ஜேம்ஸ் ஆலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் ஆலன்
ஏம்சு ஆலன்
பிறப்பு(1864-11-28)28 நவம்பர் 1864
லெஸ்டர், லெஸ்டர்ஷைர், இங்கிலாந்து
இறப்பு24 சனவரி 1912(1912-01-24) (அகவை 47)
இல்பிராகோம்பு, டேவன், இங்கிலாந்து
தொழில்எழுத்தாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்ஆங்கிலேயர்
வகைபுனைவிலி
கருப்பொருள்மெய்யியல், தன்முனைப்பு, தன்னுதவி
இலக்கிய இயக்கம்புது எண்ணம்
செயற்பட்ட ஆண்டுகள்1901–1912
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒரு மனிதனின் சிந்தனையின் படி
துணைவர்லில்லி லூயீசா ஓரம்
பிள்ளைகள்நோரா ஆலன்

ஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 சனவரி 1912) மனவூக்கம் அளிக்கும் புத்தகங்களையுவும் கவிதைகளையும் எழுதியமைக்காகவும் தன்னுதவி இயக்கத்தின் முன்னோடியாக இருந்தமைக்கும் அறியப்படும் ஓர் ஆங்கில மெய்யியல் எழுத்தாளர். அவருடைய சிறந்த படைப்பான "ஒரு மனிதனின் சிந்தனையின் படி" என்ற நூல் 1903-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது முதலே பெருமளவில் விற்பனையாகிவருகின்றது. இந்த நூல் தன்முனைப்பு மற்றும் தன்னுதவி நூல்களை இயற்றும் எழுத்தாளர்களுக்கு மனவூக்க ஊற்றாக இருந்தவருகிறது.

இளமைக்காலம்[தொகு]

இங்கிலாந்தின் லெஸ்டர் பகுதியில் உழைக்கும் வகுப்புக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். அவருடைய தந்தை தொழிலகப் பின்னல் வினைஞர். ஆலனின் பதினைந்தாம் வயதில் அவரது தந்தை அமெரிக்கா சென்றார், நியூ யார்க் சென்ற இரண்டாம் நாளிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். குடும்பச் சூழல் காரணமாக, ஆலன் தனது பள்ளிப் படிப்பை விடுத்து பணிபுரியச் சென்றார்.[1] 1890-களில் பல உற்பத்தி நிறுவனங்களில் அவர் உதவியாளராகவும் தனிச்செயலராகவும் பணிபுரிந்தார். 1893-ல் லண்டனுக்கும் பின்னர் தென் வேல்சுக்கும் சென்று இதழியல் துறையில் பணியாற்றினார். 1895-ம் ஆண்டு லில்லி ஓரமை மணம்புரிந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

1898-ம் ஆண்டு, தன் ஆன்மீக, சமூக ஈடுபாடுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பொற்காலத்துக்கான கட்டியங்கூறு என்ற இதழின் எழுத்தாளரானார. 1901-ல் "வறுமையிலிருந்து வலிமைக்கு" என்ற முதல் படைப்பை வெளியிட்டார். அது முதற்கொண்டு பல நூல்களை எழுதினார், அதிலும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு நீதிமொழி 23:7-ன் சொற்றொடரைத் தலைப்பாகக் கொண்டு 1903-ல் எழுதிய "ஒரு மனிதனின் சிந்தனையின் படி" என்ற புத்தகம் மனவூக்கக் கருத்துகளால் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அந்தப் புத்தகத்தின் வெற்றியின் காரணமாக அவர் செய்துவந்த தனிச்செயலர் பணியைத் துறந்து எழுதவதையே தன் முழுவேலையாகக் கொள்ளமுடிந்தது. அதே ஆண்டில் அவர் தன் குடும்பத்தினருடன் டேவனிலுள்ள இல்பிராகோம்புக்கு இடம்பெயர்ந்தார். 1912-ல் அவர் இறப்பதற்குள், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து எழுதி மொத்தம் பத்தொன்பது படைப்புகளை வெளியிட்டார்.

அவர் இறந்தபின் அவருடைய மனைவி, அவருடைய படைப்புகளை த எபோ என்ற பெயரில் தொடர்ந்து வெளியிட்டார். ஆலனின் இறப்புக்குப் பின் வெளியான மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிக்கற்கள் என்ற நூலில், தன் கணவரின் இலக்கிய நோக்கைப் பற்றி

அவர் ஒருபோதும் கோட்பாடுகளையோ, எழுதவேண்டுமே என்பதற்காகவோ எழுதவில்லை, மாறாக, அவரிடம் ஏதாவதொரு செய்தி இருந்தால் மட்டுமே அவர் எழுதுவார், அவர் தன் வாழ்க்கையில் கடைபிடித்து அது நன்மை என்றுணர்ந்த பின்னரே அதையும் செய்தியெனக் கொள்வார். எனவே அவருடைய வாழ்வில் செயல்படுத்தி மெய்ப்பித்தவற்றை மட்டுமே, அந்த உள்ளமைகளை மட்டுமே அவர் எழுதினார்

என்று லில்லி ஆலன் குறிப்பிட்டார்.[2]

படைப்புகள்[தொகு]

  • வறுமையிலிருந்து வலிமைக்கு; அல்லது, செழிப்பையும் அமைதியையும் அறிந்துணர்தல் (1901) { செழுமைக்கான பாதையையும் அமைதிக்கான வழியையும் கொண்டது.}
  • இந்த எல்லாப் பொருட்களும் சேர்ந்தது (1903) {அரசுக்குள் நுழைவது மற்றும் வானுலக வாழ்வு கொண்டது.)
  • ஒரு மனிதனின் சிந்தனையின் படி (1903)[3]
  • நன்மையின் வாயிற்கதவின் வழியாக; அல்லது, கிறித்துவும் நடத்தையும் (1903)
  • திருவருட்பேற்றின் தனிவழிகள் (1904)
  • நெஞ்சிலிருந்து வெளியே (1904) ("ஒரு மனிதனின் சிந்தனையின் படி" நூலின் பிற்தொடர்ச்சி)
  • அமைதியின் கவிதைகள், (இயோலாஸ் என்ற பாட்டு-உரைக் கவிதையையும் உள்ளடக்கியது(1907)
  • வெற்றி வாழ்வு: நெஞ்சையும் சிந்தையையும் வென்றிடுவது (1908)
  • காலை எண்ணங்களும் மாலை எண்ணங்களும் (1909)
  • ஊழை வென்றிடுவது (1909)
  • வாழ்வின் குழப்பங்களுக்கு மேலாக (1910)
  • பற்றிலிருந்து அமைதிக்கு (1910)
  • செழுமையின் எட்டு தூண்கள் (1911)
  • மனிதன்: சிந்தை, உடல், சூழலின் வேந்தன் (1911)
  • வாழ்வின் இன்னல்களின் மேலான ஒளி (1912)
  • மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிக்கற்கள் (1913)
  • ஆண்டின் ஒவ்வொரு நாளுக்குமான ஜேம்ஸ் ஆலனின் உளப்பயிற்சிகள் நூல் (1913) (அவருடைய மனைவி லில்லி ஆலன் தொகுத்த அவருடைய முந்தைய உரைகள்)
  • உளப்பயிற்சிகள்; ஓர் ஆண்டு நூல் (1913) (ஆண்டின் ஒவ்வொரு நாளுக்குமான ஜேம்ஸ் ஆலனின் உளப்பயிற்சிகள் நூலின் அமெரிக்க வெளியிடு)
  • மனிதர்களும் இயங்கமைப்புகளும் (1914)
  • ஒளிரும் வழிப்பாதை (1915)
  • தெய்வத் துணையர் (1919)

மேற்கோள்கள்[தொகு]

  1. Woodcock, John L. "JAMES ALLEN (1864-1912), An Illustrated Biography". www.jai.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  2. "James Allen: A Life in Brief" by Mitch Horowitz, from As a Man Thinketh: Keepsake Edition (Tarcher/Penguin 2009)
  3. Announcement of "new book entitled, As a Man Thinketh" as it appears in the July 1903 Edition of The Light of Reason [1]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஆலன்&oldid=3611293" இலிருந்து மீள்விக்கப்பட்டது