கடம்பினி கங்கூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடம்பினி கங்குலி
பிறப்பு1861
பகல்பூர்
இறப்புஅக்டோபர் 3, 1923
[s[கொல்கத்தா]]
பணிமருத்துவர், பெண்விடுதலை செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
துவாரகநாத் கங்கூலி

கடம்பினி கங்குலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள மொழி: কাদম্বিনী গাঙ্গুলি; 18 சூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம் பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கடம்பினி கங்கூலி 1861ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.

கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றி பெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும் வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]

மருத்துவத்துறை[தொகு]

கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை. கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.

சமுதாயப் பணிகள்[தொகு]

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.

கடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்கத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

எட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.

அமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப்[2] கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது:

குறிப்புகள்[தொகு]

  1. Female students were admitted into Oxford University in 1879, one year after the admission of female students for undergraduate studies at the University of Calcutta [1] பரணிடப்பட்டது 2006-10-18 at the வந்தவழி இயந்திரம். The tripos was opened to women at Cambridge only in 1881 [2] பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்.
  2. "David Kopf". History at Minnesota. Regents of the University of Minnesota. Archived from the original on 2006-05-16. பார்க்கப்பட்ட நாள் 2006-11-05.
  3. (Kopf 1979, pp. 125)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பினி_கங்கூலி&oldid=3845035" இலிருந்து மீள்விக்கப்பட்டது