விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 5, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. முத்தையா (1918 - 2003) விடுதலைப் போராட்ட வீரர். பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக இருந்தவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தமிழ்நாடு, தஞ்சாவூர் முடப்புளிக்காட்டில் பிறந்தவர். 1932 இல் பெரியார் சோவியத்து நாட்டில் சுற்றுப்பயணம் முடித்து பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சோசலிசத்தின் பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1939 முதல் 1942 வரை தலைமறைவாக இருந்து பணியாற்றினார். மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர். மேலும்...


கசக்ஸ்தான் மத்திய ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்ஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 கிமீ² பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக உருசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்ஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகை 17 மில்லியனாகும். கசக்ஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாக கசக்ஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. மேலும்...