யு. ஏ. பீரன்
யு. எ. பீரன் (U. A. Beeran) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். இந்திய ஒன்றிய முசுலிம் லீக் கட்சியில் இணைந்திருந்த பீரன் பின்நர் இந்திய தேசிய லீக் கட்சியில் சேர்ந்தார். கேரள அரசின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் இவர் பணிபுரிந்தார்[1]
வாழ்க்கை[தொகு]
1940 ஆம் ஆண்டுகளில் பீரன் இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் 1950 ஆம் ஆண்டுகளில் மும்பையில் உள்ள பிரித்தானிய பொறியியல் நிறுவனத்தில் வேலை செய்தார். பின்னர் முசுலிம் லீக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செயலாளர் ஆனார். அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் கட்சியின் செயலாளர் என்ற பொறுப்பையும் ஏற்றார். முசுலிம் லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட இவர் 1970, 1977, 1980, 1982 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எ.கே. அந்தோனியின் அரசவையில் பீரன் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக 1978 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். பின்னர் மீண்டும் கே. கருணாகரன் அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமைச்சராக 1982 மே 24 முதல் 1987 மார்ச்சு 25 வரை பணிபுரிந்தார். மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் கேரள மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவராகவும் பீரன் செயல்பட்டார்.
இவர் சந்திரிகா நாளிதழின் துணை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இதழாசிரியராக செயல்பட்டது மட்டும் அல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் இவர் பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று “அரபு உலகமும் ஐரோப்பாவும்” என்ற நூல் ஆகும். “அனைத்து கேரள சாகித்திய பரிசத்” நிறுவனத்தின் மாநில நிர்வாக உறுப்பினராகவும் பீரன் சிலகாலம் பணியாற்றினார்.
பீரன் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 31 தேதி காலமானார். கேரள சட்டமன்றம் 2001 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் தேதி அன்னாருக்காக இரங்கல் கூட்டம் நடத்தியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "U.A. BEERAN". http://www.stateofkerala.in/niyamasabha/u%20a%20beeran.php. பார்த்த நாள்: 12 November 2010.