வசீலி கண்டீன்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசீலி கண்டீன்ஸ்கி
Васи́лий Канди́нский
1910களில் கண்டீன்ஸ்கி
பிறப்புவசீலி வசிலியேவிச் கண்டீன்ஸ்கி
16 டிசம்பர் [யூ.நா. 4 டிசம்பர்] 1866
மாஸ்கோ
இறப்பு13 திசம்பர் 1944(1944-12-13) (அகவை 78)
நியூலி-சூர்-செயின், பிரான்ஸ்
தேசியம்உருசியர்
கல்விநுண்கலைக் கழகம், மியூனிக்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆன் வைட் II, Der Blaue Reiter
அரசியல் இயக்கம்அகவுணர்ச்சிவெளியீடு, பண்புரு ஓவியம்

வசீலி கண்டீன்ஸ்கி (Wassily Kandinsky, இரசியன்: Васи́лий Васи́льевич Канди́нский) (16 டிசம்பர் [யூ.நா. 4 டிசம்பர்] 1866–13 டிசம்பர் 1944) ரசியாவைச் சேர்ந்த ஓவியர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான ஓவியர்களுள் ஒருவர். முதன்முதலாக நவீன பண்புரு (abstract) ஓவியங்களை வரைந்தவராகக் கருதப்படுபவர்.

மாஸ்கோவில் பிறந்த இவர் மொஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டமும் பொருளியலும் பயின்றார். தன் முப்பாவது வயதில் ஓவியக் கல்வியைத் தொடங்கினார். 1896 இல் மியூனிக்கில் வாழத் தொடங்கிய அவர் மியூனிக் நுண்கலைகள் அக்கடமியில் கற்றார். முதலாம் உலகப் போர் தொடங்கியபின்னர் 1914 இல் மொஸ்கோவுக்குத் திரும்பினார். 1921 இல் மீண்டும் ஜேர்மனி சென்றார். 1922 முதல் 1933 வரை ஓவியம் கற்பித்தார். பின்னர் பிரான்சுக்குக் குடிபெயர்ந்து 1839 இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார்.

கண்டீன்ஸ்கி, உருசியாவின் மாஸ்கோ நகரில் பிறந்தார் எனினும் இவரது இளமைக் காலம் ஒடெசா என்னும் இடத்திலேயே கழிந்தது. இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, சட்டம், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றார். இவர் தனது தொழிலில் ஓரளவு வெற்றிகரமாகவே திகழ்ந்தார். டார்பட் பல்கலைக் கழகத்தில் இவருக்குப் பேராசிரியர் பதவியும் கிடைத்தது. ஆனால், இவர் தனது 30வது வயதில் ஓவிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

1896 ஆம் ஆண்டில் இவர் செருமனி, மியூனிக்கில் தங்கி அங்குள்ள நுண்கலைக் கழகத்தில் கற்றார். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் 1918 ஆம் ஆண்டில் மீண்டும் மாஸ்கோவுக்குச் சென்றார். ஆட்சியாளரின் அதிகாரபூர்வக் கலைக் கோட்பாடுகளோடு இவருக்கு முரண்பாடு ஏற்பட்டதால் இவர் 1921 ஆம் ஆண்டில் செருமனிக்குத் திரும்பிச் சென்றார். அங்கே புகழ் பெற்ற பௌஹவுசில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1922 ஆம் ஆண்டிலிருந்து நாட்சிகளால் 1933 இல் அது மூடப்படும்வரை அவரது பணி அங்கே தொடர்ந்தது. பின்னர் அவர் அங்கிருந்து பிரான்சுக்குச் சென்றார். 1933 ஆம் ஆண்டில் அந் நாட்டின் குடியுரிமையும் பெற்றார். தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அங்கேயே கழித்த காண்டின்ஸ்கி, நெயுல்லி-செர்-செயின் (Neuilly-sur-Seine) என்னுமிடத்தில் 1944 ஆம் ஆண்டு காலமானார்.

கலைசார் காலகட்டங்கள்[தொகு]

ஒரு தொடக்ககால ஆக்கம் "புனித உர்சுலா கோயிலுடன் மியூனிக்-சுவாபிங்" (கண்டீன்ஸ்கி 1908)

காண்டின்ஸ்கியின் தூய பண்புரு ஆக்கங்கள் திடீரென வந்துவிடவில்லை. அவரது தனிப்பட்ட கலை அநுபவங்களின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டுச் சிந்தனைகளின் முதிர்ச்சியினாலும், நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையினாலுமே இவை உருவாகின. இந்த உள் அழகின் மீதான பக்தியை அவர், ஆன்மாவின் உள்ளுணர்வு என்று குறிப்பிட்டார்.

காண்டின்ஸ்கி, இளமைக்காலத்தில் மாஸ்கோவில் இருந்தபோது பல விடயங்களைக் கற்றறிந்தார். சிறுவனாக இருந்தபோது, நிறங்கள் தொடர்பில் வழமைக்கு மாறாகத் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் நினைவு படுத்திக் கொள்வதுண்டு. அவரது வளர்ச்சியோடு, நிறங்கள் குறித்த ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே இருந்தது. எனினும், ஓவியம் கற்றுக்கொள்வதற்கு அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 1889 ஆம் ஆண்டில், இனவரைவியல் ஆய்வுக்குழு ஒன்றின் உறுப்பினராக மாஸ்கோவின் வட பகுதியில் உள்ள வொலொக்டா (Vologda) என்னும் பகுதிக்குச் சென்றார். இப்பயணம் பற்றி விவரித்தபோது ஓரிடத்தில், வீடுகள், தேவாலயங்கள் முதலியவற்றில் காணப்பட்ட ஒளி பொருந்திய நிறங்களாலான அழகூட்டல்கள், அவற்றின் உள்ளே நுழையும்போது ஓவியமொன்றுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீலி_கண்டீன்ஸ்கி&oldid=3430347" இலிருந்து மீள்விக்கப்பட்டது