உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்ச்சித் துறை

ஆள்கூறுகள்: 13°03′56″N 80°15′16″E / 13.065683°N 80.254395°E / 13.065683; 80.254395
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் வளர்ச்சித் துறை
உருவாக்கம்1971
வகைஅரசு
நோக்கம்தமிழ் மொழி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட துறை.
தலைமையகம்சென்னை
தலைமையகம்
ஆள்கூறுகள்13°03′56″N 80°15′16″E / 13.065683°N 80.254395°E / 13.065683; 80.254395
சேவை பகுதி
தமிழ்நாடு
அமைச்சர்
மு. பெ. சாமிநாதன்
செயலாளர்
வி. ராஜாராமன், இ.ஆ.ப
இயக்குநர்
முனைவர் ந. அருள்
வரவு செலவு திட்டம்
80,26,00,000 (2021-22) [1]
வலைத்தளம்https://tamilvalarchithurai.tn.gov.in/administration-2/

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.[2]

வரலாறு

[தொகு]

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் என். வெங்கடேசன் பொறுப்பேற்றார்.

ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.

  1. எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63)
  2. சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65)
  3. வி. கார்த்திகேயன், இ.ஆ.ப.(1965-68)

இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், ஆட்மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையான ஆட்சிச் சொல் அகராதியினை வளப்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கியது. 1971-ஆம் ஆண்டில் 28.5.1971 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற புதிய துறை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அத்துறையிடம் இப்பணிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்குநர் தலைமையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.[3]

பணிகள்

[தொகு]
  • தமிழ் வளர்ச்சி: தமிழ் மொழியை வளர்க்கும் திட்டங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை வெளியிடுதல், அகராதிகள் தயாரித்தல், ஒருங்குறி எழுத்துருக்களை மேம்படுத்துதல்

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை கீழ்க்காணும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

  1. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
  2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  3. தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
  5. அறிவியல் தமிழ் மன்றம்
  6. தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
  7. உலகத் தமிழ்ச் சங்கம்

தமிழ்ச் சாலை செயலி

[தொகு]

தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் ஆண்டிராய்டு செயலி 2019 ஆகத்து 24 இல் தொடங்கப்பட்டது.[4]

வழங்கும் விருதுகள்

[தொகு]
  1. திருவள்ளுவர் விருது (1986 முதல்) -திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  2. மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) - பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ்பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிறவகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  3. பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) - சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) - சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  5. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்) - சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  6. பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்) - காமராசர் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றிவரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும். (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  7. அறிஞர்அண்ணா விருது (2006 முதல்) - தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு அண்ணா விருது வழங்கப்பெறும். (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  8. கலைஞர் கருணாநிதி விருது (2024 முதல்) - விருதுத் தொகை ரூ. 10 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.
  9. தகைசால் தமிழர் விருது - தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றிய தமிழர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை ரூ.10.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை)
  10. தமிழ்த்தாய் விருது (2012 முதல்) -தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகிய பணிகளை மேற்கொண்டுவரும் சிறந்த அமைப்பிற்கு தமிழ்த்தாய் விருது வழங்குதல். (விருதுத்தொகை உரூ.5.00 இலட்சம், தகுதியுரை)
  11. கபிலர் விருது (2012 முதல்) - பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்கும் தமிழறிஞரைச் சிறப்பிக்கும் வகையில் கபிலர் பெயரில் விருது வழங்கப்பெற்று வருகிறது (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  12. உ.வே.சா விருது (2012 முதல்) - ஓலைச்சுவடிகள் அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப்பணிகளை மேற்கொண்டுவரும் அறிஞர் ஒருவரைச் சிறப்பிக்கும் வகையில் உ.வே.சா. பெயரில் விருது வழங்கப்பெற்று வருகிறது.(விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  13. கம்பர் விருது (2013 முதல்) - தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல், கதை நிகழ்ச்சி, பாத்திரப்படைப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும்வகையில் கவிதை நூல்களைப் படைப்போர் மற்றும் பிற வகையில் தமிழ்த்தொண்டு செய்துவரும் தமிழறிஞர் ஒருவருக்கு கம்பர் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  14. சொல்லின் செல்வர் விருது (2013 முதல்) - சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரிகம் பண்பாட்டை மக்கள் மனத்தில் கொண்டு சொற்பொழிவு வழி விதைப்பவராகவும் பிற வகையில் தமிழ்த்தொண்டு செய்வோராகவும் உள்ள ஒருவருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  15. உமறுப் புலவர் விருது (2014 முதல்) - இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  16. ஜி.யு.போப் விருது (2014 முதல்) - அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  17. இளங்கோவடிகள் விருது (2015 முதல்) - இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவர்க்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ்பரப்பிவருபவர்க்கு இளங்கோவடிகள் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  18. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்) - சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கிய நிறுவனம், உருவாக்கியவருக்கு. கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப்பெற்றுவந்த விருது தற்போது பெயர்மாற்றம் செய்யப்பெற்று முதலமைச்சர் கணினித்தமிழ் விருது என்ற பெயரில் வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  19. அம்மா இலக்கிய விருது (2015 முதல்) - மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றிவரும் பெண்படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  20. மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்) - தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை)
  21. சிங்காரவேலர் விருது (2018 முதல்) - தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  22. அயோத்திதாசப்பண்டிதர் விருது (2019 முதல்) - சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனிமுத்திரை பதித்த தமிழறிஞர் அயோத்திதாசப்பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப்பண்டிதர் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  23. மறைமலையடிகளார் விருது (2019 முதல்) - தனித்தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித்தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் மறைமலையடிகளார் விருது என்ற விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  24. தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது (2020 முதல்) - தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பெற்று நாளிதழ், வாரஇதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவுசெய்து “”””தமிழர்த் தந்தை சி.பா. ஆதித்தனார்”” அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் நாளிதழ் விருது, வார இதழ் விருது, திங்களிதழ் விருது என்கின்ற மூன்று விருதுகள் வழங்கப்படும். இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத்தொகையாக உரூபாய் 2.00 இலட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்பெறுகின்றன.
  25. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது (2020 முதல்) - சமரச சன்மார்க்க நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கப்பெறுகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை).
  26. காரைக்கால் அம்மையார் விருது (2020 முதல்) - காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு வழங்கப்பெறுகிறது. (விருதுத்தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை).
  27. தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்) - தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத்தொகை உரூ. 25,000/- மற்றும் தகுதியுரை வழங்கப்பெறும். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்பெறும்).
  28. சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது - ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள் நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேருக்கு சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை உரூ. 25,000/-, பொன்னாடை)
  29. இலக்கிய மாமணி விருது (2021 முதல்) - தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கியமாமணி விருது வழங்கப்படும் (விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
  30. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது

திட்டங்கள்

[தொகு]

நிதியுதவிகள்

[தொகு]

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்குகள், ஆட்சிமொழிப் பயிலரங்குகள், ஆட்சிமொழிச் சட்டவாரம், சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப்பயிற்சி, சிறந்த வரைவுகள் குறிப்புகளுக்குப் பரிசுகள், அரசு அலுவலகங்களுக்குக் கேடயம், அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர், ஆட்சிச் சொல்லகராதி, சிறப்புச் சொல் துணையகராதி, உலகத் தாய்மொழி நாள், தமிழ்க் கவிஞர் நாள், சிலைகளுக்கு மாலை அணிவித்தல், சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு, தமிழ் நூல்கள் வெளியிட நிதியுதவி, குறள் பரிசு, மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, நூல்கள் நாட்டுடைமை, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, எல்லைக் காவலர்களுக்கு நிதியுதவி

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம்

[தொகு]

தமிழைத் தரணியெங்கும் கோலோச்சச் செய்யும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டதற்கிணங்க, தமிழக அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் நம் தாய்மொழியாகிய தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வுப்பணிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப் பெறுகின்றன. தலைமைச் செயலகத் துறைகள் அளவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் அவர்களாலும், துறைத்தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி இயக்குநராலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி மண்டலத் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆட்சிமொழித் திட்டம் மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட உரியவாறு வழிகாட்டப்படுகிறது.

ஆட்சி மொழிக் கருத்தரங்கம்

[தொகு]

ஆட்சிமொழித் திட்டத்தைச் சிறப்பாகச் செயற்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பணியாளர்களுக்கென ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றன. இதில் அரசுத்துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு ஆட்சிமொழித்திட்டம் தொடர்பாக அறிஞர் பெருமக்களின் அனைத்து விளக்கங்களையும் ஐயந்திரிபறப் பெறுகின்றனர். ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்திட மாவட்டத்திற்கு ரூபாய் 20,000/- வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூபாய் 6,40,000/-ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, செவ்வனே நடத்தப்பெற்று வருகின்றது.

ஆட்சிமொழிப் பயிலரங்குகள்

[தொகு]

அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையும் நோக்கில் ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், ஆட்சிமொழிச் செயலாக்கம், குறிப்புகள், வரைவுகள் எழுதுதல், பிழைநீக்கி எழுதுதல் மற்றும் குறை களைவு நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ரூபாய் 50,000/- வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூபாய் 16 லட்சம் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சிமொழிப் பயிலரங்குகள் ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன. கணினியுகத்திற்கேற்ப இந்நிதியாண்டு முதல் அரசுப் பணியாளர்களுக்கு மின்காட்சியுரை மூலம் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது

சிறந்த வரைவுகள், குறிப்புகளுக்குப் பரிசுகள்

[தொகு]

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாவட்ட நிலை, சார்நிலை, தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சித் துறையின் சார்நிலை அலுவலகப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு முறையே முதற்பரிசாக ரூபாய் 3000/-ம், 2ஆம் பரிசாக ரூபாய் 2000/-ம், 3ஆம் பரிசாக ரூபாய் 1000/-ம் வழங்கப்படுகின்றன. இதேபோன்று தெரிவு செய்யப்பெற்ற தலைமைச் செயலகத் துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகப் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன

அரசு அலுவலகங்களுக்குக் கேடயம்

[தொகு]

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் தலைமைச் செயலகத் துறை அலுவலகம்/துறைத்தலைமை அலுவலகம்/மாவட்ட ஆட்சியர் அலுவலகம்/அரசு பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகம் ஆகிய அலுவலகங்களைப் பாராட்டும் வகையில் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன. அதேபோன்று ஆண்டுதோறும் மாவட்ட நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஓர் அலுவலகத்திற்குக் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்

[தொகு]

கணினியுகத்திற்கேற்பத் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016-17 மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள ரூபாய் 300/-மதிப்புள்ள அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 16.5.2017ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. இதற்கென ரூபாய் 30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக 10,000 அரசு அலுவலகங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆட்சிச் சொல்லகராதி

[தொகு]

அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களில் குறிப்புகள், வரைவுகள் ஆகியவற்றைப் பிழையின்றித் தமிழில் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில் அரசு நிருவாகத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் கண்டறியப்பட்டு, அவை தொகுக்கப்பெற்றுப் புதிய சொற்களுடன் மொத்தம் 17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்திலும் (http://tamilvalarchithurai.com) இந்த அகராதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிதியாண்டில் அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளில் தேடுதல் வசதியுடன் இவ்வகராதி இடம்பெற்றுள்ளது

சிறப்புச் சொல் துணையகராதி

[தொகு]

அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் கலைச் சொற்கள் தொகுக்கப்பெற்றுத் தமிழாக்கம் செய்யப்பட்டு துறைவாரியான 75 சிறப்புச் சொல் துணை அகராதிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்தன. தற்பொழுது அனைத்துத் துறைச் சொற்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக வெளியிடப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

உலகத் தாய்மொழி நாள்

[தொகு]

ஆண்டுதோறும் பிப்ரவரித் திங்கள் 21ஆம் நாளன்று தாய்மொழி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவை நிகழ்த்தப் பெறுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.vikatan.com/business/tamilnadu-budget-2021-22-live-updates
  2. "தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணைய தளம் துவக்கம்". தினமணி. பெப்ரவரி 20 2013. https://www.dinamani.com/latest-news/2013/feb/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-636193.html. 
  3. "தமிழ் வளர்ச்சித் துறையின் வரலாறு". Retrieved 09-12-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "தமிழ்ச் சாலை செயலி". Retrieved 2 ஆகத்து 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வளர்ச்சித்_துறை&oldid=4424622" இலிருந்து மீள்விக்கப்பட்டது