அம்மாவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மாவீடு (Ammaveedu) என்பது திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் மகாராஜாக்களின் மனைவிகளின் குடியிருப்புகளாகும். மகாராஜாக்களின் சந்ததியினர் இந்த அம்மாவீட்டின் உறுப்பினர்களாகக் கருதப்பட்டனர். இவர்களின் அந்தஸ்து அரசக் குடும்பத்திற்கு கீழானது. அருமனை, வடசேரி, திருவட்டாறு, நாகர்கோயில் அம்மாவீடுகள் நான்கு முக்கிய அம்மாவீடுகளாகும்.

தோற்றம்[தொகு]

திருவிதாங்கூர் மன்னர்களின் மனைவிகள் பொதுவாக "அம்மச்சிகள்" என்று அழைக்கப்பட்டனர். மேலும் பனபிள்ளை அம்மா என்ற பட்டத்தை வைத்திருந்தனர். இதன் பொருள் அரசரின் மனைவி என்பதாகும். திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தில் மருமக்கதாயம் மரபுரிமை. அடுத்தடுத்து வந்த சட்டத்தின்படி, மகாராஜாக்களின் சகோதரியே மகாராணி என்பதல் அவரது மகன்கள் அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனர். அம்மச்சி பனபிள்ளை அம்மாவுக்கு அவர்களின் நிலை, பரந்த நிலங்கள் , பிற மதிப்புமிக்க சொத்துக்களுக்கு ஏற்றவாறு சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் " நிலையையும் கௌரவத்தையும் பராமரிப்பதற்காக மாநில நிதியில் இருந்து ஒரு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது". [1] அம்மச்சிகள் அரச குடும்பத்தில் உறுப்பினராக இல்லை. அவர்கள் எந்த வகையிலும் அரசவையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. முன்னதாக, அவள் மனைவியாக இருந்த ஆட்சியாளருடன் கூட பகிரங்கமாகக் காண முடியவில்லை. அம்மச்சிகள், ஒதுக்கி வைக்கப்பட்டால் அல்லது விதவையாக இருந்தால், வேறு எந்த மனிதனையும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் தங்களின் சொந்த குடியிருப்புகளில் தடைசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். [2] மகாராஜாவுக்கு பிறந்த ஆண், பெண் குழந்தைகள் முறையே தம்பி, கொச்சம்மா / தங்கச்சி என்ற தலைப்புடன் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்.

சொற்பிறப்பியல்[தொகு]

மகாராஜாவின் துணைவியார் அம்மச்சி பனபிள்ளை அம்மா என்றும், அவரது " வீடு " அல்லது குடியிருப்பு அம்மாவீடு என்றும் அறியப்பட்டது. அம்மாவீட்டுகளின் பெயர்கள் அவர்களின் சொந்த இடத்துடன் ஒத்திருந்தன. உதாரணமாக, விளவங்கோட்டில் உள்ள அருமனை என்ற கிராமத்தில் இருந்து ஒரு பெண் வந்தபோது அருமனை அம்மாவீடு என பெயரிடப்பட்டது. கன்னியாகுமாரி திருவிதாங்கூர் மகாராஜாவின் முன்னாள் மனைவியின் இடமாகும். வடசேரி அம்மாவீடு, நாகர்கோயில் அம்மாவீடு, தஞ்சாவூர் அம்மாவீடு, திருவட்டாறு அம்மாவீடு, புதுமனை அம்மாவீடு ( இரவி வர்மன் தம்பியின் மனைவி ) முதலியன முக்கியத்துவம் வாய்ந்த அம்மாவீடுகளாகும். [3]

அம்மாவீடுகள்[தொகு]

திருவனந்தபுரத்தில் புதுமனை, கல்லடா, முபிடக்கா, செவறா, புலிமூடு அம்மாவீடுகள் போன்ற பல அம்மாவீடுகள் உள்ளன. இருப்பினும், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே நான்கு அம்மாவீடுகள் முக்கியத்துவம் பெற்றது. இவை அருமனை, வடசேரி, திருவட்டாறு மற்றும் நாகர்கோயில் அம்மவீடுகள். மகாராஜா கார்த்திகை திருநாள் தர்ம ராஜா மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்களை மணந்து இந்த அம்மாவீடுகளை நிறுவினார். அதன்பிறகு, மகாராஜாக்களும் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்களும் இந்த நான்கு குடும்பங்களிலிருந்தும் மட்டுமே மனைவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், வெளியிலிருந்து திருமணம் செய்ய வேண்டுமானால், அம்மாவீடுகளில் ஒருவராக அவர் தத்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்திரவிட்டார். அவரது வாரிசான பலராம வர்மன் 1859 இல் விசாகம் திருநாளைப் போலவே அருமனை குடும்பத்திலிருந்து திருமணம் செய்து கொண்டார். திருவட்டாறு குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட சகோதரிகளை சுவாதித் திருநாள், உத்திரம் திருநாள் போன்றோர் திருமணம் செய்து கொண்டனர். ஆயில்யம் திருநாளின் துணைவியும் இதேபோல் நாகர்கோயில் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். மூலம் திருநாள் முதலில் நாகர்கோயிலிலிருந்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து ஒரு பொதுவானவரை வடசேரி அம்மவீட்டில் தத்தெடுத்து திருமணம் செய்து கொண்டார். [4]

இந்த நான்கு அம்மாவீடுகளில் ஒருவராகப் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட மகாராஜாக்களின் துணைவியர் மட்டுமே பனபிள்ளை அம்மா என்ற பட்டத்துடன் அரச கௌரவங்களுக்கும் சலுகைகளுக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அப்போதைய வாரிசான இளவரசர் சதயம் திருநாள், இந்த நான்கு குடும்பங்களுக்கு வெளியில் இருந்து ஒரு பெண்ணை மணந்தார். மேற்கூறிய தலைப்பை ஏற்க அவருக்கு அனுமதி மறுக்கப்படது, பின்னர் இளவரசரின் வேண்டுகோளின்பேரில் மாநில கருவூலத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. [5]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Nagam Aiya Travancore Manual Vol II page 335
  2. Native life in Travancore By Samuel Mateer Published in 1883, W. H. Allen & Co. (London)
  3. Velu Pillai Travancore Manual Volume II page 709
  4. Thiruvananthapurathinthe Ehithihasam
  5. The life and times of Maharani Setu Lakshmi Bayi by Lakshmi Raghunandan
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாவீடு&oldid=3878531" இலிருந்து மீள்விக்கப்பட்டது