கடிகாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடிகாச்சலம் (Ghatikachala) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கருக்கு அருகிலுள்ள ஒரு மலையாகும். இது ஒரு இந்து புனித யாத்திரை மையமாகும். இங்கு விஷ்ணுவின் நான்காவதுஅவதாரமான நரசிம்மரின் ஒரு பழமையான கோயில் உள்ளது.[1]

இத்தலத்தின் பெயரான கடிகாச்சலம் எனபது பண்டைய தொன்மங்களில் அறியப்படுகிறது. கடிகை என்பது கால அளவைக் குறிப்பிடும் ஒரு பெயராகும். சோளிங்கர் அதன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கு பிரபலமானது. அதில் ஒன்று கடிகாச்சலம் மலையின் உச்சியில் அமைந்துள்ள யோக நரசிம்மர் கோயில் மற்றொன்று யோக ஆஞ்சநேயர் கோயில். திருக்கடிகை (சோளிங்கர் அல்லது சோழசிம்மபுரம்) வைணவ சமயத்தின் புனித தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இரண்டு கோயில்களும் இரண்டு குன்றுகளின் மேல் அமைந்துள்ளன.

ஆழ்வார்களின் மங்களாசாசனம்

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -3-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை யிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. –பெரிய திருமொழி -8-9-4-

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.–பெரிய திருமொழி -8-9-9-

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

————–

ஸ்ரீ பேயாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

——————————————————————

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக் கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி தரு கடிகை மாயவனைத் தான்–108 திருப்பதி அந்தாதி-பிள்ளைப் பெருமாளையங்கார்.-

யோக ஆஞ்சநேயர்[தொகு]

இங்கு அனுமான் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ள சிறிய மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். யோக முத்திரையில் அமர்ந்துள்ள ஆஞ்சநேயர் மேற்கு நோக்கியவாறு வீற்றிருக்கிறார்.

தொன்மம்[தொகு]

இரண்யகசிபுவை ( அசுரன் ) கொன்ற பிறகும், நரசிம்மர் தன் கோபத்தை அடக்க முடியாமல் இருந்தார். அவரது கோபம் அடங்க சிவபெருமான் அவருக்கு உதவி செய்தார். பிரகலாதனை மகிழ்விக்க, யோக நரசிம்மர் யோகநிலையில் (பெரிய மலையில்) ஒரு கடிகை நேரம் தனது சேவையை வழங்கினார். இதனால் இத்தலம் "கடிகாச்சலம்" என்றும் அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்[தொகு]

மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில் பக்தவத்சலப் பெருமாள் (தக்கன்), பெரியபிராட்டியார் மற்றும் பூமிப் பிராட்டியார் ஆகியோர் போக நிலையில் (தியானம் நிலை) காணப்படுகின்றனர். ஆண்டாள், ஆழ்வார்கள், கருட வாகன வரதராஜப் பெருமாள், எறும்பியப்பா, தொட்டாச்சாரியார் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பெரியமலை மற்றும் சின்னமலையில் உள்ள கடவுள்களான, நரசிமர் மற்றும் ஆஞ்சநேயர் இருவரும் சாந்தநிலையில் (யோக நிலை) உள்ளனர். அனைத்து உற்சவங்களும் கோயிலின் பக்தவத்சலருக்கு நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயாருக்கு (அமிர்த வல்லி) சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

முக்கிய நகரங்களில் இருந்து தொலைவு

நகரம் தூரம் (கிமீ)
சென்னை 110
வேலூர் 50
திருத்தணி 27
அரக்கோணம் 27

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இழந்ததையெல்லாம் தரும் யோக நரசிம்மர், யோக அனுமன்! - பிரமாண்ட சோளிங்கர் திருத்தல மகிமை". 2020-07-07. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிகாச்சலம்&oldid=3854473" இலிருந்து மீள்விக்கப்பட்டது