சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்

ஆள்கூறுகள்: 13°04′36″N 80°16′03″E / 13.0766°N 80.2676°E / 13.0766; 80.2676
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீசுவரர் கோவில்
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீசுவரர் கோவில் is located in தமிழ் நாடு
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீசுவரர் கோவில்
சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீசுவரர் கோவில்
ஆள்கூறுகள்:13°04′36″N 80°16′03″E / 13.0766°N 80.2676°E / 13.0766; 80.2676
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சிந்தாதிரிப்பேட்டை
சட்டமன்றத் தொகுதி:சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
ஏற்றம்:56 m (184 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஆதிபுரீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
அமைத்தவர்:ஆதியப்ப நாராயண செட்டி

ஆதிபுரீஸ்வரர் கோவில் என்பது தமிழ் நாட்டின் சென்னை மாநகரம், சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4]

வரலாறு[தொகு]

ஜார்ஜ் டவுனுக்கு வெளியே தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகள், அன்றைய மெட்ராஸின் பல்வேறு இடங்களில் நெசவுத் தொழிலாளர்கள் குடியேற ஊக்கம் அளித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக பதவி வகித்த ஜார்ஜ் மோர்டன் பிட் கூவம் நதிக்கரையில் உள்ள தோட்டத்தில், காலிகோ துணியை உற்பத்தி செய்வதற்காக, நெசவாளர்களின் கிராமத்தை நிறுவினார். சுங்கு ராமச் செட்டி என்பவருக்குச் சொந்தமான 840 கெஜம் x 500 கெஜம் பரப்பளவு கொண்ட தோட்டம் சின்ன தறிப் பேட்டை என்று அழைக்கப்பட்டது. ஆளுநரின் ஆலோசனையில், சின்னத்தம்பி முதலியார், ஆதியப்ப வெண்ணல நாராயணன் செட்டி (ஆங்கிலேயர்கள் அழைத்த பெயர் 'வெண்ணல நற்றன் சிட்டி' (('Vennala Narran Chitty') ஆகியோர், தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கி, தொழிலை ஊக்கப்படுத்தினர்.[3][4][5][6]

ஆதியப்ப நாராயண செட்டி சிந்தாதிரிப்பேட்டை குடியேற்றத்தை நிர்வாகித்த இரண்டு துபாஷ்களில் ஒருவர் ஆவர். இவர் சிந்ததிரிப்பேட்டையில் ஆதி கேசவப் பெருமாள் கோவிலைக் கட்டினார். இவை மணலி முத்துகிருஷ்ண முதலியின் 'நகரக் கோவில்' (Town Temple) போல் இல்லாத ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதி கேசவப்பெருமாள் ஆகிய இரட்டை கோவில்கள் ஆகும்.[6][4]

கோவில் அமைப்பு[தொகு]

ஆதிபுரீஸ்வரர் கோவில் இரட்டைக் கோவில்களில் ஒன்றாகும். விஜயநகரக் கட்டிடக்கலை பாணியில் கல்மண்டபம் மற்றும் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கல் மண்டபத்தின் வாயிற்பகுதியை மட்டுமே காண முடிகிறது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கல்யாண மண்டபம் இரத்தினவேல் செட்டியார் என்ற அடியவரால் கட்டப்பட்டதாகும்.[3]

கிழக்கு நோக்கிய கருவறையில் இக்கோவிலின் மூலவராக இலிங்க வடிவில் ஆதிபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருவறையின் இருபுறமும் சுந்தர வலம்புரி விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன. மூலவர் கருவறை முன்னர் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியன நிறுவப்பட்டுள்ளன. தெற்கு நோக்கி அமைந்த கருவறையில் அம்பாள் திர்புரசுந்தரி காட்சிதருகிறார். சூரியன், கணபதி, இலக்குமி சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், பழனி ஆண்டவர், பைரவர், 63 நாயன்மார், சேரமான் பெருமாள், நாகர், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு இங்கு சந்நிதிகள் உள்ளன. ஐம்பொன்னாலான உற்சவ மூர்த்தி சிலையும் உள்ளது. ஆறுமுகம், தாயுமானவர், சங்கராச்சாரியார், அகஸ்தியர், வள்ளுவர், ராமலிங்கர், கச்சியாப்ப முனிவர், குமரகுருபரர், மற்றும் சிதம்பர சுவாமிகள் ஆகிய அடியவர்களுக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளது.[3]

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோவிலில் 1782 மற்றும் 1874 ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட இரண்டு தமிழ் கல்வெட்டுகள் மண்டபங்கள் மற்றும் தூண்களின் கட்டுமானத்தை பதிவு செய்துள்ளன.[3]

திருவிழா[தொகு]

இக்கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் என்னும் பெருவிழா பதினைந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். மூன்றாம் நாள் திருவிழாவில் பகலில் வீதியுலா வரும் பூத வாகனம், அன்றே இரவில் உலா வரும் அதிகார நந்தி வாகனம் மற்றும் காமதேனு வாகனம் ஆகிய வாகனங்கள் இக்கோவிலின் தொன்மை மிக்க வாகனங்கள் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய அதிகார நந்தி 1901 ஆண்டிலும் காமதேனு வாகனம் 1929 ஆண்டிலும் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார். 1812 ஆம் ஆண்டில் பொன்னுசாமி கிராமணியின் முன்னோரான சுப்பராய கிராமணி என்பவர், பூத வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். ஆகவே பூதவாகனம் சுமார் 210 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. [7] அதிகார நந்தி சேவையைக் காண பக்தர்கள் பெருந்திரளாகக் காட்டுவது வாடிக்கை. இந்த அதிகார நந்தி வாகனம் சிறப்பு மிக்கது. நந்தி 6 அடி உயரமும், நந்தியின் பாதத்தில் உள்ள கயிலாயம் அடி உயரமும், சட்டம் 3 அடி உயரமும் கொண்டது என்று கோயில் அர்ச்சகர் குறிப்பிட்டார்.[7] பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், சென்னை கந்தகோட்டத்திலிருந்து முருகன் மயில் வாகனத்தில் ஊர்வலமாக ஆதிபுர்ரீஸ்வரர் கோவிலுக்கு வந்து பிற்பகல் 2மணி முதல் இரவு 7.30 மணிவரை பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.[3][7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]