உயிரியாற் சிதைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணுயிரிகளைக் கொண்டு கரிமச் சேர்மங்களை சிதைக்கும் முறை உயிரியாற் சிதைத்தல் என்று அழைக்கப்படுகிறது. சூழலியல் உயிரியலில் இம்முறை மிகவும் இன்றியமையாத முறையாகும். பல்வேறு நுண்ணிகள் இம்முறை மூலம் தங்களுக்குத் தேவையான உணவை தங்கள் சூழ்நிலையில் இருக்கும் பொருட்களிலிருந்து பெறுவது நிறுவப்பட்டுள்ளது.

நிகழும் முறை[தொகு]

இம்முறையானது நுண்ணிகளின் சிறப்பான நொதிகளின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. பல்வேறுபட்ட உயிர்வேதி வினைகள் மூலம் கடினமான கரிமச் சேர்மங்கள், மிக எளிய சேர்மங்களாகப் சிதைக்கப்படுகிறது. பின்னர் இவ்வெளிய சேர்மங்கள் நுண்ணிகளால் நேரடியாக உட்கொள்ளப்படுகிறது. நுண்ணிகள் பெரும்பாலும் கரிமச் சேர்மங்களை நேரடியாக உண்ணக்கூடியவையாக இருப்பினும், சில நேரங்களில் தங்களுக்குத் தேவையான குறிப்பிடத் தகுந்த சேர்மங்கள் நேரடியாக கிடைக்கப்பெறாமல் போகும் போது, அச் சூழலில் இருக்கப்பெற்ற வேறு கடினமான சேர்மங்களை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய நிலையில் அவை அந்தச் சேர்மங்களை இனங்கண்டு அவற்றை சிதைப்பதற்கு ஏற்ற நொதிகளை உற்பத்தி செய்து அச்சேர்மங்களை எளிய கரிம மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. பின்னர் அவை உட்கொள்ளப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  • மரங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைகள் சிறப்பு நொதிகளின் மூலம் அம்மரங்களில் உள்ள உயர்வகை பலபடி சர்க்கரையை ஒரு படி சர்க்கரையாக மாற்றி பின் உட்கொள்கின்றன.
  • இறந்துபட்ட விலங்குகளின் உடல்கள் பலநாட்கள் கழித்து அழுகிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்த அழுகிய நிலை என்பது, நுண்ணிகளால் சிதைவுக்கு உட்படுத்தப்பட்ட நிலை ஆகும். மேலும் பல நாட்கள் அழுகிய நிலையிலேயே விடப்படும் உடல்கள் முழுதும் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு காணாமல் போகக் கூடும். அந்த அளவிற்கு அவை சிதைக்கப்படுவதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • கரிமக் கழிவுகள் உரமாக மாற்றப்படுவதும் இவ்வகை சிதைவிற்கு சிறந்த சான்று ஆகும். பல உயர்வகைக் கரிமக் கழிவுகள் எளிய கரிமப் பொருட்களாக உயிரியாற் சிதைவு செய்யப்பட்ட பின் அவை சிறந்த உரமாக மாறுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியாற்_சிதைத்தல்&oldid=2743842" இருந்து மீள்விக்கப்பட்டது