திகார் சிறைகள்
| இடம் | புது தில்லிi, இந்தியா |
|---|---|
| நிலை | உபயோகத்தில் உள்ளது |
| பாதுகாப்பு வரையறை | அதிகபட்ச காவல் |
| கொள்ளளவு | 5200 |
| திறக்கப்பட்ட ஆண்டு | 1958 |
திகார் சிறைகள் (இந்தி: तिहाड़ सेन्ट्रल क़ैदख़ाना, உருது: تہاڑ سینٹرل قیدخانہ Tihāṛ Central Qaidkhānā), அல்லது திகார் ஆசிரமம் (இந்தி: तिहाड़ आश्रम, உருது: تہاڑ آشرم), என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகும். இது இந்தியாவின் தலைநகர் புது தில்லிக்கு மேற்கே உள்ள சாணக்யா புரியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகில் அரிநகர் உள்ளது.
இந்தச் சிறைச்சாலை ஓர் சீர்திருத்தப் பள்ளியாகப் பேணப்படுகிறது. இங்குள்ள கைதிகளை திறமைகள், கல்வி மற்றும் விதிகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னம்பிக்கை மிக்க சமூகத்தின் வழமையான நபர்களாக மாற்றுவதே இதன் தலையாய நோக்கமாகும். இங்கு தயாரிக்கபடும் பொருள்களின் மேல் திகார் என்று முத்திரையிடப்படுகிறது. [1]
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
இச்சிறைச்சாலை 1958ல் கட்டப்பட்டது. முன்பு பஞ்சாப் மாநில நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1966ல் தில்லி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1984ஆம் ஆண்டு மேலும் சில வசதிகள் செய்யப்பட்டு "திகார் சிறைகள்" என பெயரிடப்பட்டது. சிறைத்துறை தலைமை ஆய்வாளராக இருந்தபோது கிரண் பேடி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவரே இதன் பெயரை "திகார் ஆசிரமம்" என்று பெயரிட்டார். சிறைக்கைதிகளுக்கும் பணியாளர்களுக்கும் விபாசனா தியானம் செய்யும் முறைமையை செயலாக்கினார். இங்குள்ள வசதிகளைக் கொண்டு ஒரு சிறைக்கைதி இந்தியக் குடியுரிமைப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.[2]
திகார் சிறைகளில் வட இந்திய உணவு மட்டுமன்றி தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. [3]
குறிப்பிடத்தக்க கைதிகள் [தொகு]
- பன்னாட்டு தொடர்கொலையாளி சார்லசு சோப்ராஜ் 16 மார்ச், 1986 அன்று திகாரிலிருந்து தப்பி ஓடினார்; இருப்பினும் சில நாட்களிலேயே பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; தப்பிச் சென்றதற்காக கூடுதலாக பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெப்ரவரி 17, 1997ஆம் ஆண்டில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார்.
- 1994ஆம் ஆண்டு மேற்கத்திய இதழியலாளர்களை கடத்திய வழக்கில் டேனியல் பேர்ல் என்ற இதழியலாளரைக் கொன்ற குற்றவாளி அகமது ஒமர் சயீத் சேக்கிற்கு இங்கு பல்லாண்டு சிறைதண்டனை கிடைத்தது.
- அசாம் காங்கிரசு அரசில் கல்வி அமைச்சராக இருந்த ரிபுன் போரா டேனியல் டோப்னோ கொலைவழக்கில் நடுவண் புலனாய்வால் சூன் 3, 2008இல் கைது செய்யப்பட்டு சூன் 7, 2008 அன்று திகார் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
- 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையதாக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி, வினோத் கோயங்கா, சகீத் பல்வா மற்றும் சஞ்சய் சந்திரா இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.[4]
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி 2010 பொதுநலவாய விளையாட்டுக்களின்போது நிகழ்ந்த ஊழல்களில் தொடர்புள்ளவராக நடுவண் புலனாய்வால் குற்றஞ்சாட்டப்பட்டு இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[4]
சுகாதாரக் கவலைகள் [தொகு]
ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பயிற்சி மையத்தின்படி இங்குள்ள 11,800 கைதிகளில் 6% முதல் 8% வரை எச். ஐ. வி நோய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது; இது தேசிய சராசரியை விட மிகக் கூடுதலாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.[5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Mukharji, Arunoday (4 February 2007) "Brand Tihar is serious business" CNN-IBN
- ↑ Relief to Tihar inmate after he makes it to IAS The Hindu, Feb 11, 2009
- ↑ The 2g effect idli,dosa,vada,sambar in tihar DNA India June 13,2011
- ↑ 4.0 4.1 India's Powerful Can't Escape Jail, BusinessWeek, June 9, 2011
- ↑ http://timesofindia.indiatimes.com/city/delhi/340-HIV-positive-prisoners-in-Tihar/articleshow/8650866.cms