார ஆற்றலானது உரோமைப் பேரரசில் சமூக நகர்வை அடையும் வழிகளில் ஒன்றைத் திறந்தது. சமூக முன்னேற்றமானது இவ்வாறாகப் பிறப்பு, புரவலத் தன்மை, அதிர்ஷ்டம் அல்லது அதீத திறமை ஆகியவற்றையும் கூட ஒற்றை ஆதாரமாகச் சார்ந்திருக்கவில்லை. பாரம்பரிய உயர்குடியின சமூகத்தில் அவர்களுக்கென்ற மதிப்புகள் பரவி இருந்தாலும், மக்கள் தொகை படி நிலைக்குத் தேவையான செல்வத்தால் வெளிக் காட்டப்பட்ட செல்வக்குழு ஆட்சியை நோக்கிய ஒரு வலிமையான போக்கை அது கொண்டிருந்தது. உகந்த முறையில் வெளிக் காட்டப்பட்ட வழிகளில் ஒருவரது செல்வம் முதலீடு செய்யப்பட்டால் பெருமையை அவர் பெற முடியும் என்ற நிலை இருந்தது. முதலீடு செய்யப்பட உகந்த வழிகளாக பெரிய நாட்டுப்புறப் பண்ணைகள் அல்லது பட்ண வீடுகள், அணிகலன்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்ற நலிவுறாத ஆபரணப் பொருட்கள், பொது கலை நிகழ்ச்சிகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உடன் பணியாற்றியவர்களுக்கான இறப்பிற்குப் பிந்தைய நினைவுச் சின்னங்கள், பீடங்கள் போன்ற சமய அர்ப்பணிப்புகள் ஆகிய்வை திகழ்ந்தன. பொது நோக்கக் கழகம் (காலேஜியா) மற்றும் வணிகக் கழகம் (கார்ப்போரா) ஆகியவை வலைப் பின்னல் அமைப்பு போன்ற தொடர்பு, சிறந்த தொழில் துறை பழக்க வழக்கங்களைப் பகிர்தல் மற்றும் பணியாற்றத் தேவையான மன எண்ணம் ஆகியவற்றின் மூலமாக தனி நபர்கள் வெற்றி அடைவதற்கான ஆதரவை அளித்தன.[158]
நாணயமும், வங்கித் தொழிலும்[தொகு]
தொடக்க காலப் பேரரசானது, கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் பணத்தைப் பயன்படுத்தியது. விலைகள் மற்றும் கடன்களுக்குப் பணம் பயன்படுத்தப்பட்டது. [225]செசதெர்தியசு என்பது 4ஆம் நூற்றாண்டு வரை உரோமானிய நாணயத்தின் அடிப்படை அலகாக இருந்தது.[226] செவரன் அரசமரபின் தொடக்க காலத்தின் போது, பணப் பரிமாற்றங்கள் வெள்ளித் தெனாரியசால் பயன்படுத்தப்பட்ட போதிலும், செசதெர்தியசு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[227] தெனாரியசின் மதிப்பு நான்கு செசதெர்தியசு ஆகும். பொதுவாக, உலோகத்திலிருந்த சிறிய நாணயமானது வெண்கல அசு ஆகும். இதன் மதிப்பு காற்பங்கு செசதெர்தியசு ஆகும்.[228] பொன் அல்லது வெள்ளிக் கட்டிகள் பெக்குனியா ("பணம்") எனக் கருதப்படவில்லை என்று தோன்றுகிறது. எல்லைகளில் தொழில் முறைப் பணப் பரிமாற்றங்கள் அல்லது உடைமைகளை வாங்குவதற்கு மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டன. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் உரோமானியர்கள் நாணயங்களை எடை போடுவதற்கு மாறாக எண்ணினர். நாணயமானது அதன் முக மதிப்புக்காக மதிக்கப்பட்டது என்றும், அதன் உலோக அளவிற்காக மதிக்கப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. உரோமானிய நாணயத்தின் மதிப்புக் குறைக்கப்படுவதற்கு இறுதியாக இந்த ஆணை மூலம் செயல்படுத்தப்பட்ட பணத்தை குறித்த எண்ணமானது இட்டுச் சென்றது. பிந்தைய காலப் பேரரசில் இது விளைவுகளை ஏற்படுத்தியது. [229]பேரரசு முழுவதும் பணத்தைத் தரப்படுத்தியது என்பது வணிகம் மற்றும் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுவதை ஊக்குவித்தது.[225] புழக்கத்தில் இருந்த உலோக நாணயங்களின் பெரும் அளவானது வணிகம் அல்லது சேமிப்பிற்கு பணம் பயன்படுத்தப்படுவதை அதிகரித்தது.[230]
பொ.ஊ.மு. 211 | பொ.ஊ. 14 | பொ.ஊ. 286–296 |
---|---|---|
தெனாரியசு = 10 அசு | அரேயசு = 25 தெனாரீ | அரேயி = 454 கிராம் பொன்னுக்கு 60 அரேயி |
செசதெர்சு = 5 அசு | தெனாரீ = 16 அசு | வெள்ளி நாணயங்கள் (சம காலப் பெயர் தெரியவில்லை) = 454 கிராம் வெள்ளிக்கு 96 அரேயி |
செசதெர்தியசு = 2.5 அசு | செசதெர்சசு = 4 அசு | வெண்கல நாணயங்கள் (சம காலப் பெயர் தெரியவில்லை) = மதிப்பு தெரியவில்லை |
அசு = 1 | அசு = 1 |
உரோம் நடுவண் வங்கியைக் கொண்டிருக்கவில்லை. வங்கித் தொழில் மீதான ஒழுங்குபடுத்துதலானது குறைவாகவே இருந்தது, பாரம்பரிய பண்டைக் கால வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கின் ஒட்டு மொத்த மதிப்பை விட, குறைவான மதிப்பிலேயே கையிருப்பை வைத்திருந்தன. ஒரு வழக்கமான வங்கியானது மிகவும் வரம்பிடப்பட்ட மூலதனத்தைக் கொண்டிருந்தது. ஒரு வங்கியானது 6 முதல் 15 முதலீடுகளைக் கொண்டிருக்கலாம் என்று இருந்தாலும், பெரும்பாலும் ஒரே ஒரு முதலீட்டையே கொண்டிருந்தது. உரோமானிய வாணிகத்தில் தொடர்புடைய எந்த ஒருவரும் பணத்தைப் பெறும் வழியைக் கொண்டிருக்க வேண்டும் என செனீக்கா கூறுகிறார்.[229]

ஒரு தொழில் முறை சேமிப்புக் கணக்கு வங்கியாளர் ஒரு நிலையான அல்லது கால வரையற்ற நேரத்திற்கு பணத்தைப் பெற்று கணக்கில் வரவு வைத்தார். மூன்றாம் நபர்களுக்குப் பணத்தைக் கடனாக கொடுக்கவும் செய்தார். தனி நபர்களுக்குக் கடன் அளிப்பதில் செனட் சபையைச் சேர்ந்த உயர் குடியினர் பெருமளவுக்கு ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கடன் கொடுப்பவர்கள் மற்றும் கடன் பெறுபவர்கள் ஆகிய இருவருமாகத் திகழ்ந்தனர். சமூகத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சொந்த உடைமைகளில் இருந்து கடன்களைக் கொடுத்தனர்.[233] ஒரு கடனைப் பெற்றவர் மற்றொருவருக்கு அதை மாற்றிக் கொடுக்கலாம். பணம் கை மாறாமல் இது நடந்தது. பண்டைக் கால உரோமானது "காகித" அல்லது ஆவண பணப் பரிமாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என சில நேரங்களில் கருதப்பட்டாலும், பேரரசு முழுவதும் இருந்த வங்கிகளின் அமைப்பானது நாணயங்களை நேரடியாகப் இடம் மாற்றம் செய்யாமல் பெரும் அளவிலான தொகைகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் கூட அனுமதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கடல் வழியாகப் பெருமளவிலான பணத்தைக் கொண்டு செல்வது என்பது இடர் வாய்ப்பைக் கொண்டிருந்ததும் இதற்கு ஒரு பங்குக் காரணமாகும். தொடக்க காலப் பேரரசில் ஒரே ஒரு தீவிரமான பணப் பற்றாக்குறை நடந்ததாக அறியப்பட்டுள்ளது. பொ.ஊ. 33ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தப் பணப் பிரச்சனை ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செனட் சபை உறுப்பினர்களை இடர்ப்படும் நிலைக்கு உள்ளாக்கியது. மைய அரசானது 10 கோடி உரோமானிய நாணயங்களைக் கடனாக வங்கிகளுக்குக் கொடுத்தது. பேரரசர் திபேரியசு வங்கிகளுக்கு இதைக் கொடுத்ததன் மூலம் சந்தையானது மீட்கப்பட்டது.[234] பொதுவாக, ஏற்கனவே கையிருப்பில் இருந்த மூலதனமானது கடன் பெறுபவர்களுக்குத் தேவைப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது.[229] மைய அரசாங்கமானது அதற்கான பணத்தைக் கடனாகப் பெறவில்லை. பணக் கையிருப்பு மூலம் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையும் பொதுக் கடன் இல்லை என்பதால் ஏற்படவில்லை.[235]
அந்தோனின் மற்றும் செவரன் அரசமரபுகளின் பேரரசர்கள் பெரும்பாலும் நாணயத்தின் மதிப்பை, குறிப்பாக, தெனாரியசு நாணயத்தின் மதிப்பைக் குறைத்தனர். இராணுவச் சம்பளங்களுக்கு நிதி தேவை என்ற அழுத்தம் காரணமாக அவர்கள் இதைச் செய்தனர்.[226] கமாதசுவின் ஆட்சியின் போது ஏற்பட்ட திடீர் விலைவாசி உயர்வானது நிதிச் சந்தையைப் பாதிப்புக்குள்ளாக்கியது.[229] 200களின் நடுப் பகுதியில் விலையுயர்ந்த உலோக நாணயங்களின் வெளியீடானது பெருமளவுக்குக் குறைந்தது.[226] நீண்ட தூர வணிகத்தில் ஏற்பட்ட குறைவு, சுரங்கச் செயல்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு, படையெடுத்து வந்த எதிரிகளால் பேரரசுக்கு வெளியே தங்க நாணயங்கள் இடமாற்றப்பட்டது போன்ற மூன்றாம் நூற்றாண்டின் பிரச்சினைகளின் நிலைமைகள் 300ஆம் ஆண்டு வாக்கில் பணப் புழக்கம் மற்றும் வங்கி அமைப்பைப் பெருமளவுக்குப் பாதித்தன.[226][229] உரோமானிய நாணய முறையானது நீண்ட காலமாக ஆணையால் செயல்படுத்தப்பட்ட பணம் அல்லது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பணமாக இருந்த போதிலும், அரேலியனின் ஆட்சிக்குக் கீழ் பொதுவான பொருளாதார அச்ச உணர்வுகள் வெளிப்படத் தொடங்கின. மைய அரசாங்கத்தால் சட்டப்படி வெளியிடப்பட்ட நாணயங்கள் மீது வங்கியாளர்கள் நம்பிக்கை இழந்தனர். தியோக்லெதியன் தங்க சோலிதுசு நாணயத்தை வெளியிட்டு, நிதிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி இருந்த போதிலும், பேரரசின் நிதிச் சந்தையானது அதன் முந்தைய நிலைத் தன்மையை மீண்டும் என்றுமே பெறவில்லை.[229]
சுரங்கத் தொழிலும், உலோகவியலும்[தொகு]

பேரரசின் முதன்மையான சுரங்கத் தொழில் பகுதிகளாக ஐபீரிய மூவலந்தீவு (தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம்), கௌல் (தங்கம், வெள்ளி, இரும்பு), பிரிட்டன் (முதன்மையாக இரும்பு, ஈயம், தகரம்), தன்யூபிய மாகாணங்கள் (தங்கம், இரும்பு), மாசிடோனியா மற்றும் திரேசு (தங்கம், வெள்ளி) மற்றும் ஆசியா மைனர் (தங்கம், வெள்ளி, இரும்பு, தகரம்) ஆகியவை திகழ்ந்தன. வண்டல் படிமங்களில் வெளிப்பரப்பு சுரங்க முறை மற்றும் பாதாள சுரங்க முறை மூலமாக தீவிரமான சுரங்கத் தொழிலானது பெருமளவில் அகத்தசின் காலத்தில் தொடங்கி பொ.ஊ. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நடைபெற்றது. பொ.ஊ. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசின் நிலையற்ற தன்மையானது உற்பத்திக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, தசியாவில் இருந்த தங்கச் சுரங்கங்கள் 271இல் அந்த மாகாணமானது சரணடையச் செய்யப்பட்டதற்குப் பிறகு உரோமானிய மிகு நலம் பெறுவதற்கு அதற்கு மேல் வாய்ப்பளிக்கவில்லை. 4ஆம் நூற்றாண்டின் போது ஓரளவுக்கு சுரங்கத் தொழிலானது மீண்டும் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.[236]
திரவ அழுத்த விசையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட சுரங்கத் தொழிலானது, தொழில் புரட்சிக்கு முந்தைய அளவில் அடிப்படை மற்றும் அரிய உலகங்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த முறையை உருயினா மோந்தியம் ("மலைகள் பாழ்படுதல்") என்று பிளினி குறிப்பிட்டுள்ளார்.[237] ஓர் ஆண்டில் மொத்தம் எடுக்கப்பட்ட இரும்பின் அளவானது 82,500 டன் என்று மதிப்பிடப்படுகிறது.[238] செம்பானது ஆண்டு தோறும் 15,000 டன்னும்,[237][239] ஈயமானது ஆண்டு தோறும் 80,000 டன்னும் பிரித்தெடுக்கப்பட்டன.[237][240][241] இந்த இரண்டு அளவுகளும் தொழிற்புரட்சிக் காலம் வரை எட்டப்படாத உற்பத்தி அளவுகளாக இருந்தன.[239][240][241][242] உலக ஈய உற்பத்தியில் 40% பங்கை எசுப்பானியா மட்டுமே கொண்டிருந்தது.[240] ஆண்டுக்கு 200 டன் என்ற அளவை எட்டிய விரிவான வெள்ளி சுரங்கத் தொழிலின் ஒரு துணைப் பொருளாக அதிகப்படியான ஈய உற்பத்தியானது திகழ்ந்தது. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் அதன் உச்ச பட்ச அளவின் போது உரோமானிய வெள்ளிக் கையிருப்பானது 10,000 டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடுக் கால ஐரோப்பா மற்றும் பொ.ஊ. 800ஆம் ஆண்டு வாக்கில் கலீபகம் ஆகிய இரு பகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக இருந்த வெள்ளியின் அளவை விட இது 5 முதல் 10 மடங்கு அதிகமாகும்.[241][243] உரோமானிய உலோக உற்பத்தியின் அளவின் ஒரு வெளிப்பாடாக ஏகாதிபத்திய சகாப்தத்தின் போது கிரீன்லாந்தின் பனிப் படுகைகளிலிருந்த ஈய மாசுபாடானது அதன் வரலாற்றுக்கு முந்தைய அளவுகளை போல் நான்கு மடங்கானது. பிறகு மீண்டும் குறைந்தது.[244]
போக்குவரத்தும், தொலைத்தொடர்பும்[தொகு]

உரோமைப் பேரரசானது நடு நிலக் கடலை முழுவதுமாக சுற்றியிருந்தது. இக்கடலை இவர்கள் "நம் கடல்" (மாரே நோசுதுரும்) என்று அழைத்தனர்.[245] உரோமானியப் பாய் மர நாவாய்கள் நடு நிலக் கடலில் செலுத்தப்பட்டன. மேலும் பேரரசின் முதன்மையான ஆறுகளிலும் செலுத்தப்பட்டன. இந்த ஆறுகளில் கௌதல்குயிவிர், எப்ரோ, ரோன், ரைன், டைபர் மற்றும் நைல் ஆகியவையும் அடங்கும்.[49] எங்கெல்லாம் நீர் வழிப் போக்குவரத்து சாத்தியமாக உள்ளதோ, அங்கெல்லாம் அப்போக்குவரத்து தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப்பட்டது. நிலப்பகுதி வழியாகச் சரக்குகளைக் கொண்டு செல்வது என்பது மிகக் கடினமானதாக இருந்தது.[246] வாகனங்கள், சக்கரங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான திறமைசாலி மர வேலையாளர்களின் இருப்பைக் காட்டுகின்றன.[247]
நிலப்பகுதிப் போக்குவரத்தானது உரோமானிய சாலைகளின் முன்னேறிய அமைப்பைப் பயன்படுத்தியது. உரோமானியச் சாலைகள் "வியா" என்று அழைக்கப்பட்டன. இச்சாலைகள் முதன்மையாக இராணுவத் தேவைகளுக்காகக் கட்டமைக்கப்பட்டன.[248] ஆனால், வணிகத்திற்காகவும் சேவையாற்றின. சமூகங்களால் பண்ட மாற்று முறையில் செலுத்தப்பட்ட வரியானது இராணுவ வீரர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், விலங்குகள் அல்லது கர்சசு பப்ளிக்கசுவிற்கான வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[213] அகத்தசால் நிறுவப்பட்ட அரசு தபால் மற்றும் போக்குவரத்துச் சேவை கர்சசு பப்ளிக்கசு என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு 7 முதல் 12 மைல்களுக்கு இடையிலும் சாலையின் பக்கவாட்டில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவை கிராமங்கள் அல்லது வணிக நிலையங்களாக வளர்ச்சியடைந்தன.[249] ஒரு மான்சியோ என்பது தனியாரால் இயக்கப்பட்ட சேவை நிலையமாகும். இதற்கு இப்பெயரை கர்சசு பப்ளிக்கசுவிற்காக ஏகாதிபத்திய பணித் துறையானது வழங்கியது. இந்த நிலையங்களுக்கு ஆதரவளித்த துணைப் பணியாளர்களில் கோவேறு கழுதை ஓட்டுபவர்கள், செயலாளர்கள், இரும்புக் கொல்லர்கள், வணிக வண்டிகளை உருவாக்குபவர்கள், ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் ஒரு சில இராணுவக் காவலர்கள் மற்றும் விரைவு அஞ்சல் தூதர்கள் ஆகியோரும் இருந்தனர். இந்த மான்சியோக்களுக்கு இடையிலான தொலைவானது ஒரு நாளில் ஒரு வண்டியானது எவ்வளவு தொலைவுக்குப் பயணிக்க முடியும் என்பதைப் பொறுத்து அமைந்தது.[249] வண்டிகளை இழுப்பதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட விலங்காகக் கோவேறு கழுதை இருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கு 4 மைல் வேகத்தில் பயணித்தது.[250] தொலைத் தொடர்பு வேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக பெரிய செருமானியா மாகாணத்தின் மைன்சு என்ற இடத்தில் இருந்து உரோமுக்குப் பயணிக்க ஒரு செய்தித் தூதுவருக்குக் குறைந்தது 9 நாட்கள் எடுத்துக் கொண்டது. மிக அவசரமான விஷயங்களுக்குக் கூட இந்த அளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.[244] இந்த மான்சியோக்களைத் தவிர்த்து சில நிலையங்கள் உணவுடன் சேர்த்துத் தங்குவதற்கு இடமும் அளித்தன. இவ்வாறாக ஒரு தங்கிய இடத்தில் பதிவு செய்யப்பட்ட தகவலானது ரொட்டித் துண்டு, கோவேறு கழுதைக்கான உணவு ஆகியவற்றுக்குமான செலவினங்களையும் குறிப்பிட்டுள்ளது.[251]
வாணிபமும், பண்டங்களும்[தொகு]
உரோமானிய மாகாணங்கள் தங்களுக்குள் வணிகம் செய்து கொண்டன. ஆனால், எல்லைகளுக்கு வெளியேயும் வணிகமானது சீனா மற்றும் இந்தியா ஆகிய பகுதிகள் வரை விரிவடைந்திருந்தது.[252] முக்கியமான வணிகப் பண்டமாகத் தானியங்கள் திகழ்ந்தன.[253] சீனாவுடனான வணிகமானது பெரும்பாலும் நிலப்பகுதியில் பட்டுப் பாதை வழியாக இடை வணிகர்கள் மூலம் நடத்தப்பட்டது. எனினும், இந்திய வணிகமானது செங்கடலில் இருந்த எகிப்தியத் துறைமுகங்களிலிருந்து கடல் வழியாகவும் நடைபெற்றது. இந்த வணிகப் பாதைகளுடன் உரோமானிய விரிவாக்கம் மற்றும் வணிகம் சார்ந்திருந்த குதிரையானது, நோய் பரவுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைந்தது.[254] மேலும் இடலை எண்ணெய், பல்வேறு உணவுப் பொருட்கள், கரும் (மீன் சுவைச்சாறு), அடிமைகள், தாது, தயாரிக்கப்பட்ட உலகப் பொருட்கள், நார்ப் பொருட்கள் மற்றும் ஜவுளிகள், மரம், மட்பாண்டங்கள், கண்ணாடி பொருட்கள், பளிங்குகள், பாபிரஸ், நறுமணப் பொருட்கள், மருந்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தந்தம், முத்துக்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையும் வணிகம் செய்யப்பட்டன.[255]
உழைப்பும், பணிகளும்[தொகு]
உரோம் நகரத்தில் 268 வேறுபட்ட பணிகளையும், பொம்பெயியில் 85 பணிகளையும் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. [193]தொழில் முறை பணியாளர்களின் சங்கங்கள் அல்லது வாணிகக் கழகங்கள் (காலேஜியா) ஆகியவை பல்வேறுபட்ட பணிகளின் உண்மைத் தன்மைக்கு உறுதியளிக்கின்றன. மீனவர்கள், உப்பு வணிகர்கள், இடலை எண்ணெய் விற்பவர்கள், பொழுது போக்குக் கலைஞர்கள், கால்நடை விற்பவர்கள், பொற்கொல்லர்கள், மந்தைகளை ஓட்டுபவர்கள் மற்றும் கற்களை வெட்டுபவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். இப்பணிகள் சில நேரங்களில் மிகுந்த தனித்துவம் உடையவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, உரோமில் இருந்த ஒரு காலேஜியமானது தந்தம் மற்றும் எலும்பிச்சை குடும்ப மரங்களைச் சார்ந்த கைவினைஞர்களுக்காக மட்டுமே என்று கண்டிப்பாக வரம்பிடப்பட்டிருந்தது.[158]
அடிமைகளால் செய்யப்பட்ட பணிகளானவை ஐந்து பொதுவான வகைகளின் கீழ் வந்தன. அவை வீட்டுப்பணி, ஏகாதிபத்திய அல்லது பொதுப்பணி, நகர்ப்புற கலைப் பொருட்கள் மற்றும் சேவைகள், விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவையாகும். இதில் வீட்டு பணிகள் குறித்த கல்வெட்டுக்கள் குறைந்தது 55 வேறுபட்ட வீட்டுப் பணிகளைப் பதிவு செய்துள்ளன. சுரங்கங்கள் அல்லது குவாரிகளில் பெரும்பாலான உழைப்பைக் குற்றவாளிகள் செய்தனர். அங்கு பணிச் சூழ்நிலைகளானவை பலராலும் அறியப்பட்ட மோசமான மிருகத்தனமான சூழ்நிலைகளாக இருந்தன.[256] நடைமுறையில் அடிமைகள் மற்றும் சுதந்திரமானவர்களுக்கு இடையிலான பணிகளில் வேறுபாடானது சிறிதளவே இருந்தது.[92] பெரும்பாலான பணியாளர்கள் கல்வியற்றவர்களாகவும், தனித் திறமையற்றவர்களாகவும் இருந்தனர்.[257] பெரும் எண்ணிக்கையிலான பொதுப் பணியாளர்கள் விவசாயத்தில் பணிபுரிந்தனர். இத்தாலிய அமைப்பான தொழில் துறை விவசாயத்தில் பணி புரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பேரரசு முழுவதும் ஒரு நுட்பமாகக் காண்கையில் அடிமைபடுத்தப்படாதவர்களாகக் கருதப்பட்ட மக்களைச் சார்ந்திருந்த பிற பணிகளின் வடிவங்களை விட அடிமைப் பண்ணைப் பணியானது பொதுவாகக் குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.[92]
ஜவுளி மற்றும் துணி உற்பத்தியானது வேலை வாய்ப்பிற்கு ஒரு முதன்மையான ஆதாரமாகத் திகழ்ந்தது. ஜவுளிகள் மற்றும் நிறைவு செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவை பேரரசின் மக்களுக்கு மத்தியில் வணிகம் செய்யப்பட்டன. பேரரசின் மக்களின் பொருட்கள் பெரும்பாலும் அவர்களின் பெயரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பட்டணத்தின் பெயரையோ கொண்டிருந்தன. அவை ஒரு நிறுவனத்தின் பெயரைக் கொண்டிருக்கவில்லை.[258] நல்ல, அணிவதற்குத் தயாராக உள்ள ஆடைகள் வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டன. உற்பத்தி மையங்களின் செல்வ வளமுள்ள வசிப்பாளர்களாக இந்த வணிகர்கள் பெரும்பாலும் திகழ்ந்தனர். நிறைவு செய்யப்பட்ட ஆடைகள் வணிகர்களின் விற்பனை முகவர்களால் விற்கப்பட்டிருந்திருக்கலாம்.[259] முகவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பு இருந்த வாடிக்கையாளர்களிடம் அல்லது வெசுதியரீ என்ற பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளாக இருந்த துணிகள் விற்பவர்களிடம் பயணித்தனர். அல்லது துணிகள் விற்பவர்கள் இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்களால் அனுப்பப்பட்டவர்களாக இருந்தனர்.[259] எகிப்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயிற்சித் தொழிலாளர்கள், சம்பளம் பெற்ற சுதந்திரமான பணியாளர்கள் மற்றும் அடிமைகள் ஆகியோரை பணியமர்த்தி இருந்த செழிப்பான சிறு தொழில் முறைகளை நடத்தினர்.[260] சலவைத் தொழிலாளர்கள் அல்லது சாயம் இடுபவர்கள் தங்களது சொந்த வணிகக் கழகங்களைக் கொண்டிருந்தனர்.[261] ஜவுளி உற்பத்தி மற்றும் பழைய துணிகளை மறு சுழற்சி செய்து தூண்டுப் பொருட்களாக மாற்றுவதில் தனித்துவம் பெற்றிருந்த வணிகக் கழக பணியாளர்கள் சென்டோனரீ என்று அழைக்கப்பட்டனர்.[s]
மொத்த உற்பத்தியும், வருமானப் பரவலும்[தொகு]
பிரின்சிபேத்து காலத்தின் போது உரோமானியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்களது கணக்கீடுகளில் பொருளாதார வரலாற்றாளர்கள் வேறுபடுகின்றனர்.[264] பொ.ஊ. 14, 100 மற்றும் 150 ஆகிய மாதிரி ஆண்டுகளின் போது தனி நபர் மொத்த ஆண்டு வருவாயின் மதிப்பீடுகள் 166 முதல் 380 உரோமானிய நாணயங்கள் வரை இருந்தன. இத்தாலியின் தனி நபர் மொத்த ஆண்டு வருவாயானது பேரரசின் மற்ற பகுதிகளை விட 40%[265] முதல் 66%[266] அதிகமாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மாகாணங்களில் இருந்து வந்த வரி இடமாற்றப்பட்டது மற்றும் மையப் பகுதியில் உயர் குடியினரின் வருவாயானது அடர்த்தியாக இருந்தது ஆகியவை ஆகும். இத்தாலியைப் பொறுத்த வரையில், "பொம்பெயி, ஹெர்குலியம், மற்றும் உரோமைப் பேரரசின் பிற மாகாணப் பட்டணங்களின் கீழ் வகுப்பினர் அனுபவித்த ஓர் உயர் தர வாழ்க்கைத் தரமானது பொ.ஊ. 19ஆம் நூற்றாண்டு வரை மேற்கு ஐரோப்பாவில் மீண்டும் பெறப்படவில்லை என்பது குறித்து சிறிதளவே சந்தேகம் இருக்க முடியும்".[267]
செய்தெல்-பிரீசன் பொருளாதார மாதிரியில், பேரரசால் உருவாக்கப்பட்ட மொத்த ஆண்டு வருமானமானது கிட்ட தட்ட 2,000 கோடி உரோமானிய நாணயங்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் 5% மைய மற்றும் உள்ளூர் அரசாங்கத்தால் பெறப்பட்டது. உச்ச பட்சத்தில் இருந்த 1.5% வீடுகளின் வருமானப் பரவலானது சுமார் 20% வருவாயைக் கொண்டிருந்தது. மற்றுமொரு 20%மானது சுமார் 10% மக்களிடம் இருந்தது. இந்த 10% மக்களை மேல் தட்டு அல்லாத நடுத்தர மக்களென்று குறிப்பிடலாம். எஞ்சிய "பெரும்பாலான மக்கள்" பேரரசின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலான பங்கை உற்பத்தி செய்தனர். ஆனால், பிழைப்புநிலைப் பொருளாதாரத்திற்கு அருகில் வாழ்ந்தனர்.[268] மேல் தட்டு மக்கள் 1.2% முதல் 1.7%மாக இருந்தனர். நடுத்தர மக்கள் "அளவான, அமைதியான நிலையை பெற்றிருந்தனர். ஆனால், அதிகபட்ச செல்வச் செழிப்பைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் 6% முதல் 12%மாக இருந்தனர் (...) அதே நேரத்தில் எஞ்சிய பெருமளவிலான மக்கள் பிழைப்புநிலைப் பொருளாதாரத்திற்கு அருகில் வாழ்ந்தனர்".[269]
கட்டடக் கலையும், பொறியியலும்[தொகு]
கட்டடக் கலைக்கு உரோமானியர்களின் முதன்மையான பங்களிப்பானது வளைவு, காப்பறை மற்றும் குவிமாடம் ஆகியவை ஆகும். 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சில உரோமானியக் கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இதற்கு ஒரு பங்குக் காரணம் சீமைக்காரை மற்றும் திண்காரை ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுத்திய நுணுக்கமான முறைகள் ஆகும்.[270] உரோமானியச் சாலைகள் உலகின் மிகுந்த முன்னேற்றமடைந்த, கட்டப்பட்ட சாலைகளாக 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தன. சாலைகளின் அமைப்பானது இராணுவம் ஒழுங்கை நிலைநாட்டுவது, தொடர்பு மற்றும் வணிகம் ஆகியவற்றை எளிதாக்கியது. வெள்ளங்கள் மற்றும் பிற சூழ்நிலை இடர்ப்பாடுகளை எதிர் கொள்ளும் வகையில் சாலைகள் இருந்தன. மைய அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்குப் பிறகும் கூட சில சாலைகள் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தக் கூடியவையாகத் தொடர்ந்து நீடித்தன.

பெரிய மற்றும் நீண்ட காலம் நிலைத்திருந்த தொடக்க காலப் பாலங்களில் உரோமானியப் பாலங்களும் ஒன்றாகும். இவை கற்களால் வளைவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டன. பெரும்பாலானவை திண்காரையையும் பயன்படுத்தின. மிகப்பெரிய உரோமானியப் பாலமானது தன்யூபு ஆற்றின் கீழ்ப்பகுதில் கட்டப்பட்ட திராயானின் பாலமாகும். இதை திமிஷ்குவின் அப்பல்லோதோருசு கட்டினார். உலகிலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய பலமாக ஒட்டு மொத்த அளவு மற்றும் நீளம் ஆகிய இரண்டிலுமே 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாலம் அதன் நிலையைத் தக்க வைத்திருந்தது.[271]
நீரைச் சேமிப்பதற்காக சுபியாகோ அணைகள் போன்ற ஏராளமான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை உரோமானியர்கள் கட்டமைத்தனர். சுபியாகோ அணைகளில் இரண்டு அணைகள் உரோமின் மிகப் பெரிய கால்வாய்ப் பாலங்களில் ஒன்றான அனியோ நோவுசுவுக்கு இருக்கு நீர் வழங்கின.[272] உரோமானியர்கள் ஐபீரிய மூவலந்தீவில் மட்டும் 72 அணைகளைக் கட்டினர். பேரரசு முழுவதும் இன்னும் ஏராளமான பாலங்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றும் கூட பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு நில அணைகள் உரோமானிய பிரிட்டனில் இருந்து அறியப்பட்டுள்ளன. இதில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டான இலோங்கோவிசியம் (இலான்செஸ்டர்) அணையும் ஒன்றாகும்.

உரோமானியர்கள் ஏராளமான கால்வாய்ப் பாலங்களைக் கட்டினர். பிரோந்தினுசுவின் எஞ்சியுள்ள ஒரு நீர் வளம் தொடர்பான குறிப்பானது நீர் வளங்களை உறுதி செய்வதற்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. பிரோந்தினுசு நெர்வாவுக்குக் கீழ் கியூரேட்டர் அக்குவாரமாகச் (நீர் ஆணையர்) சேவையாற்றினார். கல் தச்சுக் கால்வாய்கள் தொலை தூரத்தில் இருந்த நீரூற்றுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை ஒரு துல்லியமான, சாய்வான அமைப்புகள் மூலம் ஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி எடுத்துச் சென்றன. கால்வாய்ப் பாலத்தின் வழியாக நீர் சென்றதற்குப் பிறகு அது நீர்த் தேக்கத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. பொது அலங்கார நீரூற்றுகள், குளியல் இடங்கள், கழிவறைகள் அல்லது தொழில் துறைத் தளங்களுக்குக் குழாய்கள் மூலமாக நீர் கொடுக்கப்பட்டது.[273] உரோம் நகரத்தில் இருந்த முதன்மையான கால்வாய்ப் பாலங்கள் அக்குவா கிளாடியா மற்றும் அக்குவா மார்சியா ஆகியவையாகும்.[274] கான்ஸ்டான்டினோபிலுக்கு நீர் வழங்கும் சிக்கலான முறையில் கட்டப்பட்டிருந்த அமைப்புகளுக்கு நீர் வழங்கிய தொலை தூரப் பகுதியானது 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த இடத்திலிருந்து 336 கிலோ மீட்டருக்கும் மேல் நீளமுடைய ஒரு வளைவுகளைக் கொண்ட வழியின் மூலம் நீரை நகரம் பெற்றது. உரோமானியக் கால்வாய்ப் பாலங்கள் சிறப்பான பொறியியல் தன்மையுடன் கட்டப்பட்டன. சிறந்த தொழில்நுட்பத் தரத்தைக் கொண்டிருந்தன. நவீன கால[275]ங்கள் வரையில் அதற்குச் சமமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படவில்லை.[276] பேரரசு முழுவதும் தங்களது விரிவான சுரங்கத் தொழில் செயல் முறைகளுக்கும் கால்வாய்ப் பாலங்களை உரோமானியர்கள் பயன்படுத்தினர். இலாசு மெதுலாசு மற்றும் தெற்கு வேல்சின் தோலௌகோதி போன்ற தளங்களில் இவர்கள் இவ்வாறு பயன்படுத்தினர்.[277]
வெப்பக்காப்புக் கண்ணாடியானது (அல்லது "இரட்டை கண்ணாடி") பொதுக் குளியல் இடங்களைல் கட்டமைத்த போது பயன்படுத்தப்பட்டன. குளுமையான கால நிலைகளில் இருந்த மேல் தட்டு மக்களின் வீடுகள் சூடேற்றுங்கருவிகளைக் கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக்கருவிகள் மைய சூடேற்றுதலின் ஒரு வடிவமாகும். மிகப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த நீராவிப் பொறியின் அனைத்து தேவையான பாகங்களையும் ஒருங்கிணைத்த முதல் கலாச்சாரமாக உரோமானியர்கள் திகழ்கின்றனர். ஈரோ ஆவிவேக மானியைக் கட்டமைத்த போது இது நிகழ்ந்தது. வணரி மற்றும் இணைக்கும் கம்பி அமைப்புடன் ஈரோவின் ஆவிவேக மானி (நீராவியை உற்பத்தி செய்தது), உலோக உருளை மற்றும் உந்துத் தண்டு (உலோக உந்து விசைக் குழாய்), திரும்ப இயலாத அடைப்பிதழ் (நீர்க் குழாய்களில்) மற்றும் பற்சக்கர அமைப்பு (நீர் ஆலைகள் மற்றும் கடிகாரங்கள்) ஆகிய ஒரு நீராவி எந்திரத்தை (இது 1712இல் உருவாக்கப்பட்டது) உருவாக்கத் தேவையான அனைத்து பாகங்களும் உரோமானியக் காலங்களில் அறியப்பட்டிருந்தன.[278]
சுகாதாரமும், நோயும்[தொகு]
பண்டைக் கால உலகத்தில் கொள்ளை நோய் என்பது பொதுவான ஒன்றாக இருந்தது. எப்போதாவது உரோமைப் பேரரசில் ஏற்பட்ட உலகம் பரவும் நோய்கள் தசம இலட்சக் கணக்கிலான மக்களைக் கொன்றன. உரோமானிய மக்கள் தொகையானது ஆரோக்கியம் இல்லாததாக இருந்தது. பேரரசின் மக்கள் தொகையில் 20% பேர் நூற்றுக்கணக்கான நகரங்களில் ஒன்றான உரோமில் வசித்தனர். பண்டைக் கால தர நிலைப்படி இது ஒரு பெரிய சதவீதம் ஆகும். இதன் மக்கள்தொகை 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இதுவே பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. நகரங்கள் "மக்கள் தொகை மூழ்கடிப்பான்களாக" தங்களது மிகச் சிறந்த காலங்களில் கூட திகழ்ந்தன. இறப்பு வீதமானது பிறப்பு வீதத்தை விட அதிகமாக இருந்தது. நகர்ப்புற மக்கள் தொகையைப் பேணுவதற்கு புதிய குடியிருப்பாளர்கள் நகருக்குள் தொடர்ந்து புலம் பெயர்ந்து வர வேண்டும் என்ற தேவை இருந்தது. சராசரி வாழ்நாள் காலம் 20களின் நடுவில் இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளில் ஒரு வேளை பாதிக்கும் மேற்பட்டோர் இளம் வயதை அடையும் முன்னரே இறந்தனர் என்று கருதப்படுகிறது. அடர்ந்த நகர மக்கள் தொகை மற்றும் குறைபாடுடைய கழிவு நீக்க அமைப்பு ஆகியவை நோய்களின் ஆபத்துகளுக்கு பங்களித்தன. உரோமைப் பேரரசின் பரந்த நிலப்பரப்புங்களுக்கு இடையில் நிலம் மற்றும் கடல் மூலமான போக்குவரத்துத் தொடர்பானது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தொற்று நோய்கள் பரவுவதை எளிதாக்கியது. சிறிய மற்றும் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைக் காட்டிலும் நோய்ப் பரவலானது மிக வேகமாக இருந்தது. ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் இருந்து செல்வந்தர்களும் தப்பவில்லை. பேரரசர் மார்க்கஸ் அரேலியஸின் 14 குழந்தைகளில் இரு குழந்தைகள் மட்டுமே இளம் வயதை அடைந்தனர்.[279]
ஊட்டச்சத்து மற்றும் நோய் சுமையின் ஒரு சிறந்த அறிகுறியாக இருப்பது மக்கள் தொகையின் சராசரி உயரமாகும். நடுக்காலத்தின் போது, இத்தாலியில் இருந்த உரோமுக்கு முந்தைய சமூகங்கள் மற்றும் ஐரோப்பாவில் இருந்த உரோமுக்குப் பிந்தைய சமூகங்களின் மக்கள் தொகையைக் காட்டிலும் சராசரி உரோமைக் குடிமக்களின் உயரமானது குறைவாக இருந்தது. ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. "வரலாற்றில் கடைசி முறையாக இல்லாமல், சமூக நிலையில் ஒரு வழக்கத்திற்கு மாறான முன்னேற்றமானது உயிரியல் ரீதியாக பின்னோக்குதலைக் கொண்டு வந்தது" என வரலாற்றாளர் கைல் ஆர்ப்பர் இதை தீர்மானமாகக் கூறியுள்ளார்.[280]
அன்றாட வாழ்க்கை[தொகு]
நகரமும், நாடும்[தொகு]
பண்டைக் கால உலகத்தில் "முறையாக வடிவமைக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, அழகு சேர்க்கப்பட்டதன்" மூலம் ஒரு நகரமானது நாகரிகத்தை வளர்த்த ஓர் இடமாகக் கருதப்பட்டது.[281] உரோமில் ஒரு விரிவான கட்டடத் திட்டங்களை அகத்தசு செயல்படுத்தினார். புதிய ஏகாதிபத்திய சித்தாந்தத்தை வெளிப்படுத்திய பொதுக் கண்காட்சிக் கலை மற்றும் நகரத்தை மறு ஒருங்கிணைப்புச் செய்து அண்டை நகர்ப்புறப் பகுதிகளாக (விசி) மாற்றுதல் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். அண்டை நகர்ப்புறப் பகுதிகள் உள்ளூர் அளவில் காவலர்கள் மற்றும் தீயணைப்புச் சேவைகளால் நிர்வகிக்கப்பட்டன.[282] அகத்தசு கால நினைவுச் சின்னக் கட்டடக் கலையின் ஒரு கவனமாக மார்தியசு வளாகமானது திகழ்ந்தது. இது நகர மையத்திற்கு வெளியே அமைந்திருந்த ஒரு வெட்ட வெளிப் பகுதியாகும். குதிரையேற்ற விளையாட்டுகள் மற்றும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி ஆகியவற்றுக்காக தொடக்க காலங்களில் இது ஒதுக்கப்பட்டிருந்தது. அகத்தசு அமைதிப் பீடமானது அங்கே அமைந்திருந்தது. இதே போல எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தூணும் அமைந்திருந்தது. அகத்தசின் கீழ் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்திற்குச் சுட்டிக் காட்டும் கோலாக இத்தூண் பயன்படுத்தப்பட்டது. இந்த வளாகமானது இதன் பொதுத் தோட்டங்களுடன் நகரத்தில் வருகை புரிவதற்கு மிகுந்த ஈர்ப்புடைய இடங்களில் ஒன்றாக உருவானது.[282]
நகரத் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையானது ஆரம்ப காலத்தைச் சேர்ந்த கிரேக்கர்களால் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டது.[283] கிழக்குப் பேரரசில் உரோமானிய ஆட்சியானது நகரங்களின் உள்ளூர் வளர்ச்சியை அதிகரித்து, வடிவமைத்தது. நகரங்கள் ஏற்கனவே ஒரு வலிமையான எலனியத் தன்மையைக் கொண்டிருந்தன. ஏதென்சு, அப்ரோதிசியசு, எபேசஸ் மற்றும் செராசா போன்ற நகரங்கள் ஏகாதிபத்தியக் கொள்கைகளுடன் ஒத்துப் போவதற்காக நகரத் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலையின் சில அம்சங்களை மாற்றியமைத்தன. அதே நேரத்தில், தங்களது சொந்த அடையாளம் மற்றும் முதன்மை நிலையை வெளிக்காட்டின.[284] மேற்குப் பேரரசில் செல்திக்கு மொழி பேசிய மக்களின் பகுதிகளில் கற்கோயில்கள், மன்றங்கள், நினைவுச் சின்ன அலங்கார நீரூற்றுகள் மற்றும் வட்டரங்குகளை நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியுடன் உரோம் ஊக்குவித்தது. இவற்றைப் பெரும்பாலும் ஒப்பிடா என்று அறியப்பட்ட ஏற்கனவே இருந்த சுவர்களால் சூழப்பட்ட குடியிருப்புகளிலோ அல்லது குடியிருப்புகள் அமைந்திருந்த தளத்திற்கு அருகிலோ ஏற்படுத்தியது.[285][286][t] உரோமானிய ஆப்பிரிக்காவின் நகரமயமாக்கலானது கடற்கரையின் அருகே இருந்த கிரேக்க மற்றும் பியூனிக் நகரங்களில் விரிவடைந்தது.[249]
பேரரசு முழுவதும் இருந்த வலைப்பின்னல் அமைப்பு போன்ற நகரங்கள் பாக்ஸ் உரோமனாவின் போது ஒரு முதன்மையான ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்தன.[180] பொ.ஊ. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டு கால உரோமானியர்கள் ஏகாதிபத்தியப் பரப்புரையால் "அமைதி காலப் பழக்கங்களை மனதில் பதிய வைக்குமாறு" ஊக்குவிக்கப்பட்டனர்.[288] பாரம்பரியவாதி கிளிப்போர்டு ஆண்டோ இதைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
ஏகாதிபத்தியக் கலாச்சாரத்துடன் பிரபலமாகத் தொடர்புபடுத்தப்பட்ட பெரும்பாலான விஷயங்களான பொது வழிபாட்டு முறை மற்றும் அதன் விளையாட்டுக்கள், பொது விருந்துகள், பொழுது போக்குக் கலைஞர்களுக்கு இடையிலான போட்டிகள், பேச்சாளர்கள் மற்றும் தடகள வீரர்கள், மேலும் பெருமளவிலான பொதுக் கட்டடங்களுக்கான நிதி, பொது இடத்தில் கலையானது காட்சிக்கு வைக்கப்படுதல் ஆகியவற்றுக்குத் தனி நபர்கள் நிதியுதவி அளித்தனர். தங்களது பொருளாதார சக்தி மற்றும், சட்ட மற்றும் மாகாண மதிப்புகளை நியாயப்படுத்துவதற்கு இவ்வகையில் பயன்படுத்தப்பட்ட இந்தச் செலவினங்கள் தனி நபர்களுக்கு உதவி செய்தன.[289]
கிறித்தவ தன்விளக்கவியலாளரான தெர்த்துல்லியன் கூட 2ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியின் உலகமானது அதற்கு முந்தைய காலங்களை விட ஒழுங்கிலும், பண்பாட்டிலும் நன்முறையில் இருந்ததாகப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "எங்கும் வீடுகள், எங்கும் மக்கள், எங்கும் ரெசு பப்ளிகா (பொதுநலவாயம்), எங்கும் வாழ்க்கை".[290] பேரரசின் நெருங்கி வந்து கொண்டிருந்த வீழ்ச்சிக்கு ஒரு அறிகுறியாக செல்வச் செழிப்புமிக்க வகுப்பினர் பொதுப் பணி வேலைகளுக்கு ஆதரவளிக்க இயலாத அல்லது விரும்பாத போது 4ஆம் நூற்றாண்டில் நகரங்கள் மற்றும் குடிசார் வாழ்க்கை வீழந்தது.[291]
உரோம் நகரத்தில் பெரும்பாலான மக்கள் பல அடுக்கு அறைக்கட்டுக் கட்டடங்களில் (இன்சுலே) வாழ்ந்தனர். இவை துப்புரவுற்று தீக்கு எளிதில் இரையாகக் கூடிய வகையில் பெரும்பாலும் இருந்தன. குளியல் இடங்கள் (தெர்மே), ஓடும் நீரை வெளித்தள்ளக் கூடிய கழிவறைகள் (இலாட்ரினே), வசதியாக அமைக்கப்பட்ட வட்ட வடிவக் கிண்ணங்கள், தூய நீரைக் கொடுத்த சிக்கலான நுட்பமுடைய நீரூற்றுகள் (நிம்பே)[286] மற்றும், தேர்ப் பந்தயம் மற்றும் கிளாடியேட்டர் சண்டைகள் போன்ற பெரிய அளவிலான பொழுது போக்குகள் போன்ற பொது துணை நலங்கள் இன்சுலேவில் வாழ்ந்த பொது மக்களை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டன.[292] இதே போன்ற துணை நலங்கள் பேரரசு முழுவதும் இருந்த நகரங்களில் கட்டமைக்கப்பட்டன. நன்றாகப் பாதுகாக்கப்பட்ட உரோமானியக் கட்டடங்களில் சில எசுப்பானியா, தெற்கு பிரான்சு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ளன.
தூய்மையான, சமூக மற்றும் கலாச்சார விழாக்களுக்குப் பொதுக் குளியல் இடங்கள் பயன்படுத்தப்பட்டன.[293] இரவு உணவுக்கு முன்னர் பிந்தைய மாலையில் தினசரி சந்திக்கும் இடமாகக் குளியல் இடம் இருந்தது.[294] மூன்று வெப்பநிலைகளில் சமூகக் குளியல் இடங்களைக் கொடுத்த ஒரு தொடர்ச்சியான அறைகளால் உரோமானியக் குளியல் இடங்கள் தனித்துவமாக விளங்கின. உடற்பயிற்சி மற்றும் எடைப் பயிற்சி அறை, வெப்பக் காற்று அல்லது நீராவிக் குளியலுக்கான அறை, அழகு நிலையம் (இங்கு இறந்த செல்கள் உடலில் இருந்து ஒரு வளைவான கருவி கொண்டு எடுக்கப்பட்டன), பந்து விளையாட்டு அரங்குகள், அல்லது வெளிப்புற நீச்சல் குளங்கள் ஆகியவையும் இந்த பல்வேறுபட்ட வசதிகளில் அடங்கும். குளியல் அறைகளின் மேற்புறத்தில் இருந்து வெப்பக் காற்று உட்கொண்டு வரப்பட்டது. அறைத் தளங்களுக்குக் கீழே கத கதப்பான சூழ்நிலையைக் கொடுத்த வெப்பக் காற்று வழிகள் இருந்தன.[295] மாகாணங்கள் முழுவதும் பொதுக் குளியல் இடங்களானவை நகர்ப்புறக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால் 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனிக் குளியலறைகள் பொதுக் குளியல் இடங்களை இடமாற்றம் செய்தன. சமய விழாக்களின் பகுதியாகவும், தங்களுக்குப் "புறச் சமயம்" தொடர்புடையதாகவும் கருதிய விளையாட்டுக்களைத் தவிர்க்குமாறு கிறித்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தவிர கிறித்தவர்கள் குளியல் இடங்களை மட்டும் பயன்படுத்தாமல், வணிகம் மற்றும் சமூகத்திலும் முழுவதுமாகப் பங்கெடுத்தனர் என்று தெர்த்துல்லியன் குறிப்பிடுகிறார்.[296]
உரோமைச் சேர்ந்த செல்வந்தக் குடும்பங்கள் பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருந்தன. இதில் ஒரு பட்டண வீடு (தோமுசு) மற்றும் நகரத்திற்கு வெளிப்புறத்தில் குறைந்தது ஓர் ஆடம்பர வீடு (வில்லா) ஆகியவை அடங்கும். தோமுசு என்பது தனியார் சொந்தமாக வைத்திருக்கும் ஒரு குடும்ப வீடு ஆகும். இது ஒரு தனியான குளியல் இடம் (பல்னியம்) மற்றும் அதற்கான பொருட்களுடன் ஒரு வேளை இருக்கலாம்.[295] ஆனால், பொது வாழ்க்கையிலிருந்து தனித்து வாழும் ஒரு இடமாக இது இல்லை.[297] உரோமின் சில நகர்ப் புறப் பகுதிகள் செல்வச் செழிப்பு மிக்க வீடுகளின் ஒரு அதிகமான அடர்த்தியைக் காட்டினாலும், செல்வந்தர்கள் அவர்களுக்கென்று தனியான பகுதியை ஒதுக்கிக் கொண்டு வாழவில்லை. அவர்களது வீடுகள் கண்ணில் படக் கூடியவையாகவும், எளிதில் சென்று வரக் கூடியவையாகவும் இருந்தன. வீடுகளின் உச்சியில் இருக்கும் பெரிய அறையானது ஒரு வரவேற்பு அறையாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் குடும்பத் தலைவர் ஒவ்வொரு நாள் காலையும் தன்னைக் காண வருபவர்களைச் சந்தித்தார். இதில் செல்வச் செழிப்பு மிக்க நண்பர்கள் முதல் குடும்பத் தலைவரின் உதவியைப் பெற்ற ஏழ்மையானவர்கள் வரை அடங்குவர்.[282] இது குடும்பச் சமயச் சடங்குகளுக்கான ஒரு மையமாகவும் திகழ்ந்தது. இதில் ஒரு சன்னிதியும், குடும்ப மூதாதையர்களின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.[298] இந்த வீடுகள் போக்குவரத்துக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பொதுச் சாலைகளில் அமைந்திருந்தன. விதியைப் பார்த்திருக்கும் தரைத் தள இடங்கள் பெரும்பாலும் கடைகளுக்கு (தபேர்னே) வாடகைக்கு விடப்பட்டன.[299] சமையல் கட்டுத் தோட்டங்களுடன் (அறைக் கட்டுகளுக்குப் பதிலாக சன்னல்களுக்கு வெளியே மலர்த் தொட்டிகள் வைக்க இடங்கள் இருந்தன) பட்டண வீடுகள் பொதுவாகச் சுற்றிலும் மூடப்பட்ட தோட்டங்களையும் கொண்டிருந்தன. இந்தத் தோட்டங்கள் இயற்கை மண்டலமாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் மற்றும் சுவர்களுக்குள்ளும் அமைந்திருந்தன.[300]

மாறாக, வில்லாவானது பரபரப்பாக இயங்குகிற நகரத்தில் இருந்து ஒரு தப்பிப்பாகக் கருதப்பட்டது. இயற்கை மற்றும் விவசாயத்திற்கு மதிப்பளிக்கிற சிந்தனை இனபத்தில் நாட்டம் மற்றும் கலைகள் தொடர்பான ஒரு பண்பட்ட நோக்கத்தை (ஒத்தியம்) சம நிலையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாக இலக்கியத்தில் இது பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. குறைபாடற்ற ஒரு வில்லாவானது வெளிப் புறத்தின் ஒரு காட்சியை அல்லது தோற்றத்தைக் காணக் கூடியதாக இருந்தது. இது கவனமாக கட்டடக்கலை வடிவமைப்பால் அமைக்கப்பட்டிருந்தது.[302] இது ஒரு செயல்பாட்டிலுள்ள பண்ணையில் அல்லது, பொம்பெயி மற்றும் ஹெர்குலியம் போன்ற கடற்கரையில் அமைந்திருந்த "விடுமுறைப் போக்கிடப் பட்டணத்தில்" அமைந்திருக்கலாம்.
அகத்தசுவுக்குக் கீழான நகரப் புதுப்பிப்புத் திட்டம் மற்றும் உரோமானிய மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் என அதிகரித்தது ஆகியவை கலைகளில் கிராமப் புற வாழ்க்கைக்கான ஏக்கம் வெளிக்காட்டப்பட்டுள்ளதுடன் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் மேய்ப்பாளர்களின் குறைபாடற்ற வாழ்வானது கவிதைகளில் புகழப்பட்டது. வீடுகளின் உட்புறங்கள் பெரும்பாலும் வர்ணம் பூசப்பட்ட தோட்டங்கள், நீரூற்றுகள், நிலப்பரப்புகள், தாவர அலங்காரங்கள்,[302] குறிப்பாக பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் போன்ற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நவீன அறிஞர்கள் சில நேரங்களில் இந்த விலங்குகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை என்று அடையாளப்படுத்தப்படக் கூடிய அளவிற்குத் துல்லியமாக அவை சித்தரிக்கப்பட்டுள்ளன.[303] அகத்தசு காலக் கவிஞரான ஓராசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மதிப்புகளுக்கு இடையிலான முரண்பட்ட தன்மையை தனது நீதிக்கதையான நகர எலி மற்றும் நாட்டுப்புற எலி என்ற கதையில் மென்மையாக நையாண்டி செய்துள்ளார். இக்கதையானது குழந்தைகளுக்கான கதையாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்தது.[304]
ஒரு மிகுந்த நடைமுறை ரீதியில், மைய அரசாங்கமானது விவசாயத்துக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு செயல்திறமுடைய விருப்பத்தைக் கொண்டிருந்தது.[305] நிலம் பயன்படுத்தப்படுவதன் முதன்மையான நோக்கமாக உணவு உற்பத்தியானது திகழ்ந்தது.[306] நகர்ப்புற வாழ்க்கை மற்றும் அதன் மிகுந்த தனித்துவமான பணியாளர் பிரிவு ஆகியவற்றை நீடிக்க வைத்த பொருளாதார அளவை பெரிய பண்ணைகள் சாதித்தன.[305] பட்டணங்கள் மற்றும் வணிக மையங்களின் உள்ளூர்ச் சந்தைகளின் வளர்ச்சியின் மூலம் சிறிய விவசாயிகள் பயனடைந்தனர். பயிர்ச்சுழற்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருக்கம் போன்ற விவசாயத் தொழில்நுட்பங்கள் பேரரசு முழுவதும் பரவின. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக பட்டாணியும், முட்டைக்கோசும் பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[307]
உரோம் நகரத்திற்குப் போதுமான உணவு வழங்குதலைப் பெறுவது என்பது பிந்தைய குடியரசில் ஒரு முதன்மையான அரசியல் பிரச்சினையாக உருவானது. பதிவு செய்த குடிமக்களுக்காக தானிய உதவியை (குரா அன்னோனே) அரசாங்கம் கொடுக்க ஆரம்பித்தது.[305] இந்த உதவியை உரோமில் இருந்த 2 முதல் 2.50 இலட்சம் ஆண்கள் பெற்றனர். ஒரு மாதத்திற்கு 33 கிலோ தானியத்தை இவ்வாறாகப் பெற்றனர். மொத்தமாக ஓர் ஆண்டுக்குச் சுமார் 1 இலட்சம் டன் கோதுமையைப் பெற்றனர். இந்தக் கோதுமை முதன்மையாக சிசிலி, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து வந்தது.[308] இத்திட்டமானது அரசின் வருவாயில் குறைந்தது 15% செலவு ஏற்படுத்தியது.[305] ஆனால் கீழ்த்தட்டு மக்கள் மத்தியில் வாழ்க்கைத் தரம் மற்றும் குடும்ப வாழ்வை முன்னேற்றியது.[309] நிலத்தை உடைமையாகக் கொண்டிருந்த வகுப்பினரின் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட இடலை எண்ணெயை வாங்குவதற்குப் பணியாளர்கள் அதிகப்படியாகச் செலவழிப்பதை அனுமதித்ததன் மூலம் செல்வந்தர்களுக்கு இவ்வாறாக மானியம் வழங்கியது.[305]
தானிய உதவியும் ஒரு பெயரளவு மதிப்பைக் கொண்டிருந்தது: அனைவருக்கும் அனுகூலத்தை வழங்குபவர் என்ற பேரரசரின் நிலை மற்றும் "படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்டதன் அனுகூலங்களில்" இருந்து தங்களுக்குரிய பங்கைப் பெறும் அனைத்துக் குடிமக்களுமான உரிமை ஆகிய இரண்டையுமே இது உறுதி செய்தது.[305] அன்னோனா, பொது நல வசதிகள் மற்றும் பிரமிக்கத்தக்க பொழுது போக்குகள் ஆகியவை கீழ் வகுப்பு உரோமானியர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கை நிலையைத் தணித்தன. சமூகக் கொந்தளிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்தன. எனினும், நையாண்டிக் கவிஞரான சுவேனல் "ரொட்டித் துண்டு மற்றும் சர்க்கஸ்" ஆகியவற்றைக் குடியரசானது அரசியல் சுதந்திரத்தை இழந்ததன் ஒரு சின்னமாகக் கருதினார்:[310]
பொதுமக்கள் தங்களது விழிப்புணர்வை நீண்ட காலமாக விட்டு விட்டனர்: ஆணைகளையும், ஆட்சிகளையும் ஒரு காலத்தில் வழங்கியவர்கள், இலீசியன்கள் மற்றும் அனைவரும் தற்போது எதிலும் தலையிடுவதில்லை. [மக்கள் தற்போது] வெறும் இரண்டே இரண்டிற்காக ஆர்வத்துடன் விருப்பம் கொள்கின்றனர். அவை ரொட்டித் துண்டு மற்றும் சர்க்கஸ்கள்.[311]
உணவும், உண்ணுதலும்[தொகு]

உரோமில் இருந்த பெரும்பாலான அறைக்கட்டுகள் சமையல் அறைகளைக் கொண்டிருக்கவில்லை. எனினும், ஒரு மரக்கரி கனல் தட்டானது சாதரண சமையற் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.[313] தயாரித்த உணவானது பொது விடுதிகள், பயணிகள் விடுதிகள், மற்றும் உணவு விற்பனையரங்குகள் (தாபர்னே, பாப்பினே, தெர்மோபோலியா) ஆகிய இடங்களில் விற்கப்பட்டன.[314] எடுப்புச் சாப்பாடு மற்றும் உணவகத்தில் உண்ணுதல் ஆகியவை கீழ் தட்டு மக்களுக்கு உரியவையாக இருந்தன; தனித்துவமான, நுணுக்கமான உணவுகளையுடைய உண்ணுதலானது ஒரு வாலுவர் (ஆர்ச்சிமகிரசு) மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களுடன் செல்வச் செழிப்பு மிக்க வீடுகளில் நடத்தப்பட்ட தனியார் இரவு விருந்து நிகழ்ச்சிகளில்[315] அல்லது சமூகக் குழுக்களால் (காலேஜியா) நடத்தப்படும் விருந்துகளில் மட்டுமே எதிர் பார்க்கக் கூடியதாக இருந்தது.[316]
பெரும்பாலான மக்கள் தங்களது தினசரிக் கலோரிகளில் குறைந்தது 70 சதவீதத்தைத் தானியங்கள் மற்றும் இருபுற வெடிக்கனி ஆகியவற்றின் வடிவத்தில் உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[317] காய்கறிக் கஞ்சியானது (பல்சு) உரோமானியர்களின் பூர்வீக உணவாகக் கருதப்பட்டது.[318] அடிப்படைத் தானியக் கஞ்சியுடன் துண்டாக்கப்பட்ட காய்கறிகள், சிறு மாமிசத் துண்டுகள், பாலாடை, அல்லது மூலிகைகளுடன் சேர்த்து போலேன்டா மற்றும் இரிசோட்டோ ஆகியவற்றை ஒத்த உணவு வகைகள் தயாரிக்கப்படலாம்.[319]
நகர்ப்புற மக்களும், இராணுவத்தினரும் தங்களது தானிய உணவை ரொட்டித் துண்டின் வடிவில் உட்கொள்வதையே விரும்பினர்.[317] ஆலைகளும், வணிக அடுகலன்களும் ஒரு அடுமனை வளாகமாகப் பொதுவாக ஒன்றிணைக்கப்பட்டு இருந்தன.[320] அரேலியனின் ஆட்சியின் போது அரசு தொழிற்சாலைகளின் அடுமனையில் தயாரிக்கப்பட்ட ரொட்டித் துண்டான அன்னோனாவை ஒரு தினசரி பங்கீட்டு உணவுப் பொருளாக விநியோகம் செய்ய அரசானது தொடங்கியது. இடலை எண்ணெயையும் இந்தப் பங்கீட்டில் சேர்த்தது.[321]
உடல் நலத்திற்கு முக்கியமானதாக ஒரு நல்ல உணவு இருந்தது என்பது கலென் (கி. பி. 2ஆம் நூற்றாண்டு) போன்ற மருத்துவ எழுத்தாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவரது சமையற்குறிப்புகள் பார்லி சூப் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. கூமோரல் கோட்பாடு போன்ற எண்ணங்களால் ஊட்டச்சத்து மீதான பார்வைகள் தாக்கம் கொண்டிருந்தன.[322]
உரோமானிய இலக்கியமானது மேல்தட்டு வகுப்பினரின் உண்ணும் பழக்க வழக்கங்கள் மீது கவனம் கொண்டிருந்தது.[323] மேல்தட்டு வகுப்பினருக்கு மாலை உணவானது (செனா) முக்கியமான சமூக விழாவாக இருந்தது.[324] ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட உணவு உண்ணும் அறையில் (திரிக்லினியம்) விருந்தினர்கள் பொழுது போக்கு பெற்றனர். இவை பெரும்பாலும் முழுவதுமாக சுற்றி அடைக்கப்பட்டிருந்த தோட்டத்தைக் கண்டவாறு நடத்தப்பட்டது. உணவு உண்பவர்கள் தங்களது இடது முழங்கையால் சாய் படுக்கைகளில் ஓய்வெடுத்தனர். குறைந்தது குடியரசின் பிந்தைய காலத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உணவருந்தினர் மற்றும் சாய் படுக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.[325]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Robert Lee Wolff (1948). "Romania: The Latin Empire of Constantinople". Speculum 23 (1): 1–34, especially 2–3. doi:10.2307/2853672. https://archive.org/details/sim_speculum_1948-01_23_1/page/1.
- ↑ Morley, Neville (17 August 2010). The Roman Empire: Roots of Imperialism. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7453-2870-6.; Jared Diamond (4 January 2011). Collapse: How Societies Choose to Fail or Succeed: Revised Edition. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-101-50200-6.
- ↑ Bennett (1997).
- ↑ Treadgold (1997), ப. 734.
- ↑ Andrew Gillett (2001). "Rome, Ravenna and the Last Western Emperors". Papers of the British School at Rome 69: 131–167. doi:10.1017/S0068246200001781. பன்னாட்டுத் தர தொடர் எண்:0068-2462. https://www.academia.edu/18189525.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Rein Taagepera (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 125. doi:10.2307/1170959.
- ↑ 7.0 7.1 Peter Turchin; Adams, Jonathan M.; Hall, Thomas D. (2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://peterturchin.com/PDF/Turchin_Adams_Hall_2006.pdf. பார்த்த நாள்: 6 February 2016.
- ↑ Durand, John D. (1977). "Historical Estimates of World Population: An Evaluation". Population and Development Review 3 (3): 253–296. doi:10.2307/1971891. http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1009&context=psc_penn_papers.
- ↑ Roy, Kaushik (2014). Military Transition in Early Modern Asia, 1400–1750: Cavalry, Guns, Government and Ships. Bloomsbury Studies in Military History. Bloomsbury Publishing. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78093-800-4. "After the capture of Constantinople, the capital of the Byzantine Empire became the capital of the Ottoman Empire. The Osmanli Turks called their empire the Empire of Rum (Rome)."
- ↑ (Kelly 2007, ப. 4ff); (Nicolet 1991, ப. 1, 15); T. Corey Brennan (2000). The Praetorship in the Roman Republic. Oxford University Press. பக். 605. https://archive.org/details/praetorshipinrom0002bren.; (Peachin 2011, ப. 39–40)
- ↑ 11.0 11.1 11.2 Potter (2009), ப. 179.
- ↑ Nicolet (1991), ப. 1, 15.
- ↑ 13.0 13.1 Hekster, Olivier; Kaizer, Ted (16–19 April 2009). "Preface". Frontiers in the Roman World: Proceedings of the Ninth Workshop of the International Network Impact of Empire (Brill): viii.
- ↑ Andrew Lintott (1999). The Constitution of the Roman Republic. Oxford University Press. பக். 114. https://archive.org/details/constitutionofro0000lint_r1i1.; Eder, W. (1993). The Augustan Principate as Binding Link. University of California Press. பக். 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-08447-0.
- ↑ Richardson, John (2011). Fines provincial. Brill. பக். 10.
- ↑ Richardson (2011), ப. 1–2.
- ↑ Ronald Syme (1939). The Roman Revolution. Oxford University Press. பக். 3–4. https://archive.org/details/in.ernet.dli.2015.73667.
- ↑ Mary T. Boatwright (2000). Hadrian and the Cities of the Roman Empire. Princeton University Press. பக். 4. https://archive.org/details/hadriancitiesofr0000boat.
- ↑ Dio Cassius, Roman History, Cary, E. ஆல் மொழிபெயர்க்கப்பட்டது (Loeb Classical Library edition, 1927 ed.), p. 72.36.4
- ↑ Gibbon, Edward (1776), "The Decline And Fall in the West – Chapter 4", The History of the Decline And Fall of the Roman Empire
- ↑ Goldsworthy (2009), ப. 50.
- ↑ Peter Brown (historian) (1971). The World of Late Antiquity. Harcourt Brace Jovanovich. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-151-98885-3. https://archive.org/details/worldoflateantiq00brow.
- ↑ Goldsworthy (2009), ப. 405–415.
- ↑ David Stone Potter (2004). The Roman Empire at Bay. Routledge. பக். 296–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-10057-1.
- ↑ Chester G. Starr (1974). A History of the Ancient World (2nd ). Oxford University Press. பக். 670–678. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-195-01814-1.
- ↑ Bury (1923), ப. 312–313.
- ↑ J. B. Bury (1923). History of the Later Roman Empire. Dover Books. பக். 295–297. https://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/secondary/BURLAT/9*.html#4.
- ↑ Scholl, Christian (2017) (in en). Transcultural approaches to the concept of imperial rule in the Middle Ages. Peter Lang AG. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-653-05232-9. "Odoacer, who dethroned the last Roman emperor Romulus Augustulus in 476, neither used the imperial insignia nor the colour purple, which was used by the emperor in Byzantium only."
- ↑ Peter, Heather. "The Fall of Rome". BBC. 11 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Edward Gibbon (1776). "Gothic Kingdom of Italy.—Part II.". in Widger, David (in en). History Of The Decline And Fall Of The Roman Empire. Harper & Brothers. https://www.gutenberg.org/files/25717/25717-h/25717-h.htm#Clink362HCH0005. "The patrician Orestes had married the daughter of Count Romulus, of Petovio in Noricum: the name of Augustus, notwithstanding the jealousy of power, was known at Aquileia as a familiar surname; and the appellations of the two great founders, of the city and of the monarchy, were thus strangely united in the last of their successors.", "The life of this inoffensive youth was spared by the generous clemency of Odoacer; who dismissed him, with his whole family, from the Imperial palace."
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Peter Lang AG
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;The Fall of Rome
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Edward Gibbon (1776). "Gothic Kingdom of Italy.—Part II." (in en). The Decline and Fall of the Roman Empire. Project Gutenberg. https://www.gutenberg.org/files/25717/25717-h/25717-h.htm#Dlinknoteref-5511. பார்த்த நாள்: 11 February 2020. "The republic (they repeat that name without a blush) might safely confide in the civil and military virtues of Odoacer; and they humbly request, that the emperor would invest him with the title of Patrician, and the administration of the diocese of Italy. ...His vanity was gratified by the title of sole emperor, and by the statues erected to his honor in the several quarters of Rome; ...He entertained a friendly, though ambiguous, correspondence with the patrician Odoacer; and he gratefully accepted the Imperial ensigns."
- ↑ Ozgen, Korkut. "Mehmet II". TheOttomans.org. 3 April 2007 அன்று பார்க்கப்பட்டது.; Cartwright, Mark (23 January 2018). "1453: The Fall of Constantinople". World History Encyclopedia. World History Encyclopedia Limited. 11 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kelly (2007), ப. 3.
- ↑ Nicolet (1991), ப. 29.
- ↑ (Nicolet 1991, ப. 29); (Virgil, ப. 1.278); David Mattingly (archaeologist) (2011). Imperialism, Power, and Identity: Experiencing the Roman Empire. Princeton University Press. பக். 15. https://archive.org/details/imperialismpower0000matt.; Moretti, G (1993), de Gruyter, Walter (ed.), "The Other World and the 'Antipodes': The Myth of Unknown Countries between Antiquity and the Renaissance", The Classical Tradition and the Americas: European Images of the Americas, p. 257; Pat Southern (2001). The Roman Empire from Severus to Constantine. Routledge. பக். 14–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-23943-1.
- ↑ Mastrangelo, Marc (2008). The Roman Self in Late Antiquity: Prudentius and the Poetics of the Soul. Johns Hopkins University Press. பக். 73, 203.
- ↑ Mosley, Stephen (2010). The Environment in World History. Routledge. பக். 35. https://archive.org/details/environmentworld00mosl_888.
- ↑ Hanson, J. W. (2016). "Cities database". OXREP databases. 1.0.
- ↑ Nicolet (1991), ப. 7, 8.
- ↑ Nicolet (1991), ப. 9, 16.
- ↑ Nicolet (1991), ப. 10, 11.
- ↑ 44.0 44.1 Southern (2001), ப. 14–16.
- ↑ 45.0 45.1 Kelly (2007), ப. 1.
- ↑ 46.0 46.1 Morris & Scheidel (2009), ப. 184.
- ↑ Goldsmith, Raymond W. (2005). "An Estimate of the Size Anl Structure of the National Product of the Early Roman Empire". Review of Income and Wealth 30 (3): 263–288. doi:10.1111/j.1475-4991.1984.tb00552.x.
- ↑ Scheidel, Walter (April 2006). "Population and demography" (PDF). Princeton/Stanford Working Papers in Classics. p. 9.; Hanson, J. W.; Ortman, S. G. (2017). "A systematic method for estimating the populations of Greek and Roman settlements" (in en). Journal of Roman Archaeology 30: 301–324. doi:10.1017/S1047759400074134. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-7594.
- ↑ 49.0 49.1 Boardman (2000), ப. 721.
- ↑ Woolf, Greg, தொகுப்பாசிரியர் (2003). Cambridge Illustrated History of the Roman World. Ivy Press. பக். 340.; Opper, Thorsten (2008). Hadrian: Empire and Conflict. Harvard University Press. பக். 64. https://archive.org/details/hadrianempirecon0000oppe.; Fields, Nic (2003). Hadrian's Wall AD 122–410, which was, of course, at the bottom of Hadrian's garden. Osprey Publishing. பக். 35.
- ↑ (Virgil, ப. 12.834, 837); (Rochette 2012, ப. 549, 563); (Adams 2003, ப. 184)
- ↑ Adams (2003), ப. 186–187.
- ↑ Rochette (2012), ப. 554, 556.
- ↑ (Rochette 2012, ப. 549); Charles Freeman (historian) (1999). The Greek Achievement: The Foundation of the Western World. Penguin. பக். 389–433. https://archive.org/details/greekachievement0000free_f6e4.
- ↑ Rochette (2012), ப. 549, citing புளூட்டாக், Life of Alexander 47.6.
- ↑ Fergus Millar (2006). A Greek Roman Empire: Power and Belief under Theodosius II (408–450). University of California Press. பக். 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-94141-1. https://archive.org/details/greekromanempire00ferg.; (Treadgold 1997, ப. 5–7)
- ↑ Rochette (2012), ப. 53.
- ↑ சிசெரோ. In Catilinam. I 61 "recto" (Rylands Papyri ). பக். 2.15.
- ↑ Rochette (2012), ப. 550–552.
- ↑ 60.0 60.1 Rochette (2012), ப. 552.
- ↑ Suetonius. Life of Claudius. பக். 42.
- ↑ Rochette (2012), ப. 553–554.
- ↑ (Rochette 2012, ப. 556); (Adams 2003, ப. 200)
- ↑ Adams (2003), ப. 185–186, 205.
- ↑ Rochette (2012), ப. 560.
- ↑ Rochette (2012), ப. 562–563.
- ↑ Rochette (2012), ப. 558–559.
- ↑ 68.0 68.1 68.2 Miles, Richard (2000). Communicating Culture, Identity, and Power. Routledge. பக். 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-21285-5.
- ↑ Adams (2003), ப. 199.
- ↑ Rochette (2012), ப. 553–555.
- ↑ (Rochette 2012, ப. 550); Zimmer, Stefan (2006). Indo-European. ABC-Clio. பக். 961.
- ↑ Curchin, Leonard A. (1995). "Literacy in the Roman Provinces: Qualitative and Quantitative Data from Central Spain". The American Journal of Philology 116 (3): 461–476 (464). doi:10.2307/295333. https://archive.org/details/sim_american-journal-of-philology_fall-1995_116_3/page/461.
- ↑ Sala, Marius; Posner, Rebecca. "Romance languages". Britannica. Britannica. 11 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
By the beginning of the 21st century, some 920 million people claimed a Romance language as their mother tongue.
- ↑ Waquet, Françoise (2001). Latin, Or, The Empire of the Sign: From the Sixteenth to the Twentieth Century. Verso. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85984-402-2. https://archive.org/details/latinorempireofs0000waqu.; Jensen, Kristian (1996). The Humanist Reform of Latin and Latin Teaching. Cambridge University Press. பக். 63–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-43624-9.
- ↑ Bard, Kathryn A. (2005) (in en). Encyclopedia of the Archaeology of Ancient Egypt. Routledge. பக். 252–254. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-66525-9.; Bard, Kathryn A. (2015) (in en). An Introduction to the Archaeology of Ancient Egypt. John Wiley & Sons. பக். 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-67336-2.
- ↑ 76.0 76.1 76.2 Treadgold (1997), ப. 5–7.
- ↑ Fine, John Van Antwerp (1991). The Early Medieval Balkans: A Critical Survey from the Sixth to the Late Twelfth Century. University of Michigan Press. பக். 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-472-08149-3.
- ↑ Digest 31.1.11; Pierre-Yves Lambert; Lejeune, Michel (1994) (in French). La langue gauloise. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-877-72089-2.
- ↑ 79.0 79.1 Lambert & Lejeune (1994), ப. 10.
- ↑ Adams, J.N. (2003b). Bilingualism and the Latin Language. Cambridge University Press. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-81771-4.
- ↑ ஜெரோம். Commentary on the கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்.; (Lambert & Lejeune 1994, ப. 10)
- ↑ 82.0 82.1 82.2 Hélix, Laurence (2011). Histoire de la langue française. Ellipses Edition Marketing S.A.. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7298-6470-5. "Le déclin du Gaulois et sa disparition ne s'expliquent pas seulement par des pratiques culturelles spécifiques: Lorsque les Romains conduits par César envahirent la Gaule, au 1er siecle avant J.-C., celle-ci romanisa de manière progressive et profonde. Pendant près de 500 ans, la fameuse période gallo-romaine, le gaulois et le latin parlé coexistèrent; au VIe siècle encore; le temoignage de Grégoire de Tours atteste la survivance de la langue gauloise."
- ↑ Vita S. Euthymii 55; after Eugenio Luján, 'The Galatian Place Names in Ptolemy', in: Javier de Hoz, Eugenio R. Luján, Patrick Sims-Williams (eds.), New Approaches to Celtic Place-Names in Ptolemy's Geography, Madrid: Ediciones Clásicas 2005, 264.
- ↑ Hist. Franc., book I, 32 Veniens vero Arvernos, delubrum illud, quod Gallica lingua Vasso Galatæ vocant, incendit, diruit, atque subvertit. And coming to Clermont [to the Arverni] he set on fire, overthrew and destroyed that shrine which they call Vasso Galatæ in the Gallic tongue,
- ↑ 85.0 85.1 85.2 Matasovic, Ranko (2007). "Insular Celtic as a Language Area". Papers from the Workship within the Framework of the XIII International Congress of Celtic Studies: 106.
- ↑ 86.0 86.1 Savignac, Jean-Paul (2004). Dictionnaire Français-Gaulois. La Différence. பக். 26.
- ↑ Guiter, Henri (1995). Bochnakowa, Anna. ed. Sur le substrat gaulois dans la Romania. Krakow.; Roegiest, Eugeen (2006). Vers les sources des langues romanes: Un itinéraire linguistique à travers la Romania. Acco. பக். 83.
- ↑ Adams, J. N. (2007). "V – Regionalisms in provincial texts: Gaul". The Regional Diversification of Latin 200 BC – AD 600. பக். 279–289. doi:10.1017/CBO9780511482977. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-511-48297-7. https://archive.org/details/regionaldiversif600adam.
- ↑ Peachin (2011), ப. 12.
- ↑ Peachin (2011), ப. 16.
- ↑ Peachin (2011), ப. 9.
- ↑ 92.0 92.1 92.2 92.3 92.4 92.5 92.6 Garnsey, Peter; Saller, Richard (1987). The Roman Empire: Economy, Society and Culture. University of California Press. பக். 107–111. https://archive.org/details/isbn_2900520060677.
- ↑ Noreña, Carlos F. (2011). Imperial Ideals in the Roman West: Representation, Circulation, Power. Cambridge University Press. பக். 7.
- ↑ Peachin (2011), ப. 4–5.
- ↑ Winterling (2009), ப. 11, 21.
- ↑ Saller, Richard P. (2002). Personal Patronage under the Early Empire. Cambridge University Press. பக். 123, 176, 183.; Duncan, Anne (2006). Performance and Identity in the Classical World. Cambridge University Press. பக். 164.
- ↑ Reinhold, Meyer (2002). Studies in Classical History and Society. Oxford University Press. பக். 25ff, 42.
- ↑ Boardman (2000), ப. 18.
- ↑ Peachin (2011), ப. 17, 20.
- ↑ Millar (2012), ப. 81–82.
- ↑ Carroll, Maureen (2006). Spirits of the Dead: Roman Funerary Commemoration in Western Europe. Oxford University Press. பக். 45–46.
- ↑ (Frier & McGinn 2004, ப. 14); Gaius, Institutiones 1.9 Digest 1.5.3.
- ↑ Frier & McGinn (2004), ப. 31–32.
- ↑ Potter (2009), ப. 177.
- ↑ Sherwin-White, A.N. (1979), Roman Citizenship, Oxford University Press, pp. 211, 268; (Frier & McGinn 2004, ப. 31–32, 457)
- ↑ Phang, Sara Elise (2001). The Marriage of Roman Soldiers (13 B.C.–A.D. 235): Law and Family in the Imperial Army. Brill. பக். 2.; Pat Southern (2006). The Roman Army: A Social and Institutional History. Oxford University Press. பக். 144. https://archive.org/details/romanarmysociali00sout_0.
- ↑ Rawson (1987), ப. 18.
- ↑ Frier & McGinn (2004), ப. 19–20.
- ↑ Eva Cantarella (1987). Pandora's Daughters: The Role and Status of Women in Greek and Roman Antiquity. Johns Hopkins University Press. பக். 140–141. https://archive.org/details/pandorasdaughter00cant.; Sullivan, J.P. (1979). "Martial's Sexual Attitudes". Philologus 123 (1–2): 296. doi:10.1524/phil.1979.123.12.288.
- ↑ Rawson (1987), ப. 15.
- ↑ Frier & McGinn (2004), ப. 19–20, 22.
- ↑ Treggiari, Susan (1991). Roman Marriage: Iusti Coniuges from the Time of Cicero to the Time of Ulpian. Oxford University Press. பக். 258–259, 500–502. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-814939-5. https://archive.org/details/romanmarriageius0000treg.
- ↑ Johnston, David (1999). "3.3". Roman Law in Context. Cambridge University Press. https://archive.org/details/romanlawincontex0000john.; (Frier & McGinn 2004, Ch. IV); Thomas, Yan (1991). The Division of the Sexes in Roman Law. Harvard University Press. பக். 134.
- ↑ Severy, Beth (2002). Augustus and the Family at the Birth of the Empire. Routledge. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-134-39183-8.
- ↑ Severy (2002), ப. 4.
- ↑ McGinn, Thomas A. J. (1991). "Concubinage and the Lex Iulia on Adultery". Transactions of the American Philological Association 121: 335–375 (342). doi:10.2307/284457.; Martha C. Nussbaum (2002). The Incomplete Feminism of Musonius Rufus, Platonist, Stoic, and Roman. University of Chicago Press. பக். 305., noting that custom "allowed much latitude for personal negotiation and gradual social change"; Elaine Fantham (2011). Stuprum: Public Attitudes and Penalties for Sexual Offences in Republican Rome. Walter de Gruyter. பக். 124., citing Papinian, De adulteriis I and Modestinus, Liber Regularum I. Eva Cantarella (2002). Bisexuality in the Ancient World. Yale University Press. பக். 104. https://archive.org/details/bisexualityinanc0000cant.; (Edwards 2007, ப. 34–35)
- ↑ (Frier & McGinn 2004, ப. 461); (Boardman 2000, ப. 733)
- ↑ Woodhull, Margaret L. (2004). Matronly Patrons in the Early Roman Empire: The Case of Salvia Postuma. Routledge. பக். 77.
- ↑ 119.0 119.1 Bradley (1994), ப. 12.
- ↑ Bradley (1994), ப. 15.
- ↑ (Harris 1999, ப. 62-75); Taylor, Timothy (2010). "Believing the ancients: Quantitative and qualitative dimensions of slavery and the slave trade in later prehistoric Eurasia". World Archaeology 33 (1): 27–43. doi:10.1080/00438240120047618.
- ↑ Harper, Kyle (2011). Slavery in the Late Roman World, AD 275–425. Cambridge University Press. பக். 10–16.
- ↑ Frier & McGinn (2004), ப. 7.
- ↑ McGinn, Thomas A.J. (1998). Prostitution, Sexuality and the Law in Ancient Rome. Oxford University Press. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-516132-7.; Gardner, Jane F. (1991). Women in Roman Law and Society. Indiana University Press. பக். 119.
- ↑ Frier & McGinn (2004), ப. 31–33.
- ↑ Fuhrmann, C. J. (2012). Policing the Roman Empire: Soldiers, Administration, and Public Order. Oxford University Press. பக். 21–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-973784-0.
- ↑ Frier & McGinn (2004), ப. 21.
- ↑ Gamauf, Richard (2009). "Slaves doing business: The role of Roman law in the economy of a Roman household". European Review of History 16 (3): 331–346. doi:10.1080/13507480902916837.
- ↑ Bradley (1994), ப. 2–3.
- ↑ McGinn (1998), ப. 288ff.
- ↑ (Frier & McGinn 2004, ப. 15); Goodwin, Stefan (2009). Africa in Europe: Antiquity into the Age of Global Expansion. 1. Lexington Books. பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0739117262. "Roman slavery was a nonracist and fluid system"
- ↑ Antonio Santosuosso (2001). Storming the Heavens: Soldiers, Emperors and Civilians in the Roman Empire. Westview Press. பக். 43–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8133-3523-X. https://archive.org/details/stormingheavenss00sant_0.
- ↑ Noy, David (2000). Foreigners at Rome: Citizens and Strangers. Duckworth with the Classical Press of Wales. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-715-62952-9.
- ↑ Harper, James (1972). "Slaves and Freedmen in Imperial Rome". American Journal of Philology 93 (2): 341–342. doi:10.2307/293259. https://archive.org/details/sim_american-journal-of-philology_1972-04_93_2/page/341.
- ↑ Harris (1999).
- ↑ (Rawson 1987, ப. 186–188, 190); (Bradley 1994, ப. 34, 48–50)
- ↑ Bradley (1994), ப. 10.
- ↑ Fergus Millar (2002). The Crowd in Rome in the Late Republic. University of Michigan. பக். 23, 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-472-08878-5.
- ↑ Mouritsen, Henrik (2011). The Freedman in the Roman World. Cambridge University Press. பக். 36.
- ↑ 140.0 140.1 Berger, Adolf (1991). libertus. American Philological Society. பக். 564.
- ↑ (Boardman 2000, ப. 217–218); Ronald Syme (1999). Provincial at Rome: and Rome and the Balkans 80 BC – AD 14. University of Exeter Press. பக். 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85989-632-3.
- ↑ (Boardman 2000, ப. 215, 221–222); (Millar 2012, ப. 88, The standard complement of 600 was flexible; twenty quaestors, for instance, held office each year and were thus admitted to the Senate regardless of whether there were "open" seats)
- ↑ 143.0 143.1 Millar (2012), ப. 88.
- ↑ Boardman (2000), ப. 218–219.
- ↑ Boardman (2000), ப. 219.
- ↑ MacMullen, Ramsay (1966). "Provincial Languages in the Roman Empire". The American Journal of Philology 87 (1): 1–17. doi:10.2307/292973. https://archive.org/details/sim_american-journal-of-philology_1966-01_87_1/page/1.
- ↑ Wiseman (1970), ப. 78–79.
- ↑ Wiseman (1970), ப. 71–72, 76.
- ↑ இசுட்ராபோ 3.169, 5.213
- ↑ Wiseman (1970), ப. 75–76, 78.
- ↑ Fear, Andrew (2007). War and Society. 2. Cambridge University Press. பக். 214–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-78274-6.; (Bennett 1997, ப. 5)
- ↑ (Morris & Scheidel 2009, ப. 188); (Millar 2012, ப. 87–88)
- ↑ Millar (2012), ப. 96.
- ↑ Liebeschuetz, Wolfgang (2001). The End of the Ancient City. Taylor & Francis. பக். 26–27.
- ↑ Millar (2012), ப. 90, calls them "status-appellations".
- ↑ Millar (2012), ப. 91.
- ↑ Millar (2012), ப. 90.
- ↑ 158.0 158.1 158.2 Verboven, Koenraad (2007). "The Associative Order: Status and Ethos among Roman Businessmen in Late Republic and Early Empire". Athenaeum 95: 870–72. https://biblio.ugent.be/publication/395187/file/6799583.; (Peachin 2011, ப. 153–154)
- ↑ (Peachin 2011, ப. 153–154); Perkins, Judith (2009). Early Christian and Judicial Bodies. Walter de Gruyter. பக். 245–246.; (Peachin 2011, ப. 475)
- ↑ Peachin (2011), ப. 153–154.
- ↑ Gaughan, Judy E. (2010). Murder Was Not a Crime: Homicide and Power in the Roman Republic. University of Texas Press. பக். 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-292-72567-6.; Kelly, Gordon P. (2006). A History of Exile in the Roman Republic. Cambridge University Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-84860-1.
- ↑ Coleman, K. M. (2012). "Fatal Charades: Roman Executions Staged as Mythological Enactments". Journal of Roman Studies 80: 44–73. doi:10.2307/300280.
- ↑ (Peachin 2011, ப. 153–154); Robinson, O.F. (2007). Penal Practice and Penal Policy in Ancient Rome. Routledge. பக். 108.
- ↑ Bohec (2000), ப. 8.
- ↑ Bohec (2000), ப. 14–15.
- ↑ புளூட்டாக், Moralia Moralia 813c and 814c; (Potter 2009, ப. 181–182); Edward Luttwak (1979). The Grand Strategy of the Roman Empire. Johns Hopkins University Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-2158-4.
- ↑ Potter (2009), ப. 184.
- ↑ Potter (2009), ப. 181.
- ↑ "Statue of Emperor Octavian Augustus as Jupiter".
- ↑ Smith, William (1875). A Dictionary of Greek and Roman Antiquities. John Murray. பக். 105–106. https://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/secondary/SMIGRA*/Apotheosis.html. பார்த்த நாள்: 11 February 2020.
- ↑ Abbott (1901), ப. 354.
- ↑ Abbott (1901), ப. 345.
- ↑ Abbott (1901), ப. 341.
- ↑ Fergus Millar (2004). Emperors at Work. 2. University of North Carolina Press. பக். 3–22, especially 4, 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8078-5520-0.
- ↑ Boardman (2000), ப. 195ff.
- ↑ Boardman (2000), ப. 205–209.
- ↑ Boardman (2000), ப. 202–203, 205, 210.
- ↑ Boardman (2000), ப. 211.
- ↑ Boardman (2000), ப. 212.
- ↑ 180.0 180.1 Millar (2012), ப. 76.
- ↑ Boardman (2000), ப. 215.
- ↑ (Boardman 2000, ப. 721); (Winterling 2009, ப. 16)
- ↑ Morris & Scheidel (2009), ப. 188.
- ↑ Goldsworthy (2003), ப. 80.
- ↑ Winterling (2009), ப. 16.
- ↑ Edmondson (1996), ப. 111–112.
- ↑ Tignor, Robert et al. (2011). Worlds Together, Worlds Apart: The History of the World (3 ). W.W. Norton & Company. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-93492-2. https://archive.org/details/worldstogetherwo03alti.
- ↑ Hekster, Olivier J. (2007). Fighting for Rome: The Emperor as a Military Leader. Brill. பக். 96.
- ↑ Bohec (2000), ப. 9.
- ↑ Bohec (2000), ப. 10–14.
- ↑ Roth, J. (1994). "The Size and Organization of the Roman Imperial Legion". Historia 43 (3): 346–362.
- ↑ Goldsworthy (2003), ப. 183.
- ↑ 193.0 193.1 Morris & Scheidel (2009), ப. 196.
- ↑ Penrose, Jane (2005). "9: The Romans". 3: Early Empire 27BC–AD235. Bloomsbury USA. பக். 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-841-76932-5. https://archive.org/details/romeherenemiesem0000unse.
- ↑ Tacitus Annales IV.5
- ↑ Goldsworthy (2003), ப. 51.
- ↑ Connolly, Peter (1986). "A Reconstruction of a Roman Saddle". Britannia 17: 353–355. doi:10.2307/526559.; Connolly, Peter; Van Driel-Murray, Carol (1991). "The Roman Cavalry Saddle". Britannia 22: 33–50. doi:10.2307/526629.
- ↑ Goldsworthy (2003), ப. 114.
- ↑ Potter (2009), ப. 183.
- ↑ Potter (2009), ப. 177–179, Most government records that are preserved come from Roman Egypt, where the climate preserved the papyri..
- ↑ Potter (2009), ப. 179, The exclusion of Egypt from the senatorial provinces dates to the rise of Octavian before he became Augustus: Egypt had been the stronghold of his last opposition, மார்க் ஆண்டனி and his ally ஏழாம் கிளியோபாற்றா..
- ↑ 202.0 202.1 202.2 Potter (2009), ப. 180.
- ↑ Potter (2009), ப. 179, 187.
- ↑ (Potter 2009, ப. 180); (Fuhrmann 2012, ப. 197, 214, 224)
- ↑ 205.0 205.1 Potter (2009), ப. 184–185.
- ↑ Bozeman, Adda B. (2010). Politics and Culture in International History from the Ancient Near East to the Opening of the Modern Age (2nd ). Transaction Publishers. பக். 208–220.
- ↑ Digeser, Elizabeth DePalma (2000) The Making of a Christian Empire: Lactantius and Rome. Cornell University Press. p. 53.
- ↑ Morris & Scheidel (2009), ப. 183.
- ↑ 209.0 209.1 209.2 209.3 209.4 Potter (2009), ப. 187.
- ↑ Potter (2009), ப. 185–187.
- ↑ (Morris & Scheidel 2009, ப. 184); (Potter 2009, ப. 185)
- ↑ Potter (2009), ப. 185.
- ↑ 213.0 213.1 Potter (2009), ப. 188.
- ↑ 214.0 214.1 Potter (2009), ப. 186.
- ↑ Cassius Dio 55.31.4.
- ↑ Tacitus, Annales 13.31.2.
- ↑ An, Jiayao (2002). "When Glass Was Treasured in China". in Juliano, Annette L.. Silk Road Studies VII: Nomads, Traders, and Holy Men Along China's Silk Road. Brepols Publishers. பக். 83–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-503-52178-7.
- ↑ Potter (2009), ப. 283.
- ↑ 219.0 219.1 219.2 Potter (2009), ப. 285.
- ↑ Potter (2009), ப. 292.
- ↑ Potter (2009), ப. 285–286, 296ff.
- ↑ Potter (2009), ப. 296.
- ↑ Potter (2009), ப. 286, 295.
- ↑ Potter (2009), ப. 286.
- ↑ 225.0 225.1 Kessler, David; Temin, Peter (2010). Money and Prices in the Early Roman Empire. Oxford University Press.
- ↑ 226.0 226.1 226.2 226.3 Harl, Kenneth W. (19 June 1996). Coinage in the Roman Economy, 300 B.C. to A.D. 700. JHU Press. பக். 125–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5291-6.
- ↑ Bowman, Garnsey & Cameron (2005), ப. 333.
- ↑ Wells, Colin (1984). The Roman Empire. Harvard University Press. பக். 8. https://archive.org/details/romanempire0000well.
- ↑ 229.0 229.1 229.2 229.3 229.4 229.5 Harris (2010).
- ↑ Scheidel, Walter (2009). Scheidel, Walter. ed. The Monetary Systems of the Han and Roman Empires. Oxford University Press. பக். 137–207 (205). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-533690-0.
- ↑ "Roman Coins, Republic And Empire". Britannica. Britannica. 11 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ J. Rufus Fears (1981). The Theology of Victory at Rome: Approaches and Problem. II.17.2. பக். 752, 824., J. Rufus Fears (1981). The Cult of Virtues and Roman Imperial Ideology. II.17.2. பக். 908.
- ↑ (Harris 2010); Andreau, Jean (1999). Banking and Business in the Roman World. Cambridge University Press. பக். 2. https://archive.org/details/bankingbusinessi00andr.
- ↑ Tacitus, Annales 6.17.3.
- ↑ Duncan-Jones (1994), ப. 3–4.
- ↑ Bowersock & Brown (1999), ப. 579.
- ↑ 237.0 237.1 237.2 Wilson, Andrew (2002). "Machines, Power and the Ancient Economy". The Journal of Roman Studies 92: 1–32. doi:10.2307/3184857.
- ↑ Craddock, Paul T. (2008). John Peter Oleson. ed. Mining and Metallurgy. Oxford University Press. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-518731-1.; Sim, David; Ridge, Isabel (2002). Iron for the Eagles. The Iron Industry of Roman Britain. Tempus. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7524-1900-5.; Healy, John F. (1978). Mining and Metallurgy in the Greek and Roman World. Thames and Hudson. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-40035-0. https://archive.org/details/miningmetallurgy0000heal. Assumes a productive capacity of c. 1.5 kg per capita.
- ↑ 239.0 239.1 Hong, S.; Candelone, J.-P.; Patterson, C. C.; Boutron, C. F. (1996). "History of Ancient Copper Smelting Pollution During Roman and Medieval Times Recorded in Greenland Ice". Science 272 (5259): 246. doi:10.1126/science.272.5259.246. Bibcode: 1996Sci...272..246H.
- ↑ 240.0 240.1 240.2 Hong, S; Candelone, J. P.; Patterson, C. C.; Boutron, C. F. (1994). "Greenland ice evidence of hemispheric lead pollution two millennia ago by greek and roman civilizations". Science 265 (5180): 1841–3. doi:10.1126/science.265.5180.1841. பப்மெட்:17797222. Bibcode: 1994Sci...265.1841H. http://www.precaution.org/lib/greenland_ice_evidence_of_ancient_lead_pollution.19940923.pdf.
- ↑ 241.0 241.1 241.2 De Callataÿ, François (2015). "The Graeco-Roman economy in the super long-run: Lead, copper, and shipwrecks". Journal of Roman Archaeology 18: 361–372. doi:10.1017/S104775940000742X.
- ↑ Settle, D. M.; Patterson, C. C. (1980). "Lead in albacore: Guide to lead pollution in Americans". Science 207 (4436): 1167–76. doi:10.1126/science.6986654. பப்மெட்:6986654. Bibcode: 1980Sci...207.1167S.
- ↑ Patterson, C. C. (1972). "Silver Stocks and Losses in Ancient and Medieval Times". The Economic History Review 25 (2): 205–235 (tables 2, 6). doi:10.1111/j.1468-0289.1972.tb02173.x.
- ↑ 244.0 244.1 Morris & Scheidel (2009), ப. 197.
- ↑ Greene, Kevin (1990). The Archaeology of the Roman Economy. University of California Press. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-07401-9. https://archive.org/details/archaeologyofro00kevi.
- ↑ Boardman (2000), ப. 714.
- ↑ Ulrich, Roger Bradley (2007). Roman Woodworking. Yale University Press. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0300103410. https://archive.org/details/RomanWoodworking.
- ↑ Van Tilburg, Cornelis (2007). Traffic and Congestion in the Roman Empire. Routledge. பக். 33.
- ↑ 249.0 249.1 249.2 Stambaugh (1988), ப. 253.
- ↑ Ray Laurence, "Land Transport in Roman Italy: Costs, Practice and the Economy," in Trade, Traders and the Ancient City (Routledge, 1998), p. 129.
- ↑ Holleran (2012), ப. 142.
- ↑ Boardman (2000), ப. 713.
- ↑ Boardman (2000), ப. 710.
- ↑ Swabe, Joanna (2002). Animals, Disease and Human Society: Human-animal Relations and the Rise of Veterinary Medicine. Routledge. பக். 80.
- ↑ Boardman (2000), ப. 717–729.
- ↑ Gagarin (2010), ப. 323.
- ↑ Temin, Peter (2004). "The Labor Market of the Early Roman Empire". Journal of Interdisciplinary History 34 (4): 513–538. doi:10.1162/002219504773512525.
- ↑ Jones (1960), ப. 184–185.
- ↑ 259.0 259.1 Jones (1960), ப. 192.
- ↑ Jones (1960), ப. 188–189.
- ↑ Jones (1960), ப. 190–191.
- ↑ Vout (2009), ப. 212.
- ↑ 263.0 263.1 Jinyu Liu (2009). Collegia Centonariorum: The Guilds of Textile Dealers in the Roman West. Brill.
- ↑ Walter Scheidel, தொகுப்பாசிரியர் (2007). The Cambridge Economic History of the Greco-Roman World. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-78053-7.
- ↑ Elio Lo Cascio; Malanima, Paolo (2009). "GDP in Pre-Modern Agrarian Economies (1–1820 AD). A Revision of the Estimates". Rivista di Storia Economica 25 (3): 391–420 (391–401). http://econpapers.repec.org/article/muljrkmxm/doi_3a10.1410_2f30919_3ay_3a2009_3ai_3a3_3ap_3a391-420.htm.
- ↑ Angus Maddison (2007). Contours of the World Economy, 1–2030 AD. Essays in Macro-Economic History. Oxford University Press. பக். 47–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-922721-1.
- ↑ Dyson, Stephen L. (1992). Community and Society in Roman Italy. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-4175-5. quoting Packer, J.E.. Middle and Lower Class Housing in Pompeii and Herculaneum: A Preliminary Survey," In Neue Forschung in Pompeji. பக். 133–142.
- ↑ Walter Scheidel; Friesen, Steven J. (2010). "The Size of the Economy and the Distribution of Income in the Roman Empire". Journal of Roman Studies 99: 61–91. doi:10.3815/007543509789745223. https://www.princeton.edu/~pswpc/pdfs/scheidel/010901.pdf.
- ↑ Harper, Kyle (2011). Slavery in the Late Roman World, 275–425. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-19861-5. quoting (Scheidel & Friesen 2010)
- ↑ William L. MacDonald (1982). The Architecture of the Roman Empire. Yale University Press. fig. 131B. https://archive.org/details/architectureofro0001macd.; Lechtman, H. N.; Hobbs, L. W. (1987). "Roman Concrete and the Roman Architectural Revolution". Ceramics and Civilization 3: 81–128.
- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Apollodorus of Damascus, "Greek engineer and architect who worked primarily for the Roman emperor Trajan."; Sarton, George (1936). "The Unity and Diversity of the Mediterranean World". Osiris 2: 406–463 (430). doi:10.1086/368462.; Calcani, Giuliana; Abdulkarim, Maamoun (2003). Apollodorus of Damascus and Trajan's Column: From Tradition to Project. L'Erma di Bretschneider. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-88-8265-233-3. "... focusing on the brilliant architect Apollodorus of Damascus. This famous Syrian personage represents ..."; Yan, Hong-Sen; Ceccarelli, Marco (2009). International Symposium on History of Machines and Mechanisms: Proceedings of HMM 2008. Springer. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-9484-2. "He had Syrian origins coming from Damascus"
- ↑ Smith, Norman (1970). "The Roman Dams of Subiaco". Technology and Culture 11 (1): 58–68. doi:10.2307/3102810. https://archive.org/details/sim_technology-and-culture_1970-01_11_1/page/58.; Smith, Norman (1971). A History of Dams. Peter Davies. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-432-15090-0.; Schnitter, Niklaus (1978). "Römische Talsperren". Antike Welt 8 (2): 25–32 (28).
- ↑ Chandler, Fiona (2001). The Usborne Internet Linked Encyclopedia of the Roman World. Usborne Publishing. பக். 80. https://archive.org/details/usborneinternetl0000chan_m2u9.
- ↑ Forman, Joan (1975). The Romans. Macdonald Educational. பக். 34. https://archive.org/details/romans00form_0.
- ↑ Crow, J. (2007). Lavan, L.. ed. Earth, walls and water in Late Antique Constantinople. Brill.
- ↑ Greene, Kevin (1990). The Archaeology of the Roman Economy. University of California Press. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-07401-9. https://archive.org/details/archaeologyofro00kevi.
- ↑ Jones & Bird (2012), ப. 59–74.
- ↑ Ritti, Tullia; Grewe, Klaus; Kessener, Paul (2007). "A Relief of a Water-powered Stone Saw Mill on a Sarcophagus at Hierapolis and its Implications". Journal of Roman Archaeology 20: 138–163 (156, fn. 74). doi:10.1017/S1047759400005341.
- ↑ Harper, Kyle (2017). The Fate of Rome. Princeton University Press. பக். 10, 30–31, 67–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-16683-4. https://archive.org/details/fateofromeclimat0000harp.
- ↑ (Harper 2017, ப. 75–79); Koepke, Nikola; Baten, Joerg (1 April 2005). "The biological standard of living in Europe during the last two millennia". European Review of Economic History 9 (1): 61–95. doi:10.1017/S1361491604001388.
- ↑ Potter (2009), ப. 192.
- ↑ 282.0 282.1 282.2 Rehak, Paul (2006). Imperium and Cosmos: Augustus and the Northern Campus Martius. University of Wisconsin Press. பக். 4–8.
- ↑ Stambaugh (1988), ப. 23ff, 244.
- ↑ Rubina Raja (2012). Urban Development and Regional Identity in the Eastern Roman Provinces 50 BC–AD 250. Museum Tusculanum Press. பக். 215–218.; Sperber, Daniel (1998). The City in Roman Palestine. Oxford University Press.
- ↑ Stambaugh (1988), ப. 252, 253.
- ↑ 286.0 286.1 Longfellow, Brenda (2011). Roman Imperialism and Civic Patronage: Form, Meaning and Ideology in Monumental Fountain Complexes. Cambridge University Press. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521194938.
- ↑ Harding, D.W. (2007). The Archaeology of Celtic Art. Routledge. பக். 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1134264643.; Collis, John (2000). 'Celtic' Oppida. Danske Videnskabernes Selskab. பக். 229–238.; Celtic Chiefdom, Celtic State: The Evolution of Complex Social Systems. Cambridge University Press. 1999. பக். 61.
- ↑ (Potter 2009, ப. 192); (Virgil, ப. 6.852)
- ↑ Potter (2009), ப. 185–186.
- ↑ Tertullian, De anima 30.3 (ubique domus, ubique populus, ubique respublica, ubique uita), as cited and framed in Potter (2009) p. 185
- ↑ Millar (2012), ப. 76ff.
- ↑ Jones (2000).
- ↑ Evans, Harry B. (1994). Water Distribution in Ancient Rome. University of Michigan Press. பக். 9–10.
- ↑ Peachin (2011), ப. 366.
- ↑ 295.0 295.1 Fagan, Garrett G. (2001). "The Genesis of the Roman Public Bath: Recent Approaches and Future Directions". American Journal of Archaeology 105 (3): 403–426. doi:10.2307/507363. http://www.arch.mcgill.ca/prof/sijpkes/aaresearch-2012/in-extremis-file/Roman-Baths-origin.pdf. பார்த்த நாள்: 12 January 2017.
- ↑ Ward, Roy Bowen (1992). "Women in Roman Baths". Harvard Theological Review 85 (2): 125–147. doi:10.1017/S0017816000028820.
- ↑ Clarke (1991), ப. 1–2.
- ↑ Clarke (1991), ப. 11–12.
- ↑ Clarke (1991), ப. 2.
- ↑ (Stambaugh 1988, ப. 144, 147); (Clarke 1991, ப. 12, 17, 22ff)
- ↑ Taylor, Rabun (2005). "Roman Oscilla: An Assessment". Res: Anthropology and Aesthetics 48 (48): 83–105. doi:10.1086/RESv48n1ms20167679.
- ↑ 302.0 302.1 Clarke (1991), ப. 19.
- ↑ Jashemski, Wilhelmina Feemster; Meyer, Frederick G. (2002). The Natural History of Pompeii. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-80054-9.
- ↑ ஓராசு. Satire. பக். 2.6.; Holzberg, Niklas (2002). The Ancient Fable: An Introduction. Indiana University Press. பக். 35. https://archive.org/details/ancientfableintr0000holz.; Bovie, Smith Palmer (2002). Introduction to Horace. Satires and Epistles. University of Chicago Press. பக். 92–93.
- ↑ 305.0 305.1 305.2 305.3 305.4 305.5 Morris & Scheidel (2009), ப. 191.
- ↑ Boardman (2000), ப. 679.
- ↑ Morris & Scheidel (2009), ப. 195–196.
- ↑ Morris & Scheidel (2009), ப. 191, reckoning that the surplus of wheat from the province of Egypt alone could meet and exceed the needs of the city of Rome and the provincial armies.
- ↑ T. P. Wiseman (2012). "The Census in the First Century B.C". Journal of Roman Studies 59 (1/2): 59–75. doi:10.2307/299848.
- ↑ Keane, Catherine (2006). Figuring Genre in Roman Satire. Oxford University Press. பக். 36.; Köhne, Eckhart (2000). Bread and Circuses: The Politics of Entertainment. University of California Press. பக். 8.
- ↑ Juvenal. Satire. பக். 10.77–81.
- ↑ Holleran (2012), ப. 136–137.
- ↑ (Stambaugh 1988, ப. 144, 178); Hinds, Kathryn (2010). Everyday Life in the Roman Empire. Marshall Cavendish. பக். 90. https://archive.org/details/everydaylifeinro0000hind.
- ↑ Holleran (2012), ப. 136ff.
- ↑ Gagarin (2010), ப. 299.
- ↑ Faas, Patrick (2005). Around the Roman Table: Food and Feasting in Ancient Rome. University of Chicago Press. பக். 29.
- ↑ 317.0 317.1 Boardman (2000), ப. 681.
- ↑ மூத்த பிளினி, Natural History, p. 19.83–84; Gowers, Emily (2003). The Loaded Table: Representation of Food in Roman Literature. Oxford University Press. பக். 17.; (Gagarin 2010, ப. 198)
- ↑ Stambaugh (1988), ப. 144.
- ↑ Holleran (2012), ப. 134–135.
- ↑ (Morris & Scheidel 2009, ப. 191); (Stambaugh 1988, ப. 146); (Holleran 2012, ப. 134)
- ↑ Grant, Mark (2000). Galen on Food and Diet. Routledge. பக். 7, 11.
- ↑ Potter (2009), ப. 354.
- ↑ Potter (2009), ப. 356.
- ↑ Roller, Matthew B. (2006). Dining Posture in Ancient Rome. Princeton University Press. பக். 96ff.
வெளி இணைப்புகள்[தொகு]
உரோமைப் பேரரசு பற்றிய நூலக ஆதாரங்கள் |
- Romans for Children பரணிடப்பட்டது 24 ஏப்ரல் 2009 at the வந்தவழி இயந்திரம், a BBC website on ancient Rome for children at primary-school level.
- The Digital Atlas of Roman and Medieval Civilizations
- Historical Atlas showing the expansion of the Roman Empire.
- Roman-Empire.net, learning resources and re-enactments
- The Historical Theater in the Year 400 AD, in Which Both Romans and Barbarians Resided Side by Side in the Eastern Part of the Roman Empire
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found
- Pages using infobox country or infobox former country with the flag caption or type parameters
- Pages using infobox country or infobox former country with the symbol caption or type parameters
- உரோமைப் பேரரசு
- ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்
- ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்
- மேற்கு ஆசியாவின் முன்னாள் நாடுகள்
- மேற்கத்தியப் பண்பாடுகள்