சோலாரின் சகமானாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலாரின் சகமானாக்கள்
பொ.ச.1160–1311
Map
Find spots of inscriptions issued during the reigns of Chahamana rulers of Jalor[1]
தலைநகரம்சோலார்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
பொ.ச.1160
• முடிவு
1311
தற்போதைய பகுதிகள்இந்தியா

சோலாரின் சகமானாக்கள் (Chahamanas of Jalor) , மேலும் வட்டாரக் கதைகளில் சோலாரின் சௌகான்கள் எனவும் அறியப்படும் இவர்கள் பொ.ச. 1160 தொடங்கி 1311க்கு இடையில் இன்றைய இராஜஸ்தானிலுள்ள சலோரைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்ட இந்திய வம்சத்தினர் ஆவர். இவர்கள் இராஜபுத்திரர்களின் சகமானா (சௌகான்) குலத்தைச் சேர்ந்தவர்கள்

இவர்கள் நாதுலாவின் சகமானாக்களிடமிருந்து பிரிந்து, பின்னர் குசராத்தின் சோலங்கியர்களின் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் இவர்கள் சுதந்திரமடைந்தனர். ஆனால் இறுதியில் அலாவுதீன் கில்சியின் சலோர் போரின்போது தில்லி சுல்தானகத்திற்கு அடிபணிந்தனர்.

வரலாறு[தொகு]

சலோரின் சகமானாக்கள் நாதுலா கிளையின் சகமான அரசரான அல்கனனிடமிருந்து வந்தவர்கள். முதலில், சலோர் கோட்டை 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பரமார்களின் ஒரு கிளையினரால் கட்டுப்படுத்தப்பட்டது. அல்கனனின் ஆட்சியின் போது நாதுல்லாவின் சகமானாக்கள் அதனைக் கைப்பற்றினர். அல்கனனின் மகனான கீர்த்திபாலன் 12 கிராமங்களின் நிலப்பிரபுத்துவ மானியத்தை தனது தந்தையிடமும், அவரது சகோதரர் ( மகுட இளவரசர்) கெல்கனனிடமிருந்து பெற்றார் . சலோர் கோட்டை அமைந்துள்ள சுவர்ணகிரி அல்லது சோனகிரியிலிருந்து இவர் தனது களங்களைக் கட்டுப்படுத்தினார். இதன் காரணமாக, இவர் சேர்ந்த கிளை சோனகரா என்று அழைக்கப்பட்டது. [2]

கீர்த்திபாலன் இறப்பதற்கு முன் தனக்கென ஒரு சுதந்திர அரசை உருவாக்கினார். அவர் ஒரு இந்து, ஆனால் சைனர்களை ஆதரித்தார். [3] அவரது மகனும் வாரிசுமான சமரசிம்மனின் குடும்பம் பல கோவில்களையும் மற்ற கட்டிடங்களையும் கட்டியது. [4] அவரது மகன் உதயசிம்மன் அவருக்குப் பிறகு பதவியேற்றார். அதே நேரத்தில் அவரது மற்றொரு மகனான, மானவசிம்மன், சந்திரவதி மற்றும் அபு மலையின் சௌகான் கிளையின் மூதாதையர் ஆவார். [5] சிரோகி இராச்சியத்தை ஆண்ட குடும்பம் மானவசிம்மனிடமிருந்து தொடங்கியது . [6]

உதயசிம்மனின் கீழ் சலோர் வம்சம் அதன் உச்சத்தை எட்டியது. இவர் நாதுல்லாவை (நாடோல்) கைப்பற்றினார், அநேகமாக தில்லி சுல்தான் ஆரம் ஷாவிடமிருந்து, அவர் முன்பு நாதுல்லாவின் சகமானாக்களை தோற்கடித்திருந்தார். அவர் மாண்டவ்யபுரத்தையும் (மண்டோர்) கைப்பற்றினார், ஆனால் தில்லி சுல்தானகம் 1226இல் இல்த்துத்மிசின் கீழ் அதைக் கைப்பற்றியது. கூடுதலாக இவர் வாக்பதமேருவை (பார்மர்) கைப்பற்றினார். இது ஒரு பரமாரக் கிளையால் ஆளப்பட்ட சமஸ்தானமாக இருக்கலாம். [7] முன்பு குசராத்தின் (சோலாங்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களையும் அவர் கைப்பற்றினார். சோலங்கியர்கள் தங்கள் தெற்கு எல்லையில் தேவகிரி யாதவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பயன்படுத்தி, உதயசிம்மன் மேவார் குஹிலாக்கள் , சந்திரவதியின் பரமாரர்கள் ,மார்வாரின் பிற ஆட்சியாளர்களுடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். கூட்டமைப்பானது வடக்கிலிருந்து சோலங்கியர்களைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சோலங்கிய தளபதி இலவண-பிரசாத் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [8] உதயசிம்மன் இல்த்துமிசுக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். தில்லி சுல்தானை மார்வாரில் இருந்து பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினார். [7]

உதயசிம்மனின் மகன் சச்சிகதேவன் தனக்குக் கிடைத்த பிரதேசங்களைத் தக்க வைத்துக் கொண்டான். சச்சிகனின் மகன் சமந்தசிம்ம்மன் தில்லி சுல்தானகத்தின் தாக்குதலை எதிர்கொண்டார். ஆனால் அவரது அண்டை மன்னனான வகேலா மன்னர் சரணாகதேவனால் காப்பாற்றப்பட்டார். [9] நடைமுறையில் வம்சத்தின் கடைசி மன்னரான கங்கததேவன் , அலாவுதீன் கில்சியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் . [10] கங்கத பிரபந்தத்தின் படி, இந்த முற்றுகையின் போது, கங்கததேவனின் மகன் விராமதேவன் முறைப்படி மன்னராக முடிசூட்டப்பட்டார். ஆனால் அவர் இரண்டரை நாட்களுக்குப் பிறகு இறந்தார். [10] [11]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலாரின்_சகமானாக்கள்&oldid=3379586" இலிருந்து மீள்விக்கப்பட்டது