கார்த்தவீரிய அருச்சுனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்தவீரிய அருச்சுனன்
தகவல்
குடும்பம்கிருதவீரியன் (தந்தை)

கார்த்தவீரிய அருச்சுனன் (Kartavirya Arjuna) , நர்மதை ஆற்றாங்கரையில் அமைந்த பண்டைய மகிஷ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன் ஆவார். கார்த்தவீரிய அருச்சுனன் குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களில் நிறைய குறிப்புகள் உள்ளது. தத்தாத்ரேயர் மீது அளவற்ற பக்தி கொண்ட கார்த்தவீரிய அருச்சுனன் ஆயிரம் கைகள் கொண்டவன்.

பிறப்பு[தொகு]

மகிஷ்மதி நகரத்தின் மன்னன் கிருதவீரியன் - பத்மினி இணையருக்கு, தத்தாத்ரேயரின் அருளால் பிறந்தவன் கார்த்தவீரிய அருச்சுனன். மேலும் விஷ்ணு தவிர பிறரால் அழியா வரம் பெற்றவன்.

தத்தாத்ரேயரிடம் வரம் பெறுதல்[தொகு]

அனைத்துலகத்தையும் ஆள விரும்பிய, கார்த்தவீரிய அருச்சுனன் தன் குல குரு கார்க்க முனிவரின் அறிவுரைப் படி, அத்ரி - அதிதி இணையருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்த தத்தாத்ரேயரை அணுகி ஆயிரம் ஆண்டுகள் பணிவிடைகள் செய்தான். கார்த்தவீரியனின் பணிவிடைக்களைக் கண்டு மகிழ்ந்த தத்தாத்ரேயர், கார்த்தவீரியனுக்கு அனைத்துலகங்களையும் ஆளும் வரம் அளித்தார். மேலும் விண்ணிலும், மண்ணிலும் செல்லக்கூடிய 4000 கெஜம் (3 அடி = 1 கெஜம்) நீளம் கொண்ட தெய்வீகத் தங்கத் தேரை வரமாக அளித்தார். இவ்வரங்களில் கிடைத்தவைகளை அறநெறிப்படி பயன்படுத்த வேண்டும் என்று கார்த்தவீரிய அருச்சுனனுக்கு தத்தாத்ரேயர் அறிவுறுத்தினார். கார்த்தவீரிய அருச்சுனன் பூவுலகின் அனைத்து மன்னர்களை வென்று மன்னாதிமன்னன் எனும் பெரும் பேறு அடைந்தான். 85,000 ஆண்டுகள் ஹைஹேயப் பேரரசின் சக்கரவர்த்தியாக பூவுலகை ஆட்சி செய்தான்.

பரசுராமருடன் போர்[தொகு]

கார்த்தவீரிய அருச்சுன்னை கொன்ற பரசுராமர்

மகாபாரதம் எனும் இதிகாசத்தின் வன பருவத்தில் வரும் அகிர்தவனக் கதையின் படி, மதுவிற்கு அடிமைப்பட்டு, புலனடக்கம் இன்றி மக்களையும், மன்னர்களையும் கார்த்தவீரிய அருச்சுனன் துன்புறுத்தி நாட்டை ஆண்டான் என்றும்; ஒரு முறை கார்த்தவீரிய அருச்சுனன், இந்திரனின் மனைவியான சசியின் முன்னிலையில் இந்திரனை அவமானப்படுத்தினான் என்றும் அறிய முடிகிறது.

ஒரு முறை கார்த்தவீரிய அருச்சுன்ன் வருணனிடம், தனக்கு நிகரான வலிமை கொண்டவன் இப்பூலகில் ஒருவன் இருக்கின்றானா எனக் கேட்ட பொழுது, வருணன் அதற்கு முனிவர் ஜமதக்னியின் மகன் பரசுராமரைக் கைக்காட்டினார்.

கார்த்தவீரிய அருச்சுனன் படைவீரர்களுடன் பரசுராமரைத் தேடிச் சென்ற போது, ஆசிரமத்தில் இருந்த பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் வளர்த்து வந்த காமதேனு பசுவை கவர்ந்து சென்றதுடன், அச்செயலை தடுத்த ஜமதக்னி முனிவரின் தலையையும் கொய்தான்.

கார்த்தவீரிய அருச்சுனனின் அறநெறி கடந்த செயலைக் அறிந்த, கோடாரியை படைக்கலமாகக் கொண்ட ஜமதக்னியின் (விஷ்ணுவின் அவதார) மகன் பரசுராமன், கார்த்தவீரிய அருச்சுனனையும், பூவுலகில் வாழும் மற்ற அனைத்து சத்திரியர்களையும் கொன்று, முழு பூவுலகை அந்தணர்களுக்கு தானமாக வழங்கினார்.

இராவணனை வெல்லுதல்[தொகு]

இராவணனை வென்ற கார்த்தவீரிய அருச்சுனன் (இடது)

இராமாயண இதிகாசத்தில் இராவணை கார்த்தவீரிய அருச்சுனன் வென்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

வாயு புராணத்தில், கார்த்தவீரிய அருச்சுனனிடத்தில் சிறைப்பட்ட இராவணன், பின்னர் பல காலம் கழித்து, கார்த்தவீரிய அருச்சுனன் பரசுராமரால் கொல்லப்பட்ட பின்பு விடுவிக்கப்பட்டான் எனக் கூறப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dowson, John (1984). A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History. Calcutta: Rupa & Co.. பக். 151–2. 

வெளி இணைப்புகள்[தொகு]