விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 3, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவார்ட்சு புவியின் மேலோட்டில் ஃபெல்ட்ஸ்பாருக்கு அடுத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் கனிமமாகும். குவார்ட்சில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில மதிப்பு மிகு இரத்தினக் கற்களாகும். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் குவார்ட்சின் சில வகைகள் நகைகள் செய்யவும் கல்லோவியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. குவார்ட்சு முக்கோண படிக அமைப்பைச் சார்ந்தது. இதன் நல்லியல்பு படிக வடிவம் ஒவ்வொரு பக்கத்திலும் ஆறு பக்க பிரமிடுகளைக் கொண்டு முடிவுறும் ஆறு பக்கப் பட்டகமாகும். இயற்கையில் குவார்ட்சு படிகங்கள் பளிங்கிருமைத் தன்மை, குலைவுத்தன்மை உடையனவாகவும் அருகிலுள்ள படிகங்களுடனோ பிற கனிமங்களுடனோ உள்வளர்ச்சி உடையனவாகவும் உள்ளன. மேலும் சில நேரங்களில் பக்கங்கள்/முகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்துப் படிகம் மிகப் பெரியதாகக் காட்சியளிக்கும். அனைத்து குவார்ட்சு வகைகளும் இயற்கையில் கிடைப்பதில்லை. இயற்கையாகக் கிடைக்கும் குவார்ட்சு படிகங்கள் மிகத் தூய்மையானவை. இவை சிலிக்கான் செதில்கள் உற்பத்தியில் முதன்மையானப் பங்காற்றுகின்றன. இவை அரியவை மேலும் விலைஅதிகமானவை. அதிதூய்மையான குவார்ட்சு சுரங்கம் அமெரிக்காவின் வடக்கு கரொலைனா மாநிலத்திலுள்ள ஸ்ப்ரூஸ் பைன் சுரங்கத்தில் கிடைக்கின்றன. மேலும்...


வீர கேரள வர்மா பழசி இராசா (1753-1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்புப் பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது. பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலைப் போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793-1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பிரித்தாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர் பழசிராசாவை அவரது மலபார் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தனர். இதனால் பழசிராசா தனது மிக அண்மைய நண்பர்களுடனும் மனைவியுடனும் காடுகளில் வசிக்க வேண்டியதானது. 1802 இல் தலக்கால் சந்து பனமரம் கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த 25 ஆங்கிலேயரை கொன்று வெற்றிக் கொடி நாட்டினர். இந்நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு புத்துயிர் தந்தது. மேலும்...