தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை ஒரு கிறித்தவ உயர்கல்வி நிலையமாகும். கி.பி 1878 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. நூற்று முப்பத்தி நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இக்கல்லூரி, ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 4 கல்லூரிகளில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

கிறித்தவ மிசனரி சங்கத்தால் கி.பி 1844 -ம் ஆண்டு பாளையங்கோட்டையில் ஒரு வாடகை கட்டிடத்தில் இருமொழி மூலம் பயிற்றுவிக்கும் கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பள்ளி பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது. 1878 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி கல்லூரியாக உயர்வடைந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் 1880 ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. 1878 ஆம் ஆண்டில் இருந்து 1920 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியின் முதல் முதல்வராக இருந்த ரெவ். சாப்ட்டர் ஐயர் என்ற மிகச்சிறந்த கல்விமானின் வழிகாட்டலின் படி கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றங்களில் தலைச்சிறந்து விளங்கியது. ரெவ்.யெங் ஐயர் வழிகாட்டலில் 1928 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.