செக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வெட்டு தமிழ்நாடு

செக்கு என்பது விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு தொழில்நுட்ப முறை ஆகும். மாடுகள் இழுக்கும் செக்கானது (oil swing Machine) கல்லால் செய்யப்பட்டு எளிய முறையில் எண்ணெய் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. செக்கை கண்டுபிடித்த காலம் சரியாக தெரியவில்லை, ஆனாலும் 9ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது.[1]) இன்று விலங்குகளால் இயக்கும் செக்குகள் மற்றும் மின்சாரத்தால் இயக்கும் செக்குகள் என பல வகை செக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியா, இலங்கை நாடுகளில் "ஆட்டும் செக்குகள்" (Cold Swing Machine), ஐரோப்பிய, சீன நாடுகளில் உள்ள "அழுத்தும் செக்குகள்" (Cold Press Machine) என இரு அடிப்படை வகைகளில் புழக்கத்தில் உள்ளது.

செக்கு சொல் மூலம்[தொகு]

செக்கு என்ற சொல்லுக்கு நேரடியான தமிழ் பொருள் இல்லை. சக்கு என்ற சொல்லுக்கு வட்ட வடிவ சுழற்சி என பொருள் இருக்கிறது. (சக்கு + ஆரம் = சக்கரம்) வட்ட வடிவில் ஆட்டி எடுக்கப்பட்டதால் 'சக்கு எண்ணெய்' என்ற சொல் வழக்கு காலபோக்கில் செக்கு எண்ணெய் என மருவியிருக்கலாம்.

செக்கு இயக்கும் கருவியும் ஆற்றலும்[தொகு]

செக்கை இழுப்பதற்கு விலங்குகளே இயக்கும் கருவியாகவும் இயக்க ஆற்றலாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளில் காளைகளும், ஐரோப்பிய நாடுகளில் குதிரைகளும் ஆப்பிரிக்க நாடுகளில் ஒட்டகங்களும் பயன்பட்டது. மின்சாரம், மோட்டார் கண்டுபிடிப்பிற்கு பின் மின்சார மோட்டார் இயக்கும் கருவியாகவும் மின்சார சக்தி இயக்க ஆற்றலாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இரு மாடுகள் பூட்டப்பட்ட கல் செக்கு

செக்குகளின் வகைகள்[தொகு]

ஆட்டும் செக்குகள்[தொகு]

  • கைகளால் ஆட்டும் கல் செக்கு
  • காளைகளால் ஆட்டும் கல் செக்கு
  • மின் கருவியால் ஆட்டும் கல் செக்கு
  • மின் கருவியால் ஆட்டும் இரும்பு செக்கு
  • மின் கருவியால் ஆட்டும் மரச் செக்கு

அழுத்தும் செக்குகள்[தொகு]

  • கைகளால் அழுத்தும் செக்கு
  • குதிரைகளால் அழுத்தும் செக்கு
  • மின்சார கருவியால் அழுத்தும் நீராவி செக்கு
  • மின்சார கருவியால் அழுத்தும் வீட்டு செக்கு

நமது காளைகள் ஆட்டும் செக்குகள் செய்யப்படும் முறை[தொகு]

செக்கின் உரல் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் நோக்கத்துடன் கல்லில் செதுக்கப்பட்டது. (கிபி.1700 வரை சுத்தமான இரும்பு அரிதான பொருள்) இரும்பு உளியால் கல்லில் உரல் செதுக்கினர். செக்கின் உலக்கை தூக்கி நகர்த்த வசதிக்காக மரத்தில் செதுக்க்கப்பட்டது. பொதுவாக வாகை மரக் கட்டையால் செய்யப்பட்டிருக்கும், வாகை மரம் உறுதியானதும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை உடையதும், சூட்டைத் தாங்க கூடியதும் ஆகும். ஏனைய பாகங்கள் புளிய மரத்தின் தண்டில் இருந்து செய்யப்படுகிறது. அத்துடன் கடையும் அச்சு முதிரை, பாலை மரங்களில் இருந்து செய்யப்படுகிறது. காளைகள் இழுக்க வசதியாக நீண்ட கம்பு கட்டி சுற்ற வைக்கப்படுகிறது.

மின்சார கருவிகள் ஆட்டும் செக்குகள் செய்யப்படும் முறை[தொகு]

தற்சார்பு வாழ்க்கைக்கு உதவிய நமது மாடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக இறக்குமதி கருவிகளால் இயங்கும் மின்சார கல், இரும்பு, மர செக்குகளை நாம் கண்டுபிடித்தோம். இவைகள் குறைந்த இடத்தில் 24 மணி நேர உற்பத்தியும் மணிக்கு 5கிலோ முதல் 50 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும்.

எண்ணெய் வடிகட்டுதல்[தொகு]

நெடுங்காலமாக எண்ணெயை சுத்தப்படுத்த அதிக கவனம் செலுத்தப்படவில்லை. நான்கு நாட்கள் வைத்திருந்து தானாய் தெளிந்த எண்ணெயை பயன்படுத்தினர். நவீன இரும்பு காலத்தில் துணிகளை அடுக்காக வைத்து நன்கு வடிகட்டிய எண்ணெயை பிரித்து எடுத்தனர். இதில் அதிக நாட்கள் காத்திருக்க தேவையில்லை. முழு தெளிவும் கிடைத்தது. இந்த வடிகட்டுதலில் எந்த இரசாயன கலப்பும் இல்லை.

எண்ணெய் சுத்திகரிப்பு[தொகு]

சுத்திகரிப்பு இயந்திரம் வருகை சுவையற்ற மணமற்ற எண்ணெய்களை உருவாக்கியது. இவைகளால்தான் இந்தியாவில் எண்ணெயில் கலப்படம் உருவானது. சுவையும் மணமும் இல்லாததால் சத்துகளை விளம்பரம் செய்து விற்பனை செய்தனர் வெற்றியும் கண்டனர்.அழுத்தி எடுக்கப்படும் எண்ணெய்களே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது[2]

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு

செக்கும் அதன் சூடும்[தொகு]

எண்ணெய் வித்துகள் எந்த அளவு சூடாகிறதோ அந்த அளவு எண்ணெய் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த காலத்தில் பெரும்பாலான செக்குகள் வெயில் படும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும். (அழுத்தும் செக்கில் வித்துக்களை சூடாக்கி பின் பிழியப்படும், ஆட்டும் செக்கில் உராய்வினால் வரும் சூடு மட்டுமே) உயிர்ச்சத்து, ஊட்டச்சத்து அழியும் என்பது உண்மையல்ல.ஆதாரம் இல்லை. சத்துகள் உடலால் உருவாக்கப்படுபவை சில மட்டுமே உணவால் உள்ளிளுக்கப்படும். எல்லா செக்கும் வித்துக்களில் உள்ள சத்துக்களை பாதுகாக்கும்.

தரமும் கலப்படமும்[தொகு]

புண்ணாக்கு[தொகு]

எண்ணெய் வித்துக்களை செக்கில் ஆட்டி எண்ணெய் பிரிந்த பின் மீதமுள்ள சக்கை புண்ணாக்கு என அழைக்கப்படுகிறது. புண்ணாக்குகள் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்பட்டது, இன்று வேளாண்மைக்கு உரமாகவும், கோழித் தீவனமாகவும், மனிதர்களுக்கே சத்து உணவுகளாக விற்கப்படுகிறது.

செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை[தொகு]

வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயர் கோவைச் சிறையில் அடைத்தபோது, வ.உ.சி. அங்கே செக்கிழுக்க வைக்கப்பட்டார். அதனால் இவருக்கு செக்கிழுத்த செம்மல், செக்கிழுத்த சிதம்பரனார் என்ற பெயரும் ஏற்பட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி (2022-05-11). "கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  2. The Story Of Edible Oil: An Indispensable Item For Any Meal

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கு&oldid=3645717" இலிருந்து மீள்விக்கப்பட்டது