மேற்றோல் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்தோல் (தாவரவியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாவர, விலங்கு உடற்பாகங்களை மூடியிருக்கும் மேலடுக்குகளான ஓரடுக்கு திசுக்களே மேற்தோல் (அ) புறத்தோல் எனப்படும். தாவரங்களின் பாதுகாப்பிற்காக தாவரப்பகுதி முழுவதையும் மூடி பாதுகாப்பதால் புறத்தோல் எனப்படுகிறது . இது தாவரத்தின் வெளிச்சூழலிலிருந்து தாவர உட்பாகங்களைப் பாதுகாக்கிறது. இது இலை, தண்டுப்பகுதிகளில் நீர், வாயுப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, வேர்ப்பாகங்களில் நீர் மற்றும் கனியுப்புக்களை உட்கடத்தும் செயற்பாட்டையும் மேற்கொள்கிறது.

தாவர உடலில் அவற்றின் இருப்பிடத்தைப் பொருத்து இல்லாமல், ஒரே விதமான பணியை மேற்கொள்கின்ற பல உயிரணுத் தொகுப்பான இழையங்கள் (திசுக்கள்) சேர்ந்த தொகுதி, இழையத் தொகுதி (tissue system) அல்லது திசுத்தொகுப்பு எனப்படும். இவை புறத்தோலின் அரணாகும்.

புறத்தோல் இழையத்தொகுப்பு[தொகு]

இலையின் ஒட்டுமொத்த உட்புற வரைபடம்

தாவரங்களின் வெளியுறையாக, புறத்தோல் இழையத் தொகுப்பு காணப்படுகிறது. புறத்தோல் இழையத்தொகுப்பானது, புறத்தோல், புறத்தோல் துளைகளையும், புறத்தோல் தூவிகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. புறத்தோல் பொதுவாக, உயிரணு இடைவெளிகள் இன்றி, நெருக்கமாக அமைந்த ஓரடுக்கு புடைக்கல விழையம் (அ) பாரன்கைமா உயிரணுக்களால் ஆனது. ஆனால் புறத்தோலில் இடையிடையே துளைகள் காணப்படுகின்றன. இலைகளில் காணப்படுகின்ற இலைத்துளைகளைச் சூழ்ந்து, இரண்டு சிறப்பான உயிரணுக்கள் காணப்படுகின்றன. அவை காப்பு உயிரணுக்கள் எனப்படும்.

சாக்ஸ் (Sachs) என்பவர் 1875 ஆம் ஆண்டு தாவரங்களில் உள்ள இழையங்களை, மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்.

அமைப்பு[தொகு]

புறத்தோலில் காப்பு உயிரணுக்களில் மட்டுமே, பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன. மற்ற புறத்தோல்உயிரணுக்கள் பசுங்கணிகங்களைக் கொண்டிருப்பதில்லை. புறத்தோல் உயிரணுக்களின், வெளிப்புற உயிரணுச்சுவரின் மீது கியூட்டிக்கிள்(cuticle) என்ற அடுக்கு காணப்படுகிறது. புறத்தோலில் காணப்படுகின்ற, இரண்டு காப்புஉயிரணுக்களால் சூழப்பட்ட, மிகச்சிறிய துளைகள் புறத்தோல் துளைகள் அல்லது இலைத்துளைகள் எனப்படும். கரும்பு போன்ற சில தாவரங்களில் காப்பு உயிரணுகளைச் சூழ்ந்து சில சிறப்பான உயிரணுக்கள் காணப்படுகின்றன. இவை மற்ற புறத்தோல் உயிரணுக்களிலிருந்து வேறுபட்டவை ஆகும். இவை துணைக்கருவிச் உயிரணுக்கள் (Accessory cells) என அழைக்கப் படுகின்றன.

டிரைக்கோம்கள்(Trichomes), வேர்தூவிகள் ஆகியவை புறத்தோல் தூவிகள் ஆகும். புறத்தோலிலிருந்து தோன்றும் ஒரு உயிரணுவால் ஆன அல்லது பல உயிரணுக்களாலான வளரிகள் 'டிரைக்கோம்கள்' எனப்படும். 'டிரைக்கோம்கள்' கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ காணப்படுகின்றன. வேரின் புறத்தோலில் (Rhizodermis) இருவகையான புறத்தோல் உயிரணுக்கள் உள்ளன. அவை நீண்ட உயிரணுக்கள் என்றும், குட்டை உயிரணுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. குட்டைஉயிரணுக்கள் 'டிரைக்கோபிளாசுட்டு'கள்(Trichoblast) எனப்படும். இவைகளிலிருந்து தான், வேர் தூவிகள் உருவாகின்றன.

அமைப்பு[தொகு]

ஆளித் தண்டின் குறுக்குவெட்டு முகம்:
1. மையவிழையம்,
2. மூலக்காழ்,
3. காழ் I,
4. உரியம் I,
5. வல்லுருக்கலவிழையம் (தாவரத்தோல் நார்),
6. மேற்பட்டை,
7. மேற்றோல்
இலையின் இழையத் தொகுப்பு

பொதுவாக ஒரு அடுக்கினால் ஆன செல்களைக் கொண்டு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளையும் மூடிக் காணப்படுகிறது. சில தாவரங்கள் இரண்டு அல்லது பல அடுக்கு செல்களால் ஆக்கப்பட்டிருக்கும். சான்றாக, இந்திய ரப்பா் தாவரங்களிலும், அரச மரத்திலும், அரளி தாவரத்திலும் அமைந்துள்ள புறத்தோல் இரண்டு முதல் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.

ஆக்கத்திசுக்கள் உள்ள பகுதிகளில் புறத்தோல் செல்களை பிரித்தறிய முடியாது, மேலும் முதிர்ந்த தாவர வோ் மற்றும் தண்டுப் பகுதிகளில் இவை இரண்டாம் நிலை வளர்ச்சியின் காரணமாக அழிக்கப்பட்டுவிடுகின்றன. முதிர்ந்த தாவரங்களில் புறத்தோல் உயிரணுக்களுக்கு மாற்றாக சுற்றுப்பட்டை உயிரணுக்கள் (பெரிடெர்ம்) வளா்ச்சியடைகின்றன.

புறத்தோல் செல்கள் ஒழுங்கற்ற வடிவத்தினை பெற்றிருக்கின்றன, பொதுவாக வடிவத்திலும், அளவிலும் தாவரங்களைப் பொருத்து மாற்றங்களைக் கொண்டுள்ளன. புறத்தோல் செல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், செல் இடைவெளியற்றும் அமைந்துள்ளன. செல்லின் மையப்பகுதியில் ஒரு பெரிய காற்றுக் குழியும், நீா்த்த செல் சாறும் காணப்படுகிறது. இச்செல்களில் வெளிர்கணிகம், ஆந்தோசயனின், குரோமோபிளாஸ்ட் போன்ற நிறமிகள் காணப்படுகிறது. ஆனால் தாவர செல்கள் அனைத்திலும் உள்ள பசுங்கணிகம் இவற்றில் இல்லை.

இலைத்துளைகளில் மட்டும் பசுங்கணிகம் காணப்படுகிறது. சில நீா் வாழ்த்தாவரங்கள் (ஹைட்ரில்லா) மற்றும் நிழல் விரும்பி தாவரங்களில் புறத்தோல் செல்களில் பசுங்கனிகம் காணப்படுகிறது. சில சமயங்களில் புறத்தோல் செல்களில் பசைப் பொருள், டானின், கால்சியம் கார்பனேட் படியங்கள் காணப்படுகின்றன.

புறத்தோல் செல்கள் ஒழுங்கற்றத் தடிமன் கொண்டவை. தடிப்பான பகுதிகளில் சூபரின் மற்றும் கியுட்டின் பொருட்கள் படிந்து தடிப்பு தன்மையை தருகின்றன. இவை தாவரத்தை காயம் மற்றும் வெப்ப்த்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வோ்களில் புறத்தோல் வோ்த்தோல் என அழைக்கப்படுகிறது. இச்செல்கள் வெளிப்புறமாக குழல் போன்ற நீட்சியைத் தோற்றுவிக்கின்றன. இவை வோ்த்தூவி என்றழைக்கப்படுகிறது. இவை ஓர் உயிரணுவால் ஆனவை, மண்ணிலிருந்து நீரையும், தாது பொருட்களையும் உறிஞ்சப் பயன்படுகிறது.[1]

பணிகள்[தொகு]

தாவரத்தின் அனைத்து பாகங்கைளயும் தண்டு, இலை, வோ், கனி, விதை ஆகியவற்றை மூடி பாதுகாக்கின்றது. பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாக இருந்தாலும் சில வேளைகளில் நீா் சேமிப்பு, பசை பொருள் சுரத்தல், ஒளிச்சோ்ககை போன்ற பணிகளையும் செய்கிறது. தாவரத்தின் நுனிஆக்கத்திசு புறத்தோல் செல்களை தோற்றிவிப்பதாகக் கருதப்படுகிறது.[2]

  • தாவரத்தின் மென்மையான உட்பகுதியை காயம் ஏற்படாதவாறு மூடி பாதுகாக்கும் உயிரணு அடுக்காக அமைந்துள்ளது.
  • தாவரத்திலிருந்து அதிகபடியான நீா் வெளியேற்றுவதைக் தடுக்கிறது. இதற்காக கியட்டிகள், மெழுகுபுச்சு, துவிகள் போன்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • ஒளிச்சோ்க்கை மற்றும் சுரப்பு பணிகளிலிலும் பங்கேற்கிறது[1].
  • தண்டுத் தொகுப்பில் உள்ள புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பில், கியூட்டிக்கிள் (cuticle) இருப்பதனால் அதிகப்படியான நீரிழப்பு தடை செய்யப்படுகிறது.
  • புறத்தோலானது உட்புற கூட்டுஉயிரணுத் தொகுப்பிளைப் பாதுகாக்கிறது.
  • புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கினையும், வளிப்பரிமாற்றத்தினையும் திறம்பட செய்ய ஈடுபடுகின்றன.
  • விதைகள் பரவுதலிலும், கனிப்பரவுதலிலும் மேற்கூறப்பட்ட 'டிரைக்கோம்கள்' உதவிபுரிகின்றன.
  • வேர்தூவிகள் மண்ணிலிருந்து நீரையும், கனிம உப்புக்களையும் உறிஞ்சுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.biologydiscussion.com, referred on 28.04.2017
  2. Plant Anatomy,Pandy B. P,2001, S . Chand & Company, New Delhi
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்றோல்_(தாவரவியல்)&oldid=3369556" இலிருந்து மீள்விக்கப்பட்டது