சே. து. சுந்தரம்
சே. து. சுந்தரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | சேலம் துரைசாமி ஐயா சுந்தரம் சூலை 22, 1921 ஆத்தூர், சேலம் மாவட்டம் |
இறப்பு | மார்ச்சு 10, 1979 சென்னை | (அகவை 57)
தேசியம் | இந்தியர் |
கல்வி | தமிழ் வித்வான் |
பணி | கலைஞர் |
அறியப்படுவது | நாடகாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் |
பெற்றோர் | துரைசாமி ஐயா பூங்கோதை அம்மாள் |
வாழ்க்கைத் துணை | ஜெயலட்சுமி அம்மாள் |
பிள்ளைகள் | 1 மகள் 3 மகன்கள் |
உறவினர்கள் | பேராசிரியர் கோ. கண்ணர் (மருகர்) |
சே. து. சுந்தரம் (S. D. Sundharam; 22 ஜூலை 1921 – 10 மார்ச்சு 1979) ஓர் இந்தியத் தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் ஆவார்.
இளமைக் காலம்[தொகு]
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் இவரை 1934ஆம் ஆண்டு திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1942ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
நாடக உலகில்[தொகு]
சிறைவாசத்திலிருந்து விடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்தபோது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்தக் கனவை வைத்தே எழுதப்பட்டது. 1945 ஆம் ஆண்டு குருநாதர் ஆசியுடன் இவரும் சக்தி கிருஷ்ணசாமியும் இணைந்து சக்தி நாடக சபா வைத் தொடங்கி இவரது கவியின் கனவு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். கவியின் கனவு நாடகம் மிகவும் புகழ் பெற்று 1500 தடவைகளுக்கு மேல் மேடையேறியது. ஒரு தடவை நாகப்பட்டினத்தில் இந்த நாடகம் அரங்கேறியபோது கவியின் கனவு ஸ்பெஷல் என ஒரு சிறப்பு தொடர்வண்டி திருச்சியிலிருந்து விடப்பட்டது.
திரையுலக பங்களிப்புகள்[தொகு]
1946 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். - வி. என். ஜானகி முதன்முதலாக இணை சேர்ந்து நடித்த மோகினி திரைப்படத்துக்கு கதை வசனம், பாடல்கள் எழுதினார்.
1953 ஆம் ஆண்டு மனிதனும் மிருகமும் என்ற திரைப்படத்தை கே. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, கே. சாரங்கபாணி, டி. ஆர். ராமச்சந்திரன் இத்திரைப்படத்தில் நடித்தனர்.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின் போது சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது என்ற ஆவணப்படத்தைத் தன் சொந்தச் செலவில் தயாரித்து வெளியிட்டார். தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உட்பட புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.
பொதுப் பணிகள்[தொகு]
- 1964 ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பணியாற்றினார்.
- 1968 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
விருதுகள்[தொகு]
- 1965 ஆம் ஆண்டு சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ் நாடு சங்கீத நாடக சங்க விருது. (இது தற்போதைய கலைமாமணி விருது ஆகும்)[சான்று தேவை]
- 1973 ஆம் ஆண்டு தேச விடுதலை 25ஆம் ஆண்டு நிறைவை போற்றும் வகையில் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தாமிர பத்திர விருது வழங்கினார். தியாகிகளின் வரலாற்றைக் கூறும் வீர சுதந்திரம் நாடகத்தை அரங்கேற்றினார்.[சான்று தேவை]
- 1975 ஆம் ஆண்டு சிறந்த கதை வசனகர்த்தாவுக்கான டெல்லி சங்கீத நாடக சங்கத்தின் குடியரசுத் தலைவர் விருது.[சான்று தேவை]
எழுதி வெளியிட்ட நூல்கள்[தொகு]
- நம் தாய் (நாடகம்) (1947)
- வானமுதம் (கவிதைத் தொகுப்பு) - காமராசர் தலைமையில் கண்ணதாசன் முன்னிலையில் 1964ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- காந்தியுகம் (கவிதைத் தொகுப்பு) (1966)
- கவியின் குரல் (1974)
- சிரிப்பதிகாரம் (1974)
- கவியின் கனவு-நான்காவது பதிப்பு (1974)[1]
- மகாபுத்திசாலிகள் (1976)
- இந்தியா எங்கே (1976)
இத்துடன் உலக நாடகம் என்ற மாத இதழை 1977 ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டார்.
வசனம், பாடல்கள் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
- மோகினி (1946)[2]
- லைலா மஜ்னு (1948) (வசனம்) (பானுமதி நடித்து தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]
- கள்வனின் காதலி (1949) (அமரர் கல்கியின் கதை) (என். எஸ். கிருஷ்ணன் தயாரிக்கவிருந்தார். பின்னர் கைவிடப்பட்டது)[1]
- மனிதனும் மிருகமும் (1953) [3]
- விப்ர நாராயணா (1954)[1]
- சாரங்கதாரா (1958) [4]
- கப்பலோட்டிய தமிழன் (1961) (வசனம்) [5]
மறைவு[தொகு]
1979 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8-ந் திகதி சென்னை வானொலி விவித் பாரதியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிப்பதிவில் கலந்து கொண்டார். இதுவே இவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று ஒலிபரப்பானது. 1979 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10-ந் திகதி மாரடைப்பால் காலமானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 * கவியின் கனவு. விக்னேஷ் வெளியீடு, 19 நியூ காலனி, சோசியர் தெரு, சென்னை -34 தொலைபேசி: 28211134. 2005. பக். 3 - 6.
- ↑ "Mohini 1948". தி இந்து (ஆங்கிலம்). 19 அக்டோபர் 2007. 2016-11-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 பெப்புருவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "Nadigar Thilagam Filmography". nadigarthilagam.com. 2014-09-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-02-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nadigar Thilagam Filmography". nadigarthilagam.com. 14 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Nadigar Thilagam Filmography". nadigarthilagam.com. 2014-09-08 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-02-08 அன்று பார்க்கப்பட்டது.