திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில்)
புவியியல் ஆள்கூற்று:10°55′31″N 79°12′12″E / 10.925200°N 79.203452°E / 10.925200; 79.203452
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கூடலூர், வட திருக்கூடலூர்[1] ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம ஷேத்திரம்
பெயர்:ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில்)
அமைவிடம்
ஊர்:திருக்கூடலூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர்:வையம் காத்த பெருமாள்
தாயார்:பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
உற்சவர் தாயார்:புஷ்பவல்லி தாயார்
தீர்த்தம்:சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:சுத்தஸத்வ விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில் (Jakath Rakshaka Perumal temple, Thirukkoodalur) திவ்ய தேசம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 62 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°55'30.7"N, 79°12'12.4"E (அதாவது, 10.925200°N, 79.203452°E) ஆகும்.

மூலவர்[தொகு]

இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்றும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் என்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. [2]மூலவர் வையம் காத்த பெருமாள் என்றும் ஜகத்ரட்சகன் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் உள்ளார். தாயார் பத்மாசனி ஆவார். தல மரம் பலா ஆகும். கோயில் தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. விமானம் சுத்தஸத்வ விமானம் எனப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இது எட்டாவது தலமாகும். [3]

பிற சன்னதிகள்[தொகு]

கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உ;ளளன. ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [2]

பெயர்க்காரணம்[தொகு]

இரண்யாட்சகன் என்னும் அசுரன் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகில் மறைத்துவைத்தான். பெருமாள் வராக அவதாரம் எடுத்து இத்தலத்தில் பூமியைப் பிளந்து அருகில் உள்ள முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளிக்கொணர்ந்தார். பூமியை மீட்டு வந்ததால் வையம் காத்த பெருமாள் எனப்படுகிறார். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றதால் இவ்வூர் கூடலூர் என்று பெயர் பெற்றது. [3] காவிரி இத்தலத்திற்கு வந்து இழந்த பொலிவை மீண்டும் பெற்ற இடமாகும். இந்தக் கோவில் காவேரி வெள்ளத்தில் மூழ்கி மண்மேடாகவிட்டபோது, கனவில் ராணி மங்கம்மாள் முன் தோன்றி கோயிலை புதுப்பிக்க சொன்னபடி, அரசி புதுப்பித்த கோயில் என்பர்.[4]

பிற சிறப்புகள்[தொகு]

திருமங்கையாழ்வார் அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (நாலாயிரத்திவ்ய பிரபந்தம்‎ - பெரிய திருமொழி (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.[4] நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கூறுவர். அம்பரீசன், திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.[2]

போக்குவரத்து[தொகு]

தஞ்சாவூரிலிருந்து பேருந்தில் திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் 7 மைல் தூரம் சென்று இவ்வூரை அடையலாம். அல்லது தஞ்சாவூர் - கணபதி அக்ரஹாரம் தடத்தில் நகரப்பேருந்திலும் செல்லலாம். நான்கு கிமீ தொலைவில் அய்யம்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது.[4]

விழாக்கள்[தொகு]

வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் 10 நாள்கள் நடைபெறுகிறது.[3]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 3 ஜூன் 2022இல் நடைபெற்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=75
  2. 2.0 2.1 2.2 "திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோயில், மாலை மலர், 4 ஏப்ரல் 2020". Archived from the original on 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  3. 3.0 3.1 3.2 அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  4. 4.0 4.1 4.2 திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)
  5. திருக்கூடலூர் ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு, தினமணி, 3 ஜூன் 2022

படத்தொகுப்பு[தொகு]