இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. மனிதனின் மரணத்துக்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபியவர்கள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆன் அல்லது குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.
ஜலால் அத்-தின் முகமது ரூமி (Jalāl ad-Dīn Muḥammad Rūmī, جلالالدین محمد رومی)என்றும் ஜலால் அத்-தின் முகமது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீகம்: جلالالدین محمد بلخى ) என்றும் பரவலாக துருக்கியிலும் ஈரானிலும் ஆப்கானித்தானிலும் மௌலானா[4] (பாரசீகம்: مولانا) என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் ரூமி என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 – 17 திசம்பர் 1273) பதின்மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.ரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன
சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.