உலகத் தெலுங்கு மாநாடு

உலகத் தெலுங்கு மாநாடு (ప్రపంచ తెలుగు మహాసభలు, பிரபஞ்ச தெலுங்கு மகாசபை, World Telugu Conference) தெலுங்கு மொழியின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது. உலகம் முழுதும் வாழும் தெலுங்கு மொழி ஆர்வலர்கள் இம்மொழியின் வளர்ச்சி தொடர்பான கருத்துகளை இம்மாநாட்டில் பகிர்ந்து கொள்வர். முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும்[1], இரண்டாவது மாநாடு 1981 ஆம் ஆண்டில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், 1990 ஆம் ஆண்டில் மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதியிலும் [2][3][4][5] நடைபெற்றன.

முதலாம் மாநாடு
[தொகு]முதலாம் உலகத் தெலுங்கு மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் ஏப்பிரல் 12-18 நாட்களில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1500 ஆர்வலர்கள் பங்கேற்றனர் 28 துறைகளில் ஏறத்தாழ 100 கட்டுரைகள் படிக்கப்பட்டன.
இரண்டாம் மாநாடு
[தொகு]1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 18 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. மலேசியாவில் உள்ள மலேசிய ஆந்திர சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியது.
மூன்றாம் மாநாடு
[தொகு]மூன்றாம் மாநாடு மொரீசியசில் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தெலுங்கு பல்கலைக்கழகம், தெலுங்கு பண்பாட்டு அறக்கட்டளை, மொரீசியசு இந்திரா காந்தி பண்பாட்டு மையம், ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவற்றின் துணையுடன் மாநாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
நான்காவது மாநாடு
[தொகு]2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 28, 29, தேதிகளில் திருப்பதியில் நான்காவது மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி, தமிழக ஆளுனர் கோனியேட்டி ரோசைய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஐந்தாவது மாநாடு
[தொகு]ஐந்தாவது மாநாடு தமிழகத் தலைநகர் சென்னையில் காமராஜர் அரங்கில், ஜூன் 1 தொடங்கி மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மாநாட்டில் தெலுங்கு மொழிக்கும், மராத்தி, தமிழ், ஒரிய மொழி ஆகியனவற்றிற்கும் உள்ள தொடர்பு ஆய்வு செய்யப்படும் என மாநாட்டு அமைப்பாளர் கூறியுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு மொழியின் நிலை குறித்தும் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் தெலுங்கு பண்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. [6]
தமிழும் தெலுங்கும்
[தொகு]தமிழும் தெலுங்கும் திராவிட மொழிகள். இவை இந்திய அரசால் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் கற்கலாம். இவ்விரண்டு மொழிகளுக்கும் உலகளாவிய மொழி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தாய் வாழ்த்தைப் போன்றே "மா தெலுகு தல்லிக்கி" என்ற தெலுங்குத் தாய் வாழ்த்தும் உள்ளது. தமிழுக்கு பல மாநாடுகள் நடைபெற்றதை சுட்டிக் காட்டிப் பேசிய மூத்த அறிஞர் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்கு இது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://timesofindia.indiatimes.com/city/hyderabad/World-Telugu-Conference-venue-to-be-shifted/articleshow/17512451.cms
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/world-telugu-conference-then-and-now/article4167022.ece
- ↑ http://www.indiatribune.com/index.php?option=com_content&view=article&id=10100:campaign-for-world-telugu-meet-launched-&catid=125:general-news&Itemid=400
- ↑ http://www.thehindu.com/news/cities/Vijayawada/give-wide-publicity-to-world-telugu-conference/article4136601.ece
- ↑ http://www.thehindubusinessline.com/news/states/tirupathi-to-host-world-telugu-conference/article4130001.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. Retrieved 2013-08-31.
வெளி இணைப்புகள்
[தொகு]- உலகத் தெலுங்கு மாநாடு - அதிகாரபூர்வ வலைத்தளம்
- உலகத் தெலுங்கு மாநாடு