குத்தூ வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குத்தூ வீட்டின் ஒரு பகுதி

குத்தூ வீடு அல்லது குத்தூ மனை (Guthu Mane) என்பது தற்போதய கர்நாடகத்தின் ஒரு பகுதியாக உள்ள துளு நாட்டின் பந்த் சமூகத்தினரின் பாரம்பரிய வீடுகள் ஆகும். பந்த் சமூகத்தினரின் தாய்மொழி துளு. இந்த மொழியில் பந்த் என்றால் வீரன் என்று பொருள். இதிலிருந்து பந்த் சமூகம் சத்திரிய குலமாக இருந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். இவர்களின் துளுநாடு தற்போது கேரளத்தின் ஒரு பகுதியையும், கர்நாடகத்தில் தென் கன்னட மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இப்பகுதியில் இவர்கள் மிகுதியான அளவில் வாழ்கிறார்கள்.

வீட்டின் அமைவிடம்[தொகு]

பந்த் மக்களின் பாரம்பரிய வீடுகளான குத்தூ வீடுகள் கூட்டுக் குடும்பங்களுக்கு ஏற்றவாறு பெரியதாக கட்டப்பட்டவை ஆகும். பொதுவாக இவர்கள் நிலக்கிழார்களாக இருந்ததால் இவர்களது வீடுகள் இவர்களின் தோட்டங்களுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளன.

வீடுகளின் அமைப்பு[தொகு]

வீட்டின் முன் உள்ள நிலப்பகுதி ‘பகிமர் கந்தே’ என்று அழைக்கப்படும் இங்குதான் இம்மக்களின் முக்கியமான சடங்குகள் செய்யப்படும். மூங்கில் கம்புகளால் உருவாக்கப்பட்டுள்ள வீட்டின் முன் வாசலை ‘துடமே’ என்றும், வீட்டின் முன் பகுதியில் உள்ள வரந்தாவை ‘ஜால்’ என்றும், வீட்டின் நுழைவுப் பகுதியை ‘முகசாலே’ என்றும், வீட்டின் கதவுகளை ‘ஹெப்பகிலு’ என அழைக்கப்படுகிறனர்.[1] இக்கதவுகள் தேக்கு அல்லது கருங்காலி மரப் பலகைகளைக் கொண்டு நுட்பமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருக்கும். முன்வாசலைத் தாண்டி உள்ளே நுழையும் பகுதி ‘அங்கலா’.என்று அழைக்கப்படுகிறது.

சாவடி[தொகு]

அலங்காவைத் இதைத்தாண்டினால் எதிர்ப்படுவது ‘சாவடி’ எனப்படும் அறையாகும். இதுதான் விட்டின் முதன்மையானப் பகுதியாகும். இந்தச் சாவடி அறை மரத் தூண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் உள்ள மரம் வேலைப்பாடுகள் கொண்டதாக இந்து புராணக் கதைகள், பறவைகள், விலங்குகள், துளு நாட்டுச் சிறப்புகள் போன்றவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் இருக்கும் கம்பீரமான மர இருக்கையை ”நியாயபீட” என அழைக்கின்றனர். இதுதான் அந்த வீட்டின் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள மூத்த தாய் அமருமிடம். ஏனென்றால் இச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகமாகும். சாவடிக்கு அடுத்துள்ள பகுதி ‘நடுமனே’ என்பதாகும். இது பெண்கள் மட்டும் புழங்கும் பகுதி. இந்த அறையின் கதவுகள் பலா மரத்தால் செய்யப்பட்டவை. இந்த நடுமனையில்தான் பெண்கள் பயன்படுத்தும் பொருள்களான நகைகள் போன்றவை வைக்கும் அலமாரி போன்றவை இருக்கும். இதற்கு அடுத்தபடியாக ‘பண்டசால’ என்னும் கிடங்கு அறை உள்ளது.

வீட்டின் பிறபகுதிகள்[தொகு]

சாவடி அறையின் மூலையில் மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் இருக்கும். மாடியில் பல படுக்கையறைகள் கொண்டிருக்கும். மாடியில் தென் மேற்கு மூலையில்தான் குடு்ம்பத் தலைவியின் பெரிய படுக்கையறை இருக்கும். குளியலறை பெரும்பாலும் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்கும். இவ்வீடுகளில் வீட்டைவிட்டுத் தள்ளி ஒரு அறை மட்டும் தனியாக இருக்கும்.இது ‘சுதகதகோனே’ என அழைக்கப்படுகிறது. இந்த அறை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்குவதற்கான அறையாகும்.

வீட்டின் நடுப்பகுதி மேற்கூரையில்லாமல் திறந்த வெளி முற்றமாக இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பகுதியில் துளசிச் செடி வளர்க்கும் வழக்கம் உள்ளது. மழை நீர் சேமிப்பதற்கான பாத்திரங்கள் இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். பந்த் வீடுகள் கட்டிட அமைப்பில் ஏறக்குறைய கேரளத்து நாயர்களின் தரவாட்டு வீடுகளை ஒத்ததாக உள்ளன. ஆனால் கேரள வீடுகளைவிட இந்த குத்தூ வீடுகள் உயரமான கூரைகளைக் கொண்டவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dream Homes: Guthu Mane – The Bunt Homes of Prestige". roofandfloor.com. சனவரி. 28.2016. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "மரபு இல்லங்கள்: வீரர்களின் வீடு". தி இந்து (தமிழ்). 13 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தூ_வீடு&oldid=3929023" இலிருந்து மீள்விக்கப்பட்டது